சூர்யாவை தொடர்ந்து ஆருவின் முகத்தைப் பார்த்த மதுவும், ஆரு வேண்டாம் கேட்காத என்பது மாதிரி தலை ஆட்டுவதைப் பார்த்து… எதோ விஷயம் இருக்கு என்று நினைத்தவள், அதற்கு மேல் தோண்டாமல் பக்கத்தில் இருந்த கீர்த்தனாவுடன் பேச ஆரம்பிக்க… சூர்யா திரும்பி மீராவை பார்க்க… அவள் அர்ஜுனுடன் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள். எப்பவும் பார்த்தா சந்தோஷமா துள்ளி குதிச்சிட்டு இருப்பா… இவளுக்கு எதோ பிரச்சனை இருக்கா என்ன? என்று நினைத்தான். ஆதி வருவாதாக அர்ஜுனுக்குப் போன் செய்ய… எல்லோரும் கீழே இறங்கி வந்தனர். ஆதி வரும் போதே மணி எட்டு. அதனால் எல்லோரும் சாப்பிடலாம் என்று தோட்டத்திற்குச் செல்ல… அர்ஜுன் சென்று காரில் இருந்து ஒரு கவரை கொண்டு வந்தான். மீரா இது என்ன என்று ஆவலாகப் பார்க்க… அர்ஜுன் கவரை பிரித்து அதில் இருந்த அழகான பெரிய கேக் ஒன்றை எடுத்து வெளியில் வைக்க… மீராவின் கண்கள் பெரிதாக விரிந்தது. மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு அர்ஜுன் மீராவை அழைத்துக் கேக்கை வெட்ட சொல்ல… மீரா கேக்கை வெட்ட… அர்ஜுன் முதல் துண்டு கேக்கை எடுத்து மீராவிற்கு ஊட்ட… மீராவும் அர்ஜுனுக்குக் கொடுத்தாள். எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தனர்.
மதுவுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது, அர்ஜுனும், மீராவும் காதலர்கள் என்று. அடப்பாவி எப்படி அவ வீட்டுக்கே வந்து தைரியமா கேக் ஊட்டி விடுறான் பாரு என்று நினைத்தவள், திரும்பி சூர்யாவை… நீயும் கூட்டா என்பது போல் முறைக்க…. சூர்யா வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். சூர்யா மதுகிட்ட போனா அவ்வளவு தான் என்று நினைத்தவன், ஆதியோடு சென்று நின்று கொண்டான். எல்லோரும் சாப்பிட சென்றனர். வித விதமான உணவு வகைகள் இருந்தது. எல்லோரும் அவர்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டனர். இன்றைய அதிகபடியான சந்தோஷத்தில் மீராவின் முகம் நிலவுக்குப் போட்டியாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. அர்ஜுன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிட்டதும் மீராவிடம் வந்த ஆதி, “எனக்கு என்ன வாங்குறதுன்னு தெரியலை மீரா, அதனால நான் கிஃப்ட் கூப்பென் தான் வாங்கி இருக்கேன். நீயே உனக்குப் பிடிச்சதா வாங்கிக்கோ.” என்று ஒரு கவரை கொடுக்க… “எதுக்கு அத்தான் நமக்குள்ள பார்மாலிடீஸ்.” மீரா கேட்க…. “ஆசையா கொடுக்கிறான் இல்ல… வாங்கிக்கோ.” அர்ஜுன் சொல்ல… மீரா வாங்கிக் கொண்டாள். “சரி, நான் கிளம்பறேன்.” என்று ஆதி விடைபெற்றுச் சென்றான். மதுவும், கீர்த்தனாவும் தோட்டத்தில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… அர்ஜுனும், மீராவும் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சற்றுத் தூரத்தில் பௌண்டனில் இருந்து விழுகும் தண்ணீரில் ப்ரீத்தி விளையாடி கொண்டிருக்க…. அவள் பக்கத்தில் ஆரு அமர்ந்து இருந்தாள். சூர்யா அவர்களின் அருகே சென்றவன், பிரீத்தியிடம் “என்னடா செல்லம் செய்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே… ஆருவை பார்த்து புன்னகைக்க… அவளும் பதிலுக்குப் போனால் போகிறதென்று லேசாகச் சிரித்து வைத்தாள். “ப்ரீத்தி, நீ தான கேட்ட… இப்ப சாப்பிடாம விளையாடிட்டு இருக்க, இப்ப இந்தக் கேக்கை என்ன பண்றது?” என்று தட்டில் இருந்த கேக்கை காட்டி ஆராதனா கேட்க…. “நீ சூர்யா மாமாவுக்கு ஊட்டி விடு…” என்று சொல்லிவிட்டு ப்ரீத்தி நீரில் விளையாட… அதைக் கேட்டு ஆரு திகைத்து விட்டாள். சூர்யா முகம் முழுவதும் புன்னகையுடன் ஆருவை பார்க்க… அவள் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே “நீங்க தான் சொல்லி குடுத்தீங்களா?” என்று கேட்க… பதறிய சூர்யா “ஏய்… நான் எங்க சொல்லி கொடுத்தேன், அவளா தான் சொல்றா.” என்றான். அவர்கள் பேசுவதில் ஒரு காதை வைத்திருந்த ப்ரீத்தி “அர்ஜுன் மாமாவும், மீரா அக்காவும் சாப்பிட்டாங்கள்ள… அது மாதிரி நீங்களும் சாப்பிடுங்க.” என்று சொல்ல… “பார்த்தியா நான் இல்ல காரணம், உங்க அண்ணன் தான்.” சூர்யா மெதுவாகச் சொல்ல… ஆரு கோபமாக எதோ சொல்ல வர… சூர்யா தட்டிலிருந்த கேக்கை எடுத்து, ஆரு வாயில் வைத்து அடைத்தவன், “வேண்டாம் எதுவும் சொல்லிடாத… இந்தப் பிசாசு அப்படியே போய்ச் சொல்லிடும்.” என்றவன், அங்கிருந்து வேகமாகச் செல்ல… ஆரு அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே கேக்கை சாப்பிட்டாள். அப்போது உள்ளே ஒரு கார் வர… மீரா, அப்பா வந்திட்டாங்க என்றதும், எல்லோரும் எழுந்து உள்ளே செல்ல… ராம்நாத் உள்ளே வந்தவர், எல்லோரையும் பார்த்து வாங்க, சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. என்றவர், மீராவை பார்த்து “சாப்பிட்டாங்களா?” என்று கேட்க… மீரா “சாப்பிட்டோம்.” என்றாள். மீராவின் அப்பா ராம்நாத் பார்க்க ஆள் கம்பீரமாக இருந்தார். எல்லோரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்ததும், மீரா அர்ஜுனை தான் முதலில் அறிமுகப்படுத்தினாள். “அப்பா… இவங்க அர்ஜுன் என்னோட காலேஜ் தான், பைனல் இயர் படிக்கிறாங்க. இவ ஆரு அவங்களோட தங்கச்சி. நாங்க ரெண்டு பேரும் ஒரே டான்ஸ் கிளாஸ் தான் போறோம்.” என்றவள், அடுத்து “இவங்க சூர்யா, இவங்களும் எங்க காலேஜ்ல தான். பைனல் இயர் படிக்கிறாங்க. இவங்க மது சூர்யாவோட அக்கா.” என்றவள், அடுத்து கீர்த்தனாவை “இவ என்னோட ப்ரண்ட் கீர்த்தனா… நாங்க ரெண்டு பேரும் ஒரே க்ளாஸ்.” என்று எல்லோரையும் அறிமுகப் படுத்திவிட்டு, அவள் அப்பாவின் அருகே சென்று அமர்ந்தாள். “ஹோப் யு என்ஜாய்ட் தி டே…” ராம்நாத் பொதுவாக எல்லோரையும் பார்த்து சொல்ல…எல்லோரும் ஆமாம் என்றனர். மீராவிற்கு அவள் அப்பாவும், அர்ஜுனும் பேசிக்கொள்ள வேண்டும் என்று ஆசை… அதை உணர்ந்த அர்ஜுன், அவனாகவே மீராவின் அப்பாவிடம் பேச்சை ஆரம்பிக்க….அவரும் அவனுடன் இயல்பாகப் பேசினார். அவர்கள் பேசட்டும் என்று மது, கீர்த்தனா, ஆரு மூவரும் மெதுவாக அங்கிருந்து தோட்டத்தில் சென்று அமர்ந்தனர். அர்ஜுன் தங்கள் குடும்பத்தைப் பற்றித் தங்கள் தொழிலை பற்றிச் சொன்னதும், ராம்நாத் “எனக்குக் கணேசனை தெரியுமே… ஆனா அவ்வளவா பேசினது இல்லை.” என்றவர், அர்ஜுனிடம் அவன் எதிர்காலத் திட்டத்தைப் பற்றிக் கேட்க… அவன் ஆஸ்திரேலியா போய் மேல் படிப்புப் படிக்கப் போவதாகச் சொல்ல… அதைக் கேட்ட ராம்நாத் அவனை உற்சாகப்படுத்தினார். ராம்நாதிற்கு அர்ஜுனை மிகவும் பிடித்து விட்டது. அவன் பேசுவதிலேயே அவன் திறமைசாலி என்று கண்டுபிடித்தவர். “அர்ஜுன் எனக்கு முன்ன மாதிரி எல்லா வேலையும் பார்க்க முடியலை. எனக்கு நம்பிக்கையானவங்க யாராவது கூட இருந்தா நல்லா இருக்கும். நீ உன்னோட படிப்பு முடிஞ்சதும் என்னோட கம்பனியில சேர முடியுமா? உனக்கு நான் நல்ல போஸ்டிங் அண்ட் பே தரேன்.” என்றார். அர்ஜுன் இவர் என்ன இப்படிக் கேட்கிறார் என்று நினைத்தவன், மீராவை பார்க்க, அவள் நீ ஆச்சு… எங்க அப்பாவச்சு. என்னக்கென்ன வந்தது என்பது போல் உட்கார்ந்து இருந்தாள். “சாரி அங்கிள், நான் ஏற்கனவே எனக்கு ஸ்பொன்சர் பண்றவங்ககிட்ட ரெண்டு வருஷம் அக்ரீமென்ட் போட்டிருக்கேன்.” அர்ஜுன் சொல்ல… “நான் உனக்கு ஸ்பொன்சர் பன்றேன், அப்ப பிரச்சனை இல்லையில…” என்றார் ராம்நாத். அர்ஜுன் சிறிது நேரம் யோசித்தவன், “இல்லை அங்கிள், நான் படிச்சிட்டு எங்களோட பிசினஸ் பார்க்க போய்டுவேன். எனக்கு இன்னும் எங்க பிசினஸ் மேல கொண்டு வரணும்னு ஆசை. நான் இப்ப ரெண்டு வருஷம் ஆஸ்திரேலியா போகறதே எங்க அப்பாவுக்கும், அண்ணாவுக்கும் அதிகமா வேலை இருக்கும்.” “நான் இருந்தா அவங்களுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். எங்க பிசினஸ்க்கே ஆள் தேவைப்படும் போது, நான் எப்படி வேற இடத்தில வேலை பார்க்க முடியும். அதனால என்னால உங்க கம்பெனில சேர முடியாது.” என்று தெளிவாகச் சொல்ல. ராம்நாத் “ஓகே… பரவாயில்லை…” என்றார். “ஏன் அங்கிள் வெளிய ஆள் தேடுறீங்க? உங்க வீட்லயே ஆள் இருக்கே…” அர்ஜுன் சொல்ல…. “வருண் இன்னும் படிப்பு முடிச்சிட்டு வர ரொம்ப வருஷம் ஆகும்.” என்றார் ராம்நாத்.
“வருண் மட்டும் தான் உங்களுக்கு இருக்கானா… மீரா இல்லை… ஏன் அவ பிசினஸ் பார்க்க மாட்டாளா?” அர்ஜுன் ஒரு மாதிரி குரலில் கேட்க…. மீராவால முடியுமா… என்று ராம்நாத் யோசிக்க…. அதை உணர்ந்த அர்ஜுன் “அதெல்லாம் முடியும். அவ ரொம்பத் திறமைசாலி, நீங்க அவளை ட்ரைன் பண்ணுங்க.” என்றவன், “சரி அங்கிள் நாங்க கிளம்பறோம்.” என்று விடைபெற…. ராம்நாத் அவர் அறியாமலையே “அடிக்கடி வீட்டுக்கு வா அர்ஜுன்.” என்ற வார்த்தை அவர் வாயில் இருந்து வந்தது. அதைக் கேட்டு அர்ஜுன், மீரா இருவரின் முகமும் மலர்ந்தது. எல்லோரும் விடைபெற்று கிளம்ப…. மீரா கீர்த்தனாவை அவளுடைய காரில் டிரைவரோடு அனுப்பி வைத்தாள். அர்ஜுன் வீட்டுக்கு வந்து மீராவை செல்லில் அழைக்க… அவள் எங்க அப்பாவையே கவுத்துடீங்களே என்று கிண்டல் செய்ய… “அது இப்ப தெரியாது… நான் உன்னைப் பொண்ணு கேட்கும் போது, உங்க அப்பா சொல்ற பதில்ல தான் தெரியும், கவுந்துட்டாரா இல்லையான்னு.” அர்ஜுன் சொல்லிவிட்டு சிரிக்க… “ஓ… அப்படி ஒன்னு இருக்கோ…” என்றாள் மீரா. அர்ஜுன், மீரா அவள் அப்பா அவர்கள் கம்பெனியில் சேர சொன்னதைப் பற்றி எதாவது சொல்வாளா என்று எதிர்பார்க்க… அவள் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. “மீரா, நான் உங்க அப்பா கம்பெனியில சேர மாட்டேன்னு சொன்னது, உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை தான.”அர்ஜுன் தயக்கமாகக் கேட்க… “இல்ல அர்ஜுன்… உங்களுக்கு ஒரு பிசினஸ் இருக்கும் போது… நீங்க எதுக்கு இங்க வேலை பார்க்கணும்?” என்று அதோடு அந்தப் பேச்சை முடித்துவிட்டு, மீரா வேறு பேசினாள். “அர்ஜுன், இன்னைக்குக் கைல செயின் வச்சிக்கிட்டு சாமிகிட்டா என்ன வேண்டினீங்க?” மீரா ஆர்வமாகக் கேட்க,
“அது… அது…” என்று இழுத்தவன், “வேண்டினது வெளிய சொன்னா பலிக்காது. அதனால நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன். Bye.” என்று போன்னை வைக்க… மீரா, போடா… என்று சொல்லிவிட்டு இனிய கனவுகளுடன் படுக்கச் சென்றாள்.