மீராவிற்கு அழுது அழுது கண்களில் கண்ணீரே வரண்டுவிட்டது. அழுது கொண்டே படுத்திருந்தவள், விடியற்காலையில் தான் தன்னையும் அறியாமல் உறங்கினாள். அர்ஜுன் காலை 6.30 மணிக்குச் சிங்கப்பூரில் சென்று இறங்கினான். அங்கிருந்து 9 மணிக்கு தான் சிட்னி செல்லும் விமானம். அதனால் அவனும், சூர்யாவும் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தனர். அர்ஜுனுக்குத் தெரியும் மீரா லேட்டாகத் தான் தூங்கி இருப்பாள் என்று. அதனால் அவள் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும், பிறகு பேசுவோம் என்று உட்கார்ந்திருந்தான். அர்ஜுன் உற்சாகம் இல்லாமல் இருப்பதைப் பார்த்த சூர்யா “அர்ஜுன், நீ ரெண்டு வருஷம் படிக்க வந்திருக்க, படிச்சு முடிச்சிட்டு தான் இனி திரும்பி போக முடியும். முதல்ல நீ இதை உன் மனசில நல்லா பதிய வை. இப்படி நீ விருப்பம் இல்லாம இருக்கிறது பார்க்க நல்லாவே இல்லை. நான் எதோ உன்னைக் கட்டாயபடுத்திக் கூட்டிட்டு வந்ததைப் போல இருக்கு.” என்றான். “எனக்கு மீராவை நினைத்து தான் கவலை. உனக்கே தெரியும், நாங்க காதலிக்கும் முன் அவ எப்படி இருந்தான்னு? தனியாவே இருப்பா…. இப்ப தான் கொஞ்ச நாளா நல்லா இருந்தா. எனக்கு எங்கே அவ மறுபடியும் தனியா இருப்பாளோன்னு கவலை. வேற ஒன்னும் இல்லை…. நான் கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவேன் கவலைபடாதே. நான் போய் வீட்டுக்கும் மீராவுக்கும் போன் பண்ணிட்டு வரேன்.” என்று அர்ஜுன் எழுந்து சென்றான். அர்ஜுன் முதலில் வீட்டுக்கு அழைத்தான் வித்யா தான் எடுத்தார். “அர்ஜுன் சிங்கப்பூர் போய்டியா…?” “வந்துட்டேன் மா… ஒன்பது மணிக்கு ஆஸ்திரேலியா ப்ளைட், நான் போயிட்டு கால் பண்றேன், எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க, வச்சிடட்டுமா… ” “ம்ம்…சரி அர்ஜுன் பார்த்து போ.” வித்யா போன்னை வைத்ததும், அடுத்து அர்ஜுன் மீராவை அழைத்தான். செல்லின் அழைப்புச் சத்தத்தில் தான் மீரா கண் விழித்தாள். போன்னை எடுத்து புது எண் என்றதுமே… அது அர்ஜுன் என்று தெரிந்ததால்… உற்சாகமாக “ஹாய் அர்ஜுன், குட் மார்னிங்.” என்றாள். அவளின் உற்சாகம் அர்ஜுனையும் தொற்றிக் கொள்ள, புன்னகையுடன் “குட் மார்னிங், செல்லம், இப்ப தான் எழுந்துக்றீங்களா?” என்றான். “ம்ம்…ஆமாம், டைம் என்ன?” என்றவள், அவளே மணி பார்த்துவிட்டு “எட்டு மணியா… இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்.” என்று தலையில் அடிக்க… அர்ஜுன் “சரி காலேஜ்குக் கிளம்பு, நான் ஆஸ்திரேலியா போயிட்டு போன் பண்றேன்.” என்றான். “நான் இன்னைக்குப் போகலை…” “ஏன் விடிய… விடிய… அழுதது பத்தாதா? இன்னும் இன்னைக்குப் பகல்ளையும் உட்கார்ந்து அழனுமா…. நீ காலேஜ் போ, அப்பதான் உன்னோட மூட் மாறும்.” “எனக்குக் காலேஜ் போகப் பிடிக்கலை, ப்ளீஸ் அர்ஜுன்… நாளைக்குப் போறேன்.” “நீ இன்னைக்குக் காலேஜ் போனா தான், நான் நைட் உனக்குப் போன் பண்ணுவேன். இல்லைனா பண்ண மாட்டேன். நீயே முடிவு செஞ்சுக்கோ போறதா, வேண்டாமான்னு.” “நீ வீட்ல இருந்தா… என்னையே நினைச்சிட்டு இருப்ப, காலேஜ் போனா மூட் மாறும் கிளம்புடா.” என்றதும், மீரா அரை மனதுடன் தான் சம்மதித்தாள். அர்ஜுன் நைட் கால் பண்றேன் என்று போன்னை வைத்தான். மீரா விருப்பம் இல்லாமல் தான் கல்லூரிக்கு சென்றாள். ஆனால் அங்கே சென்றதும், அவள் மனம் வகுப்பிலும், பாடத்திலும் கவனம் செலுத்தியதால்… அவளால் அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்றதை சிறிது நேரம் மறக்க முடிந்தது. அவள் அழுகையும் நின்றது. மாலையில் அர்ஜுனோடு கல்லூரியில் சேர்ந்து நின்று பேசிய இடங்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருந்தது. அர்ஜுன் இன்னும் சிறிது நேரத்தில் அழைப்பான் என்பதால் வேகமாக வீட்டிற்கு வந்தாள். அர்ஜுனும் தன்னைத் தேற்றிக் கொண்டான். சென்னையில் இருந்து விமானம் ஏறிய போது அவன் சூர்யாவோடு கூடப் பேசாமல் அமைதியாகக் கண் மூடி இருந்தான். சிங்கப்பூரில் இருந்து விமானம் ஏறும் போது சற்று இயல்பாக இருந்தான். அதனால் சூர்யாவோடு பேசிக்கொண்டே வந்தான். “சூர்யா… நாம போய்ச் சேரும் போது ராத்திரி ஆகிடும், நேரா நாம தங்க போற இடத்துக்குப் போய், இன்னைக்கே பெட்டி எல்லாம் பிரித்து அடுக்கி வச்சிட்டு, நாளைக்குக் காலையில எழுந்து காலேஜ்க்கு போயிட்டு வந்திடலாம்.” “சரி அர்ஜுன், அப்படியே பண்ணுவோம்.” இப்படியே இருவரும் தாங்கள் இனி என்ன என்ன செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டே சென்றதில் நேரம் போனதே தெரியவில்லை. இருவரும் ஆஸ்திரேலியா நேரத்திற்கு இரவு ஒன்பதரை மணிக்கு தரை இறங்கினர். அர்ஜுன் விமான நிலையத்தில் இருந்தே வீட்டிற்கும், மீராவிற்கும் அழைத்துத் தான் வந்து சேர்ந்ததைச் சொன்னவன், நாளை விரிவாகப் பேசுவதாகச் சொல்லி வைத்துவிட்டான். விமான நிலையத்திற்கு அவர்கள் கல்லூரியில் படித்த சீனியர் ப்ரகாஷ் நேரில் வந்திருந்தான். விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே… அவர்கள் தங்க போகும் அபார்ட்மெண்ட் வந்தது. ப்ரகாஷ் அங்கே வழியில் இருக்கும் ஒரு மாலில் நிறுத்தி, அவர்களுக்கு எதாவது வேண்டுமா என்று கேட்க….அர்ஜுன் “நாங்க ப்ளைட்லையே சாப்பிட்டோம் ப்ரகாஷ்.” என்றான். “இன்னைக்கு இல்லை… நாளைக்கு எதாவது தேவைனா இப்பவே வாங்கிகோங்க. காலையில கடை திறக்க லேட் ஆகும்.” என்றதும், சூர்யா மட்டும் ப்ரகாஷோடு இறங்கி உள்ளே சென்று பாலும், பழங்களும் வாங்கி வந்தான். அர்ஜுன் பெட்டிக்கு காவலாக டாக்ஸியிலேயே இருந்தான். ப்ரகாஷ் அவர்களை அவர்கள் அபார்ட்மெண்டில் சென்று விட்டவன், “நான் அஞ்சாவது மாடியில இருக்கேன், எதாவது வேணும்னா கால் பண்ணுங்க.” என்று தன் மொபைல் நம்பரையும், வீட்டு இண்டர்காம் நம்பரையும் கொடுத்து விட்டுச் சென்றான். அர்ஜுனும், சூர்யாவும் இருப்பது ஆறாவது மாடியில். அர்ஜுனும், சூர்யாவும் வீட்டை சுற்றி பார்த்தனர். அது ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட். சின்ன ஹால், அதிலேயே திறந்த சமையல் அறை மற்றும் ஒரு படுக்கை அறை இருந்தது. அந்தப் படுக்கை அறையில் பாத்ரூமும், சிட்அவுட்டும் இருந்தது. அர்ஜுனும், சூர்யாவும் தாங்கள் கொண்டு வந்த பெட்டியை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றனர். அதில் இரண்டு கப்போர்டு இருந்தது. ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர். அர்ஜுன் சூர்யாவின் மூன்று பெட்டிகளைப் பார்த்து, “நீ கொண்டு வந்திருக்கப் பெட்டியை பார்த்தா…. நீ ரெண்டு வருஷத்துக்கு மேலையே இங்க இருப்ப போலிருக்கே.” என்று நக்கல் அடிக்க….. சூர்யா அர்ஜுனை பார்த்து முறைத்தவன், அதிலிருந்த ஒரு பெட்டியை அர்ஜுனின் பக்கம் நகர்த்தி, “இது உனக்கு மீரா கொண்டு வந்து குடுத்தா… ஆஸ்திரேலியா போனதும் தான் சொல்லனும்னு சொன்னா.” என்றான். அவன் சொல்லியதை கேட்ட அர்ஜுனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்படி என்ன தான் அனுப்பி இருக்கா? என்று நினைத்தவன், அந்த அறையிலேயே ஒரு மூலையில் சென்று அமர்ந்து, அந்தப் பெட்டியை திறக்க….. சூர்யாவும் தன்னுடைய பெட்டியை பிரித்து அடுக்க ஆரம்பித்தான். அர்ஜுன் மீரா கொடுத்த பெட்டியை திறந்து பார்க்க… அதில் அர்ஜுனுக்கு நிறைய உடைகள், அவன் கல்லூரிக்குக் கொண்டு செல்ல இரண்டு வகையான தோள் பைகள், காலணிகள் என்று விதவிதமான பரிசு பொருட்கள் இருந்தது. இவ எதுக்கு ஒரு கடையவே அனுப்பி இருக்கா என்று நினைத்தவன், அதோடு அதில் இருந்த ஒரு வாழ்த்து அட்டையை எடுத்துப் பார்த்தான். மீரா அவளுடைய காதலை விளக்குவது போல் இருந்தது, அந்த வாழ்த்து அட்டை. அர்ஜுன் அதை நெஞ்சோடு அனைத்து கொண்டவன், சிறிது நேரம் கண் மூடி சாய்ந்து இருந்தான். பின் அவனும் சென்று சூர்யாவோடு அவன் பொருட்களை அடுக்கினான். இருவரும் சேர்ந்து அவர்கள் கொண்டு வந்த மளிகை சாமான் மற்றும் பாத்திரங்களைச் சமையல் அறை அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, அவர்கள் வாங்கி வந்த பாலை காய்ச்சி குடித்துவிட்டுப் படுக்கச் சென்றனர். இருவரும் இருந்த அலுப்பில் படுத்ததும் உறங்கியும் விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து இருவரும் நூட்ல்ஸ் செய்து சாப்பிட்டுவிட்டு ப்ரகாஷோடு கல்லூரிக்கு சென்றனர். அங்கே வேலை எல்லாம் முடிய மதியமாகி விட்டது. பிறகு அங்கிருந்து கேன்டீனில் சென்று இருவரும் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தனர். அர்ஜுன் எப்போது இரவு ஆகும் என்று காத்திருந்தவன், மீராவை ஸ்கைப்ல் அழைத்தான். அர்ஜுனும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் இருவருக்கும் முதலில் பேச்சே வரவில்லை. அர்ஜுன் கட்டிலில் லேப்டாப்பை வைத்துகொண்டு படுத்திருந்தான். மீரா அவள் அறையில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்தாள், மடியில் லேப் டாப் இருந்தது. இருவருக்கும் இரண்டு நாளே எதோ மாத கணக்கில் பார்க்காதது போல் இருந்தது. முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர். பின் அர்ஜுன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான். “எப்படி இருக்க மீரா? ரொம்ப அழுதியா கண்ணெல்லாம் வீங்கி இருக்கு.” “அதெல்லாம் இல்லை… நான் நல்லா தான் இருக்கேன்.” என்று சொல்லும் போதே மீராவின் குரலில் அழுகை எட்டி பார்த்தது. அர்ஜுன் அதைக் கண்டுகொள்ளாமல் பேச்சை மாற்றினான். “எதுக்குடி இப்படி ஒரு கடையவே காலி பண்ணி அனுப்பி இருக்க?….” “அந்த டிரஸ் எல்லாம் நீங்க ஸ்பெஷல் டேஸ் அன்னைக்குப் போட்டுக்க.” “என்ன ஸ்பெஷல் டே? புரியற மாதிரி சொல்லு.” “புரியலையா….ஒரு டிரஸ் நீங்க காலேஜ் போற முதல் நாள் அன்னைக்கு, இன்னொரு டிரஸ் உங்க பிறந்தநாள் அன்னைக்கு, அப்புறம் தீபாவளிக்கு இப்படி ஒவ்வொரு ஸ்பெஷல் டே அன்னைக்குப் போட்டுக்க வாங்கி வச்சிருக்கேன். இப்பவாவது புரியுதா…கரெக்டா ரெண்டு வருஷத்துக்குத் தான் வாங்கி இருக்கேன். அதனால ரெண்டு வருஷம் முடிஞ்சதும் வந்திடணும்.” “உங்க அப்பா நிறையப் பணம் வச்சிருக்கார், அதை எப்படிக் காலி பண்றதுன்னு தெரியாம இதெல்லாம் பண்ற நீ.” “அதை விடுங்க, அப்புறம் இன்னைக்கு என்ன பண்ணீங்க?” அர்ஜுன் அன்று கல்லூரி சென்று வந்தது பற்றிச் சொன்னான். மீராவும், அர்ஜுனும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தொடர்பை துண்டித்தனர். அர்ஜுன் அடுத்து ஆருவை அழைத்தான். “ஹாய் அர்ஜுன், எப்படி டா இருக்க? அங்க உனக்குப் பிடிச்சிருக்கா? சாப்பாடு நல்லா இருக்கா? நீ இல்லாம வீடு நல்லாவே இல்லை.” ஆரு புலம்ப…. அர்ஜுன் “எல்லாம் நல்லா இருக்கு, சாப்பாடு தான் அவ்வளவா பிடிக்கலை.” என்றான். அர்ஜுன் இந்தியாவில் இருந்தாலும் வெளியே சென்று சாப்பிட்டால் அப்படித் தான் சொல்வான். அவனுக்கு எப்போதும் வீட்டு சாப்பாடு தான் பிடிக்கும். அவன் சொன்னதைக் கேட்டு வருந்திய ஆரு, “உன்னோட ப்ரண்ட கூப்பிடு.” என்று சொல்ல… அர்ஜுன் “சூர்யாவையா எதுக்கு?” என்று கேட்க… ஆரு “நீ முதல்ல கூப்பிடு.” என்றாள். அர்ஜுன் சூர்யாவை அழைக்க, அவன் வந்து என்னவென்று கேட்டான். இங்க வா என்று அவனை லேப்டாப் முன் அமர வைக்க… அதன் திரையில் ஆரு தெரிந்தாள். சூர்யாவுக்கு ஆருவை பார்த்ததும் சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை, “ஹாய் ஆரு…” என்றான் புன்னகையுடன். “எங்க அண்ணாவுக்கு இந்த ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒத்து வராது, அதனால உங்களுக்குச் சமையல் தெரியும்னு சொன்னீங்க தான, அவனுக்கு ஒழுங்கா சமைச்சு குடுங்க.” ஆரு மிரட்ட…. “ஹே… என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு, நான் என்ன உங்க அண்ணனுக்குச் சமைச்சு போடவா வந்திருக்கேன்? அவனுக்கு வேணும்னா அவனையே சமைக்கச் சொல்லு.” சூர்யா கோபமாகச் சொல்ல முயன்றாலும், அவன் குரல் குழைந்து தான் இருந்தது. அவன் சொன்னதைக் கேட்ட ஆருவின் கண்கள் கலங்க… “அம்மா தாயே அழாத, நான் உங்க அண்ணனுக்கு நல்லா வக்கனையா சமைச்சு போடறேன்.” சூர்யா சொன்னதும் தான் ஆருவின் முகம் மலர்ந்தது. அவள் சூர்யாவிடம் தேங்க்ஸ் என்று சொல்ல… சூர்யாவின் முகமும் புன்னகையில் விரிந்தது. … அர்ஜுன் அவர்கள் பேசுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். “நான் உங்க அண்ணனுக்குச் சமைச்சு போடறேன், ஆனா… அவன் எனக்குக் காய் வெட்டி தரனும், அப்புறம் பாத்திரம் கழுவறது எல்லாம் அவன் வேலை. அதை நீயே அவனிடம் சொல்லிடு.” என்று எழுந்து சென்றான். “டேய், அது தான் அப்பவே செஞ்சு தந்தேனே.. அப்புறம் என்ன?” என்ற அர்ஜுன் ஆருவிடம் வித்யாவை அழைக்கச் சொல்ல… அடுத்து வித்யாவும், அர்ஜுனும் பேச ஆரம்பித்தனர். மறுநாள் அர்ஜுனுக்கும், சூர்யாவிற்கும் அவர்கள் கல்லூரி ஐடி கார்டு கிடைத்தது. இருவரும் சென்று தங்கள் மொபைலுக்குப் புதுச் சிம் கார்டு வாங்கினர். அர்ஜுனும், சூர்யாவும் வேலையைப் பகிர்ந்து செய்தனர். சூர்யா சமையல் வேலையை எடுத்து கொண்டதால்… அர்ஜுன் வீட்டை சுத்தம் செய்யும் வேலையை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் இன்னும் கல்லூரி திறக்காததால் காலையில் இருந்து மாலை வரை ஊரை சுற்றி பார்த்தனர். அவர்கள் ஆஸ்திரேலியா சென்ற மறுவாரம் கல்லூரி திறக்க, அர்ஜுனும் சூர்யாவும் ஆர்வமாகச் சென்றனர். அர்ஜுன் மீரா அனுப்பி இருந்த உடையில் இருந்து ஒன்றை தான் முதல் நாள் கல்லூரிக்கு அணிந்து சென்றான். அங்கே இந்தியவில் இருந்து வந்த மாணவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அர்ஜுனுக்கும், சூர்யாவிற்கும் அவர்கள் கல்லூரியை ரொம்பப் பிடித்தது. அந்த வார ஞாயிற்றுகிழமை மீரா ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டிருந்தாள். ஆடி முடித்ததும் எல்லோரும் கை தட்ட… மீராவின் கண்கள் எப்போது போல் அர்ஜுனை தேடியது. அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு, அர்ஜுன் மீராவின் ஒவ்வொரு நாட்டிய நிகழ்ச்சிக்கும் வந்து விடுவான். ஆடி முடித்து அவள் மேடையை விட்டு இறங்கும் போது… அவளுக்காகக் காத்திருந்து, அவளைப் பாராட்டி உற்சாகப் படுத்துவான். ஆனால் இன்று மீண்டும் அவள் முன்பிருந்த தனிமைக்கே சென்று விட்டதைப் போலத் தோன்ற…. மீராவிற்குக் கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது. மீரா உடை மாற்றும் அறைக்குச் சென்று அங்கிருந்த மேஜையில் தலை கவிழ்ந்து அழுதாள். அப்போது அவள் செல் அடிக்கும் ஒலி கேட்க… ஓடி சென்று தன் பையில் இருந்து செல்லை எடுத்து பார்த்தாள். அர்ஜுன் தான் அழைத்தான். அவனுக்கு இப்போது நள்ளிரவு நேரமாக இருக்கும், அப்படியும் அவன் தன்னை அழைப்பதை பார்த்ததும், மீராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. “மீரா, ப்ரோக்ராம் முடிஞ்சிடுச்சா… நீ நல்ல ஆடினியா?” அர்ஜுன் கேட்க… மீரா வெறும் “ம்…ம்.. என்று மட்டும் சொன்னாள். “அழறியா மீரா…” என்றதும், மீரா விசும்ப…. “எனக்குத் தெரியும், நீ இன்னைக்கு என்னைத் தேடுவேன்னு… அது தான் போன் பண்ணேன். ப்ளீஸ் மீரா… கொஞ்ச நாள் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா…” அர்ஜுன் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய….மீரா சரி என்றாள். மீரா அடிக்கடி அர்ஜுனின் வீட்டிற்குச் சென்று வந்தாள். அதனால் ரஞ்சனாவோடும் நன்றாகப் பழகும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. மீரா, ஆரு, மற்றும் ரஞ்சனா சேர்ந்து சில நேரம் ஷாப்பிங், சினிமா என்று செல்வார்கள். அர்ஜுனுக்கும் கல்லூரி வாழ்க்கை நன்றாக இருந்ததால் அவனும் சந்தோஷமாக இருந்தான். இப்படியே மூன்று மாதங்கள் செல்ல… சஞ்சனா ரஞ்சனாவை பார்க்க வந்தாள்.