“அப்பா என்னைக் கேட்காம எதுக்காக இந்த ஏற்பாடு பண்ணிங்க. ஒரு வார்த்தை என் கிட்ட கேட்டு இருந்தா இந்த வீட்டில இவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்காது. ஆரதி சொன்ன மாதிரி நல்லா இருந்த குடும்பத்துல நான் தான் பிரச்சனை பண்ணிட்டேன். சார் விரும்புறது ஆரதிய தான். எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இது தெரியும். எனக்கு சார் மேல எந்த விருப்பமும் இல்ல. தேவை இல்லாம நம்மளால இந்த வீட்டில எவ்வளவு பிரச்சனை பாருங்க. இனிமேல் இங்கே இருக்க வேண்டாம் கிளம்புங்க ப்பா.”
காலையிலிருந்து விடாமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும்… சூறாவளியில் சிக்கி ஒதுங்கி நின்ற உடைந்த கிளை சருகு போல் வீட்டின் பெரியவர்கள் நால்வரும் நின்ற இடம் மாறாமல் அதே நிலையில் இன்னமும் நிற்க… இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி தான் தனக்கு உதவியர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனையை சரி படுத்த வழி தெரியாமல் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் வீல்சேரில் நகர்ந்து கொண்டே வெளியில் வந்த வானதி…, “ஆன்ட்டி எனக்கு அப்பவே டவுட் இருந்துச்சு. சித்து விரும்புறது ஆரதி அக்காவ இல்ல.. ரதிதேவிய தான். நீங்க தான் ஆள மாத்தி கல்யாண ஏற்பாடு பண்ணிட்டீங்க.” இருக்கின்ற குழப்பத்தில் இவள் ஒரு குழப்பத்தை உருவாக்க அதைக்கேட்ட சித்துவின் உயிர்நாடி ஊசலாடியது அந்தரத்தில்.
“எம்மா வானதி நான் உனக்கு என்னமோ பண்ண. இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது. ஒரு சுத்தமான கன்னி பையனை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட. அதுவும் இந்த பொண்ணையா… நான் வீட்டில செருப்படி பட்டு சாகணும். அதான உன் எண்ணம். அது எப்படி எல்லாத்தையும் சரியா தப்பா புரிஞ்சிருக்கிறீங்க. என்றவன் ரதிதேவியிடம் திரும்பி,
” தாயே கொலை சாமி ச்சீ குல சாமி.. அந்த பொண்ணு சொல்றதுல எதுவும் உண்மையில் இல்லம்மா. அந்த பொண்ணு போற போக்குல போண்டா தின்னுட்டு போறமாதிரி .. என்னை தின்னுட்டு போகுது. சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லம்மா.”
சித்துவின் வார்த்தையில்.. வானதி தான் திரு திருவென முழிக்க.., இப்பொழுது அனைவரின் பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்து உள்ளே ஓட நினைத்து தன் வீல் சேரை திருப்ப,
அதை கவனித்த ரதிதேவி ஓடி சென்று தடுத்து, “எதை வச்சி சித்து என்னை லவ் பண்றதா சொல்றிங்க. “
“அது அது வந்து.. அன்னைக்கு கண்ணன் சார் உங்களுக்கு போன் பண்றாங்கன்னு மேல போனீங்க. அதைப் பார்த்து சித்து கோவமா உங்க பின்னாடியே வந்தாங்க.. …. அ..அதான்.. அவரு லவ் பண்ற பொண்ணு அவரோட அண்ணன் கிட்ட பேசுறது தெரிஞ்சி கோபப்படுறாங்கன்னு நினைச்சு..இப்ப சொல்லி……”
வானதியின் பேச்சில் தலையில் அடித்துக்கொண்டு ரதிதேவி… சித்தி விடம் திரும்பி..”நீங்க எதுக்கு என்ன தேடி வந்தீங்க.”
மூன்று முறை கலவரங்கள் நடந்தும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாக இருந்த வீடு தொடர்ந்து டம்ம்ம் டம்ம்ம்ம் டப் …டம்ம்ம் ம் டப் டப் னு … வெடியை மிஞ்சும் பேரளவு சத்தத்தில், வாயிருந்தால் கதறிக் கதறி அழுது இருக்குமோ என்னவோ… மௌனமாக தரையில் படும் ஒவ்வொரு அடிக்கும் அமைதியாக தாங்கிக் கொண்டிருந்தது.
சித்து, வானதி, ரதி தேவி , மணிகண்டன், மகேஸ்வரி, நாராயணன், சண்முகம்.. அனைவரும் பதறி சத்தம் வரும் பக்கம் திரும்பிப் பார்க்க…
அங்கு…
சரஸ்வதியும், மஹாலட்சுமியும் வீட்டில் அலங்காரத்திற்கு என வைக்கப்பட்ட பூச்சாடி, கண்ணாடி குவளை, சிறு சிறு பரிசுகள், போட்டோக்கள், பாத்திரங்கள் என கையில் கிடைத்த அனைத்தையும் தூக்கிப்போட்டு உங்களை விட பெரிய கோபக்காரர்கள் என காட்டிக் கொண்டிருக்க…… பதறிக்கொண்டு தடுக்க வந்த கணவன் மார்களையும் கண்டுகொள்ளாமல் வீட்டை அலங்கோலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மூத்த தலைவிகள்.
இருவரையும் தடுக்க முடியாது அனைவரும் நின்றிருக்க தைரியமாக தடுக்க வந்த ராசாத்தி அதில் வெற்றியும் கண்டு இருவரையும் தடுத்துவிட்டார் . மேல்மூச்சு கீழ்மூச்சு செல்ல வழியில்லாமல்… வயதான உடம்பில் வயலின் வாசித்துக் கொண்டிருக்க.. அங்கிருந்த அனைவருக்கும் காளியாக தெரிந்தனர் இருவரும்..
“என்னம்மா நீங்க..! சின்ன பசங்க தான் என்னமோ பண்றாங்கன்னா. பெரியவங்க நீங்களும் அவங்கள விட மோசமா பண்றீங்க. என்ன ஏதுன்னு பொறுமையா கேளுங்க.”
“என்ன கேட்கணும் ராசாத்தி. சொல்லுங்க என்ன கேக்கணும். யாரு கிட்ட கேக்கணும். ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றாங்க. எங்கள பாத்தா பைத்தியக்காரங்க மாதிரி தெரியுதா இவங்களுக்கு. கல்யாணம் பண்ணிக்க ரெடியா ன்னு கேட்டதுக்கு பிடிக்கலைன்னா சொல்லிட்டு போனவங்க இப்போ கொஞ்சிகிட்டு நிக்கிறாங்க. சார்.. சார் னு உருகுனவ இப்போ என்னமோ வெள்ளைக்கொடி காட்டிட்டு நிக்குறா. இதோ இங்க நிக்கிறான் பாரு திருட்டு பையன்… எல்லா விசயமும் தெரிஞ்சாலும் அமைதியா இருந்திருக்கான். இதுல உன் பொண்ணு தான் அல்டிமேட்.. இந்த வீட்டுக்குள்ள தானே இருக்கா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்’ல. ஆளாளுக்கு எங்களை போட்டு நோகடிச்சிட்டு எப்படி நிக்குறாங்க பாருங்க. ஒழுங்கா என்ன நடந்துச்சோ அதை சொல்ல சொல்லுங்க.. இல்லை’னா நடக்குறதே வேறையா இருக்கும்.” என்ற மஹாலட்சுமி.. கடைசியாக தன் கோபத்தின் அளவை ஒரு முறை காட்ட ராசாத்தியின் கையிலிருக்கும் போனை வாங்கி தரையில் உடைத்தார்.
ராசாத்தி தான்.. தடுக்க வந்த தவறை உணர்ந்து.. பாவமாக பலமுறை செத்தும் உயிர்பிழைத்த தன் செல்போனை பார்த்திருந்தார் இந்த முறை உயிர் பிழைக்காது என்பதை நன்குணர்ந்து. வானதி அதில் சிரித்துவிட… சரஸ்வதியின் தனி முறைப்புக்கு ஆளானாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சித்து.. நல்ல பிள்ளையாக தன் கைகளை கட்டிக்கொண்டு……
” அம்மா யாரு’ன்னா எப்படி’னா போகட்டும். முதல்ல என் பஞ்சாயத்தை முடிச்சிக்கிற. சத்தியமா நான் ஆரதிய காதலிக்கல. அதுவும் இந்த ரதிதேவிய சுத்தமா காதலிக்கல. உன் பையன் சுத்த தங்கம் கூட இல்லம்மா தூய தங்கம்.”
” இரண்டுமே ஒன்னு தான் எரும மாடே பதில மட்டும் சொல்லு.”
“என்னம்மா நீங்க… என்னை எருமையோட கம்பேர் பண்றீங்க.”
என்றவனை முறைத்த மஹாலட்சுமி அருகில் ஏதாவது இருக்கிறதா என தேட.. அன்னையின் அன்பு மனம் அறிந்தவன் வரலாற்று சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினான்.
இதுங்க ரெண்டும் சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்குங்க. ஆனா இன்னும் ஒருத்தருக்கு ஒருத்தர்… ஐ லவ் யூ சொல்லிக்கல. சொல்லாமலே புரிஞ்சுகிட்ட தெய்வீக காதலர்கள் ம்மா இவங்க. கூடவே இருக்க எங்கிட்ட கூட சொல்லலை. நான் தான் கண்டுபிடிச்சேன். உள்ளுக்குள்ள உருகி உருகி.. காதலிக்கிற இந்த ரெண்டு திருட்டு பசங்களும்… வெளியில வீம்புக்கு சண்டை போடுற மாதிரி நடிப்பாங்க. கேட்டா வேலை வேற காதல் வேறன்னு டயலாக் பேசுவாங்க. அன்னைக்கு நீங்க பேசும்போதே கண்ணன் வாய தொறந்து அவன் காதல சொல்லனும்’னு தான் நானும் எவ்வளவோ பேசின.. ஆனால் இந்த அறிவு கெட்ட அர கிறுக்குங்க மாத்தி மாத்தி பேசி உங்க மனசை கலைச்சுட்டாங்க. அப்பதான் ரதிதேவி வீட்டுக்கு வந்தாங்க. அவங்க வந்தது ஆரதிக்க பிடிக்காமல் போக.., ரதி தேவிக்கு ஆரதிய பிடிக்காம போக, நடுவுல கண்ணன் மாட்டிகிட்டு முழிக்க.., உண்மையை கண்டுபிடிக்கிறேன்’ னு நான் வந்து நிற்க, அதை இந்த வானதி மேடம் தப்பா புரிஞ்சி நேரம் பார்த்து உங்க கிட்ட போட்டு கொடுக்க…. இது எதுவுமே தெரியாத நீங்க எங்க நாலு பேருக்கும் கல்யாணம் பேச, ..
அவ்வ்வ்வ் வ்வ் …. ” அழுவது போல் வாயில் கையில் வைத்தவன், “காலையிலிருந்து இந்த வீடுதான் படாதபாடுபட்டு இருக்கு மம்மி…. பாவம் மம்மி.. அதைவிட பாவம் உன் சின்ன மகன் மம்மி. இதுங்களுக்கு நடுவுல என்னை ஏன் மம்மி பெத்து விட்டிங்க…. ” சொந்த இல்லத்திலே வக்கீலாக மாறியவன் நாற்புறமும் திரும்பி ஆக்ரோஷமாக கையை வளைத்து வளைத்து லா பேசி கடைசியில் அழுகையில் முடித்தான்.
அவனின் பேச்சில் அங்கிருப்பவர்களே சிரித்துவிட, ‘ஆத்தி குடும்பமே சிரிச்சிடுச்சி. உன் தலை தப்பிச்சிது டா லாயரு.. ஆனாலும் கோர்ட்ல கூட நீ இப்படி லா பேசுனது இல்லையே டா … என்னாச்சு உனக்கு இன்னைக்கு பர்ஃபாமென்ஸ் ல பின்னிடியே.’தன்னைத்தானே பெருமையாக பேசிக் கொண்டிருந்தவன்… மெல்ல தன் ஆருயிர் அண்ணனை காண… அவனைப் போலவே அப்போதுதான் அனைவரும் கண்ணனைக் கண்டார்கள்.
கண்ணாடி மேஜை உடையும் பொழுது எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலை மாறாமல் இன்னமும் இருவரும் இருக்க தலையிலடித்துக் கொண்ட சித்து, மெல்ல இருவருக்கும் அருகில் சென்று….பார்க்க,
“ஆழி இவங்க எல்லாரையும் பிடிச்சி ஜெய்ல போடு…”
“ஜெயில்ல வேண்டாம் டி தூக்கு ல போட்டுடலாம். உன்ன ஒரு கழுதைக்கு கல்யாணம் பண்ண நினைச்சிருந்தா கூட… மனச தேத்தி இருப்ப போயும் போயும் பேக்கு மண்டைய பேக்கிங் சோடா மாதிரி இருக்கான் அவனுக்கு கல்யாணம் பண்ணி தர நினைச்சாங்களே .. அதை தான் என்னால சகிச்சுக்க முடியலே. அந்தப் வக்கீல் வழுக்கை மண்டையன முதல்ல தூக்குல போடணும். அப்புறமா மிச்சமிருக்க ஒவ்வொருத்தரையும் கூட அனுப்பி விடலாம்.”
“அப்போ அந்த ரதிதேவி…”
“அவளுக்கு தூக்குலா இல்ல … கத்தி எடுத்து கையில தர உன் கோபம் போற அளவுக்கு குத்து.”
“அவங்க தான் இந்த பிரச்சனைக்கு முழுக்காரணம். அதனால துப்பாக்கியால அந்த வாய்லயே பத்து புல்லட்டை இறக்கிடலாம்.”
” உன்ன…”
” ம்ஹ்ஹ்.! என்ன சும்மாவே விடக்கூடாது. உன்னை இப்படி அழ வைச்சிட்டனே ……கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படியே உன்னை வாழ்க்கை முழுக்க தாங்கிட்டே இருக்கனும். இந்த கடுமையான தண்டனையை எனக்கு போதும்… ரதி.”
” என்னை…”
“உன்ன மட்டும் சும்மா விடுவேனா.. ஒழுங்கு மரியாதையா என்னை கல்யாணம் பண்ணிக்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பத்து பிள்ளை.. பெத்து கொடுத்திடு. இல்ல’ன்னு மட்டும் சொன்ன.. இதைவிட பெரிய தண்டனை கிடைக்கும் ரதி.”
“என்ன தண்டனை இதை விட பெருசா…”
“பத்து நூறாகிடுவேன்…”
அதற்குமேல் அவர்களின் உரையாடல்களை கேட்க விரும்பாத சித்து,
“அடச்சீ… நகந்து தொலைங்க… குடும்பமே உங்களை தான் பார்க்குது. “