Skip to content
Post Views: 5,103
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 3
Advertisement
கல்லூரியில் மீராவிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பைக்கில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த அர்ஜுனுக்கு, தன் மீதே கோபம் வந்தது. ஆசையாகப் பேச வந்தவளை முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டோமே, ஒரு வேளை வருத்தப்பட்டு அழ போகிறாள் என்று நினைத்தவனால்… அதற்கு மேல் செல்ல முடியாமல், பைக்கை திருப்பிக் கொண்டு மீண்டும் கல்லூரிக்கே சென்றான்.
அங்கே மீராவின் கார் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து… இன்னும் அவள் வீட்டுக்கு போகவில்லை என்று உணர்ந்து, பைக்கை நிறுத்திவிட்டு மீராவை தேடி சென்றான். மீரா காண்டீனில் அமர்ந்து தோழிகளுடன் சிரித்துப் பேசி அரட்டை அடித்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தவன், நல்லா தான் இருக்கா… நாம தான் தேவை இல்லாம டென்ஷன் ஆகிட்டோம். மணி என்ன ஆகுது?. இன்னும் வீட்டுக்கு போகாம இருக்கா பாரு. இவங்க வீட்ல தேட மாட்டாங்களா என்று நினைத்தவன், திரும்பி வந்த வழியே சென்று, தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
அவனுக்கு மீராவை பற்றித் தெரியவில்லை, மீரா தன்னுடைய வருத்தத்தை மற்றவர்களிடம் எப்போதும் காட்டி கொள்ளமாட்டாள்.
அன்று இரவு வழக்கம் போல் தோட்டத்தில் அமர்ந்து எல்லோரும் அன்று நடந்த கதையைப் பற்றிப் பேச, அர்ஜுன் இன்று பிரபுவை அடித்ததைப் பற்றி மட்டும் சொன்னவன், மீராவை பற்றி எதுவும் சொல்லவில்லை. மீராவை பற்றிச் சொன்னால்… அவளும் இதே கல்லூரி என்பது தெரிய வரும் ஆதியும், ஆருவும் மீராவை பற்றியே பேசுவார்கள்… இனி மீராவை பற்றி நினைத்தும் பார்க்க கூடாது என்று அர்ஜுன், மீராவை பற்றிப் பேசவில்லை.
மறுநாள் கல்லூரிக்கு வந்த அர்ஜுனை கல்லூரியின் முதல்வர் அழைப்பதாகச் சொல்ல, அவன் அவரது அறைக்குச் சென்ற போது, அங்கே ஏற்கனவே பிரபுவும், மீராவும் இருந்தனர்.
“சார் குட் மார்னிங், என்னை வர சொன்னீங்களா?” அர்ஜுன் கேட்க… “ஆமாம் இரு அர்ஜுன் மீராகிட்ட பேசிட்டு உன்கிட்ட பேசுறேன்.” என்றார்.
“மீரா, நான் நேத்துக் காலேஜ் வரலை. இன்னைக்கு வந்ததும் நேத்து நடந்த விஷயத்தைக் கேள்வி பட்டேன். நீ சொல்லு என்ன நடந்தது?” ப்ரின்சி கேட்க … மீரா மெளனமாக நின்றாள்.
“உன்னைப் பிரபு வேணும்னே இடிச்சதாகவும், பதிலுக்கு நீ அவனை அடிச்சதாகவும், பிறகு பிரபுவுக்கும் உனக்கும் சண்டை நடந்ததாகவும், உனக்காக அர்ஜுன் அவனை அடிச்சதாகவும் கேள்விபட்டேன் . சொல்லு அதெல்லாம் உண்மையா?”
மீரா பிரபுவை பார்த்தாள். அவன் முகம் வெளிறி இருந்தது. அவன் தலை குனிந்து நின்றிருந்தான். திருந்தியவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தால், அவன் திருந்தியதற்கு அர்த்தமே இல்லை என்று நினைத்த மீரா, “நான் தான் சார் தப்பா நினைச்சிட்டேன். பிரபு தெரியாம தான் மோதினாங்க. நான் தான் அவசரப்பட்டு அடிச்சிட்டேன். சாரி சார்.”
“அர்ஜுன்எனக்காக எதுக்குப் பிரபுவை அடிக்கணும்? அவங்களுக்கு என்னை யாருன்னே தெரியாது.” என்றாள். அவள் பேசியதை கேட்டு அர்ஜுன், பிரபு இருவருமே அதிர்ந்தனர்.
நேற்று அவ்வளவு தூரம் சண்டை போட்டவள், இன்று இப்படிப் பேசுவது இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பிரபு தான் இன்று துளைந்தோம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான். படிப்பை முடிக்கப் போகும் நேரத்தில், தான் செய்த தவறான செயல்… ஒரு கரும்புள்ளியாகத் தன் வாழ்கையில் இருக்கப் போவதை நினைத்து மனம் வருந்தியவன், தான் பெண்களை விளையாட்டாக நினைத்ததற்கு… தனக்குத் தண்டனை தேவை தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மீரா சொன்னது அவன் நெஞ்சில் பால் வார்த்தது.
“நீ நிஜமா தான் சொல்றியா?” ப்ரின்சி மீராவை பார்த்து கேட்க… அவள் ஆமாம் என்று தலையாட்ட… ப்ரின்சி அர்ஜுனிடம் “நீ எதுக்குப் பிரபுவை அடிச்ச?” என்றார்.
அர்ஜுன் பிரபுவை பார்த்துக் கொண்டே “அவனுக்கும் எனக்கும் பேசிட்டு இருக்கும் போது சண்டை வந்துடுச்சு, கோபத்தில அடிச்சிட்டேன்.” என்றான். ப்ரின்சி பிரபுவை பார்க்க… அவன் ஆமாம் என்று தயங்கி கொண்டே தலையாட்ட…
மீரா, அர்ஜுன் மற்றும் பிரபு மூவரையும், இனி இது போல் தவறு நடக்கக் கூடாது என்று ப்ரின்சி எச்சரித்து அனுப்பினார். முவரும் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.
வெளியே வந்த மீராவிடம் பிரபு ” தேங்க்ஸ் மீரா… நான் ரொம்பப் பயந்திட்டேன். எங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தபடுவாங்க. நான் இனிமே அது மாதிரி நடந்துக்க மாட்டேன்.” என்று மன்னிப்பு கேட்க…
“நானும் எங்க அப்பாவுக்காகத் தான் நேத்து பிரச்சனையைப் பெரிசாக்காம விட்டேன். பிரபு, பொண்ணா பிறந்தாலே ஆயிரம் பிரச்சனை. நாங்க நிம்மதியா, சந்தோஷமா இருக்கிற ஒரே இடம் காலேஜ் தான். இங்கயும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லைனா… நாங்க எங்க போவோம்? தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி நடந்துக்காதீங்க.” என்றவள், வேகமாக அங்கிருந்து சென்றாள்.
அர்ஜுன் மீரவையே பார்த்துக் கொண்டு நிற்க…. பிரபு “சாரி அர்ஜுன்.” என்றதும், அவன் பக்கம் திரும்பியவன் “கேட்டியா என்ன சொன்னான்னு, இனிமேலும் நீ திருந்தலைனா… நீ மனுஷ ஜென்மமே இல்லை.” என்றான் கோபமாக.
“இல்லை அர்ஜுன், நான் என் தவறை உணர்திட்டேன். சத்தியமா இனிமே ஒழுங்கா நடந்துக்கிறேன். நீ என்கிட்டே பழையமாதிரி பேசணும் அர்ஜுன். பேசுவ தான…” பிரபு கவலையாகக் கேட்க…
“நீ யாரிடம் தவறா நடந்தியோ, அவளே உன்னை மன்னிச்சிட்டா…. இனி நான் என்ன சொல்ல… வா கிளாஸ்க்கு போகலாம்.” என்று அர்ஜுன், பிரபுவை அழைத்துக் கொண்டு தங்கள் வகுப்பிற்குச் சென்றான். அதன் பிறகு வந்த நாட்களில் அர்ஜுனும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்தாலும், பார்க்காத மாதிரியே சென்றனர்.
எப்போதும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலையில் ஷட்டில் விளையாட செல்லும் அர்ஜுன், அவனது அப்பா அவனை மாலை வேளையில் அவர்கள் ஷோ ரூமிற்கு வர சொன்னதால்… இந்த வாரம் காலை சென்றான்.
அர்ஜுன் சென்ற போது மணி எழு… பொதுவாக அந்த நேரம் ரொம்பப் பேர் விளையாட வரும் நேரம் என்பதால், அங்கிருந்த பத்து கோர்ட்டிலுமே ஆட்கள் விளையாடி கொண்டு இருந்தனர். அர்ஜுன் அங்கிருத்த இருக்கையில் அமர்ந்து விளையாடுபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அர்ஜுன் ஒவ்வொரு கோர்ட்டாகப் பார்த்துக் கொண்டே வர… ஒரு கோர்ட்டில் மீரா மற்றும் இன்னும் சிலரும் சேர்ந்து டபுல்ஸ் விளையாடி கொண்டிருந்தனர். மீரா ட்ராக் பான்ட் மற்றும் டி– ஷர்ட் அணிந்து, முடியை இழுத்துப் பேண்ட் மாட்டி இருந்தாள்… மீரா விளையாட்டில் தீவிரமாக இருந்ததால்… அர்ஜுனை கவனிக்கவில்லை.
அவள் கூட விளையாடிய மற்ற மூவரும் ஆண்கள், அவர்களை விட மீரா தான் நன்றாக விளையாடினாள். அவள் லாவகமாகச் சர்வீஸ் போடுவதில் இருந்தே… அவள் ரொம்ப வருடமாக ஷட்டில் விளையாடுகிறாள் என்று நன்றாகத் தெரிந்தது.
அர்ஜுன் மீராவையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சரியான உயரத்தில் அதற்கேற்ற உடல்வாகுடன்… பார்க்க சந்தனத்தில் குழைத்து செய்த சிலை போலத் தான் இருக்கிறாள் என்று நினைத்தவன், ச்ச.. அவளிடம் இருந்து விலகி இருக்கனும்னு நினைச்சா, இப்படித் திரும்பத் திரும்ப அவளையே பார்க்கிற மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே…
“ஹாய் அர்ஜுன்.” என்று சத்தம் கேட்க… அர்ஜுன் குரல் வந்த திசையில் பார்க்க…. மீராவோடு இணைந்து விளையாடிய ஜீவாவை, அப்போது தான் கவனித்தான். அடப்பாவி இவனும் இங்க தான் இருக்கானா… இவனைக் கவனிக்கவே இல்லையே என்று நினைத்தவன், மீராவை பார்க்க… அவளும் அப்போது தான் அவனைப் பார்த்தவள், அர்ஜுன மகா ராசாவுக்கு இங்க என்ன வேலை என்று நினைத்தாள்.
அர்ஜுன் எழுந்து அவர்கள் அருகில் சென்றதும், ஜீவா “இவன் அர்ஜுன் என்னோட ஸ்கூல் ப்ரண்ட்” என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்ய…. அர்ஜுன் எல்லோரையும் பார்த்து ஹாய் என்றான்.
அர்ஜுன் ஜீவாவோடு நின்று பேசி கொண்டிருக்க, மீரா “u guys play… I am leaving.” என்று கிளம்ப…ஜீவா “ஏன் மீரா போற? நாம ஒருத்தர் மாத்தி ஒருத்தர் விளையாடலாம்” என்றான்.
error: Content is protected !!