சிரிப்போடு யூ எஸ்ஸில் இருக்கும் மற்றோரு தோழி ஏஞ்சலினை குறிப்பிட்டு கூறியவன்,
“வருவாங்க.. நீ வா.. உட்கார்..”
என்றிட அவனோடு அமர்ந்த ஆரியன்,
“தேங்க்ஸ் மனோஜ்.. நீ இல்லைன்னா என்ன செய்யிறதுனு தெரியாம தவிச்சு இருப்பேன்..”
என்று சொல்ல பதிலுக்கு அவனிடம் முறைப்பே கிடைத்தது.
“டேய்.. இதெல்லாம் ஒரு விஷயம்னு சொல்லி எங்களை சங்கடப்படுத்தாத ஆர்யா.. சக்தி என்ன யாரோ ஒரு பொண்ணா..? உன்னை பழக்கிறதுக்கு முன்னாடியே அவ எனக்கு தங்கச்சி ஆகிட்டா.. ஞாபகம் இருக்குல்ல..”
“சரி விடு… ஏதோ சொல்லணும்ணு தோணுச்சு..”
ஆரியன் முகத்தில் குடிக்கொண்ட அதீத கவலையை உணர்ந்தவனாய்,
“சக்தி எல்லாம் சொன்னுச்சு டா.. கேட்கவே மனசு தாளல.. பாவம் அவளுக்கு இவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்.. அதான் அவளை இப்படி யோசிக்க வைச்சு இருக்கு.. இந்த இட மாற்றமும் நல்லது தான்.. அவளுக்கும் மனசுல உள்ள புளுக்கம் மறையும்ல.. இப்பவே தெளிவாகிட்டா.. நாளைக்கு ஊருக்கு கிளம்ப போறதா சொன்னாள்.. இன்னைக்கு நைட் இங்கேயே ஸ்டே பண்ணட்டும்.. அவ்வளவு தான் இப்போதைக்கு ப்ரோப்ளம் சால்வ்ட் தானே… நீ எதுவும் நினைச்சு ஒர்ரி பண்ணிக்காத..”
என்று அவனை தேற்றி சமாதானம் கூற பெருமூச்சு விட்டு தலையை கையில் தாங்கி கொண்ட ஆரியன்,
“இல்ல மனோஜ்.. எந்த பிரச்சனையும் சால்வ் ஆகல.. இன்னும் சிக்கல் தான் ஆகியிருக்கு..”
என்றான் அயர்ச்சியோடு..!!
“ஏன் டா.. என்னாச்சு..”
“சக்தியை நான் பைக்ல அழைச்சுட்டு வரும்போது என்னோட மாமா ஒருத்தர் பார்த்து வீட்ல சொல்லிட்டார் போல.. அம்மாவும் அப்பாவும் ரொம்ப கோபமா இருக்காங்க..”
“கடவுளே…!!! என்ன சொன்னாங்க…நீ என்ன சொன்ன..?”
“அப்போ பேசுற சூழ்நிலை அங்க இல்லை…எல்லாரும் கிளம்பினதும் அவங்க எதுவும் கேட்கும் முன்னாடி நான் கிளம்பி இங்க வந்துட்டேன்.. அநேகமா எனக்கு பூஜை போட தான் இப்ப காத்திட்டு இருப்பாங்க..”
“சரி விடுடா.. எப்படியும் ஒரு நாள் சொல்ல வேண்டியது தானே..இப்படி தான் தெரிய வரணும்னு இருந்து இருக்கு… ஏதாவது பேசி சமாளிக்க பார்..”
“பேசி சமாளிக்கிற நிலைமை எல்லாம் தாண்டியாச்சு மனோஜ்.. இனி சில முடிவுகள் தான் எடுக்கணும்…”
உறுதியாய் சொன்னவனை புரியாமல் நோக்கி,
“என்ன சொல்ற நீ..”என கேட்க அவன் விளக்கும் முன் அங்கே வந்து சேர்ந்தனர் சக்தியும் சந்தியாவும்…!!
“ஆரியன் அண்ணா.. வாங்க.. வாங்க.. ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்சதா..”
என்ற விசாரிப்போடு வந்த சந்தியாவிடம் பதில் கூறியவன் புன்னகையோடு நின்றிருந்த சக்தியை தான் பார்த்திருந்தான். காலையில் இருந்த பதட்டம், தவிப்பு, வெறுமைஎல்லாம் மறைந்து நிர்மலாய் இருந்தது அவள் முகம்..!!!
“ம்ம்ம்.. சந்தியா… உன்கிட்ட ஒன்னு கேட்டேனே.. எடுத்து வைச்சியா..”
என்று மனோஜ் அவளிடம் கண் ஜாடை காட்டி கூற,
“ஆன்.. இருக்கு.. வாங்க..”
என்றாள் அவளும்..
“நீங்க பேசிட்டு இருங்கடா.. இதோ வந்திடுறோம்..”
என தனிமை கொடுத்து அங்கிருந்து விலக அவர்கள் சென்றதும் அருகில் வந்தமர்ந்த சக்தி அவன் கையை கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்தாள்.
“இன்னும் டென்ஷனா தான் இருக்கியா..?? சாரி டா.. உன்னை ரொம்ப படுத்தி வைச்சுட்டேன்.. இந்த ஒரு வாரமா ஏன் நான் பேசலேனு ரொம்ப தவிச்சு இருப்ப தானே.. நீ என்கிட்டே ஒரு நாள் பேசலேனா கூட எனக்கு அவ்வளவு கோபம் வரும்.. உனக்கும் அப்படி தானே இருந்து இருக்கும்.. இப்ப இதெல்லாம் ரியலைஸ் பண்ணும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..
நீ சொல்றா மாதிரி யோசிக்காம ஏதாச்சும் இழுத்து விட்டுடுறேன்.. நாலு பேருக்கு அறிவுரை சொல்ற இடத்துல இருந்துகிட்டு நானே இப்படி சின்ன புள்ளை தனமா பண்ணி இருக்க கூடாது.. இங்க ஓடி வந்துட்டா மட்டும் அம்மா அப்பா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன..? எதுவும் மாற போறது இல்லை.. இப்படி எல்லாம் நடக்கணும்னு என் விதி போல.. விடுடா.. எவ்வளவோ பார்த்துட்டேன்.. இதையும் அப்படியே சமாளிச்சு மீண்டு வருவேன்…
இதோ இப்படி இத்தனை வருஷம் கழிச்சு உன்னோட ப்ரெசென்ஸை ரியலா உணர்ந்து உன் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேனே.. இந்த மொமெண்ட் எனக்கு போதும்.. சந்தோசமாவே மறுபடியும் ஊருக்கு போவேன் ஆர்யா…”
அவனை சமாதானப்படுத்தும் நோக்கோடு தொடங்கினாலும் பின் தன் பாட்டில் தான் மனதார உணர்ந்த நிதர்சனத்தை சொல்லிக்கொண்டே போக அவனிடம் எந்த எதிரொலியும் இல்லை எனவும்,
“என்ன ஆர்யா…” என்க,
“நீ கேட்ட தானே.. ‘எனக்கு எதுவும் வேணாம்னு விட்டுட்டு உன்னை மட்டுமே நம்பி வந்தால்.. நீ என்ன செய்வ.. என்ன முடிவு எடுப்ப..’ அப்படினு.. அதுக்கு என் பதில் என்னானு தெரிய வேண்டாமா..”
‘இப்ப ஏன் அதை சொல்கிறான்..’ என்று யோசித்தவளுக்கு அவனின் முக பாவத்தில் ஏனோ படபடப்பாய் இருந்தது.
அவள் கண்களை ஆழமாய் நோக்கி,
“என்னை மட்டுமே நம்பி வந்தப்றம் என்னை விட்டு மறுபடியும் போகவே விட மாட்டேன் சக்தி.. இனி என் உசுரு இருக்க வரைக்கும்…”
காலையில் இருந்து தன் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விக்கு தானும் பதில் உணர்ந்து அக்கணமே அதை வாய்மொழியாய் சொல்லி முடிக்க ஸ்தம்பித்து விழித்தாள் சக்தி.
ஆம்..!! வீட்டில் விஷயம் தெரிந்து விட்டது என்று அறியும் முன்னர் இருந்தே அவன் தீவிர யோசனையில் தான் இருந்தான். ஏனெனில் அவளின் பேச்சு அவனை அந்த அளவிற்கு தாக்கி இருந்தது.
‘உனக்கும் நான் சலிச்சு போயிட்டேன்னோணு சிந்தனை…’
‘வாழவே வெறுத்துடுவேனோணு பயமா இருக்கு..’
என்றது எல்லாம் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்க இப்பொழுது ஆறுதல் படுத்தி அனுப்பினாலும் அங்கே மீண்டும் தனிமையில் மனம் சாத்தானின் உலைக்களம் தான்..!! குழப்பத்திலே வீட்டிற்கு வந்தவனிடம் அன்னையும் இப்படி சொல்ல எல்லாம் சேர்த்து தான் அவனில் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.
“ஆர் யூ சீரியஸ்…”
விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சியோடு அவனிடம் இருந்து விலகி நிமிர்ந்து பார்க்க,
“டேம் சீரியஸ்..” என உறுதியாய் மொழிந்தவன்,
“வீட்ல நம்ம விஷயம் தெரிஞ்சுடுச்சு சக்தி..”
என அடுத்த குண்டை போட்டான்.
“என்னது?????? எப்படி தெரியும்..??”
அவன் காரணம் விளக்கவும் தலையை அழுத்த பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து விட்டாள்.
“போச்சு.. எல்லாம் என்னால தான்.. நான் இங்க வந்திருக்கவே கூடாது.. அதுவும் பைக்ல நான் எப்படி உட்கார்ந்து இருந்தேன்… ஹையோ.. என்ன நினைச்சு இருப்பாங்க.. அசிங்கமா இருக்குடா.. பொது இடம்னு எனக்கு தான் அறிவு இல்ல.. நீ ஆவது சொல்லி இருக்கலாம்ல.. என் மேல முதல் இம்ப்ரெஷனே ரொம்ப நல்லா இருந்து இருக்கும்… எல்லாம் நான் இங்க வந்ததால தான்.. ஏதாவது ஏழரையை இழுத்து விட்டுட்டுறேன்…”
“ஏய் போதும்டி.. சும்மா.. சும்மா ஏன் வந்தேன்னு புலம்பாத.. உனக்கு ஒரு கஷ்டமுன்னா என்கிட்ட வராம வேற எங்க போவ..? பொது இடம்னு பார்க்காம பைக்ல நாம ஒன்னும் ரொமான்ஸ் பண்ணிட்டு போகல.. அசிங்கப்பட..!!! வந்தாச்சு.. வீட்டுக்கும் தெரிஞ்சுடுச்சு அவ்வளவு தான்.. இனி என்னானு பார்ப்போம்…”
“அப்படினா..? என்ன செய்யறது…”
“ம்ம்ம்… வீட்டுக்கு போனா எப்படியும் நான் பதில் சொல்லணும்.. நான் மட்டுமா போறதுக்கு.. உன்னை அழைச்சுட்டு போய் இன்ட்ரோ கொடுக்கலாம்னு இருக்கேன்..”
“ஏது… நான் வர மாட்டேன்.. ஏற்கனவே கோபமா இருப்பாங்க.. என்னை பார்த்தால் இன்னும் கொலைவெறி ஆகவா..”
“சக்தி… இது தான் சரியா இருக்கும்.. நீ வா.. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்…”
“வேணாம் ஆர்யா.. சொன்னா கேளு.. நீ பேசி வை.. அவங்க கொஞ்சம் கன்வின்ஸ் ஆனதும்.. ஒரு நாள் வரேன்..”
அவன் செய்யவிருக்கும் விஷயங்களை அறியாமல் பச்சை மண்ணாய் அடம்பிடிக்க கெஞ்சி, கொஞ்சி, அதட்டி இதோ கையோடு அழைத்து வந்துவிட்டான்.
வந்தவர்கள் எல்லாம் கிளம்பி இருக்க வீட்டில் திரு, ரம்யா, மேக்னா மட்டுமே ஆளுக்கு ஒரு திசையில் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.
தான் சொல்லியும் கூட எந்த விளக்கமும் கொடுக்க நினைக்காமல் எங்கோ சென்றுவிட்ட மகனின் மீது ஆத்திரத்தோடு ரம்யா இருக்க,
பெற்றோர்களின் பேச்சில் அரைகுறையாய் மேக்னாவிற்கு விஷயம் புரிந்தாலும் தாம் ஏதாவது கேட்க போய் ஆரியன் மீதுள்ள கோபத்தை தன் மேல் இறக்கும் அபாயம் இருப்பதால் தன் அலங்காரங்களை எல்லாம் எடுத்தபின் களைப்போடு தன் அறையிலே இருந்துவிட,
வேலை ஆட்களுக்கும் மற்றவைக்கும் பணத்தை செட்டில் செய்து அனுப்பிய பின் தளர்வாய் திண்ணையிலே அமர்ந்துவிட்டார் திரு..!!
அதிக நம்பிக்கை வைத்து அது பொய்த்து போகும்போது ஏற்படும் வலியை தற்சமயம் உளமார உணர்ந்தார். ஆம்..!! மகனின் மீது நிறைய நிறைய நம்பிக்கை அவருக்கு..!! இதுவரை எதிலுமே அவர் வார்த்தைகளை மீறியதே இல்லை. அவரின் கருத்துக்களில் முரண்பாடு இருந்தால் கூட நிதானமாய் எடுத்து சொல்வானே தவிர தான் தோன்றியாய் செய்யவே மாட்டான். அப்பா – மகன் சண்டைகள் எல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அப்படி பட்ட தன் மகனா இப்படி செய்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
காதலிப்பது சரியா..? தவறா..?? என்றெல்லாம் அவருக்கு இல்லை. ஆரியனிடம் அதனை எதிர்பார்க்கவில்லை. அதுவும் பொய் சொல்லி சென்றது இன்னும் கஷ்டமாக இருக்க அதையே நினைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தவர் ஆரியனின் வண்டி சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க அவன் ஒரு பெண்ணுடன் வந்து இறங்கவும் அதிர்ந்தவர் முகம் நொடியில் கோபத்தை பூசிக்கொள்ள விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.
“எனக்கு பயமா இருக்கு ஆர்யா…”
திரு கோபமாய் உள்ளே செல்லவும் மெல்லமாய் முணுமுணுத்தாள் சக்தி. அவளின் இதயம் இரயில் வண்டி போல் தடதடவென அடித்துக் கொண்டது..
“அப்பாக்கு கோபம் தான்.. ஆனால் அவ்வளவு டெரரான ஆள் எல்லாம் இல்ல.. ரொம்ப நல்லவங்க.. பயப்படாம வா…”
பைக்கை நிறுத்திவிட்டு முன்னே செல்ல தயக்கமாய் அவனோடு வந்தாள் சக்தி.
உள்ளே வந்த கணவனின் முகத்தை கண்டு,
“என்னங்க..? ஆரியன் வந்துட்டானா..”
என்று கேட்டப்படி அருகே வந்தவர் திருவை தொடர்ந்து தன் மகனும் கூட ஒரு பெண்ணும் வரவே,
“டேய்…” என்றார் அதிர்ச்சியாய்.. அதற்கும் மேல் எதுவும் கேட்க கூட தோன்றவில்லை. சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த மேக்னாவும் அதிர்ச்சியாய் எல்லோர் முகத்தையும் மாறி மாறி பார்த்து நிற்க,
“என்ன டா.. நினைச்சுட்டு இருக்க… நீ என்ன செய்யிறேன்னு புரியுதா..”
என ரம்யாவே முதலில் மௌனம் கலைந்து கோபமாய் முறையிட,
“புரியாம என்ன..!! இதான் உன் மருமகனு காட்ட கூட்டுட்டி வந்திருப்பான்.. கண் குளிர பார்த்துக்க..”
நக்கலாய் இடையிட்டார் திரு..!!
அவருக்கு அவ்வளவு கோபம்..!! அப்படி தாட் பூட் என்று கத்தி பழக்கம் இல்லாதவருக்கு தன் கோபத்தை வெளிப்படுத்தவும் தெரியாமல் கண்கள் சிவக்க நின்றிருந்தார்.
திரு சொல்வதை அமோதிப்பது போல் அமைதியாய் நிற்பவனை கண்டு ரம்யாவிற்கு பிபி எகிறியது.
“உன்னை அடிக்கணும் போல ஆத்திரம் வருதுடா எனக்கு….!! உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சு இருந்தோம் ஆர்யா.. நீயா இப்படி எல்லாம் பண்ற…? காலைல ராஜு அண்ணா ஒரு மாதிரி சொன்னபோதே மனசு பாதி விட்டுபோச்சு.. இப்ப இராத்திரி நேரத்துல இந்த பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து எங்களை முழுசா அசிங்க படுத்தணும்னு முடிவு பண்ணிட்டேல..”
அவனை சொல்லவும் தன் வாய் பூட்டை விலக்கி,
“இல்ல ஆண்ட்டி.. ஆர்யா மேல தப்பு இல்ல.. நான் இங்க வந்தது..”
என்று பேச முற்பட,
“உன்னை திட்டவெல்லாம் எனக்கு உரிமை இல்லை மா.. நான் என் மகன் கிட்ட தான் கேட்டேன்.. நீ எதுவும் சொல்லி என்னை பேச வைக்காத..”
என்று அவர் அதட்டலாய் சொல்லவே மீண்டும் ஸைலண்ட் மோட்டிற்கே சென்றுவிட்டாள் சக்தி..
“கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்களேன்.. உங்களை அசிங்க படுத்துற அளவுக்கு இங்க எந்த தப்பும் நடக்கல.. இத்தனை வருஷம் நம்புனீங்க தானே..!! இப்பவும் அந்த நம்பிக்கை வைச்சு கொஞ்சம் யோசிங்க.. நான் தப்பு பண்ண கூடியவனானு.. அத்தோட காதலிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமும் இல்ல..”
அன்னையையும் தந்தையையும் பார்த்தப்படி பதற்றமில்லா தணிந்த குரலில் கூறிய ஆரியன்,
“இவ சக்தி.. சக்திஸ்ரீ ம்மா… என் கூட பைக்ல பார்த்ததா சொன்ன பொண்ணு இவ தான்.. காலேஜ்ல எங்க பேட்ச் பீரியட்ல தான் அவளும் படிச்சா.. வேற டிபார்ட்மென்ட்.. அப்போ இருந்தே நானும் சக்தியும் காதலிக்கிறோம் ப்பா..”
அனைவரின் பார்வையும் தன் மீது விழவும்,
‘இப்ப என்ன செய்யனும்..? ஏதும் பேசணுமா..? வணக்கம் சொல்லணுமோ..? என தன்னுள்ளே குழம்பி திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் முழித்தாள் சக்தி.
“திட்டம் போட்டு எல்லாம் யாரும் காதலிக்கிறது இல்ல.. அதுவா மனசுல தோணறது தானே… எனக்கு இவ மேல மட்டும் தான் அது தோணுச்சு.. வயசு கோளாறும் இல்ல… ஏன்னா இப்ப நான் சீனியர் டிசைனிங் என்ஜினீயர்… அவ *** காலேஜ்ல லெக்சரர்.. இருந்தும் இப்ப வரையும் அந்த பீலிங்ஸ் கொஞ்சமும் மாறாததே அதுக்கு சாட்சி..!!
உங்க கிட்ட பொய் சொல்லி மறைச்சு என்ன ஆக போது.. எதுவா இருந்தாலும் கடைசியா உங்க கிட்ட தானே வந்து நிற்க போறேன்.. நீங்க இல்லாம எனக்கு என்ன சொல்லுங்க.. மேக்னா கல்யாணம் முடியட்டும்ணு நினைச்சு இருந்தேன்.. ஆனா எல்லாம் இப்பவே நடக்கணும்னு எழுதி இருக்கு..
வாழ போறது ஒரு தடவை தானே ப்பா.. பிடிச்ச பொண்ணோட அதை அமைச்சுகிறதுல என்ன தப்பு.. இதில் என்ன மானம், அவமானம்..!! சக்தி ரொம்ப நல்ல பொண்ணு.. பழகினா கண்டிப்பா உங்களுக்கும் அவளை பிடிச்சு போயிடும் நான் சூடம் அடிச்சி கூட சொல்லுவேன்.. இதை தவிர வேற என்ன வேணும்.. சொல்லுங்க.. “
‘யம்மா… இப்படி பேச எங்க கத்து கிட்டான் இவன்.. என்ன அழகா சொல்றான்.. இதனால் தான் இவனை ரொம்ப ரொம்ப பிடிக்கிதோ..’
என எண்ணி வாய் பிளந்து நின்றது சாட்சாத் சக்தியே..!! அந்த இரணகளத்திலும் அம்மணி மனசில் ஒரே குளுகுளு..!!!
சக்தி நினைப்பதும் சரியே என்பது போல் நூற்றி ஐம்பது டிக்கிரியில் கொதித்து கொண்டிருந்த பெற்றோர் மனம் ஆரியனின் சாந்தமான பேச்சில் சற்று தணியவே செய்தது. அவர்கள் ஒன்னும் அத்தனை பிற்போக்கு சிந்தனைவாதிகள் அல்ல..!! ஆனால் இந்த திடிர் அதிர்ச்சியை தான் தாங்க முடியவில்லை.
“முடிவு பண்ணிட்டு பேசுறவன் கிட்ட இனி நாம சொல்ல என்ன இருக்கு.. நல்லா இருந்தா சரி.. அதுக்குன்னு பொம்பள பிள்ளையை இப்படி இராத்திரி வெளிய அழைச்சுட்டு வர்றது எல்லாம் அழகு இல்ல… ரம்யா… அந்த பொண்ணை சீக்கிரம் வீட்ல விட சொல்லு..”
மனம் இறங்கி இருந்தாலும் ஈகோ முரண்டியதால் விறைப்போடே சொல்ல,
“நான் ஏன் சொல்லணும்.. உங்க பிள்ளை தானே நீங்களே சொல்லிக்கோங்க.. என்ன தெரியுதோ இல்லையோ.. நல்லா பேசியே மனசை கரைக்க தெரிஞ்சு வச்சு இருக்கான்..”
என நொடித்து கொண்டார் ரம்யா.. இவள் தான் மருமகள் என்று புரிந்து விட்டதால் அவளையே ஆராய்ச்சியாய் பார்க்க,
தன்னை குறுகுறுவென நோக்குபவரிடம் சிரிப்பதா..? வேண்டாமா..? கவனிக்காதது போல் இருந்திடலாமா..? மீண்டும் சக்தியின்னுள்ளே போராட்டம்..!!
அவளின் அந்த குழப்பமான பாவனை ரம்யாவிற்கு பீதியான தோற்றமாகவே தெரிய,
‘ஏன் இந்த பொண்ணு பேயரைந்தா மாதிரியே நிக்குது.. நாம அவ்வளவு மோசமா எல்லாம் பேசலையே.. ”
என்று யோசித்தார். இத்தனையையும் ஏதோ நாடகம் பார்ப்பது போல் பார்த்து நின்றாள் மேக்னா..!!
‘என் அண்ணன் குள்ள இப்படி ஒரு அம்பி கலந்த ரெமோவா..?? என்னே அதிசயம்..” என கமெண்ட்டியது மனம்..!!
சக்தியோ ஓரளவு சமாதானம் ஆகிவிட்டார்கள் இனி கொஞ்ச நாள் போனால் முழு மனதாய் ஏற்கொள்வார்கள்.. இந்த நல்ல மூடில் இருக்கும் போதே கிளம்பிடணும்.. என நிம்மதியாய் மூச்சுவிட்டு நிமிர,
அவளின் காதல் கள்வனோ தாய் – தந்தையின் மறைமுக சம்மதத்திலும் மகிழ்ந்து அத்தோடு சுபம் போட நினைக்காமல்,
“அவ வீடு சென்னைல இருக்கு.. இப்ப போறது சாத்தியம் இல்லை.. காலைல போகலாம்.. நான் மட்டும் இல்ல… நீங்களும் தான்..”
என்று தொடர திகைத்த சக்தி,
‘என்ன ஆர்யா சொல்ற…??? லூசா நீ.. அங்க எதுக்கு.. ‘
அவனுக்கு மட்டும் கேட்கும்படி சக்தி முணுமுணுத்ததை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.
“நாங்களும் ன்னா..”
“சக்தி இங்க வந்ததே ஒரு பிரச்சனையால தான்.. அதுக்கு என்னால ஒரு தீர்வு காண முடியாது.. ஆனா அதில் இருந்து அவளை விலக்க முடியும்.. அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க… ப்ளீஸ்.. மறுத்து மட்டும் சொல்லிடாதீங்க.. இதுவரை எதுவும் வேணும்னு அடம்பிடிச்சு கேட்டது இல்ல… முதல் முறையா கேட்கிறேன்.. எனக்காக நான் கேட்கிற ஒரே விஷயம் இது மட்டும் தான்..”
என்று அவன் சொல்லவே வாயடைத்து போனாள் சக்தி.
‘என்னை மட்டுமே நம்பி வந்தப்றம் என்னை விட்டு மறுபடியும் போகவே விட மாட்டேன்.. இனி என் உசுரு இருக்க வரைக்கும்…”
என அவன் சொன்னதன் அர்த்தம் அக்கணம் முழுமையாய் விளங்கியது.