Skip to content
Post Views: 3,603
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 35
Advertisement
ஆராதனா அவள் புகுந்த வீட்டிற்குச் சென்ற போது…. அவளுடன் ஆதி, ரஞ்சனா மற்றும் அவளின் பெரியம்மா, பெரியப்பா சென்றனர். அவர்கள் சென்றதும் மண்டபத்தைக் காலி செய்யும் பொருட்டு, வந்திருந்த பரிசு பொருட்களை எல்லாம் வேனில் அடுக்கி கொண்டிருந்தனர். மீரா அவளும், ஆராதனாவும் தங்கியிருந்த அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது உள்ளே வந்த அர்ஜுன், “மீரா.. எல்லாம் எடுத்துகிட்டியா?” என்று கேட்க… “எடுத்தாச்சு அர்ஜுன், “இது ஆருவோடது.” என்று மீரா ஒரு பெரிய பையை அவனிடம் கொடுத்தாள்.
அர்ஜுன் அந்தப் பையோடு வெளியே செல்ல முயல… மீரா மெதுவாக, “அர்ஜுன்…” என்று அழைத்தாள். அர்ஜுன் நின்று திரும்பி பார்க்க… மீரா அவனை வா என்பது போல் தலை அசைக்க… அர்ஜுன் பையைக் கதவின் அருகே வைத்துவிட்டு அவளருகில் வந்தான்.
மீரா வேகமாகச் சென்று அர்ஜுனின் மார்பில் சாய்ந்து கொள்ள… அர்ஜுன் அவளை இறுக அனைத்துக் கொண்டான். இருவரும் சில நொடிகள் அப்படியே இருந்தனர். அர்ஜுன் அவளை நிமிர்த்தி… அவள் முகம் பார்த்தவன், “தலை கலைஞ்சு, கண் மை எல்லாம் வழிஞ்சு இருந்தாலும்… பார்க்க அழகா இருக்கடி ராட்சஸி.” என்று சொல்லி, அவள் இதழில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு விலகி சென்றான்.
அர்ஜுன் ஆருவின் பையோடு வாசலுக்குச் செல்ல…மீரா அவள் பையோடு அவன் பின்னே சென்றாள். இவர்கள் வாசலுக்கு வரும் போது..வித்யா வெளியில் நின்று கொண்டிருந்தார்.
“உங்களுக்கு அந்த வண்டியில இடம் இல்லையா மா?” என்ற அர்ஜுன் “வாங்க, நான் உங்களைப் பைக்ல கொண்டு போய் விடுறேன்.” என்றான்.
“நான் ஆன்டிய வீட்ல விட்டுட்டு, அப்படியே எங்க வீட்டுக்கு போறேன்.” மீரா சொல்ல… வித்யாவும் மீராவுடன் செல்கிறேன் என்றார். அவர்கள் கடை யில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதோடு கணேசனுக்கும், அர்ஜுனுக்கும் இன்னும் மண்டபத்தில் வேலை இருந்ததால் அவர்கள் அங்கேயே இருந்தனர்.
மீரா இத்தனை நாள் கோபமாக இருந்த வித்யா தன்னோடு வருவதாகச் சொன்னதும், மகிழ்ச்சியுடன் அவரை அழைத்துக் கொண்டு தன் காருக்கு சென்றாள். அர்ஜுன் ஆருவின் பையைக் கொண்டு வந்து, காரின் பின் சீட்டில் வைக்க… வித்யா முன் பக்கம் மீராவின் அருகே உட்கார்ந்திருந்தார். மீரா அர்ஜுனை பார்த்து புன்னகைத்துவிட்டு காரை எடுத்தாள்.
மீரா காரை ஓட்டி கொண்டிருக்க… வித்யா அமைதியாக வந்தார். மீரா ஏன் ஆன்டி இப்படி இருக்காங்க என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்டினாள். கார் பெசன்ட் நகர் பீச் வழியாகச் சென்ற போது, வித்யா மீராவிடம் காரை அங்கே நிறுத்தும்படி சொன்னார். மணி அப்போது மூன்று. இந்த நேரத்தில்…அதுவும் வெயிலில்… எதற்கு என்று புரியாமல் மீரா காரை நிறுத்த… வித்யா இறங்கி கடலை நோக்கி சென்றார். மீராவும் அவர் பின்னே சென்றாள்.
அவளுக்கு இப்போது அவர் தன்னிடம் எதோ பேச போகிறார் என்று நன்றாகப் புரிந்தது. இருவரும் கடல் அலையைப் பார்த்தபடி… கரையோரமாக நின்றனர். சிறிது நேரம் சென்று வித்யாவே பேச்சை ஆரம்பித்தார்.
“உனக்கு அர்ஜுனை எப்போது இருந்து தெரியும்?”
வித்யாவின் கேள்வியில் திடுகிட்ட மீரா சமாளித்துக் கொண்டு, “நான் காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்திலேயே தெரியும்.” என்றாள்.
“அவனுக்கு உன்னை அப்பவே தெரியுமா?” வித்யா ஆச்சர்யமாகக் கேட்க
“இல்லை…. அவங்களுக்கு என்னை நான் ரெண்டாவது வருஷம் படிக்கும் போது தான் தெரியும்.”
“அர்ஜுனா உன்கிட்ட வந்து பேசினானா…” வித்யா அடுத்தக் கேள்வியைக் கேட்க… மீரா இல்லை என்று தலை அசைத்தாள்.
“அப்ப அவனா உன்னைத் தேடி வரலை இல்லையா…” வித்யா சொல்ல… மீரா அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்த வித்யா, “நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன்.” என்றவர்,
“எங்க குடும்பத்துக்கு இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் ஒத்து வராது மீரா….எனக்கு தெரியும் நீயும், அர்ஜுனும் விரும்புறது. கல்யாணம் வெறும் ரெண்டு பேர மட்டும் சேர்த்து வைக்கிறது இல்லை… ரெண்டு குடும்பம், அவங்க உறவுகள் எல்லாம் சேர்றது தான். நாம ரெண்டு பேர் குடும்பமும் வேற வேற இனத்தைச் சேர்ந்தவங்க. உங்களுக்கு ஒரு வழக்கம் இருக்கும், எங்களுக்கு வேற மாதிரி இருக்கும்.”
“ஆன்டி, என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. நான் அர்ஜுனுக்காக இதைக் கூடச் செய்ய மாட்டேனா… கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்க வழக்கபடியே இருந்துக்கிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”
“நீ இப்ப இப்படித் தான் மீரா சொல்வ… ஆனா எதோ ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ண முடியும், வாழ்க்கை முழுக்க முடியுமா? அதோட நீ வசதியான வீட்டு பொண்ணு, நீ எப்படி எங்க வீட்ல வந்து இருப்ப? நாங்களும் வசதியானவங்க தான், இல்லைன்னு சொல்லலை…. ஆனா உங்களவுக்கு இல்லை.”
“இன்னைக்குக் காலையில கல்யாண மண்டபத்தில நடந்தது உனக்கே தெரியும். ஆரு உன்னோட வைர நெக்லஸ் பார்த்து ஆசைபட்டா… நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்து, இந்த மாதிரி வைர நகைகள் போடும் போது… அது ஆருவுக்கும், ரஞ்சனாவுக்கும் ஆசையைத் தூண்டாதா …அதனால வீணா குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரும். அதனால நாங்க எங்களுக்கு ஏத்த இடத்தில சம்பந்தம் பண்றது தான் நல்லது.” என்றார் முடிவாக.
“ஆன்டி, இது ரொம்பச் சின்ன விஷயம். நான் எங்க அப்பாட்ட எனக்கு வைர நகைகள் வேண்டாம்னு சொல்லிடுறேன்.” மீரா சொல்ல… அவளையே சிறிது நேரம் பார்த்த வித்யா, “மீரா உனக்கே உங்க அம்மாவை பத்தி தெரியும், நீயும் உங்க அம்மா மாதிரி நாளைக்குச் செய்ய மாட்டேன்னு என்ன நிச்சயம்? எங்களுக்கு இந்த டைவர்ஸ் எல்லாம் பெரிய விஷயம். வேண்டாம் விட்டுடு.” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த மீரா,”எங்க அம்மா அப்படிப் பண்ணா… நானும் அப்படித் தான் இருப்பேன்னு எந்தக் கட்டாயமும் இல்லை. நான் அர்ஜுனை பிடிச்சு வச்சிருக்கலை விட்டுட, அர்ஜுன் என்னோட உயிர்… அவங்களுக்கும் நான் அப்படித் தான்.” என்றாள் உறுதியாக.
வித்யா மீராவிடம் இந்த நிமிர்வை எதிர்பார்க்கவில்லை, அவர் சொன்னால் மீரா கேட்டு விலகி விடுவாள் என்று நினைத்தார். ” நீ சொல்ற…நீ என் உயிர் எல்லாம் சினிமாவுக்குத் தான் ஒத்துவரும் வாழ்க்கைக்கு இல்லை… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை, ஒருத்தர் பார்க்காம, பேசாம இருந்தா… இந்தக் காதல் எல்லாம் காணாம போய்டும்.” என்றார் வித்யா நக்கலாக…
“நானும், அர்ஜுனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காம இருக்கோம், அப்பவும் நாங்க மாறாம இருந்தா… நீ ஒத்துப்பீங்களா எங்க காதல் உண்மையானதுன்னு.” மீரா சவால் விட…..
“அப்ப நீ அர்ஜுனை மறக்க மாட்ட …. மீரா, நீ ரொம்ப நல்ல பொண்ணு, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா…எங்க குடும்பத்துக்கு நீ ஒத்து வர மாட்டேன்னு தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ, நீயும் எனக்கு ஆரு மாதிரி தான். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.”
“ஆன்டி, என்னை அர்ஜுனை விட்டு விலகுன்னு கேட்க உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா நான் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அதோட அர்ஜுனை என்னால மறக்க முடியாது.”
“இப்ப நீ முடிவா என்ன சொல்ற மீரா? அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்க குடும்பத்தைப் பிரிக்கப் போற அது தான….” வித்யா வீம்பாகக் கேட்க… அது மீராவின் மனதை காயப்படுத்தியது.
“இல்லை….நான் உங்க குடும்பத்தைப் பிரிக்க மாட்டேன். அதே நேரத்தில அர்ஜுனையும் மறக்க மாட்டேன். நானா அவங்களைத் தேடியும் வர மாட்டேன். உங்களால முடிஞ்சா உங்க பையன் மனசை மாத்தி வேற பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வைங்க…அதை நான் தடுக்கவும் மாட்டேன்.”
“முடியாதுன்னு நினைக்கிறியா? அர்ஜுன் என் பேச்சை மீற மாட்டான். என் சம்மதம் இல்லாம உன்னைக் கல்யாணமும் செய்ய மாட்டான்.”
“உங்க சம்மதம் இல்லாம நானும் அர்ஜுனை கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லலை….. எங்க கல்யாணம் உங்க சம்மதத்தோட தான் நடக்கும். முடிஞ்சா… உங்க பையனுக்கு வேற பொண்ணோட கல்யாணம் செஞ்சு வைங்கன்னு தான் சொல்றேன்.” என்ற மீரா திரும்பி காரை நோக்கி நடக்க… வித்யாவும் அவள் பின்னே சென்றார்.
காரின் அருகே வந்ததும் வித்யா, “நான் ஆட்டோல போய்கிறேன்.” என்று சொல்லி ஆட்டோவை அழைக்க… மீரா காரின் பின்புறம் இருந்த ஆருவின் பையை எடுத்து கொடுத்தாள். வித்யா ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டார்.
மீரா வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றாள். எல்லாச் சந்நிதியிலும் நின்று வணங்கியவள், அன்று அர்ஜுன் அவள் கழுத்தில் செயின் போட்டு விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வர… நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னை ஏன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்று நினைத்து அழுதாள்.
மீரா சிறிது நேரம் அழுதவள்… பின் கண்ணைத் துடைத்துக் கொண்டு, தன் கழுத்தில் இருந்த செயின்னை கையில் பிடித்துக் கொண்டு… அன்னைக்கு அர்ஜுன் இங்க வச்சு தான் என் கழுத்தில இந்தச் செயின் போட்டாங்க. என்னைப் பொறுத்தவரை எனக்கும், அர்ஜுனுக்கும் அன்னைக்கே கல்யாணம் ஆகிடுச்சு, உங்க சந்தியில தான் எங்க கல்யாணம் நடந்தது. இனி நடக்கும் கல்யாணம் ஊருக்காகத் தான். நீங்க தான் எங்களைச் சேர்த்து வைக்கணும் அம்மா என்று மனதார வேண்டியவள் எழுந்து கொள்ள… கோவில் அர்ச்சகர் அவளிடம் பூவையும், குங்குமத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.
மீரா குங்குமத்தை நெற்றியில் இட்டு கொண்டவள், பூவையும் தலையில் வைத்துக் கொண்டு சந்நிதியில் விழுந்து கும்பிட்டு, ‘நீயே கதி தாயே… உன்னைத் தான் நம்பியிருக்கேன்.’ என்று மனதில் சொல்லிக்கொண்டு எழுந்தாள். அவள் நம்பும் தெய்வம் அவளைக் காப்பாற்றுமா?
error: Content is protected !!