உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 36
மறுநாள் சூர்யாவும் ஆருவும் இருந்ததால்… அர்ஜுன் வேலைக்குச் செல்லவில்லை. எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்து மதியம் வீட்டில் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர். சூர்யாவின் பெற்றோரும் அக்கா குடும்பத்தினரும் விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து நல்ல படியாக முடிந்தது. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அர்ஜுன் சூர்யாவிடம், “எனக்கும் உனக்கும் ஒரே வயசு தான், ஆனா… உனக்குக் கல்யாணம் ஆகி ஹனிமூனுக்கு எல்லாம் போற… நான் என் ஆள கூடப் பார்க்க முடியாம இருக்கேன்.” என அவன் புலம்ப… “அதுக்கெல்லாம் என்ன மாதிரி மச்சம் வேணும்டா…” சூர்யா தன் சட்டை காலரை பெருமையாகத் தூக்கி விட்டுக்கொண்டான்.
“அர்ஜுன் மட்டும் இல்லைனா கல்யாணமே நடந்திருக்காது… இதுல இவன் பந்தாவை பாரு…” ஆதி மனதில் நினைத்தவன், அதை வெளியில் சொல்லாமல்… “ஆமாம், உங்களுக்கு ரொம்பப் பெரிய மச்சம் இருக்கு.” என்றான் கிண்டலாக…
அவன் சொன்ன தோரனையை வைத்து சூர்யா ஆதியிடம் “நீங்க என்னை வச்சு எதுவும் காமெடி… கீமடி பண்ணலையே…” எனச் சந்தேகமாகக் கேட்க… “நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை… உங்களைப் போய்க் கிண்டல் பண்ணுவேனா? எங்க ஆரு கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும், அதுக்குத் தான் அப்படிச் சொன்னேன்.” ஆதி சமாளிக்க…சூர்யாவும் அவன் சொன்னதை நம்பிவிட்டான்.
பெரியவர்கள் ஒரு பக்கம் இருக்க… இளையவர்கள் ஒரு பக்கம் இருந்தனர். வித்யா அர்ஜுனையே கவனித்துக் கொண்டிருந்தார். அர்ஜுன் இயல்பாக இருப்பதில் இருந்தே… அவனிடம் மீரா எதையும் சொல்லவில்லை என்று புரிந்து கொண்டார். அவரால் மனதிற்குள் மீராவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையிலும் அவள் பதட்டபடாமல் இருப்பது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மாலை நான்கு மணி போல் சூர்யாவுடன் ஆரு அவள் புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள். மறுநாள் அவர்கள் அங்கிருந்து ஒருவாரம் ஹனிமூன் செல்வதாக இருந்தது. இன்றும் ஆருவும், வித்யாவும் அழுதார்கள். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்தனர். ஆரு சென்றவுடன் வீடே வெறிச்சென்று இருப்பதாக அவளின் இரண்டு அண்ணன்களும் நினைத்தனர். அர்ஜுன் அவன் அம்மாவின் அருகே அமர்ந்து அவரைத் தேற்றினான்.
“அவளும் இதே ஊர் தானே மா… அதுவும் நம்ம வீட்ல இருந்து ரொம்பக் கிட்ட. நீங்க பார்க்கணும்னு நினைச்சா… அடுத்த அஞ்சு நிமிஷத்துல பார்க்கலாம். அவ ஹனிமூன் போயிட்டு வந்ததும், அவளை இங்க வந்து நாலு நாள் இருக்கச் சொல்வோம், கவலைபடாதீங்க.”
வித்யாவும் சரி என்பதாகத் தலையசைத்தவர், எழுந்து உள்ளே சென்று அவர் அறையில் படுத்துக் கொண்டார்.
அர்ஜுன் மீராவை அழைத்து, ஆரு இன்று அவள் புகுந்த வீடு சென்றதை பற்றி… நாளை அவர்கள் ஹனிமூன் செல்வது பற்றி… என்று எல்லாவற்றையும் அவளிடம் சொன்னவன், “அம்மா தான் மீரா பாவம், ரொம்ப டல் ஆகிட்டாங்க. அம்மா கொஞ்சம் தேறியதும், நான் நம்ம விஷயம் பேசுறேன்.” என்று சொல்ல…
“நம்ம விஷயம் தெரிஞ்சதுனால தான், அவங்க அப்படி இருக்காங்க.” என்று மனதில் நினைத்த மீரா, அதை அர்ஜுனிடம் சொல்லவில்லை.
“சரி அர்ஜுன்,” என்றவள் தொடர்ந்து ” இன்னொரு விஷயம் அர்ஜுன், எனக்கு இப்ப ட்ரைனிங் போகுது, நான் காலையில போனா… வர நைட் ஆகும், என்னால ரொம்பப் போன் பேச முடியாது. கொஞ்ச நாள் சென்னைக்கும் வர முடியாது.” என்றாள்.
“இது ரொம்ப ஓவர் மீரா…அதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது.” அர்ஜுன் அவளிடம் சண்டைக்குச் செல்ல… “நீங்க மட்டும் படிக்க ஆஸ்திரேலியா போய் ரெண்டு வருஷம் என்னைக் காயவிடலை… இப்ப எனக்கு ஒன்னுனா, நீங்க அட்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா?” மீரா சோகமாகக் கேட்க…. “சரி மா தாயே, அட்ஜஸ்ட் பண்றேன். ஆனா… ரொம்ப நாள் தாங்காது, சீக்கிரம் வரப்பாரு…” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் போன்னை வைத்தான்.
மீரா வித்யாவிடம் சொன்னது போல் அவளாக அர்ஜுனை தொடர்பு கொள்ளவோ… இல்லை நேரில் சந்திக்கவோ முயலவில்லை. அர்ஜுனாக அவளை அழைத்தால்… தவிர்க்கவும் இல்லை. அவனோடு சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள். ஆருவும் அவளோடு போன் செய்து பேசினாள். ரஞ்சனாவும் யாருக்கும் தெரியாமல் மீராவை அடிக்கடி விசாரித்துக் கொண்டாள்.
சூர்யாவும் ஆருவும் ஹனிமூன் முடிந்து சென்னைக்கு வந்தார்கள். சூர்யா இவ்வளவு சீக்கிரம் குழந்தை வேண்டாம் என்று நினைத்ததால்… ஆரு மேலே M.phil படிக்க ஆசைபட்டாள். அவள் புகுந்த வீட்டினரும், சூர்யா வேலைக்குச் சென்றால்… திரும்ப இரவாகும். அதுவரை அவளும் சும்மா தானே இருக்க வேண்டும் என நினைத்து, அவள் படிக்கச் சம்மதித்தனர். ஆரு சந்தோஷமாகக் கல்லூரி சென்று வந்தாள்.
காலையில் தன் மாமியாருக்குச் சமையலில் உதவுவது, பின் சூர்யாவோடு கல்லூரிக்கு செல்வது, மதியம் தன் அம்மா வீட்டிற்குச் சென்று அம்மாவோடும், அண்ணியோடும் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடுவது…பிறகு மாலை திரும்பத் தன் வீட்டிற்குச் சென்று மாமியாருக்கு இரவு சமையலில் உதவுவது. இரவு உணவு எல்லோரோடும் சேர்ந்து அருந்திவிட்டு, அவர்கள் அறையில் சூர்யாவுடன் சேர்ந்து கொட்டம் அடிப்பது என்று அவள் நாட்கள் சந்தோஷமாகக் கழிந்தது.
அர்ஜுனும் ஆரு கல்யாணத்தின் போது அதிக நாள் விடுமுறை எடுத்திருந்தால்… வேலை அதிகமாக இருந்தது. அதோடு கடையிலும் வரிசையாகப் பண்டிகை நாட்கள் வருவதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆபீஸ், கடை என்று அலைந்து கொண்டிருந்தான். அதனால் மீரா சென்னைக்கு வராமல் இருப்பதைப் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அவளுக்கும் வேலை இருக்கும் என்று நினைத்தான். இப்படியே இரண்டு மாதங்கள் சென்றுவிட்டது.
அன்று வெள்ளிக்கிழமை வித்யா ரஞ்சனாவையும், ஐஷுவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் போது, கோவில் வாசலில் எதிரே வந்த அவர் சொந்தகாரர் ஒருவரை பார்த்து வித்யா, “சரோஜா…” என்று கூப்பிட, அவரும் “வித்யா எப்படி இருக்க? உனக்கு என்ன பொண்ணுக்கும், பையனுக்கும் நல்ல படியா கல்யாணம் பண்ணிட்டே…” என்றவர், வித்யாவை அழைத்துக் கொண்டு கோவில் உள்ளே சென்று அமர்ந்தார். ரஞ்சனாவும் அவர்களோடு சென்றாள்.
“இருந்தாலும்… அர்ஜுனுக்கும் ஒரு நல்ல இடத்தில பொண்ணு அமையணுமே…” வித்யா இழுக்க…
“நீ அர்ஜுனுக்கு இப்ப பொண்ணு பார்கிறியா? நான் ஆரு கல்யாணத்தில அவனைப் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னோட பொண்ணு வைஷ்ணவி, அர்ஜுனுக்குப் பொருத்தமா இருப்பா…இந்த வருஷம் தான் B.E முடிச்சிருக்கா. உங்களுக்கு இஷ்டம்னா அவளோட ஜாதகம் தரேன்.” சரோஜா சொல்ல….வித்யா “நானும் வைஷ்ணவிய பார்த்திருக்கேன், சரி ஜாதகம் குடு பார்ப்போம்.” என்றார்.
“நான் ஜாதகத்தை இன்னைக்கே என் பையன்கிட்ட குடுத்து அனுப்புறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை நல்ல நாள்…” சரோஜா சொல்ல…வித்யாவும் சரி என்றார்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சனாவிற்கு ஆத்திரமாக வந்தது. அவள் வித்யாவிடம் “வீட்டுக்கு போகலாமா…” என்று கேட்டுக் கொண்டே ஐஷுவை தூக்கி கொண்டு எழுந்து வெளியே சென்றாள்.
அவள் பின்னே சரோஜாவும் வித்யாவும் எழுந்து வெளியே வந்தனர். “என்ன உன்னோட மூத்த மருமக படக்குன்னு எழுந்து போயிட்டா… என்னோட பொண்ணு உங்க வீட்டுக்கு மருமகளா வர்றது அவளுக்குப் பிடிக்கலை போலையே..” சரோஜா போட்டு கொடுக்க,
“அப்படி எல்லாம் இல்லை. நைட்டுக்கு இனி போய்த் தான் சமைக்கணும். அதனால தான்.” வித்யா சமாளிக்க…
அடக்கடவுளே, இந்த அம்மா இப்பவே இப்படிப் பேசுதே… இது பொண்ணு மட்டும் அர்ஜுனை கல்யாணம் பண்ணி வந்தா… என்னைத் திருச்சிக்கே அனுப்பிடுங்க போலிருக்ககே என்று ரஞ்சனா நினைத்துக் கொண்டாள்.
ரஞ்சனா மறுநாள் மீராவை அழைத்து, கோவிலில் நடந்ததைச் சொல்லி, “மீரா… நீ இதுக்கு மேலையும் அர்ஜுன்கிட்ட சொல்லாம இருக்கிறது, எனக்கு நல்லதா படலை.” என்றதும்,
“அவங்க எப்படியும் அர்ஜுன்கிட்ட உனக்குப் பொண்ணு பார்த்திருக்கேன்னு சொல்லி தான ஆகணும். இல்லை… அர்ஜுனை கைய, காலை கட்டி கல்யாண மண்டபத்துக்குத் தூக்கிட்டு போவாங்களா? இருங்கக்கா… அவங்களே அர்ஜுன்கிட்ட சொல்லட்டும்.” என்றாள் மீரா.
“என்னவோ போ எனக்குத் தான் பயமா இருக்கு. அந்தப் பொண்ணோட அம்மா இப்பவே என்னைப் பார்த்துப் பொறாமை பிடிச்சவன்னு சொல்லிடுச்சு.”
“உங்களைப் பத்தி அவங்களுக்கு என்ன கா தெரியும்? நீங்க வருத்தப்படதீங்க.”
“மீரா… நீயும் நம்ம வீட்டுக்கு வந்துட்டா… நாம ஜாலியா இருக்கலாம். அது எப்ப தான் நடக்குமோ..” ரஞ்சனா சோகமாக இழுக்க…”நடக்கும் ரஞ்சனா கா, கவலைபடாதீங்க.” என்ற மீரா போன்னை வைத்தாள்.
அர்ஜுன் தன் அம்மாவிடம் பேசும் சந்தர்பத்திற்காகக் காத்திருந்தான். அவனும் வித்யா ஆருவை நினைத்துதான் வருத்தத்தில் இருக்கிறார் என்று முதலில் நினைத்தான். ஆனால்… அவர் ஆருவை தினமும் சந்திக்கிறார். ஆனாலும் அவரிடம் முன்பிருந்த கலகலப்பு இப்போது இல்லை. எதனால்?… என்று யோசித்தவனுக்கு, ஆரு கல்யாணத்தின் போது என்றில்லை… அதற்கு முன்பே அம்மா சரி இல்லை என்பது அவன் ஞாபகத்திற்கு வந்தது.
இப்போதும் அப்படித் தான் இருக்கிறார். அப்படியென்றால் காரணம் ஆருவின் திருமணம் இல்லையா…. வேறு எதுவாக இருக்கும் என்று யோசித்தான். அவனுக்கு எதுவோ சரி இல்லை என்று புரிந்தது. மறுநாள் என்ன ஆனாலும் சரி, அம்மாவிடம் பேசிவிடுவது என்று நினைத்துக் கொண்டே தூங்கினான்.
அன்று ஞாயிற்றுகிழமை அர்ஜுன் காலை ஒன்பது மணி போல் கீழே இறங்கி வரும் போது வித்யா வீட்டில் இல்லை… அர்ஜுன் இன்று தன் அம்மாவுடன் பேசும் முடிவில் இருந்ததால்…. ரஞ்சனாவிடம் “அண்ணி, எங்க அம்மாவை காணோம்?” என்று கேட்க… “தெரியலை அர்ஜுன், காலையிலேயே எங்கையோ கிளம்பி போனாங்க, சொல்லிட்டு போகலை.” ரஞ்சனா சொல்ல…
அப்போது அவர் அறையில் இருந்து வெளியே வந்த கணேசன் “கட்டின புருஷன், என்கிட்டையே உங்க அம்மா சொல்லிட்டு போகலை.. உங்க அண்ணிகிட்டையா சொல்லி இருக்கப் போறா…” என்றார்.
“அப்படி எங்க பா அம்மா போய் இருப்பாங்க?” அர்ஜுன் கேட்க…. “வர வர… அவ நடவடிக்கையே ஒன்னும் புரிய மாட்டேங்குது.” என்று புலம்பியபடி கணேசன் சாப்பிட அமர… அவரோடு ஆதியும், அர்ஜுனும் சாப்பிட அமர்ந்தனர். ரஞ்சனா அவர்களுக்குப் பரிமாறினாள்.
அர்ஜுன் ஐஷுவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே தானும் சாப்பிட்டான். ஐஷு அர்ஜுனிடம் மட்டும் தான் ஒழுங்காகச் சாப்பிடும். அதனால் அர்ஜுன் தான் காலையிலும், இரவிலும் ஊட்டுவான். மதியம் மட்டும் ரஞ்சனா ஊட்டுவாள். அதற்கே ஐஸு அவளை ஒரு வழி ஆக்கிவிடுவாள்.
இவர்கள் எல்லோரும் சாப்பிடும் போது வித்யா வந்தார். வந்தவர் முகத்தில் சந்தோசம் வெளிப்படையாகத் தெரிந்தது. அவரும் இவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். சாப்பிட்டதும் எல்லோரும் சென்று ஹாலில் அமர்ந்தனர்.
“எங்க போன? வெளிய போனா… சொல்லிட்டு போக மாட்டியா.” கணேசன் கேட்க… வித்யா “எல்லாம் நல்ல விஷயம் தான்.” என்றவர், கோவில் திருநீரை கணேசனுக்கும், ஆதிக்கும் கொடுத்தவர், அர்ஜுனுக்கு அவரே நெற்றியில் வைத்து விட்டார்.
“நம்ம சரோஜா இருக்காங்க இல்ல… அவங்க பொண்ணு வைஷ்ணவியோட ஜாதகத்தை அர்ஜுனுக்குப் பொருந்துதான்னு பார்க்க சொல்லி கொடுத்தாங்க. அதை எடுத்திட்டு தான் ஜோஷியர் வீட்டுக்கு போனேன். ரொம்பப் பொருத்தமா இருக்காம். அதுதான் அப்படியே கோவிலுக்குப் போயிட்டு வந்தேன்.”
வித்யா சொன்னதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க… “எங்க யார்கிட்டயும் சொல்லாம அர்ஜுனுக்கு இப்ப பெண் பார்க்க என்ன அவசரம்?” கணேசன் கேட்க…வித்யா மெளனமாக இருந்தார்.
அர்ஜுன் தன் அம்மாவையே பார்த்தவன், “அம்மாவுக்கு நான் காதலிக்கிறது தெரிஞ்சிடுச்சு இல்லமா… அதனால தான் எனக்கு அவசரமா பொண்ணு பார்க்கிறாங்க. எனக்கு இத்தனை நாள் நீங்க ஏன் ஒரு மாதிரி இருந்தீங்கன்னு புரியாம இருந்தது, இப்ப புரிஞ்சிடுச்சு.” என்றான்.
கணேசன் அர்ஜுனிடம் “அம்மாவுக்கு நீ யாரை விரும்புறேன்னு தெரிஞ்சிருக்காது…. அதோட எல்லா அம்மாக்களுக்கும், தங்கள் பிள்ளைகள் காதலிக்கிறது தெரிஞ்சா… முதல்ல பயம் தான் வரும். அதனால அம்மா பதட்டத்துல உனக்குப் பொண்ணு பார்த்திருப்பா…” என்றவர், வித்யாவை பார்த்து “அவன் விரும்புற பொண்ணு யார் தெரியுமா… நம்ம மீரா தான். மீரா மாதிரி ஒரு நல்ல பொண்ணு நாம் குடும்பத்துக்கு வந்தா… அது நமக்குச் சந்தோசம் தான வித்யா…” ஆர்வத்துடன் அவர் கேட்க….
“எனக்கு அது மீரான்னு தெரியும்.” என்ற வித்யா தொடர்ந்து, “மீரா நல்ல பொண்ணு தான், நான் இல்லன்னு சொல்லலை. ஆனா…. அவ நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா… அவங்க வசதிக்கும், நம்ம வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதோட நம்ம இனத்தில இருக்கிற பொண்ண தான் அர்ஜுனுக்குப் பார்க்கணும். அவன வெளியில செஞ்சா… நம்ம சொந்தகாரங்களுக்குப் பதில் சொல்லி முடியாது. அதோட நாம ஏற்கனவே ரெண்டு சம்பந்தம் பண்ணி இருக்கோம், அவங்களுக்கு நாம என்ன பதில் சொல்றது? இதனால ஆரு வாழ்க்கை பாதிகிறதையோ, இல்லை ஆதி வாழ்கை பாத்திக்கிறதையோ… நான் விரும்பலை.” என்றார்.