ஆதியும் ரஞ்சனாவும், சூர்யா ஆருவுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றவர்கள், புதுமணத் தம்பதியர் பாலும், பழமும் சாப்பிட்டதும்… எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
ரஞ்சனாவிற்கு வீட்டில் வேலை இருந்தது. சூர்யா, ஆரு முதலிரவுக்கு அறையைத் தயார் செய்யவேண்டும். அதோடு இன்று அவள் பெற்றோரும் சஞ்சனாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களையும் வழி அனுப்ப வேண்டும். அதனால் ஆருவுக்குத் துணைக்குப் பெரியம்மாவை வைத்துவிட்டு ஆதியோடு வீட்டிற்குக் கிளம்பினாள்.
ஆதி ரஞ்சனாவை வீட்டில் வந்து விட்டவன், அர்ஜுனை அழைத்து மண்டபத்தில் வேலை முடிந்து விட்டதா என்று கேட்க… அர்ஜுன் “இல்லை, இப்ப தான் மளிகை சமான் மிஞ்சினது எல்லாம் பாக் பண்ணிட்டு இருக்காங்க.” என்றான்.
“அம்மா எங்கே?” ஆதி கேட்க… “அம்மா மீராவோட அப்பவே வந்தாங்களே, இன்னுமா வரலை.” என்றான். “மீராவோட தான வராங்க… வர வழியில டிராபிக்கோ என்னவோ…” என்றவன், சரி நானும் அங்கே வரேன் என்று போன்னை வைத்தான்.
ஆதி ரஞ்சனாவிடம் “அம்மா மீராவோட வர்றாங்களாம், நீ வேலைய பாரு.” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவன் வெளியே சென்றதும், ரஞ்சனா வீட்டுக்குள் செல்ல திரும்ப…அப்போது வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ரஞ்சானா யார் என்று எட்டி பார்க்க…. வித்யா தான் ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
மீராவோட வருவாங்கன்னு சொன்னார், இவங்க தனியா ஆட்டோவில் வர்றாங்க என்று குழம்பிய ரஞ்சனா வித்யாவின் முகத்தைப் பார்க்க… அவர் முகம் நான்கு நாட்கள் முன்பிருந்தது போல் கடுகடுவென்று இருந்தது.
ஐயோ தெய்வமே, இவங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாற்று என்று மனதிற்குள் வேண்டியவள், வேகமாக வீட்டிற்குள் சென்று, தன் அம்மாவிடம் ஐஷுவை கொடுத்துவிட்டு… “அம்மா… நான் போய் ஆராதனா ரூமை ரெடி பண்றேன். நீங்க என்னோட மாமியார் கேட்டா சொல்லிடுங்க.” என்று சொல்லிவிட்டு வேகமாக மாடிக்கு சென்றாள்.
மீரா வீட்டுக்கு வந்தவள், அன்றிரவு ஏழு மணிக்கு இருந்த விமானத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்து விட்டு, பெங்களூர் செல்ல கிளம்பி கொண்டிருந்தாள். அப்போது அர்ஜுன் மீராவை செல்லில் அழைத்தான்.
“மீரா… நீயும் அம்மாவும் வீட்டுக்கு போக லேட் ஆகிடுச்சா…”
அர்ஜுன் கேட்டதற்கு, மீரா வேறெதுவும் சொல்லாமல்… ஆமாம் என்று மட்டும் சொன்னாள்.
“நீயும், அம்மாவும் நிறைய நகை வேற போட்டிருந்தீங்களா…ஆதி இன்னும் வரலைன்னு சொன்னதும் பயந்திட்டேன்.” என்றவன், சரி போன்னை வச்சிடுறேன் என்று சொல்ல… “அர்ஜுன், நான் இன்னைக்கே ப்ளைட்ல பெங்களூர் கிளம்புறேன். நாளைக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. நைட்டே போய்டா ஈஸியா இருக்கும்.” மீரா சொல்ல… அர்ஜுனும் சரி என்றான். அவள் தனியே ட்ரைனில் செல்வதற்கு, விமானத்தில் செல்வது மேல் என்று நினைத்தவன், “பார்த்து போ.” என்று சொல்லிவிட்டு வைத்தான்.
ரஞ்சனா அவள் அறைக்குச் சென்று புடவை மாற்றிவிட்டு, ஆருவின் அறைக்குச் சென்றவள், அவள் அறையை ஒழுங்கு படுத்தி, கட்டிலில் புது மெத்தை விரிப்பை விறித்து… ரூமில் சிறிது ரூம் பிரெஷ்னரையும் அடித்துவிட்டு, அறைக்கதவை சாற்றிவிட்டு விட்டு வெளியே வர.. அவள் செல் அடித்தது. ரஞ்சனா அழைப்பது யார் என்று பார்க்க… அழைத்தது மீரா…ரஞ்சனா அவள் அறைக்குச் சென்று போன்னை ஆன் செய்தாள்.
“ரஞ்சனா அக்கா, அத்தை வீட்டுக்கு வந்துட்டாங்களா?”
“வந்துட்டாங்க மீரா …உன் கூடத்தான மீரா மண்டபத்தில இருந்து கிளம்பினாங்க, அப்புறம் ஏன் ஆட்டோவுல அவங்க மட்டும் தனியா வந்தாங்க?”
“அவங்களுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிடுச்சு கா… வழியில நிறுத்தி என்னை விசாரிச்சாங்க, அர்ஜுனை விட்டு விலகச் சொல்லி என்னைக் கேட்டாங்க. நான் முடியாதுன்னு சொன்னதும், கோபமா கிளம்பிட்டாங்க.” என்றாள் மீரா.
“அப்படியா…இப்ப என்ன பண்றது? அர்ஜுனுக்குத் தெரியுமா…”
“இல்லை… நான் எதுவும் சொல்லலை, சொல்ல போறதும் இல்லை… இனி அவங்க பாடு, அவங்க மகன் பாடு. நான் சொன்னா அவங்க அர்ஜுனை நான் தூண்டி விடுறதா நினைப்பாங்க. அதனால அவங்களே சொல்லிக்கட்டும்.”
ரஞ்சனாவுக்கும் மீரா சொல்வது தான் சரி என்று பட “ஆமா… அத்தைகிட்ட யார் சொல்லி இருப்பா?” என்றாள் யோசனையாக… “யார் சொன்னா என்ன? தெரிஞ்சிடுச்சு அவ்வளவு தான்.” என்றாள் மீரா அலுப்பாக…
“மீரா நான் வேணா… அர்ஜுனோட அண்ணாகிட்ட இதைச் சொல்லட்டா.” ரஞ்சனா கேட்க… “வேண்டாம் ரஞ்சனா கா…இப்ப எல்லோரும் ஆரு கல்யாண சந்தோஷத்தில இருக்காங்க, இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்.” எனச் சொல்லி மீரா போன்னை வைக்க… ரஞ்சனா மனதிற்குள், மீராவோட நல்ல பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு மருமகளா கிடைப்பாளா… எதுக்கு இந்த அத்தை வீண் பிடிவாதம் பிடிக்கிறாங்க? என்று நினைத்துக் கொண்டே கீழே இறங்கி சென்றாள்.
ரஞ்சனா கீழே சென்ற போது… வித்யா அவளின் அம்மாவோடு சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள். ரஞ்சனாவை பார்த்ததும் அவள் அம்மா புன்னகையுடன் “வேலையை முடிச்சிட்டியா?” என்று கேட்க… ரஞ்சனா “முடிச்சிட்டேன் மா…” என்றாள்.
“ரஞ்சு நானும், அப்பாவும் இங்கிருந்து சஞ்சனா வீட்டுக்கு போயிட்டு… அப்படியே அவளை அழைச்சிட்டு ஊருக்கு போறோம்.” என்றார். ஏற்கனவே மண்டபத்தில் இருந்து தினேஷ் தன் பெற்றோரையும், சஞ்சனாவையும் அழைத்துக் கொண்டு, அவன் வீட்டிற்குச் சென்றிருந்தான். அதனால் ரஞ்சனாவும் சரி என்றாள்.
சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பி சென்றனர். அவர்கள் சென்றதும் ரஞ்சனா வித்யாவிடம் “நைட்டுக்கு என்ன சமைக்க அத்தை?” என்று கேட்க…
“நீ சப்பாத்தியும், பன்னீரும் செஞ்சிடு… அதோட தோசை ஊத்திக்கலாம்.” என்றார். அதன்படி ரஞ்சனா சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் செய்தாள். வித்யாவும் அமைதியாகச் சாம்பார் வைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சமையலை முடிக்கவும், கணேசன் தன் மகன்களோடு வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் எல்லோருக்கும் ரஞ்சனா டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். வித்யா சூர்யாவும், ஆருவும் வரும் போது எடுக்க ஆரத்தி கரைத்துக் கொண்டிருந்தார். வித்யாவின் கை வேலை செய்தாலும்… பார்வை அர்ஜுன் மேல் தான் இருந்தது.
சூர்யாவும், ஆருவும் வந்ததும் அவர்களுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு அளிக்கபட்டது. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… எட்டு மணி ஆனதும் முதலில் சூர்யாவையும், ஆருவையும் சாப்பிட வைத்தனர். பிறகு ரஞ்சனா ஆருவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றவள், அவளைக் குளிக்கச் சொல்லிவிட்டு… அவளுக்கு இரவுக்கு உடுத்த புடவை எடுத்து வைத்தாள்.
பெரியம்மா மற்றவர்களைப் பார்த்து, நீங்களும் சீக்கிரம் சாப்பிட்டு படுங்க. எல்லோருக்கும் இன்னைக்கு அலுப்பா இருக்கும்.” என்றவர், சூர்யாவிடம் “நீயும் போய் ஆரு ரூம்ல குளிப்பா.. உனக்கும் கசகசன்னு இருக்கும்.” என்றதும், சூர்யா எழுந்து மேலே சென்றான்.
சூர்யா ஆருவின் அறைக்கதவை திறக்க… உள்ளே இருந்து இதமான நறுமணம் வந்தது. அறையில் ஒரு டேபிளில் பழங்கள், இனிப்புகள் இருந்தது. மெத்தையில் மல்லிகை பூ தூவபட்டு இருந்தது. சூர்யாவிற்கு அதைப் பார்த்ததும் சினிமாவில் வரும் முதலிரவு காட்சி தான் நியாபகத்திற்கு வந்தது. அதை நினைத்து அவன் சிரித்துக் கொண்டான்.
சூர்யா அங்கே ஓரமாக இருந்த அவன் பையைத் திறந்து, அதில் இருந்த துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வந்து உடை மாற்றவும், ஆரு அந்த அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. ஆரு வேகமாகச் சென்று பால் டம்ளரை டேபிளில் வைத்து விட்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“நீ சினிமா எல்லாம் பார்க்க மாட்டியா ஆரு… அதுல முதலிரவு காட்சி பார்த்தது இல்லை… பொண்ணு மெதுவா அடிமேல, அடி வச்சு, வெட்கபட்டுகிட்டே நடந்து வந்து, பாலை மாப்பிள்ளை கைல குடுத்திட்டு, கால்ல விழுந்து கும்பிடும். ஆனா…நீ என்னடானா நேரா வந்து கட்டில்ல உட்கார்ந்த்கிட்ட.” சூர்யா ஆருவை வம்பு இழுக்க…
“அது சினிமாவுல தான் அப்படி நடக்கும்.” ஆரு அலட்சியமாகச் சொல்ல… “அப்படியா? அப்படினா எதுக்கு இந்த ரூமை அலங்காரம் பண்ணி இருக்காங்க?” சூர்யா கேட்க… “நீங்க விடிய, விடிய பேசினாலும்… நான் உங்க கால்ல விழ போறது இல்லை.” என்றவள், எனக்குத் துக்கம் வருது என்று ஆரு கொட்டாவி விட… சூர்யா அவளைத் தாவி சென்று அணைத்தான்.
“அது எப்படி நீ தூங்குறேன்னு, நான் பார்க்கிறேன்” என்றவன், அவன் இதழால் அவள் மேனியில் கதை எழுத… அங்கே ஒரு அழகான தாம்பத்தியம் உதயமானது.
ஒரு ஜோடி இங்கே சந்தோஷ கடலில் நீந்தி கொண்டிருக்க… அங்கே இன்னொரு ஜோடி தங்களுக்கு எப்போது காலம் வரும் என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது.