இரண்டு மணிநேரமாய் நடந்துகொண்டிருந்த பிரச்சனையை பத்து நிமிடத்தில் தீர்வு கண்டுவிட்டானே என வியக்காமல் இருக்க முடியவில்லை. ம்.. அபிமன்யு கர்ணா மாமாவை விட நீ வல்லவன்தான்.. என பெருமையாய் நினைத்திருந்தவளை.. ‘ஆதி..” என்ற காஞ்சனாவின் அழைப்பில் கவனம் களைய..
‘உன்ன கூப்பிடறாங்க வாடா..” என பேத்திக்கான சம்பிரதாயம் செய்ய அழைத்தார். அதிரூபனை கடந்துதான் ராமசாமியின் பூத உடலிடம் செல்ல வேண்டியிருக்க.. நடக்க ஆரம்பித்தவளுக்கு சட்டென ஒர் எண்ணம்.. நான் இங்குதான் இருக்கிறேன் என நிச்சயம் தெரிந்திருக்கும்.. தற்போது அம்மா தன் பெயரை சொல்லி அழைத்தும் தன்னை பார்க்கவில்லையே என ஏமாற்றம் தன்போல் எழுந்தது.
அத்தனை முறை கேட்டும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டோம் அதனால்தான் தன்னை நிராகரிக்கிறான் என புத்தி எடுத்துரைத்தாலும் ஏனோ மனதை பிசைந்தது.
நடந்து வந்தவள் அவனை கடக்க.. ‘பட்டுமா.. எதுக்கு தாத்தாவ தொல்லை செய்திங்க..?” என மகளை கொஞ்சிக் கொண்டிருக்க.. ‘ப்பா.. ப்பா..” என தந்தையின் கன்னத்தில் அவனின் பட்டு முத்தமிட.. ‘நல்லா மயக்குறடா பட்டு..” என தானும் முத்தமிட்டான் குழந்தைக்கு.
அவனின் முத்த சத்ததித்தில் பொங்கியது மனம்.. உண்மையாக தன்னை நேசித்திருந்தால் நிச்சயம் தன்னை பார்த்திருப்பான்.. குழந்தைக்காகத்தான் தன்னை கேட்டிருக்கிறான்.. அதான் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தோடு அன்னையிடம் சென்றாள்.
அதிரூபன் இருப்பதால் அரவிந்தன் அமைதியானான். முதலுக்கு மோசமாகிடும் என்ற பயத்தில் கவிதாவும் அமைதியாக.. ராமசாமிக்கான சாங்கியங்கள் காஞ்சனாவை புறக்கணிக்காமல் நடந்தது.
சம்பிரதாயம் முடிந்து ராமசாமி உடல் எடுக்கப்படவும் மாரியப்பன் தானும் இடுகாடு செல்ல கேட்டார் கண்ணீரோடு. ‘உங்களால நடக்க முடியாது தாத்தா.. வெயில் வேற அதிகமா இருக்கு..” என மறுத்தான் அதிரூபன்.
மாரியப்பன்..‘நீயாவது போய் வா ரூபா..” என்றார் கெஞ்சலாக.
‘நான் போறேன்ப்பா.. ரூபன் போனா பட்டுவும் அவனோட போறன்ம்பா..” என கிளம்பினார் கணேசன்.
‘தாத்தா பட்டுக்கு இட்லி எங்க.?” என கேட்டு கனகா கொடுத்தனுப்பிய பையிலிருந்து இட்லியை எடுத்தவன்.. ஊட்ட ஆரம்பித்தான்.
குழந்தைக்கு முகம் கை கழுவிவிட்டு தானும் கழுவிக்கொண்டு.. பட்டு சாப்பிடலனா அப்பா ஊருக்கு போய்டுவேன் என குழந்தையை சாப்பிட சம்மதிக்க வைத்து.. அத்தனை அழகாய் கதை பேசியபடி ஊட்டிக்கொண்டிருந்த அதிரூபனை மெச்சியவாறு அவனருகே வந்தான் கர்ணன்.
‘நான் ஆதிரையோட மாமா..” என தன் உறவை அறிமுகம் செய்து.. ‘நீங்க வரவும்தான் ஆளாளுக்கு அமைதியாகிட்டாங்க..” என்றான் கர்ணன்.
எதுவும் சொல்லாமல் தலையசைத்து ஆமோதித்து பட்டுவிற்கு தண்ணீர் புகட்டினான். ‘ஆதியை பொண்ணு கேட்டிங்கன்னு அத்தை சொன்னாங்க.. உங்களுக்கு கொடுக்க விருப்பமில்லன்னு சொல்லியும் இந்தளவுக்கு எங்களுக்கு உதவி செய்திருக்கிங்க.. ரொம்ப நன்றி..” என்றான் உள்ளார்ந்து.
சின்னதாய் சிரித்தவன்.. ‘பொண்ணு கொடுக்கலன்றது அவங்க தனிப்பட்ட விசயம்.. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்மதமும் இல்லைங்க.. கண்ணு முன்ன தப்பு நடந்தா பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது..” என்றான்.
‘ம்.. சின்ன வயசுலயே ரொம்ப பெருந்தன்மையா இருக்கிங்க..” என பாராட்டுதலாய் சொல்லி.. ‘குழந்தைக்கு என்ன பேரு.?” என்றான்.
‘இன்னும் வைக்கிலங்க.. எனக்கு வரப்போற பெரிய பட்டுதான் இந்த சின்ன பட்டுக்கு பேர் செலக்ட் செய்யனும்னு காத்திருக்கேன்.. இப்போ வரைக்கும் பட்டு தான் இந்த பட்டு பேரு..” என்றான் புன்னகையோடு.
ஓ.. பேர் வைக்கும் முன்னவே இவங்கம்மா தவறிட்டாங்களா.? என பாவமாக நினைத்தாலும்.. ஆதிம்மாவை நினைத்து சொல்கிறானா.? என ரூபனின் முகத்தை ஆராய.. அவனின் பார்வை குழந்தையைத் தவிர்த்து வேறெங்கும் இல்லையென்பதை குழந்தை மீதான ரூபனின் கவனம் உறுதிசெய்ய.. ஆதியை பிடித்ததால் பெண் கேட்டிருக்கிறான்.. விருப்பமில்லை என சென்னதும் விலகிவிட்டான் என பெருமையாய் பார்த்திருந்தான் கர்ணன்.
‘ப்பா.. நா பட்டூ.. ஆ..” என குழந்தை உணவிற்கு வாய்திறக்க.. ‘ஆமாடா.. நீ என்னோட பட்டூ..” என குழந்தை போலவே சொல்லி சிறு இட்லி துண்டை வாய்க்குள் வைத்தான் நெகிழ்வோடு.
ஒன்பது மணியிலிருந்து கணேசன் என்ன முயற்சித்தும் சாப்பிடாத குழந்தை தற்போது சமத்தாய் சாப்பிட்டதை பார்த்த காஞ்சனாவிற்கும் நெகிழ்வானது. தலைகுனிந்து அமர்ந்திருந்தாலும் தந்தை மகள் சம்பாஷனை ஆதிரையின் காதில் விழவே.. ஏனோ அவளால் ரசிக்க முடியவில்லை.. மனம் தள்ளாட்டம் ஆனது.
‘இவங்க இடத்துக்கு இதான் முதல் முறையா என் அத்தைக்காக வந்தேன்.. நீங்க இங்க செய்த உதவி என்னால எப்பவும் மறக்க முடியாது.. தேங்க்யூ சோ மச்..” என மீண்டும் நன்றி தெரிவிக்க..
‘உங்க நன்றிக்கு பதிலா நான் வேற ஒன்னு கேக்கலாமா.?” என்றான் அதிரூபன்.
கர்ணனின் முகம் கலவரமாக.. ‘ஹாஹா.. பயப்படாதிங்க..” என இலகுவாய் சொன்னவன்.. ‘எல்லாரும் நைட்டே வந்துட்டிங்கன்னு என் தாத்தா சொன்னார்.. இப்போ பனெண்டு மணி ஆகப்போகுது.. நீங்கள்லாம் பசியோட இருக்கிறது என் தாத்தாவால தாங்க முடியல.. சாப்பாடு ஆர்டர் பண்றேன் சாப்பிடுறிங்களா.?” என்றான்.
ம்.. ஆதிரையின் தூக்கமின்மையும் பசியின் களைப்பும் அவளின் முகத்தில் தெரிய தாளமுடியாமல் கேட்டான் அதிரூபன். ‘இல்ல.. பரவால்ல.. காலைல டீ குடிச்சோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்புறதுதான.?” என மறுத்தான் கர்ணன்.
‘ஆதிரையை நான் கேட்டதை நினைச்சி சாப்பாடு வேணாம் சொல்லாதிங்க.. நான் ஆர்டர் பண்றது பிடிக்கலன்னா நீங்களாவது ஆர்டர் செய்து சாப்பிடுங்க..” என்றான்.
இத்தனை தன்மையாய் பேசுபனிடம் மறுக்க தோன்றாமல் உணவை ஆர்டர் செய்தான் கர்ணன். நிம்மதியாய் உணர்ந்த அதிரூபன்.. ‘சாப்பாடு வர எப்படியும் ஒரு மணிநேரம் பக்கம் ஆகும்.. முகம் கை கழுவிட்டு அந்த கொட்டகைல போய் படுங்க..” என்றான்.
உண்மையில் இரவெல்லாம் விழித்திருந்தது அனைவருக்குமே அசதியாய் இருக்க.. தன் குடும்பத்தாரை கொட்டகைக்கு அழைத்து சென்றான். ராமசாமியின் உடலை அவரின் காட்டிலேயே அடக்கம் செய்வதால் அரைமணி நேரத்தில் வேலை முடித்து வந்தனர்.
அதன்பின் உணவும் வந்திட.. பணம் கர்ணன் கொடுத்திருந்தாலும் அதிரூபனின் அக்கறையில் காஞ்சனா சங்கடமாய் உணர்ந்தார்.
ஆதிரைக்கு அதிரூபனை எப்படி எடுத்துக் கொள்ள என்றே புரியவில்லை. காதல் சொன்னான்.. பிடிக்கவில்லை என்றுவிட்டோம்.. அதன்பின் தொல்லை செய்யவில்லை.. இங்கு வந்து தன் குடும்பத்திற்காக சண்டையும் போட்டதில்லாமல் பசித்திருப்போம் என புரிந்து மாமாவிடம் சாப்பிட வைக்க சொல்கிறான்.. ஆனால் வந்ததிலிருந்து தன்னை கண்டுகொள்ளவே இல்லை.. இப்படி ஒருத்தன் இருப்பானா என்ற வியப்போடு மீண்டும் அதிரூபனைதான் பார்த்தாள்.
அதிரூபன் அவனின் தந்தையிடமும் தாத்தாவிடமும் அன்னையின் உடல்நிலை குறித்து விசாரித்துக்கொண்டிருக்க.. குழந்தை அவனின் மீசை உதடு சட்டை என ஒவ்வொன்றாய் பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்தாள். ‘அந்த பார்சலை பிரி ஆதி..” என்ற காஞ்சனாவிடம்.. ‘ம்மா பாத்ரூம் போகனும்..” என்றாள்.
‘சரி சீக்கிரம் போய் வா..” என பாத்ரூம் இருக்கும் இடம் காண்பித்து கர்ணன் அபிமன்யு சாப்பிட ஏதுவாக பார்சல்களை பிரித்து வைக்க ஆரம்பித்தார்.
ஆதிரை சாப்பிடுறாளா என கவனித்திருந்த அதிரூபன்.. அவள் அன்னையிடம் சொன்னதுபோல் பாத்ரூம் போகாமல் அதற்கு பின்னே இருந்த மறைவை நோக்கி போவது கண்டு.. ‘அப்பா சுசு போகனும்.. தாத்தாகிட்ட இருடா பட்டு..” என குழந்தையை கணேசனிடம் ஒப்படைத்து ஆதிரையிடம் சென்றான்.
கணேசன் வந்து சிறிது நேரத்திலெல்லாம் அழ ஆரம்பித்திருந்தாள் குழந்தை. தன் அன்னை மனமிறங்கி அவனுக்கு என்னை கட்டிகொடுக்க சம்மதிக்க வைக்கவே பழக்கப்படாத சூழலுக்கு குழந்தையை அழைத்து வந்திருக்கிறார்கள் என தாம் நினைத்தது தவறென புரிய.. குழந்தைக்காகத்தான் தன்னை மணக்க கேட்கிறான் என நினைப்பதும் தவறோ.?
வசதி வாய்ந்தவர்கள் என அன்னை சொல்லியிருக்க.. இத்தனை அழகாய் கம்பீரத்தோடிருப்பனிற்கு பெண்ணா கிடைக்காது..? குழந்தைக்காக இல்லாமல் தன்னை பிடித்துதான் கேட்டானா.? இவ்விசயத்திலும் தவறாகத்தான் நினைத்தோமா.? என யோசித்திருந்தவளிற்கு.. ‘ஆதி..” என்ற குரல் வெகு அருகில் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.
அதிரூபனை கண்டதும் இதயம் தடம் புரண்டார்போல் படபடத்தது ஆதிரைக்கு. ‘காலைல வந்ததுலயிருந்து எதுக்கு என்னையே பார்த்து கொல்ற.? அதான் பிடிக்கலன்னு சொல்லிட்டல்ல.? அப்புறம் எதுக்கு பார்க்கிற.? என்னை நினைக்கிற.?” என்றான் கோபத்தோடு.
தன்னை கவனித்துதான் இருந்தானா என அதிர்ந்து விழித்தவள் அங்கிருந்து விலக முயல.. ‘கேக்குறேன்ல.? சொல்லிட்டு போ..” என அந்த சிறிய சந்தை தன் அகலத்திற்கு மறைத்து நின்றான்.
‘ஓஹ்.. சண்டை போட்டேன்னுதான் பார்த்தியா.? அப்படியா.?” என ஊன்றிப் பார்க்கவும்.. திணறிப்போனாள் ஆதிரை.
‘இனி என்னை பார்க்காத.. மீறிப் பார்த்த..” என முறைத்தான்.
ஆதிரை மிரண்டு விழிக்க.. தன் கோபம் குறைத்தவன்.. ‘உன்னைத் தவிர இனி யாரையும் நினைக்க கூட முடியாதுன்னு அன்னைக்கு போன்ல உங்க வீட்ல எல்லாரும் கேட்டிருக்கவே என் மனதை சொல்லிட்டேன்.. ஆனாலும் உனக்கு என்னை பிடிக்கல..
உன் உணர்வுக்கு மரியாதை கொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு விலகியிருக்கேன்.. இந்த நிலையில நீ என்னை பார்க்கறது எனக்கு ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு ஆதி..” என்றான் மொத்த காதலையும் குரலில் தேக்கி.
‘சா..சாரி.. இனி பார்க்கல..” என வெக்கித் தலைகுனிந்தாள்.
‘ம்ப்ச்.. சாரிலாம் சொல்லாத.. உன்னை கஷ்டப்படுத்த நான் சொல்லல.. என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியல..” என வருந்தி சொன்னவன்.. ‘உனக்கு என்னை பிடிச்சிருக்கு.. ஆனா என் பட்டுக்காக என்னை பிடிக்கலன்ற..” எனும்போதே ஆதிரையின் கண்கள் குளம் கட்ட தலைகுனிந்தவள்.. ‘வழி விடுங்க நான் போகனும்..” என்றாள்.
தன்மீதான இவளின் காதலையும் தானே உணர்த்தியாகிற்று.. இதற்குமேல் இவ்விடம் இருப்பது வேணாம்.. பசியோடு வேறு இருக்கிறாள்.. இன்னும் சற்று நேரத்தில் காஞ்சனாத்தை இவளை தேடி வந்தாலும் வந்திடுவார்கள் என நினைத்தவன்..
‘அந்த பக்கம் நிறைய பேர் இருக்காங்க போல.. நான் இப்படி போறேன்.. நீ இரண்டு நிமிசம் கழிச்சி போ..” என்றவன் ஐந்தடி மதில் சுவரை வெகு சுலபமாய் எகிறி குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயிருந்தான்.
ரூபனின் செய்கையில் மயங்கி நின்றவள் பின்னே அங்கிருந்து வெளிவர.. பாத்ரூம் பின்னிருந்து கண்ணீரை துடைத்தபடி வெளி வந்த ஆதிரையை பார்த்தான் கர்ணன்..
இத்தனை நேரம் காணாத அதிரூபன் தற்போது குழந்தைக்கான திண்பண்டங்களோடு வந்திருப்பதும்.. வந்ததிலிருந்து ஆதிரையை கண்டுகொள்ளாமல் இருந்தவன், தற்போது ஆதிரையை சந்தோசத்தோடு நோட்டமிடுவதையும்..
அதிரூபன் வந்த்திலிருந்து அவனை பார்த்திருந்த ஆதிரை, தற்போது அவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவளின் வாட்ட முகமும் கண்டு ஒரு முடிவிற்கு வந்தான் கர்ணன்.