“நீ மீரா மேல எதாவது குறை இருந்தா சொல்லு… அதைவிட்டுட்டு அவள் வேற இனம், வசதியானவ… இதெல்லாம் ஒரு காரணமா… நீ பார்க்கிற மருமகள் மட்டும் வந்து இந்தக் குடும்பத்தோட ஒத்து வாழ்வான்னு உனக்குத் தெரியுமா… தெரியாம நீயா எதாவது பேச கூடாது.” கணேசன் சொல்ல…
“ரஞ்சனா வீட்லயும், ஆரு வீட்லையும் நாம பேசினா கேட்டுக்கப் போறாங்க… இதுல பெரிசா பேசவோ இல்லை… கவலைபடவோ என்ன இருக்கு மா?” ஆதி கேட்க…
“ஓ… உங்க எல்லோருக்கும் இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா… நீங்க எல்லோரும் இதுல கூட்டு… என்கிட்டே சொல்லனும்னு உங்க யாருக்கும் தோணலை இல்லையா….” என்ற வித்யா “உங்க இஷ்டத்துக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க.” என்று சொல்ல…
அது வரை அமைதியாக இருந்த அர்ஜுன் “மீராகிட்டையும் இப்படித் தான் பேசினீங்கலாமா… அதனால தான் அவ ஆரு கல்யாணம் முடிஞ்சு பெங்களூர் போனவ…. இன்னும் சென்னைக்கு வரலை இல்லையா…” என்று கேட்க…
“ஏன் என்கிட்டே கேட்கிற? அவகிட்ட கேளு… எங்க அம்மா உன்னை மிரட்டினாங்கலான்னு அவ கட்ட கேட்க வேண்டியது தான…” என்று வித்யா கோபாகச் சொல்ல… “நீங்க அவளை மிரட்டி இருக்க மாட்டீங்க, அவளை என்னை விட்டு விலகி போகச் சொல்லி இருப்பீங்க சரியா…” அர்ஜுன் சொல்ல…
“ஆமாம் டா, அப்படித் தான் சொன்னேன். உன்னால எங்க குடும்பத்தில பிரச்சனை வரும். நீ விலகிடு, நான் எங்க குடும்பத்துக்கு ஏத்த இடத்தில என் பையனுக்குப் பொண்ணு பார்த்துகிறேன்னு சொன்னேன் தான், அதுக்கு என்ன இப்ப?”
“வித்யா… நீயா எப்படி எல்லா முடிவையும் எடுப்ப?… என்கிட்டே பேசிட்டு மீராகிட்ட பேசி இருக்கலாமே…பாவம் மீரா அதனால தான் இங்க வர்றது இல்லையா… இப்ப உனக்குச் சந்தோஷமா…” கணேசன் கோபமாகக் கேட்க…
“இங்க பாருங்க, சும்மா உங்களுக்குத் தெரிஞ்சா மாதிரி பேசாதீங்க… நானும் மீரா நான் சொன்னா கேட்டுபான்னு தான் நினைச்சேன். ஆனா… அவ என்ன சொன்னா தெரியுமா… என்னால அர்ஜுனை விட்டு விலக முடியாது, நீங்க முடிஞ்சா உங்க பையனுக்கு வேற பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு போயிட்டா…” என்றார் கடுப்பாக…
ஹா..ஹா…ஹா… என்று சத்தமாகச் சிரித்த கணேசன் “மீரா அப்படியா சொன்னா, நான் கூடப் பயந்த சுபாபம்னு நினைச்சேன். உனக்கு எல்லாம் இப்படிச் சரிக்கு சரி பேசுற ஆள் தான் கரெக்ட்.” அவரின் பேச்சு வித்யாவின் கோபத்தை மேலும் தூண்டியது.
“இப்பவே என்ன பேச்சு பேசுறா… இன்னும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா அவ்வளவு தான். எனக்கு நீங்க சொல்றது எல்லாம் சரியா படலை, நாம நமக்கு ஏத்த இடத்தில செய்யறது தான் நல்லது, அவளும் அவங்க அம்மா மாதிரி பிடிக்லைன்னு போன்னா என்ன செய்வீங்க?”
வித்யா சொன்னதைக் கேட்ட அர்ஜுன் “அம்மா…” என்று கத்தினான்.
அர்ஜுன் போட்ட சத்தத்தில் எல்லோரும் ஒரு நிமிடம் அரண்டு விட்டனர். அர்ஜுன் நேராக வித்யாவை பார்த்து “இதையும் மீராகிட்ட சொன்னீங்களா…” என்று கேட்க… வித்யா ஆமாம் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தான்.
“அம்மா… மீரா முதல் தடவை அவங்க அம்மா, அப்பா டைவர்ஸ் பண்ணதுனால அவ எவ்வளவு கஷ்டபட்டான்னு சொன்ன போது, நான் அவகிட்ட உனக்குப் பிறந்த வீட்ல கிடைக்காத பாசமும், அன்பும் உன்னோட புகுந்த வீட்ல கிடைக்கும். உனக்கு நானும், என்னோட குடும்பமும் இருக்கோம்னு நம்பிக்கையா சொன்னேன். ஆனா… நீங்க நான் அவளுக்குக் கொடுத்த நம்பிக்கையவே இப்படி உடைச்சிட்டு வந்திருக்கீங்க.” என்ற அர்ஜுன் தொடர்ந்து….
“அவங்க அம்மாவும், அப்பாவும் அவங்களுக்குள்ள ஒத்து வராததுனால கௌரவமா விலகி, வேற வாழ்க்கை அமைசிகிட்டாங்க. அது அவங்க விருப்பம். அவங்க பண்ண ஒரே தப்பு மீராவை கவனிக்காம விட்டது தான். அவ அன்புக்காகவும், பாசத்துக்காகவும் எவ்வளவு ஏங்குறா தெரியுமா…அவ எதிர்பார்கிறது எல்லாம் குடும்பமா சேர்ந்து வாழுற வாழ்க்கைய தான். அவ அதுக்காக அவ சொத்தையே தூக்கி போட்டுட்டு வர்றதுனாலும் வருவா..” என்றான்.
“மீராவோட அம்மாவும் முதல்ல அவங்க அப்பாவை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அப்புறம் அவங்க எதிர்பார்த்த மாதிரியான வாழ்கையை அவர் கொடுக்க முடியளைனதும் தான் அவர்கிட்ட இருந்து விலகி இருக்காங்க. அது மாதிரி இன்னைக்குச் சந்தோஷமா நம்ம வீட்டுக்கு வர்ற மீராவுக்கு, கொஞ்ச நாள் ஆனதும், நாம நமக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்தில கல்யாணம் பண்ணி இருக்கலாமேன்னு… ஒரு எண்ணம் அவளுக்கு வராதுன்னு என்ன நிச்சயம்? ஆரம்பத்தில எல்லாமே நல்லா தான் அர்ஜுன் இருக்கும், வாழ்க்கைய வாழ்ந்து பார்க்கும் போது தான் உண்மை புரியும்.” வித்யா சொல்ல….
“அம்மா நீங்க ஒன்ன மறந்துடாதீங்க… நான் ரெண்டு பேரும் காதலிக்கிறோம். அவ என்னை விரும்பி வர்றா… அவளுக்கு நம்ம குடும்பத்தைப் பத்தி நல்லா தெரியும், நம்ம குடும்பத்துக்குக் கல்யாணம் பண்ணி வந்தா… இங்க என்ன மாதிரியான வாழ்கை இருக்கும்னு அவளுக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது, இதுல அவளுக்கு ஏமாற்றம் வரவோ… இல்லைனா பிடிக்காம போகவோ என்ன இருக்கு?” அர்ஜுன் பதிலுக்குக் கேட்க…
“இன்னைக்கு இருக்கிற காதலர்களை நானும் தான் பார்கிறேன். இன்னைக்குக் காதல் நாளைக்கு மோதல். காதலிக்கும் போது தெரியும் நல்ல விஷயம் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தப்பா தான் தெரியுது. அஞ்சு வருஷம், பத்து வருஷம் காதலிக்கிறவங்க கூடக் கல்யாணம் பண்ண ரெண்டு மாசத்தில கோர்ட் வாசல்ல டைவர்ஸ்க்காக நிக்கிறாங்க. அப்புறம் எதை நம்பி காதலை ஆதரிக்கச் சொல்ற..” என்றவர் தொடர்ந்து….
“இப்ப நம்ம ஆதிக்கு நாங்க தான் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சோம். அவங்க சந்தோஷமா இல்லையா… ஆருவுக்கும் நாங்க தான் மாப்பிள்ளை பார்த்தோம், அவங்களும் நல்லா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனைனாலும் நாம கேட்க முடியும். இதே உனக்கும், மீராவுக்கும் நாளைக்குப் பிரச்சனை வந்தா… அவங்க அப்பாகிட்ட போய் நாம பேச முடியுமா….” வித்யா விளக்கமாகச் சொல்ல…
“நீங்க சொல்ற மாதிரி நாட்ல நடக்கத் தான் மா செய்யுது, நான் இல்லைன்னு சொல்லலை…. காதலிக்கும் போது இருக்கும் உறுதி, நிறையக் காதலர்களுக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை. காதலிக்கும் போது யாரை பத்தியும் கவலைபடாதவங்க, கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு அவங்க வாழ்க்கையை அவங்களே கெடுத்துகிறாங்க… இதுல சிலர் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்குக் காதல் கல்யாணம் பண்ணாதீங்கன்னு வேற அட்வைஸ் பண்றாங்க…எதோ அவங்க மட்டும் தான் கஷ்ட்டபடுற மாதிரி, எல்லோர் வாழ்க்கையிலும் தான் பிரச்சனை இருக்கும். எனக்கும் இதெல்லாம் தெரியும்.”
“ஆனா… அம்மா நிறையப் பெத்தவங்க பார்த்துச் செய்து வைக்கிற கல்யாணம் கூடத் தோல்வியில முடியுது. அதுக்காக நாட்ல கல்யாணமே நடக்காமலா இருக்கு. காதல் கல்யாணமா… இருந்தாலும், பெத்தவங்க பார்த்து செய்யற கல்யாணமா இருந்தாலும்… அங்க கல்யாணம் பண்ணிக்கிற ஆணும், பெண்னும் ஒருத்தருக்கு, ஒருத்தர் விட்டு கொடுத்து அன்பா இருந்துட்டா பிரச்சனை வாரதுமா…”
“உங்களுக்கு மீராவை நாலு வருஷமா தெரியும். அவ குணம், நடத்தை எல்லாம் தெரியும். நானும் அவளைப் பார்த்ததும் உடனே காதல்ல விழுந்துடலை…அவ வசதியானவ, நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருவாளான்னு நானும், யோசிக்கத் தான் செஞ்சேன். ஆனா… அதையும் மீறி அவ கண்ணில் உண்மையான காதல் தெரிஞ்சிதுமா… என் மனசு சொல்லுச்சு இவ உன்னுடயள்னு, அதனால தான் காதலை சொன்னேன். ப்ளீஸ் புரிஞ்சிக்கங்கமா….” அர்ஜுன் எடுத்து சொல்ல….
“நீ சொல்றதெல்லாம் கேட்கும் போது நல்லா தான் அர்ஜுன் இருக்கு…. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு எல்லாம் சரி தான். ஆனா… எப்பவோ ஒரு தடவை சந்திகிறதுக்கும், எப்பவும் கூட இருக்கிறதுக்கும் நிறைய வித்தாயசம் இருக்கு. என் மனசுல இன்னும் நம்பிக்கை வரலை, ஆனா… உங்க எல்லோருக்கும் இஷ்டம் இருக்கும் போது… எனக்காக நீ மீராவை கல்யாணம் பண்ணிக்காம இருக்க வேண்டாம். நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க, அவளும் நமக்காக எதையும் இழக்க வேண்டாம், அதனால நீங்க தனிக் குடித்தனம் போங்க.” வித்யா முடிவாகச் சொல்ல…அதை கேட்டு எல்லோரும் அதிர்ந்தனர்.
அர்ஜுன் தன் அம்மாவின் காலடியில் அமர்ந்து, அவர் கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, அவர் கண்களைப் பார்த்து “அம்மா இதை விட நீங்க ஒரு பெரிய தண்டனை எங்களுக்குக் கொடுக்கவே முடியாது. உங்களை விட்டு விலகி இருக்கணும்னா எங்களுக்கு அப்படி ஒரு கல்யாணம் தேவை இல்லை. நானும் மீராவும் விலகி இருந்தாலும் ஒருத்தரை, ஒருத்தர் நினைச்சிட்டே வாழ்ந்துடுவோம். நீங்க சொல்ற மாதிரி குடும்பத்தில இருந்து பிரிய, மீரா ஒரு நாளும் சம்மதிக்க மாட்டா…அவளுக்கு மட்டும் நீங்க இப்படிச் சொன்னது தெரிஞ்சா.. என்னை விட்டு நிரந்தரமா பிரிவாளே தவிர… நீங்க சொல்ற மாதிரி நடக்காது. இப்ப ஒன்னும் அவசரம் இல்லைமா, நீங்க நல்லா யோசிச்சு முடிவு எடுங்க….ஆனா ஒன்னு மட்டும் உறுதி, உங்க சம்மதத்தோட, நாம எல்லாம் ஒரே குடும்பமா இருக்கிறதுனா மட்டும் தான் எங்க கல்யாணம் நடக்கும்.” எனச் சொல்லிவிட்டு அர்ஜுன் எழுந்து வெளியே சென்றான்.
அவனைத் தொடர்ந்து ஆதியும், கணேசனும் கடைக்குக் கிளம்பினார்கள். ரஞ்சனா சமையல் அறைக்குச் சென்றாள். எல்லோரும் வித்யா யோசித்து முடிவு எடுக்கட்டும் என்று நினைத்தனர். வித்யா நல்ல முடிவை எடுப்பாரா….