வீடு திரும்பிய ராம்நாத் வருணை விட்டு மீராவை அழைத்து வர சொல்லி… “மீரா, நானும் மீனாட்சியும் போய் அர்ஜுன் வீட்ல பேசுறோம். உன் அம்மா கண்டிப்பா இது மட்டும் சொல்லி இருக்க மாட்டா… அவங்களுக்குக் கோபம் வர மாதிரி வேறையும் கண்டிப்பா பேசி இருப்பா… அதுக்கும் மன்னிப்பு கேட்டுட்டு, உங்க கல்யாணம் விஷயம் பேசிட்டு வரோம்.” என்றார்.
“வேண்டாம்பா…இனி பேசி எதுவும் ஆகப் போறதில்லை. விட்டுடுங்க. எனக்கு அவங்க குடும்பத்தில வாழ கொடுப்பினை இல்லை. நான் தான் நடுவில வந்தேன், நானே இப்ப விலகிக்கிறேன்.” மீரா சொல்ல… ராம்நாத் அதற்கு எதோ மறுத்து சொல்ல வர… வருண் அவரைத் தடுத்து, “அக்கா சொல்றது தான் பா கரெக்ட்.” என்றவன், மீராவிடம் “அக்கா… நீயே என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணு, எங்களுக்கு எதுனாலும் ஓகே…” என்றான்.
மீரா அவள் அறைக்குச் சென்றதும் ராம்நாத் வருணை பார்த்து “அவ தான் எதோ விரக்தியில பேசுறான்னா…நீயும் அவளோட சேர்ந்துட்டு பேசுற…” என்றதும்,
“அப்பா, மீரா அக்காவை பார்த்தா உங்களுக்குப் புரியலையா… அவ எதோ முடிவு எடுத்திட்டா…நீங்க அவளுக்கு எதிரா பேசினா, அவ நம்மிடமும் எதுவும் சொல்லமாட்டா. அவ பாட்டுக்கு எங்கையாவது சொல்லாம போயிட்டா. என்ன பண்ணுவீங்க? அதனால அவளை அவ போக்குலேயே விடுங்க. அவ இப்ப ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கா… அவளுக்கு நாம இப்ப ரொம்பச் சப்போர்ட்டா இருக்கணும். நம்ம அக்கா அவங்களுக்கு வேணும்னா… இனி அர்ஜுன் வீட்ல இருந்து வந்து பேசட்டும். நம்ம மீரா ஒன்னும் யாருக்கும் குறைச்சல் இல்லை.” வருண் சொல்ல…
அவன் சொன்ன, மீரா எங்காவது சொல்லாமல் போய் விட்டாள் என்ற வார்த்தை ராம்நாத்திற்குமே அச்சத்தைத் தந்தது. மீரா இப்போது உணர்ச்சிவசப் பட்டிருக்கும் நேரத்தில் தவறான முடிவு எதுவும் எடுத்துவிட்டால் என்று பயந்தார். அதனால் அவள் போக்கிலேயே போக முடிவு செய்தார்.
தன் மகள் படும் பாட்டை நினைத்து அவருக்குக் கவலையாக இருந்தது. தன் மகள் மட்டும் காதலிக்கவில்லை என்றால்… இந்நேரம் அவளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகி இருக்கும். இப்படிக் காதலித்து விட்டு கஷ்ட்டபடுகிறாளே என்று நினைத்து வருந்தினார்.
“என்ன மா முடிவு பண்ணி இருக்க….” மறுநாள் ராம்நாத் கேட்க… மீராவிற்கு எதுவும் தெரியவில்லை. “நான் வேணா எதாவது வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்கட்டுமா?” என்றாள்.
மீராவின் மனதில் இருந்த குழப்மெல்லாம் நீங்கி, தெளிவு பெற வேண்டும் என்றால்… அவள் சிறிது நாட்கள் இந்தச் சூழ்நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இடத்திற்குச் சென்றால் தான், அவள் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவருக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது? என்று ராம்நாத் யோசித்தார்.
“எனக்குத் தெரிஞ்சவங்க பெங்களூர்ல இருக்கிற ஒரு பெரிய கான்வென்ட் ஸ்கூல்ல மதரா இருக்காங்க. நான் அவங்ககிட்ட சொல்லி உனக்கு அங்க வேலை வாங்கித் தரேன். நீ கொஞ்ச நாள் டீச்சரா வேலை பார்கிறியா?” ராம்நாத் கேட்க…. மீராவும் சரி என்றாள். அவள் அங்கே செல்வது யாருக்கும் தெரியவேண்டாம் என்று கேட்டு கொண்டாள்.
அன்றே ராம்நாத் அந்த மதரிடம் பேசி மீராவின் வேலைக்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் பள்ளியில் பரத நாட்டியம் சொல்லிகொடுக்கத் தான் ஆள் இல்லை என்று அந்த வேலைக்கு அவளை எடுத்துக் கொண்டனர். அதோடு மீராவுக்கும் பரதம் ஆடுவது மிகவும் பிடித்தமானது. அதை மற்றவர்களுக்குச் சொல்லி கொடுக்கும் போது, அவள் மனதிற்கும் உற்சாகத்தைத் தரும் என்று நினைத்தார்.
ராம்நாத்தே நேரில் சென்று மீராவை அந்தப் பள்ளியில் விட்டுவிட்டு வர அவளுடன் கிளம்பினார். ராம்நாத்தும், மீராவும் மதர் இருந்த அறைக்குள் செல்ல… மீராவை பார்த்ததும் மதருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுடைய சான்றிதள்களை வாங்கிப் பார்த்தவர், “ரொம்பச் சின்ன வயசுலேயே பரதம் கத்துகிட்டு இருக்கியே நல்லது, இன்னைக்கே வேலைக்குச் சேர்ந்திடு.” என்றார். அந்தப் பள்ளியில் இருக்கும் விடுதியிலேயே அவளைத் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.
ராம்நாத் சென்றதும் மீரா அங்கிருந்த அலுவலகத்தில் அவளைப் பற்றிய விபரங்களை… அவர்கள் கொடுத்த பார்மில் எழுதி கொடுத்துவிட்டு, அவளுக்குக் கொடுத்த அறைக்குச் சென்றாள். அவள் அதில் தன்னைத் திருமதி என்றும், தன் கணவரின் பெயர் அர்ஜுன் என்றும் எழுதி இருந்தாள்.
இரண்டு நாட்களாக மீராவின் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்ததும், அர்ஜுன் குழம்பி போய் ஆருவுக்கு அழைத்துக் கேட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பு… தானும் ரஞ்சனாவும் மீராவோடு சேர்ந்து வெளிய போனோமே என்று ஆரு சொல்ல… சரி வேற எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்துப் பொறுமையாக இன்னும் ஒரு நாள் காத்திருந்தான். மறுநாளும் சுவிட்ச் ஆப் என்று வர, அதற்கு மேல் பொறுக்க முடியாமல்… மீராவின் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்.
மீனாக்ஷி எடுத்து யார் என்று கேட்க… “நான் அர்ஜுன் பேசுறேன், மீராவோடு பேசணும்.” என்றான்.
மீனாக்ஷி அர்ஜுனிடம் இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார். அவரிடம் இருந்து போன்னை வாங்கி வருண் பேசினான்.
“யார் பேசுறது?”
“வருண், நான் அர்ஜுன் பேசுறேன். எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் அர்ஜுன், நீங்க எப்படி இருக்கீங்க?” என வருண் அர்ஜுனை நலம் விசாரிக்க…
“நான் நல்லா இருக்கேன், மூன்னு நாளா.. மீராவோட போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது. அதனால தான் வீட்டு லைனுக்குக் கால் பண்ணேன். கொஞ்சம் மீராவை கூப்பிடேன்.”
“அவ இப்ப வீட்ல இல்லை…”
“வெளிய போய் இருக்காளா… சரி நான் அப்புறம் கால் பண்றேன்.” என்று அர்ஜுன் போன் தொடர்பை துண்டிக்கச் செல்ல…
“இல்லை அவ வெளியூர்ல இருக்கா….” என்றான்.
அதிர்ந்த அர்ஜுன், “வெளியூர் போய் இருக்காளா… எதுக்கு?” என்று கேட்க…
“அவளுக்கு அங்க வேலை கிடைச்சிருக்கு, அதனால போய் இருக்கா.” வருண் அலட்சியமாகப் பதில் சொல்ல….
அர்ஜுனுக்கு எதோ சரி இல்லை என்று நன்றாகப் புரிந்தது. “எந்த ஊரு? என்ன வேலை?”
“அதை நாங்க யார்கிட்டயும் சொல்றதா இல்லை… மீரா அக்காவை உங்க அம்மா விலகச் சொல்லி கேட்டாங்க, மீரா அக்காவும் இப்ப விலகிட்டாங்க. இனி நீங்க யாரும் அவங்க விஷயத்தில தலையிட வேண்டாம்.” வருண் கராராகப் பேச… அர்ஜுனுக்குக் கண்முன் தெரியாத கோபம் வந்தது.
“வருண், நீ யார்கிட்ட பேசுறேன்னு தெரியுதா… ஒழுங்கா சொல்லு, மீரா எங்க? அவளுக்கு எதுவும் பிரச்சனையா?”
வருனுக்கே அர்ஜுனின் நிலையைப் பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. “இல்லை.. அவ நல்லா இருக்கா…பயப்பட ஒன்னும் இல்லை… வெளியூர்ல வேலைக்குப் போறா…” என்றான் தணிவாகவே…
“சரி எங்க இருக்கா? நம்பர் கொடு… நான் அவகிட்ட பேசிக்கிறேன்.” அர்ஜுன் மீண்டும் கேட்க…
“அர்ஜுன்… நீங்க உங்க வேலை முடிச்சிட்டு ஆஸ்திரேலியாவுல இருந்து வந்ததும், உங்க அம்மாவோட வந்து எங்க அக்காவை பொண்ணு கேளுங்க… அப்புறம் நாங்க அவளைப் பத்தி விவரம் தரோம். மத்தபடி தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க.” எனப் பெரிய மனிதன் தோரணையில் வருண் பேச….
“நீ இப்ப எனக்கு மீராவை பத்தி சொல்லலைனா… நான் இப்பவே கிளம்பி சென்னை வந்து, போலீஸ்ல என்னோட காதலியை எங்கையோ மறைச்சு வச்சிருக்காங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவேன், பரவாயில்லையா….” அர்ஜுன் மிரட்ட….
பதிலுக்கு வருண் “எங்க அப்பா யாருன்னு தெரியும் இல்ல… நீங்க போலீஸ் கம்பளைன்ட் குடுத்தா…எங்களுக்கும் என்ன பண்ணும்னு தெரியும், அதனால சும்மா பயம் காட்ட வேண்டாம்.” என்றான் திமிராக….
இவர்கள் இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது, அர்ஜுனுக்கு ரொம்ப நேரமாக வேறொரு அழைப்பு வந்து கொண்டிருந்தது. அர்ஜுன் எரிச்சலோடு யார்? என்று பார்க்க… அழைத்தது மீரா. அர்ஜுனின் டென்ஷன் எல்லாம் சட்டென்று வடிய…. முகத்தில் புன்னகை வந்தது.
“சரி நான் அப்புறம் பேசுறேன்.”
“என்ன பயந்துடீங்களா….” வருண் கிண்டலாகக் கேட்க… இந்தப் பொடியன் பேசுறது எல்லாம் நாம கேட்க வேண்டியதா இருக்கே என்று நினைத்த அர்ஜுன், “ம்ம்…உன் அக்கா பாசமலர் தான் போன் பண்றாங்க… அதுக்குத் தான்.” என்றதும், “மீராக்காவா ச்ச…எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன், நல்லா தேடட்டும்னு.” வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அர்ஜுன் போன்னை வைத்துவிட்டான்.
அர்ஜுன் மீராவின் அழைப்பை எடுக்க….”அர்ஜுன்….” என மீரா விசும்பினாள்….. அர்ஜுன் மெளனமாக இருந்தான்.
“சாரி அர்ஜுன், ரொம்ப டென்ஷன் ஆகிடீங்களா…”
“அதுக்குத் தான மீரா இப்படிப் பண்ண…” அர்ஜுன் சொன்னதும், இப்போது மீரா மெளனமாக இருந்தாள்.
“சரி இப்பவாவது சொல்லு எங்க இருக்க?”… அர்ஜுன் கேட்க… மீரா “வேண்டாம் அர்ஜுன், நான் விலகினது, விலகினதாகவே இருக்கட்டும்.” என்றாள்.
அர்ஜுன் மனசுக்குள் அது தான் பார்த்தேனே, நீ விலகின லட்சனத்தை என்று நினைத்தவன், “அப்ப இப்ப எதுக்கு டி போன் பண்ண?” என்றான் கடுப்பாக.
“நான் திடிர்னு காணோம்னா… நீங்க பயந்து கவலை படுவீங்கள்ள…அதனால நான் பத்திரமா இருக்கேன்னு சொல்ல தான் போன் பண்ணேன்.”
அர்ஜுனுக்கு மீராவை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை “ரொம்பத் தான் அக்கறை, அப்படி அக்கறை இருக்கவ கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டியது தான…அதை விட்டுட்டு எதுக்கு இப்ப எங்கையோ போய் இருக்க? இப்ப என்ன தான் உன்னோட முடிவு மீரா?” என்றான்.
“வேண்டாம் அர்ஜுன், என்னை எதுவும் கேட்காதீங்க. நாம சேர இன்னும் நேரம் வரலை… அது வருமான்னு தெரியலை. என்னால எல்லோருக்கும் கஷ்ட்டம். எனக்கு இந்தக் குடும்ப வாழ்கை எல்லாம் சரிவராதுன்னு என்னோட தலையில எழுதி இருக்கோ என்னவோ… சும்மா இருந்த உங்களை நான் தான் முதல்ல பார்க்க வைச்சேன். இப்ப நான் உங்க வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டு இருக்கேன்.” இதைச் சொல்லும் போதே மீரா அழுதாள். அர்ஜுனுக்கு அவள் அழுவது வேதனையாக இருந்தது.
அவள் பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட அர்ஜுன், “எங்க அம்மா நம்ம கல்யாணத்துக்கு முழு மனசா ஒத்துக்க மாட்றாங்க, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மாவை சமாதானம் செய்யலாம்னா… நீ ஒத்துக்க மாட்டேங்கிற. என்னை என்ன தான் டி செய்யச் சொல்ற?…என்றான் வருத்தமாக…
“என்னை விட்டுடுங்க அர்ஜுன், நீங்க உங்க அம்மா சொல்ற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க…” மீரா தன் மனதை கல்லாக்கி கொண்டு சொல்ல…
“இதுக்கு நீ என்னைக் கொன்னிருக்கலாம் மீரா…” என்ற அர்ஜுன் அதற்கு மேல் பேச முடியாமல், “சரி நான் போன்னை வச்சிடுறேன்.” என்றான். “அர்ஜுன் நான் சொல்றதை புரிஞ்சிக்கோங்க….” மீரா எதோ சொல்லவர…
அவளைத் தடுத்த அர்ஜுன் “மீரா நீ ஒன்னு புரிஞ்சிக்கோ… நீ தான் என்னை முதல்ல உன்னைப் பார்க்க வச்சாலும். எனக்கு உன்னைப் பிடிச்சதுனால தான் விரும்பினேன். எனக்கும் ஒரு மனசு இருக்கு… அதுல ஆசை, காதல் எல்லாம் இருக்கு. நீயும், என்னோட அம்மாவும் உங்க இஷ்ட்டப்படி எல்லாம் என்னை ஆட்டி வைக்க முடியாது. இனி நீங்க ரெண்டு பேரும் இழுக்கிற பக்கம் எல்லாம் நான் வர்றதா இல்லை. ரெண்டு பேரும் என்னை ஆள விடுங்க.” என்றவன் போன்னை வைத்துவிட்டான்.
அர்ஜுனுக்கு மீராவை பற்றி நன்றாகத் தெரியும், அர்ஜுனின் பக்கத்தில் வேறொரு பெண் வந்து சாதாரணமாக நின்றாலே…. அவள் முகம் மாறிவிடும். அப்படிப்பட்டவள் இன்று அர்ஜுனை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்கிறாள் என்றால்…. வேறேதோ அவள் மனம் நோகும் படி நடந்திருக்கிறது என்று. ஆனால் என்ன என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.
அர்ஜுன் இனி அம்மாவுக்கும், மீராவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தான் செய்யவேண்டும் என்று நினைக்க… மீரா அவனுக்கே அதிர்ச்சி கொடுப்பாள் என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை.
அதன் பிறகு அர்ஜுன் மீராவை தொடர்பு கொள்ளவில்லை. மீராவும் அர்ஜுனை அழைக்கவில்லை. இப்படியே நாட்கள் சென்றது. அர்ஜுன் மூன்று மாதங்கள் சென்ற பிறகும் இந்திய வரவில்லை.
ஒரு நாள் ஆருவுடன் அர்ஜுனின் வீட்டுக்கு வந்த சூர்யா “அர்ஜுன் இனி ஆஸ்திரேலியாலே இருந்து வேலை பார்க்க போறதா… எங்க ஆபீஸ் சொல்றாங்க. அர்ஜுன் தான் கேட்டு வாங்கி இருக்கான்.” என்று சொன்னதும், அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்தனர்.
“அர்ஜுன் ஆஸ்திரேலியாவுல இருந்து வந்ததும், மீரா வீட்ல போய்ப் பேசலாம்னு இருந்தா… இவன் ஏன் இப்படிப் பண்றான்?.” கணேசன் சொல்ல…மற்றவர்கள் முகத்திலும் குழப்பம் தான்.
கணேசன் ஆருவிடம் “மீராவுக்குப் போன் போட்டு எதாவது தெரியுமான்னு கேளு…” எனச் சொல்ல… ஆருவும் மீராவின் செல்லுக்கு அழைக்க… அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.
“நீ இதுக்கு முன்னாடி எப்ப மீராவிடம் பேசின?” ஆதி கேட்க… ஆரு தலை குனிந்தாள். ஆருவிற்குக் கல்லூரியில் ப்ராஜெக்ட் நடந்து கொண்டிருந்ததால், அவள் அதில் பிஸியாக இருந்தாள். அதனால் அவள் மீராவை அழைக்கவில்லை.
“நான் பேசி ரொம்ப நாள் ஆகுது ஆதி அண்ணா…” என்றதும், கணேசன் அர்ஜுனை செல்லில் அழைத்தார்.
அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்ற இந்த மூன்று மாதத்தில் அவனாக யாரையும் அழைத்துப் பேசவில்லை. ஆனால் யாரவது அவனை அழைத்தால்… எடுத்துப் பேசினான். முன்பிருந்த கலகலப்பு அவனிடம் இல்லை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு வைத்துவிடுவான். இப்போது கணேசன் அழைத்ததும் அர்ஜுன் எடுத்தான்.