“அர்ஜுன், நீ எப்ப இங்க வர்ற…இந்நேரம் உன்னோட வேலை முடிஞ்சிருக்கனுமே…” ஒன்றும் தெரியாதது போல் கணேசன் கேட்க..
“இல்லப்பா நான் இனி அங்க வர்றதா இல்லை. ஆஸ்திரேலியால தான் இருக்கப் போறேன்.” என்றான் அர்ஜுன் உறுதியாக…
“என்ன சொல்ற அர்ஜுன், நீ வேலை பார்த்தது எல்லாம் போதும். உடனே கிளம்பி இங்க வா.”
சிறிது நேரம் மெளனமாக இருந்த அர்ஜுன் “நான் எதுக்குப்பா அங்க வரணும்? இனி எனக்கு அங்க என்ன இருக்கு? நான் என்ன பா தப்பு செஞ்சேன்? எனக்குப் பிடிச்ச பொண்ணை விரும்பினேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன், அது தப்பா?”
“அவளை உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும். அவ நல்ல பொண்னும் தெரியும்… இருந்தும், அவளை ஏத்துக்க அம்மாவுக்கு இஷ்ட்டம் இல்லை. அம்மா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு விருப்பம் இல்லை. அதனால அவள் என்னைவிட்டு விலகி போய்ட்டா பா… இனி நான் அங்க வந்து என்ன பண்ண போறேன்? உங்களுக்கு ஆதியும், ஆருவும் இருக்காங்க. நீங்க அவங்களோட சந்தோஷமா இருங்க.” என்றான் விரக்தியாக.
கணேசன் அர்ஜுனின் பேச்சை எல்லோரும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரி ல் தான் போட்டு இருந்தார். அதனால் அவன் பேசியதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.
கணேசனிடம் இருந்து போன்னை வாங்கிய ஆதி, “அர்ஜுன் என்ன சொல்ற? மீரா விலகி போயிட்டாளா… புரியலை, என்ன ஆச்சு விவரமா சொல்லு….” எனக் கேட்க, அர்ஜுன் இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்தை சொன்னான்.
ஆதியிடம் இருந்து போன்னை வாங்கிய சூர்யா “ஏன் டா இதை இத்தனை நாளா எங்ககிட்ட சொல்லலை? இப்ப மீரா எங்க?” எனக் கேட்க…
“சொன்னா… நீங்க எல்லோரும் அம்மாவை போர்ஸ் பண்ணுவீங்க… அது வேண்டாம்னு நினைச்சேன். மீரா அம்மா தன்னை முழு மனசா அவங்க மருமகளா ஏத்துக்கணும்னு தான் ஆசைபட்டா…இப்ப அவ எங்க இருக்கான்னு சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனா எங்க இருந்தாலும், அது எத்தனை வருஷம் ஆனாலும், அவ என்னோட மீராவா தான் இருப்பா…எனக்கு அது தெரியும்.” என்ற அர்ஜுன் போன்னை வைத்து விட்டான்.
அர்ஜுன் பேசியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் சிலையாகச் சிறிது நேரம் நின்று விட்டனர். வித்யா சத்தமாக அழுதார். எல்லோரும் அப்போது தான் நிலைமையை உணர்ந்து வேகமாக அவரிடம் சென்றனர்.
“நான் இப்படி நடக்கும்னு நினைக்கலையே… அர்ஜுன் வந்து என்கிட்டே பேசுவான்னு நினைச்சேனே… அவன் இப்படி என்னை மொத்தமா ஒதுக்கி வைப்பான்னு நினைக்கலையே…” வித்யா அழுது புலம்ப….
“இப்ப அழுது என்ன பிரோஜனம்?” கணேசன் கேட்க… “உங்களுக்குத் தெரியுமா… மீராவோட அம்மா நம்ம குடும்பத்தைப் பத்தி எவ்வளவு மோசமா பேசினாங்க தெரியுமா… நம்ம அர்ஜுன் அவ பணத்துக்காகத் தான், அவளை விரும்புறதா சொன்னாங்க…மீரா இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாலும், கொஞ்ச நாள்ல அவ செஞ்சது தப்புன்னு உணர்ந்து அர்ஜுனைவிட்டு பிரிஞ்சு போயிடுவான்னு எல்லாம் சொன்னாங்க. அதைக் கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்.” வித்யா ஆவேசமாகச் சொல்ல…
“அவங்க சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி.” கணேசன் கடுப்பாகக் கேட்க… “மீராவோட அம்மாவை பத்தி எனக்குத் தெரியாதா…நான் அவங்க சொல்லி மாறுவேனா… அவங்க நினைச்சது தப்புன்னு புரியவைகனும்னு தான் நினைச்சேன். அர்ஜுனும், மீராவும் உண்மையா தான் விரும்புறாங்கன்னு அவங்களுக்கு மட்டும் இல்லை… எனக்கும் உறுதி படுத்திக்கத் தான், பிடிவாதமா எதிர்த்தேன்.”
“அவங்க ரெண்டு பேரும் அவங்க காதல்ல எவ்வளவு உறுதியா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கத் தான் கோபமா இருக்கிற மாதிரி நடிச்சேன். எந்தப் பொருளும் ஈஸியா கிடைச்சிட்டா அதோட அருமை தெரியாது. அதனால தான் அவங்க காதலின் ஆழத்தை சோதிக்க நினைச்சேன். ஆனா… மீரா இப்படிப் பண்ணுவானோ, அர்ஜுன் இப்படி மனசு வெறுத்து போவான்னோ.. எதிர் பார்க்கலை.” என்றார் வித்யா வருத்தமாக.
அவர் சொன்னதைக் கேட்டு எல்லோரின் மனதுமே நெகிழ்ந்திருந்தது. வித்யா அர்ஜுனும், மீராவும் தன்னிடம் வந்து மீண்டும், மீண்டும் பேசி புரியவைக்க முயலுவார்கள் என்று தான் எதிர்பார்த்தார். ஆனால் இப்படி ஆகும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
மீரா கடைசியாக ஆருவோடும், ரஞ்சனாவோடும் வெளியே சென்றாள் என்று தெரிந்ததும் ஆதியும், சூர்யாவும் அவர்களை விசாரிக்க… அவர்களும் அன்று நடந்ததைச் சொல்ல… அதைக் கேட்ட… ஆதி ரஞ்சனாவை போட்டு கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தான்.
“உன்னை யாரு அம்மா சொன்னதை மீராகிட்ட சொல்ல சொன்னது? அர்ஜுன் அன்னைக்கே சொன்னான்ல… இது மட்டும் மீராவுக்குத் தெரிஞ்சா அவ என்னை விட்டு நிரந்தரமா பிரிவான்னு… அப்புறம் நீ எதுக்குச் சொன்ன?”
“நான் அது நினைவு இல்லாம, தெரியாம தான் சொன்னேன்.”
“அதெப்படி தெரியாம சொல்லுவ, உனக்கும் உன்னோட தங்கையோட புத்தி வந்துடுச்சா…” ஆதி ஏற்கனவே நொந்திருந்த ரஞ்சனாவை மேலும் நோகடிக்க, அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளைப் பார்த்து ஐஷுவும் அழுதது.
மற்றொரு பக்கம் சூர்யா ஆராதனாவிடம் “ஒழுங்கா நான் போய் இருப்பேன் ஆஸ்திரேலியாவுக்கு, அதை நீ அழுது கெடுத்த…உங்க அண்ணன் என் ஆபீஸ்ல வேலை செய்யலைனா நான் தான் கண்டிப்பா போய் இருக்கணும். அப்ப நீ என்ன செஞ்சிருப்ப?… உன் பேச்சை கேட்டு, நான் போகாம அவனை அனுப்பினேன் பாரு என்னைச் சொல்லணும். ஏற்கனவே பிரிஞ்சி இருந்தாங்க, அர்ஜுன் இங்கயே இருந்திருந்தா, மீரா அவனை விட்டு போய் இருக்க மாட்டா… அர்ஜுன் தான் நம்ம கல்யாணம் நடக்கவே காரணம், ஆனா… உனக்கு மீரா கூடப் பேச கூட டைம் இல்லை.” என அவன் ஆருவை திட்ட … ஆருவும் அழுது கொண்டிருந்தாள்.
வீடே போர்களம் போல் இருந்தது. மூன்று பெண்களும் ஆளுக்கு ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தனர். கணேசன் எல்லோரையும் பார்த்து “முதல்ல அழுகைய நிறுத்துங்க… இப்ப ஒன்னும் ஆகிடலை… எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். நான் போய் மீராவோட அப்பாவை பார்த்து பேசுறேன். அவருக்கு மீரா எங்க இருக்கான்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.” என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டு மீரா வீட்டிற்குச் செல்ல.. அங்கே அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ராம்நாத் ஒரு மாதம் வெளிநாடு சென்றிருந்தார். அவரோடு மீனாட்சியும் சென்றிருக்க…வருணும் இவர்கள் சென்ற நேரம் வீட்டில் இல்லை…கணேசன் வருணுக்கு விவரம் தெரியும் என்று நினைக்கவும் இல்லை.
மறுநாள் கணேசன் ராமநாத் அலுவலகத்திற்குச் சென்று மனேஜரை பார்த்து… ராம்நாத் பற்றி விசாரிக்க… ராம்நாத் இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுவார் என்றார்.
கணேசனும் இன்னும் ஒரு வாரம் தானே…நேரில் வந்ததுமே பேசுவோம் என்று நினைத்து, சரி அவர் வந்ததும் வந்து பார்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார். ஆனால் ராம்நாத் சென்ற இடத்தில் திடிரென்று ஏற்பட்ட புயலால்…. விமானச் சேவை ரத்துச் செய்யப்பட்டது. அதனால் அவர் பயணம் மேலும் ஒரு வாரம் தாமதமாகியது.
சூர்யாவும், ஆதியும் மீராவை தேடிக்கொண்டு தான் இருந்தனர். ஆனால் அவர்களால் அவள் எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் மீராவை பார்த்து அவளைச் சமாதானம் செய்து அழைத்து வந்த பின், அர்ஜுனுக்குச் சொல்வோம் என்று நினைத்தனர்.
ஏற்கனவே நொந்திருக்கும் அர்ஜுன், இப்போது இருக்கும் மனநிலையில் எதையும் சொன்னால் கண்டிப்பாக நம்பமாட்டன் என்று அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.
வித்யாவோ மிகுந்த குற்ற உணர்வில் இருந்தார். அவர் தன்னால் தான் இப்படி ஆனது என்று நினைத்து, நினைத்தே தன் உடம்பை கெடுத்துக் கொண்டார். ஹாஸ்பிடல் வரவும் மறுத்து விட்டார். அவரைப் பார்க்க ஆதி வீட்டிற்கே மருத்துவரை அழைத்து வந்தான். வீட்டில் எல்லோரும் கவலையாக இருந்தனர்.
இப்படியே இரண்டு வாரங்கள் செல்ல…மீராவின் அப்பா அன்று தான் ஊரில் இருந்து வருகிறார். கணேசன் அவரை மாலையில் சென்று சந்திப்பதாக இருந்தது. மாலை கணேசன் மீராவின் வீட்டிற்குக் கிளம்பி கொண்டிருந்த போது தான், மீரா கடத்தப்பட்ட செய்தியை டிவியில் பார்த்துவிட்டு எல்லோரும் அதிர்ந்தனர். வித்யா அந்தச் செய்தியை பார்த்துவிட்டு மயங்கி விழுந்தார்.
வித்யாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஏற்கனவே உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர், அதோடு அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டதால்…மயங்கி இருப்பதாகவும், பயப்பட எதுவும் இல்லை என்று சொன்ன டாக்டர், எதற்கும் அவர் ஒரு நாள் மருத்துவமனையில் இருக்கட்டும் என்றார்.
கணேசன் ஆதியை வித்யாவுக்குத் துணைக்கு வைத்துவிட்டு, சூர்யாவை அழைத்துக் கொண்டு ராம்நாத்தை பார்க்க சென்றார். ஆனால் அவர் சென்ற நேரம் ராம்நாத் வீட்டில் இல்லை… அவர் காவல்துறை உயர் அதிகாரிகளைப் பார்க்க சென்றிருந்தார். வீட்டில் மீனாக்ஷியும், வருணும் இருந்தனர்.
அவர்களிடம் கணேசன் எல்லாவற்றையும் சொல்ல.. மீனாக்ஷி இதெல்லாம் படனும்னு இருக்கு போல… அதனால தான் இப்படியெல்லாம் எல்லாம் நடக்குது என்றவர், மீராவின் அம்மா வந்த அன்று வீட்டில் நடந்ததைச் சொல்லி, “மீரா அன்னைக்குத் தான் ரொம்ப மனசு ஒடிஞ்சு போய்ட்டா…அவளை அவ இஷ்ட்டதிற்கு விடுவதைத் தவிர வேற வழி இல்லை…அதனால தான் அவங்க அப்பாவே கொண்டு போய் அவளை அங்க சேர்த்து விட்டாங்க, ஆனா… இப்படி நடக்கும்னு யாருமே எதிர் பார்க்கலை.” என்றார் கவலையாக.
சிறிது நேரம் கழித்து வந்த ராம்நாத்திடம் கணேசன் விசாரிக்க…அவரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய மந்திரிகளைச் சந்தித்துப் பேசி இருப்பதாகவும். அவர்களும் எல்லோரையும் பத்திரமாக மீட்போம் என்று சொல்லி இருப்பதாகச் சொல்ல.. கணேசன் நடந்த குழப்பத்துக்கு எல்லாம் நாங்களும் ஒரு வகையில் காரணம் என்றவர், வித்யா மீராவிடம் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தைச் சொல்ல… ராம்நாத் “எனக்குத் தெரியும்” என்றவர், தானும் மீராவுடைய தாத்தா பாட்டியிடம் மீராவின் அம்மாவை பத்தி சொல்லி எச்சரித்திருப்பதாகச் சொன்னார்.
ராம்நாத் தான் இப்போது பெங்களூர் கிளம்புவதாகச் சொல்ல.. கணேசன், “நீங்க முன்னாடி போங்க நாங்க வித்யாவின் உடல் நிலையைப் பார்த்து கிளம்பி வரோம்.” என்றார். ராம்நாத்தும் சரி என்று பெங்களூர் செல்ல தயார் ஆனார்.
மீரா வீட்டில் இருந்து கணேசனும், சூர்யாவும் நேராக வித்யா இருந்த ஹாஸ்பிடல் சென்றனர். வித்யா தூக்கத்தில் இருந்தார். அவரருகே ஆதியும், ஆருவும் இருந்தனர். அப்போது தான் சூர்யா அர்ஜுனை அழைத்து மீரா கடத்தப்பட்டதைச் சொன்னான். அர்ஜுனுக்கு ஏற்கனவே மீரா கடத்தப்பட்டது அதிர்ச்சியாக இருக்கும், இதில் அவன் அம்மாவும் உடம்பு சரி இல்லாமல் இருக்கிறார் என்று தெரிந்தால் மேலும் கவலைபடுவான் என்று நினைத்து சூர்யா அர்ஜுனிடம் அதைச் சொல்லவில்லை.
கணேசன் முதலில் சூர்யாவையும், ஆதியையும் பெங்களூர் கிளம்பச் சொல்ல… சூர்யாதான், ஆதி இங்கு இருக்கட்டும், நான் ஆருவை கூட்டிட்டு போறேன். என்று ஆருவுடன் காரில் பெங்களூர் கிளம்பினான்.
மறுநாள் காலை சீக்கிரமே வித்யாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தனர். அப்போது தான் அர்ஜுன் ஆதியை அழைத்து நியூஸ் சேனல் பார்க்க சொன்னான். அவன் சொன்னபடியே பார்த்த அனைவரும் அதில் திருமதி மீரா அர்ஜுன் என்றதும் முதலில் அதிர்ந்தாலும், பின் மீரா தான் அவ்வாறு கொடுத்திருப்பாள் என்று புரிந்து கொண்டனர். திருமணம் ஆகாமலே… அர்ஜுனை கணவனாக நினைத்து வாழும் மீராவின் காதலை நினைத்து பெருமைப்பட்டனர்.
வித்யா, மீரா இப்போது இருக்கும் நிலையை நினைத்து கவலைப்பட்டவர், நாமும் பெங்களூர் போவோம். எனக்கு மீராவை பார்க்கணும் என்று பிடிவாதம் பிடிக்க…வேறு வழியில்லாமல் கணேசன் வித்யாவை அழைத்துக் கொண்டு பெங்களூர் கிளம்பினார். அவருடன் ஆதியும், ரஞ்சனாவும் சென்றனர்.
அங்கே மீரா பஸ் ஜன்னலில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். இனி இங்கிருந்து நல்லபடியாகச் சென்று அர்ஜுனை பார்ப்போமா என்று நினைத்ததும் அவளுக்கு அழுகை வந்தது. அவளுக்கு நம்பிக்கையே இல்லை… அர்ஜுனை திரும்பச் சிந்திப்போம் என்று… அர்ஜுனை தவிக்க விட்டதால் தான் தனக்கு இந்த நிலை என்று நினைத்து வருந்தியவள். அர்ஜுனுக்காகவாவது தான் நல்லபடியாக இங்கிருந்து திரும்பி செல்ல வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
அர்ஜுனும் வழியெல்லாம் மீராவின் நினைவாகவே வந்தவன், கடவுளே, மீராவும் மத்தவங்களும் எந்தப் பாதிப்பும் இல்லாம நல்லபடியா திரும்ப வந்திடனும் என்று வேண்டி கொண்டே வந்தான். அவனிருந்த விமானம் பெங்களூரை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிப்பு கேட்டது.