கதிர் பார்ப்பதை செல்வி கவனிக்காவிட்டாலும், மாறன் கவனித்து விட்டான். அதிலும் அவன் செல்வியை பார்த்த பார்வையை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது. கதிர் பார்க்க கொஞ்சம் முரடன் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய பேச்சில் மிரட்டல் தொனியே எப்போதும் நிறைந்திருக்கும். அதனால் மாறனுக்கு கதிரைக் கண்டால் கொஞ்சம் பயம் தான்.
“தோப்புல இருந்த நாமலே இங்க வந்திருக்கோம். அப்பறம் அவன் வர மாட்டானா..? இது அவன் வீடு தான..?” என்றாள் செல்வி.
“இதுல உனக்கு சந்தேகம் வேறையா..?” என்றபடி கதிர் வர,
“வா கதிரு..! நீ சொன்ன மாதிரி கோழிக் குழம்பு தான் வச்சிருக்கேன். சாப்பாடு எடுத்து வைக்கவா கதிரு..?” என்றார் லட்சுமி.
“லட்சுமியம்மா… நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், கோழிக் குழம்பு சாப்பிட்டேன். ருசின்னாலும் ருசி… அப்படி ஒரு ருசி. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கோழியை சாப்பிட்டதே இல்லை..” என்றான் செல்வியைப் பார்த்துக் கொண்டே.
அவள் அவனை எரிச்சலுடன் முறைக்க,
“அப்படி ஒரு கோழிக் குழம்பை எங்க சாப்பிட்ட கதிரு..?” என்றார் லட்சுமி.
“என்னம்மா நீங்க..? என்னை கேள்வி கேட்குறதை விட்டுட்டு… அவளுக்கு இன்னும் கொஞ்சம் சாப்பாட்டைப் போடுங்கம்மா…!” என்றான் சிரிப்புடன்.
“ஐயோ அத்தை.. இப்பவே எனக்கு வயிறு புல்லாகிடுச்சு. இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது. உங்க பையனுக்கே போடுங்க..!” என்றவள் வேகமாக கை கழுவ, கிணத்தடிக்கு செல்ல,
அவள் கை கழுவிவிட்டு திரும்பும் வேளையில், அவளை வழி மறைத்து நின்றான் கதிர்.
“விலகுங்க நான் போகணும்..” என்றாள் செல்வி அவனை முறைத்துக் கொண்டே.
“தாராளமா போகலாமே..அதுக்கு முன்னாடி, இனிமேல் இப்படி கோழி எல்லாம் திருட மாட்டேன்னு சொல்லி, சாரி சொல்லிட்டு போ..!” என்றான்.
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. கோழியைத் திருடினது நாங்களா இருந்தாலும், அதை தின்னு முடிச்சது நீங்க தான்..! அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது..!” என்றால் செல்வி.
“நாளைக்கு இந்த கதிருக்கு பொண்டாட்டியா வரப் போறவா, இப்படி இருந்தா… நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க. அடங்கி ஒடுங்கி வீட்ல இருக்குற வழியைப் பாரு..!” என்றான்.
“நானும் போனாப் போகுது, கட்டிக்கப் போற பொண்ணுன்னு அமைதியா பேசிட்டு இருக்கேன். நீ என்னடான்னா.. உன் இஷ்ட்டத்துக்கு தான் ஊர் சுத்துவேன்னு சொல்ற..?” என்றான் கண்டிப்புடன்.
“ஹெலோ… நான் இன்னும் உங்களைக் கட்டிக்கிறேன்னு சொல்லவே இல்லை. நீங்களா ஒரு மனக்கோட்டை கட்டினா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது..” என்றாள் செல்வி.
“கண்டிப்பா நீ சொல்லுவடி..” என்றான் கதிர்.
“அதுக்கு வாய்ப்பே இல்லடா ராசா. யாராவது தெரிஞ்சே.. குழியில விழுவாங்களா..? நான் அந்த தப்பை செய்யவே மாட்டேன்..” என்றாள் செல்வி.
“பார்க்கலாம் செல்வி. கண்டிப்பா எனக்கு பொண்டாட்டியா வரப் போறது நீதான். அதை நடத்திக் காட்டுவான் இந்த கதிர், அதுவும் உன்னோட விருப்பத்தோட..” என்றான் கதிர்.
“அது நடக்குறப்போ பார்ப்போம்..!” என்று அசட்டையாக சொன்னவள், அவனை சட்டை செய்யாமல் அவனைத் தள்ளிக் கொண்டு போக, அந்த தள்ளலில் அவன் மேல் பட்ட அவளின் சின்ன ஸ்பரிசம் அவனைத் திக்கு முக்காட வைத்தது.
“அக்கா..! நேரம் ஆச்சுக்கா.. இந்நேரம் அம்மா நம்மளைத் தேட ஆரம்பிச்சிருக்கும். இன்னைக்கு நமக்கு செமத்தியா இருக்கு..” என்று புலம்ப ஆரம்பித்தான் மாறன்.
“அத்தை அப்போ நாங்க கிளம்புறோம்..! வழக்கம் போல, உங்க சாப்பாடு செம்ம. ரொம்ப தேங்க்ஸ் அத்தை..” என்றவள், அவரை அணைத்துக் கொள்ள,
“இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியே செல்வி..? பேசாம நீ கதிரைக் கட்டிக்க, அத்தை நானே உனக்கு தினமும் சமைச்சிப் போடுறேன்..” என்றார் லட்சுமி.
“வரப் போற மருமகளை சமைக்க சொல்லாம, நான் சமைச்சிப் போடுறேன்னு சொல்றிங்களே அத்தை.. அந்த மனசு தான் கடவுள் அத்தை. அதுக்காக வேணும்ன்னா கொஞ்சம் யோசிக்கலாம்…” என்று சொல்ல,
“அடிங்க….!” என்று கதிர் அவளை அடிக்க வர,
“இவருக்கு இந்த ஜென்மத்துல பொண்ணு கிடைக்காது அத்தை. முரட்டுப் பய..!” என்று அவனுக்கு பழிப்புக் காட்டியவள், மாறனை இழுத்துக் கொண்டு ஓட முயற்சிக்க,
“அடியேய்..! காளையை அடக்குறவனுக்கு கண்ணு குட்டியை அடக்குறது ஒன்னும் பெரிய விஷயமில்லை..!” என்றான்.
“முதல்ல அடக்கு, அப்பறம் வாய் சவடால் பேசு..!” என்று அவனைப் பார்த்து சொன்னவள்,
“இத்தனை நாள் உங்க பையன், சண்ட போட்டு காளையை அடக்கி இருக்கார்ன்னு நினைச்சேன். இப்பத்தான தெரியுது, வாய்ல பேசியே காளையை அடக்கியிருக்கார்ன்னு..” என்றவள், அடுத்த நிமிடம் அங்கு நிற்கவில்லை.
அவளை எரிச்சலுடன் பார்த்தவன்,
“என்னம்மா அவதான் அப்படி பேசிட்டு போறான்னா, நீங்களும் சிரிச்சுட்டு இருக்கீங்க..?” என்றான் கதிர்.
“விடுடா..! சின்ன பொண்ணு தான, போகப் போக சரியாகிடும்..” என்றார் லட்சுமி.
“அம்மா, அவ நீங்க இருக்குற தைரியத்துல தான் அப்படி பேசிட்டு போறா. என்கிட்டே தனியா சிக்குனா அவ கண்ணுல அப்படி ஒரு பயம் தெரியும்… இந்த கொடுமையை நான் எங்க பொய் சொல்ல..” என்று நொந்து கொண்டான் கதிர்.
“அம்மா..! அவ அப்படி எல்லாம் சொல்ல மாட்டாம்மா. அவளுக்கும் என்னைய ரொம்ப பிடிக்கும். ஆனா, அந்த சண்டி ராணிக்கு அதை ஒத்துக்கத்தான் மனசு இல்லை. பார்ப்போம், எங்க போய்ட போறா..?” என்றான் கதிர்.
“என்னவோ கதிரு… எல்லாம் நல்ல படியா நடந்தா சரி தான்..!” என்றார் லட்சுமி.
செல்வி அவனுக்கு நெருங்கிய உறவு கிடையாது. தூரத்து உறவு. அதிலும் அவனுக்கு அவள் முறைமை வேறு. ஒரே ஊர் என்பதால், கொஞ்சம் உரிமை உணர்வு அதிகம்.
செல்விக்கு ஏனோ அவனைக் கண்டால் பிடிப்பதில்லை. இதற்கும் சுற்றி உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் அவனுக்கு பெண் தர தயாராய் இருந்தனர். ஆனால் அவனின் மனம் என்னவோ செல்வியைத் தான் நாடியது. அவள் அவனை சட்டை செய்யாமல் இருக்க இருக்க, அவள் தான் வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாய் பதிந்து போனது. லட்சுமிக்கும் செல்வியைப் பிடிக்கும் என்பதால், அவள் தான் தனக்கு மனைவி என்று நூறு சதவிகிதம் நம்பினான் கதிர். ஆனால் இத்தனை நாட்களாக அதை அவன் வெளிக் காட்டிக் கொண்டதில்லை.
அங்கே செல்வியின் வீட்டில், அவளின் அம்மா மங்கை கோபத்தில் அவளைப் பேசிக்கொண்டே இருந்தார்.
“கழுதை வயசாகுது. இப்படி வீடு தாங்காம ஊர் சுத்திட்டே இருந்தா, பார்க்குறவங்க என்ன நினைக்க மாட்டங்க..? ஒரு பேச்சும் கேட்குறது கிடையாது. இப்படியே இருந்தா, நாளைக்கு கட்டிட்டு போற வீட்ல, என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கான்னு என்னைத்தான பேசுவாங்க. வரட்டும் இன்னைக்கு… குடுக்குற குடுல இனி வெளியவே போகக் கூடாது..” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் மங்கை.
“இப்ப எதுக்கு இப்படி பேசிட்டே இருக்குறவ..?” என்றபடி வந்தார் ராஜாங்கம்.
அவரைக் கண்டவுடன் மங்கையின் பேச்சு அப்படியே நின்றது. அவரைக் கண்டால் அவர் மனைவி மங்கை மட்டுமில்லை, பிள்ளைகளும் பயந்து நடுங்குவர். அவருக்கு கோபம் வந்தால் என்ன செய்வார் என்று அவருக்குத் தெரியாது. அடி வெளுத்து விடுவார்.
“அது வந்து ஒன்னுமில்லங்க.. சும்மாதான் பிள்ளைகளைத் திட்டுகிட்டு இருந்தேன்..!” என்றார் மங்கை.
“பிள்ளைகளைத் திட்டிட்டு இருந்தேன்னு சொல்ற..? ஒருத்தரையும் காணோம்..?” என்றார்.
“கயலு உள்ளதாங்க இருக்கா..! உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா..?” என்றார் பேச்சை மாற்றும் பொருட்டு.
“இதோ எடுத்து வைக்கிறேங்க..” என்று மங்கை உள்ளே செல்ல, கயல்விழி பயத்துடன் அமர்ந்திருந்தாள். செல்வியும், மாறனும் இந்த நேரத்திற்கு வந்து விட கூடாதே என்ற பரிதவிப்பு அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவளின் தவிப்பு தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியாமல் போனது. சரியாக அவர் சாப்பாட்டில் கைவைக்கும் நேரம் பார்த்து வந்தனர், செல்வியும், மாறனும்.
“அக்கா…! அப்பா வந்துட்டார் போல..” என்றான் மாறன்.
“என்னடா சொல்ற..?”
“ஆமாக்கா.. பாரு அவர் செருப்பு வெளிய கிடக்கு..” என்றான் மாறன்.
“இப்ப அதுக்கு என்னடா..? வா போகலாம்..” என்று அவள் உள்ளே செல்ல முற்பட,
“அக்கா, வேண்டாம். அவர் போன பின்னாடி வரலாம். இல்லைன்னா அடி வெளுத்திடுவாரு..!” என்றான் மாறன்.
“நீ ஏண்டா இப்படி பயப்படுற. அவர் நமக்கு அப்பா, எதோ.. சிங்கம் புலியைப் பார்த்து பயப்படுற மாதிரி பயப்படுற..?” என்றவள் அவனை வம்பாய் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் அமைதியாக உள்ளே செல்ல முற்பட்டனர். ராஜாங்கம் அவர்களை பார்த்து விடக் கூடாது என்று, மங்கை வேண்டாத சாமி எல்லாம் வேண்டிக் கொண்டிருக்க, செல்விக்கு அந்த பயமெல்லாம் இல்லாமல், உள்ளே சென்று கொண்டிருந்தாள்.
அப்படியே நின்றாள் செல்வி. மாறனோ பயத்தில் உள்ளே ஓடிவிட்டான். அவர்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,
“எங்க போயிட்டு வர.. உன்னை வீட்டை விட்டு வெளிய போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா..?” என்றார் சாப்பிட்டுக் கொண்டே.
“எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளயே இருக்க முடியும். நான் ஒன்னும் கைதி கிடையாது..” என்றாள்.
“நானும் அப்படி சொல்லலை செல்வி. ஆனா, வயசுப் பொண்ணு இப்படி வாய்க்கா, வரப்புன்னு சுத்திட்டு இருந்தா, பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க..?” என்றார்.
“என்ன நினைப்பாங்க..? பொண்ணு சந்தோஷமா இருக்குன்னு நினைப்பாங்க. வேற என்ன நினைப்பாங்க..? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க..?” என்றாள் கோபமாக.
அவர் பொறுமையாக பல்லைக் கடிப்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. செல்வியிடத்தில் அவர் காட்டும் அதீத கோபம், பல்லைக் கடிப்பது மட்டுமே. ஏனென்றால் அவருக்கு அவள் செல்ல மகள். ஆனால் செல்விக்கு அவர் செல்ல அப்பா இல்லை. சொல்லப் போனால் இதுவரை அவரை அவள் அப்பா என்றே அழைத்ததில்லை. அப்படி ஒரு வார்த்தையை அவள் வாயிலிருந்து கேட்க, அவரும் வருடக் கணக்கில் காத்திருக்கிறார். செல்வி அந்த நல்ல காரியத்தை இது வரைக்கும் செய்யவேயில்லை.
ராஜாங்கம் எதுவும் பேசாமல் மங்கையை முறைக்க, அவருக்கோ உள்ளே பயம் மூண்டது.
“செல்வி.. நீ எதுவும் பேச வேண்டாம். பேசாம உள்ள போ ..!” என்றார் மங்கை.
“இருமா, உன்னை கட்டிகிட்டவர் என்கிட்டே பேசிட்டு இருக்கார்ல..! பதில் சொல்லாம போனா, அது மரியாதையா இருக்காது..!” என்ற செல்வி, ராஜாங்கத்தையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவளுக்கு நான் புருஷன்னு நீ சொல்லி அவளுக்குத் தெரியவேண்டாம் செல்வி. உனக்கு நான் அப்பான்ற எண்ணம் உனக்கு மனசுல இருந்தா போதும்..!” என்றார் ராஜாங்கம்.
“அது என்ன தேவைக்கு..? எனக்கு எங்க அம்மாவே போதும். இந்த ஜென்மத்துல ‘அப்பா’ அப்படிங்கிற வார்த்தை என் வாயிலிருந்து வரவே வராது. அதுக்காக யாரும் கனவு காண வேண்டாம்..!” என்றாள் கோபமாக.
“என்ன பேச்சு பேசிட்டு இருக்க செல்வி..” என்ற மங்கை அவளைப் போட்டு அடிக்க ஆரம்பிக்க,
“சும்மா நிறுத்துமா..! உனக்கு உன்னோட புருஷன் உசத்தியா இருக்கலாம். ஆனா, தேவைக்கு உன்னையும், பெருமைக்கு எங்களையும் பெத்துகிட்ட இவரை நான் எப்பவும் அப்பான்னு சொல்லவே மாட்டேன்..!” என்றாள் உறுதியாக.
“நீ சொல்லவே வேண்டாம். ஆனா, இனி வெளிய ஊர் சுத்துறதை பார்த்தேன்… தொலைச்சுப் புடுவேன்..!” என்றார் ராஜாங்கம். செல்வி அதை காதிலேயே வாங்காமல் உள்ளே சென்று விட்டாள்.
“பொண்ணை நல்லா வளர்த்து வச்சிருக்க.. இப்படியே ஊர் சுத்திட்டு இருந்தா, பார்க்குறவன் எல்லாம் பொண்ணு கேட்டு வருவான். அப்பறம் அதுக்கும் உன் பொண்ணு என்னைத்தான் பேசுவா, சொல்லி வச்சுக்க…” என்றவர் கிளம்ப ஆயத்தமாக, அப்போது தான் மாறனுக்கும், கயல்விழிக்கும் மூச்சே வந்தது.
“நல்லவேளை கயல் அக்கா..! இன்னைக்கு அப்பா ரொம்ப கோபப்படலை. இல்லைன்னா, இன்னைக்கு நான் தான் சிக்கியிருப்பேன்..!” என்றான் மாறன்.
“இவ்வளவு நேரம் எங்கடா போனிங்க ரெண்டு பேரும்..? அம்மா செம்ம கோவத்துல இருந்துச்சு. இன்னைக்கு அப்பா வந்துட்டதால, செல்வி அடியில இருந்து தப்பிச்சா..!” என்றாள் கயல்.
“கூட்டாஞ் சோறு ஆக்கப் போனோம் கயல். அங்க என்னடான்னா.. அந்த கதிர் மாமாகிட்ட மாட்டிகிட்டோம். அப்பறம் அவங்க வீட்டுக்குப் போனோம்..” என்று மாறன் நடந்ததை சொல்ல,
“அடப்பாவிங்களா.? என்னை மட்டும் விட்டுட்டு நீங்க மாட்டும் சாப்பிட்டு வந்துட்டிங்க..” என்ற கயல் முறைக்க,
“நீங்க கோழி குழம்பு வைக்க போறிங்கன்னு சொல்லவே இல்லையே..?” என்றாள் அவள் ஆதங்கத்துடன்.
“நாங்களும் அந்த பிளான்ல போகலை. போற வழியில அந்த கதிர் வீட்டுக் கோழி நிறையா சுத்திட்டு இருந்ததா. அதான் ஒன்னைப் பிடிச்சு அமுக்கிட்டோம்..!” என்றாள் செல்வி.
“என்ன இருந்தாலும், என்னைய விட்டுட்டு சாப்பிட்டிங்க தான..” என்று கயல் குறைபட,
“அடிப் போடி..! எல்லாத்தையும் அந்த மாட்டுக்கார வேலன் தான் தின்னான்..!” என்று செல்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜாங்கம் கிளம்புவது அவர் அவர் வண்டி சத்தத்தில் இருந்து கேட்டது.
அவர் கிளம்பியது தான் தாமதம், வேகமாக வந்த மங்கை… செல்வியை அடி வெளுக்கத் தொடங்கிவிட்டார்.
“அம்மா விடும்மா.. விடும்மா.. நான் என்னம்மா பண்ணேன்..!” என்று செல்வி தவ்விக் கொண்டிருக்க,
“அந்த மனுஷனைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்குடி. அவரும் நீயும் அப்பான்னு கூப்பிடுவ, கூப்புடவன்னு எவ்வளவு எதிர்பார்க்குறார். அப்படி என்னடி பிடிவாதம் உனக்கு..?” என்றார் மங்கை.
“அம்மா.. எப்பவும் நான் சொல்றது தான். அவர் உனக்கு வேண்ணா புருஷனா இருக்கலாம். ஆனா, என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் மனுஷனே கிடையாது. சரியான சுயநலவாதி..” என்று அப்போதும் அவள் வெறுப்பைக் கக்க, ஓய்ந்து போனார் மங்கை. அப்படியே ஓய்ந்து அமர்ந்தவர், கண்ணீர் விட ஆரம்பித்தார்.
“இப்ப எதுக்கும்மா இப்படி கண்ணீர் விடுறிங்க..? கட்டின புருஷன் அவர் அப்படிப் ஒரு காரியத்தை செஞ்சப்போ, நீ இப்படி அடிச்சிருக்கணும். அதை விட்டுட்டு இப்போ என்னை அடிச்சு என்ன பிரயோஜனம்.. எதுக்கு இப்படி அடிக்கணும்..? அப்பறம் எதுக்கு இப்படி கண்ணீர் விடணும்..?” என்றாள் செல்வி.
அவள் கேட்பதும் சரிதானே..? பேச வேண்டிய நேரத்தில் மங்கை பேசாமல் இருந்ததால் வந்த இழப்பு தான் எவ்வளவு? இப்போது வரை மனதிற்குள் மறுகிக் கொண்டிருக்கிறாரே..? ஆனால் அதையெல்லாம் அவரால் வெளியே சொல்லிவிட முடியுமா என்ன..?
மங்கையின் உடன் பிறந்த அக்கா, சாந்தாவின் கணவன் தான் ராஜாங்கம். சாந்தாவிற்கு மாதவன், அமுதா என்ற இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கு சிறு வயதாக இருக்கும் போதே, சாந்தாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமடைய, பிழைக்க வழியே இல்லை என்று சொல்லி விட்டனர். வேறு வழியில்லாமல், மங்கையின் பெற்றோர் அவரை ராஜாங்கத்திற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர், சாந்தாவின் வற்புறுத்தலின் பேரில்.
அக்காவின் கணவனுக்கே வாக்கப்பட்ட மங்கை, உடல்நலம் சரியில்லாத சாந்தாவையும் பார்த்துக் கொண்டு, மாதவன்,அமுதாவையும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் மங்கையும் கர்ப்பம் தரிக்க, முதலாவதாக பிறந்தாள் செல்வி. இனி பிழைக்கவே மாட்டார் என்று நினைத்திருந்த சாந்தாவின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேற ஆரம்பித்தது. அவர் உடல் சரியாகிக் கொண்டிருந்த அதே வேளையில் மங்கையும் அடுத்தடுத்து, கயலையும், மாறனையும் பெற்றெடுத்தார்.உடல்நலம் தேறி குணமடைந்த சாந்தாவிற்கு, கணவனின் மனைவியாக அருகில் தங்கையை பார்க்க முடியவில்லை. தன்னுடைய இடம் அது என்ற எண்ணம் அவருடைய மனதில் வேரூன்ற, கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனையை ஆரம்பித்தார். ராஜாங்கம் யார் பக்கம் பேசுவது என்று புரியாமல், ஒரு கட்டத்தில் அதிகம் கோபப்பட ஆரம்பித்தார். அதுநாள் வரை அக்காவின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல் வளர்த்து வந்த மங்கையை, மாதவனும், அமுதாவும் வெறுக்கத் தொடங்கினர். அதிலும் வெள்ளையாக கொழுகொழுவென்று இருக்கும் செல்வியை கண்டாலே அவர்களுக்கு ஆகாது. ஆனால் ராஜாங்கத்திற்கு செல்வி என்றால் அவ்வளவு பிரியம். அவர்கள் இவர்கள் மேல் வெறுப்பைக் காட்ட, செல்வி தந்தையின் மேல் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தாள். அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருந்தவள் ஒரு கட்டத்தில் மொத்தமாக விலகிப் போனாள். அதற்கு காரணமும் சாந்தா தான்.
சாந்தாவின் பேச்சுக்களை பொறுக்காமல், அவரின் அம்மா அவரை சத்தப் போட ஆரம்பித்தார்.
“நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சாந்தா. உனக்கு முடியாது, பிள்ளைகளை எப்படி வளர்க்குறதுன்னு நீதான் மங்கையை உன் புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு எங்க கிட்ட பிடிவாதம் பிடிச்ச. நாங்களும் வேற வழியில்லாம மங்கையை கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ உனக்கு உடம்பு சரியாகிடுச்சு அப்படிங்கிறதுக்காக மங்கையை இப்படி வெறுக்குறதில் நியாயம் இல்லை சாந்தா..” என்றார்.
“அம்மா..! நான், அவளை கல்யாணம் தான் பண்ணிக்க சொன்னேன். வரிசையா இத்தனைப் பிள்ளைங்களைப் பெத்துக்க சொல்லலை. அவ, என் பிள்ளைகளை மட்டும் பார்த்துக்கணும்ன்னு தான் சொன்னேன். இப்படி அவளையும் பிள்ளைப் பெத்துக்க சொல்லலை…” என்றார் சாந்தா மனசாட்சியே இல்லாமல்.
“அதுக்கு நீ ஒரு வேலைக்காரியை தான் வச்சிருக்கணும். மங்கைக்கும் வாழ்க்கை இருக்கு. அவ எத்தனை பிள்ளை பெத்தாலும் மாதவனையும், அமுதாவையும் அவளோட பிள்ளையாத்தான் நினச்சிட்டு இருக்கா. உனக்கு உடம்பு நல்லாகிடும்ன்னு தெரிஞ்சிருந்தா, மங்கை வாழ்க்கையை இப்படிக் கெடுத்திருக்க மாட்டோம்..!” என்று அழுது புலம்பினார் அவர்.
“அம்மா..! நீங்க என்ன சொன்னாலும் என்னால என் புருஷனை விட முடியாது. இனி மங்கையும் இங்க இருக்கக் கூடாது..!” என்று சாந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரை அறைந்திருந்தார் ராஜாங்கம்.
“இத்தனை வருஷம் உடம்பு சரியில்லாம இருந்தவங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். நன்றி கெட்டவளே… மங்கை இல்லைன்னா, இந்நேரம் நீ உயிரோட இருந்திருப்பியா..? அவ உன் தங்கச்சி தானே..? இப்படி பேச உனக்கு எப்படி மனசு வந்தது..?” என்றார் ராஜாங்கம்.
“தங்கச்சியாவே இருந்தாலும், புருஷனை எப்படி பங்கு போட முடியும்..?” என்றார் சாந்தா.
“இதை அவளை எனக்குக் கட்டி வைக்கும் போதே, நீ யோசிச்சு இருக்கணும். அப்போ மங்கை உனக்கு கடவுளா தெரிஞ்சா. இப்போ இடைஞ்சலா தெரியறாளா..?” என்றார் ராஜாங்கம்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மங்கை இங்க இருக்கக் கூடாது. இல்லைன்னா நான் மாதவனுக்கும், அமுதாவுக்கும் அரளிக்காயை அரைச்சு குடுத்துட்டு, நானும் குடிச்சுடுவேன்..!” என்றார் சாந்தா.
“என்ன மிரட்டுறியா..?” என்றார் ராஜாங்கம்.
“மிரட்டல் எல்லாம் இல்லை. கண்டிப்பா நான் செய்வேன். நானும் என் பிள்ளைகளும் செத்த பிறகு, அவளோட நீங்க சந்தோஷமா இருங்க..” என்று சாந்தா பேசிக் கொண்டிருக்கும் போதே,
“நாங்க இனி இங்க இருக்க மாட்டோம்க்கா..!” என்றார் மங்கை.
“என்ன பேசுற மங்கை..? உனக்கு அறிவு இருக்கா இல்லையா..?” என்று ராஜாங்கம் கேட்க,
“மாதவனும், அமுதாவும் என் பிள்ளைகள் தான். அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது..!” என்று சாந்தாவைப் பார்க்க, அவர் முகத்தில் சிரிப்பு இருந்தது.
“அதுக்காக, என்னோட பிள்ளைங்க உரிமையை நான் பறிக்க முடியாது. நானும் என் பிள்ளைங்களும் வேற வீட்டுக்குப் போயிடுறோம்..” என்றார் மங்கை.
“அதெல்லாம் முடியாது. என் புருஷன் எனக்கே வேணும்..!” என்றார் சாந்தா.
“அவர் எனக்கும் புருஷன் தான்க்கா. எல்லா விஷயத்துலயும் ஏமாந்த மாதிரி இனியும் நான் ஏமாறத் தயாரா இல்லை. நாங்க அந்த வீட்டுக்குப் போறோம்..!” என்று மங்கை சொல்ல, மங்கையின் சேலைக்குப் பின்னால் இருந்த செல்வி ராஜாங்கத்தையும், சாந்தாவையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அன்றிலிருந்து இன்று வரை, அவருக்கு இரண்டு குடும்பம் என்றானது. இரண்டு வீட்டிற்கும் மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருப்பார் ராஜாங்கம். சாந்தாவிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் மங்கையிடம் தான் கொட்டுவார் அவர். அவருடைய குணத்தை மங்கை புரிந்து கொண்டதாலோ என்னவோ, மங்கை அவர் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார். ஆனால், பிள்ளைகளும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்த அந்த இடத்தில் தான் சறுக்கினார் மங்கை.
மங்கை அந்த வீட்டில் இருந்து வந்தது, அவரின் உரிமையையே விட்டுக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டாள் செல்வி. இப்படி ராஜாங்கம் அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கு வந்து செல்வதை அடியோடு வெறுத்தாள்.
“நீ அவருக்குப் பொண்டாட்டியா..? இல்லை வப்பாட்டியா..?” என்று மங்கையிடம் கேட்டு, மங்கையின் கை வலிக்கும் அளவிற்கு அடி வாங்கியிருக்கிறாள் செல்வி. பிறந்தது கிராமமாக இருந்தாலும், துணிச்சலும், அறிவும் கொஞ்சம் அதிகமாவே இருந்தது செல்விக்கு.