நிழல் 4:
அங்கே அன்பு தங்களை முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இசைக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
‘ஒருவேளை இவனைப் பத்தி பேசினதை கேட்டிருப்பானோ..?’ என்று இசை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க,
“ரோகினி..! இங்க என்ன பிரச்சனை..?” என்றான் அன்பு, எதையும் வார்த்தையில் காட்டாமல்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அன்பு சார்..!” என்ற ரோகினி, இசையைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தாள். அதில் அவளையும் அப்படியே சொல்லு என்கிற சங்கதி நிறைந்திருந்தது. ஆனால், அதையெல்லாம் கவனித்து சரி செய்துவிட்டால் அவள் இசை இல்லையே..!
இசை எதுவும் சொல்லாமல் அப்படியே நின்றிருக்க,
“என்னோடது தம்மாத்துண்டு கம்பெனி தான். ஆனா, இதை இந்த அளவுக்கு உருவாக்குறதுக்கு என்ன கஷ்ட்டப் பட்டேன்னு எனக்குத் தான் தெரியும். உங்களை இந்த சின்ன கம்பெனியில் தான் வேலை பார்க்கணும்ன்னு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தலை. இப்ப கிளம்புறதுன்னா கூட நீங்க கிளம்பிக்கலாம்..!” என்றான் அன்பு, கொஞ்சம் கோபம் கலந்த குரலில்.
“சாரி சார்..! நான் அப்படி பேசியிருக்க கூடாது தான். ஏதோ கோபத்துல தெரியாம சொல்லிட்டேன். மத்தவங்களோட உழைப்பை நான் எப்பவும் சாதாரணமா எடை போட்டதில்லை..!” என்றாள் இசை வருந்தும் குரலில்.
அவள் அப்படி பட்டென்று மன்னிப்புக் கேட்கவும், அன்பின் கோபம் அப்படியே குறைந்து போனது.
“இப்ப சொல்லுங்க..? என்ன பிரச்சனை..?” என்றான்.
“அது வந்து சார்..! நம்ம இசை இருக்குற வீட்டு ஓனர், வீட்டை உடனே காலி பண்ண சொல்றார். அவசரமா வேற நல்ல வீடு எதுவும் கிடைக்கலை.அதான் உங்க கிட்ட கேட்க சொன்னேன்..” என்று தயங்கி நிறுத்தினாள் ரோகிணி.
“இதுக்காகத்தான் லீவ் கேட்டிங்களா இசை. இதை நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாமே..?” என்ற அன்பு, சிறிது யோசனைக்கு பின்,
“இன்னும் ஒரு வாரத்துல எங்க வீட்ல ஒரு வீடு காலியாகுது.இன்னும் ஒன் வீக் உங்க ஹவுஸ் ஓனர்கிட்ட டைம் கேளுங்க. வீட்டை வந்து பாருங்க..! உங்களுக்குப் பிடிச்சிருந்தா, மத்ததைப் பேசிக்கலாம்..!” என்றான் அன்பு.
பேசும் போது, அவன் பக்கா பிஸ்னஸ்மேன் போல் பேச, இசைக்கு ஒரு மாதிரியாகிப் போனது. ரோகிணியும் அப்படியே நினைத்தாள்.
“ஓகே சார்..! நான் வீட்டைப் பார்த்துட்டு, வாடகை எல்லாம் பேசிக்கிறேன்..!” என்றாள் இசை.
“அப்போ நாளைக்கு நீங்க ஆபீஸ் வருவிங்க தானே..?” என்றான் அன்பு சிரிப்புடன்.
“கண்டிப்பா சார்..!” என்றாள் இசை. ஏதோ ஒரு பெரிய பிரச்சனை முடிந்ததைப் போல் இருந்தது இசைக்கு. அது அவளின் முகத்திலும் தெரிய, ஏனோ அவளின் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதி, அன்புவை ஒருவாறு அமைதிப் படுத்தியிருந்தது.
இசை அவனின் அலுவலகத்தில் சேர்ந்ததில் இருந்து, அவனும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். யாரிடமும் அநாவசியமாக எந்த பேச்சும் வைத்துக் கொள்ள மாட்டாள். அதே சமயம் அவளுக்குத் தேவையானதை ஒரு நிமிர்வுடன் கேட்பாள். எதற்கும் கெஞ்சிக் கொண்டு நிற்க மாட்டாள். அவளின் நிமிர்வே அவளுக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. குடோனில் வேலை செய்யும் நிறைய பேருக்கு, இசையைக் கண்டால் ஆகாது. அவள் கண்டிப்பு தான் அதற்கு காரணம். அன்பு இருந்தால் ஒரு வேலை, அவன் இல்லை என்றால் ஒருவேலை என்று செய்து கொண்டிருந்தவர்களுக்கு இசையின் கண்டிப்பு வேப்பங்காயாய் கசந்தது என்றே கூறலாம். மொத்தத்தில் தனக்கடுத்து அவளை மிகவும் நம்பினான் அன்பு செழியன்.
மறுநாள் ஹெல்த் டிப்பார்மென்ட்டை சேர்ந்தவர்கள் அவர்களுடைய அலுவலகம் மற்றும் குடோனிற்கு, செக்கிங் வருவதாக இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த அன்புவிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. அனைத்தையும் முடித்துவிட்டு அவன் வீடு செல்ல இரவு வெகு நேரமாகியிருந்தது.
“என்ன அன்பு இவ்வளவு நேரம்..?” என்றார் காதம்பரி.
“நாளைக்கு செக்கிங் இருக்கும்மா.. அதான் எல்லா வேலையும் முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு. மார்னிங் சீக்கிரம் போகணும்..” என்றவாறு சாப்பிட அமர்ந்தான்.
“அந்த சிவா வந்து வேலையில சேர்ந்துட்டான் போல. வந்தவன் நேரா இங்க தான் வந்தேன். ரொம்ப சந்தோஷமா நன்றி சொல்லிட்டு போனான் அன்பு..” என்றார் காதம்பரி.
“நம்பிக்கையான இடத்துல, நம்பிக்கையான வேலை கிடைச்ச சந்தோஷம்மா அவனுக்கு. பாவம் அந்த பொண்ணு கங்கா. இப்பவாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்..!” என்றான் அன்பு.
“நீ என்ன சொல்லு அன்பு. அவங்க இப்படி வீட்டுக்குத் தெரியாம ஓடி வந்து கல்யாணம் பண்ணது தப்புத்தானே..! நீ இங்க வீடு கொடுத்தது கூட எனக்கு சரியா படலை..” என்றார் காதம்பரி.
“ம்மா..! எந்த காலத்துல இருக்கீங்க..? அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. வீட்ல சொல்லியிருக்காங்க. அவங்களே இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சிருந்தா, இவங்க ஏன் இப்படி வந்து கல்யாணம் பண்ண போறாங்க..?” என்றான் அன்பு.
“ரெண்டு பெரும் வேற வேற கேஸ்ட் போல அன்பு..” என்றார்.
“இருந்துட்டு போகட்டுமே..? காதல் ஜாதி பார்த்தா வரும்..?” என்றவன், சாப்பிட்டு முடித்து எந்திரிக்க,
“உனக்குப் பொண்ணுப் பார்க்க போகணும் அன்பு..” என்றார் காதம்பரி.
“அம்மா, இப்பவும் சொல்றேன்.. நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லலை. ஆனா, என்னோட பிஸ்னஸ்ல இன்னும் நான் பேர் வாங்கணும். என்னோட பிராண்ட் எல்லா நாட்டுக்கும் போகணும். அதுக்கப்பறம் தான் கல்யாணம், கச்சேரி எல்லாம்..” என்றான் அன்பு.
“இதையெல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டும் பண்ணலாம் அன்பு..” என்றார் காதம்பரி.
“அது தோதுப்படாதும்மா..! மனைவியா வரப் போற பொண்ணுக்கு, அவளுக்கு உண்டான ஸ்பேஸ நான் குடுக்கணும். அப்போ பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு நான் அலைஞ்சுகிட்டே இருந்தா, பர்சனல் லைப் பாதிக்கப்படும்ம்மா..! அதுக்கு நானே வழி வச்சுக்க மாட்டேன். இன்னும் கொஞ்ச நாள்.. புது ஆபீஸ் பில்டிங் வேலை முடியட்டும். அதுக்கப்பறம் பார்ப்போம்..!” என்றான் அன்பு.
“என்னவோ அன்பு..! உனக்கும் வயசாகுது.. பார்த்துக்கப்பா..” என்று காதம்பரி சொல்ல,
“ஆங்..அம்மா சொல்ல மறந்துட்டேன் பாருங்க… அடுத்த வாரம், காலியாகுற வீட்டுக்கு, நம்ம ஆபீஸ் ஸ்டாப் ஒருத்தவங்க குடி வருவாங்க. எப்படியும் நாளைக்கு வீட்டைப் பார்க்க வருவாங்க..!” என்றான்.
“நாளைக்கு வேண்டாம் அன்பு. குடியிருக்கும் போது போய் வீட்டைக் காட்டினா, அவங்களுக்கும் சங்கடம், பார்க்க வரவங்களுக்கும் சங்கடம்..!” என்றார் காதம்பரி.
“அப்ப ஓகே.. நான் அவங்ககிட்ட சொல்லிடுறேன்..!” என்றான்.
“ஆமா, யாருன்னு சொல்லவே இல்லை. அவங்க பேமிலியில எத்தனை பேர்..?” என்றார்.
“இங்க குடியிருக்கிற ரோகிணியோட பிரண்ட் இசை தாம்மா..அவங்ககிட்ட கேட்டுக்கோங்க, எத்தனை பேர்ன்னு. நான் கேட்டா சரியா இருக்காது..!” என்றான் அன்பு.
“சரி அன்பு..! நான் ரோகிணிகிட்டையே கேட்டுக்கிறேன்..” என்றவர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனார். அவரிடம் சொல்லிவிட்டு அறைக்குள் வந்த அன்புவின் எண்ண இடுக்குகளில் வந்து நின்றாள் இசை.
ஏனோ இப்போது இசையின் நினைவுகள் அவனுக்கு அதிகமாய் வருகிறது. எல்லோரிடமும் சரியாக இருக்கும் அன்பு, அவளிடம் மட்டும் ஏதோ சறுக்குவதைப் போல் உணர்ந்தான். எதற்கும் இளகாத மனம், அவளைக் கண்டால் மட்டும் மெழுகாய் கரைவதைப் போல் உணர்ந்தான். அது காதலா என்பது எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அன்புவின் மனதில் இசைக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. அழகில் மயங்கும் வயசெல்லாம் இல்லை அவனுக்கு. ஆனால் அவளின் அழகும் அவனை ஒரு விதத்தில் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் போல் அதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான் அன்பு செழியன்.
‘எப்படியும் அவ குடும்பம் இங்க வருவாங்க தானே அன்பு. பிடிச்சிருந்தா பேசாம போய் பொண்ணுக் கேட்டிடேன்…’ என்றது அவனின் உள்மனம்.
“பார்ப்போம்..! எதுவும் உறுதியாகலை. இசை தான் எனக்குன்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்..? ஆனா, இந்த அன்பு அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் கவுந்திட மாட்டான்.” என்று தனக்குத் தானே பதில் சொல்லிக் கொண்டான் அன்பு. எல்லாம் மறுநாள் அவளை கம்பெனியில், இளம் பச்சை வண்ண காட்டன் புடவையில் தேவதையாக பார்க்கும் வரை மட்டுமே.
அவன் மறுநாள் சீக்கிரம் கிளம்பி சென்றிருக்க, இசையும் அன்று சீக்கிரமாகவே வந்திருந்தாள்.
“பரவாயில்லை இசை.. நீங்க சீக்கிரம் வந்ததும் ஒரு விதத்துல நல்லது தான்..!” என்றவன், அவளுக்கான வேலைகளை பிரித்துக் கொடுக்க, அவளும் அவன் சொன்ன அனைத்தையும் பம்பரமாக செய்து கொண்டிருந்தாள். பச்சை வண்ண காட்டன் புடவையில், அவள் அழகு மேலும் மெருகேறியிருந்தது. எப்போதும் கொண்டையில் இருக்கும் அவள் கூந்தல் அன்று இடை வரை நீண்டிருக்க, அவள் மேல் வைத்த கண்ணை அவனால் எடுக்கவே முடியவில்லை. அப்படி ஒரு அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அதற்கும் அவள் ஆடம்பரமாக எதையும் அணியவில்லை. அதற்கே அவள் அப்படியிருந்தாள்.
“என்ன இசை..? இன்னைக்கு செம்மையா இருக்க…! இத்தனை நாள் இவ்வளவு அழகையும் எங்க ஒளிச்சு வச்சிருந்த..?” என்றாள் ரோகிணி.
“அப்போ, இத்தனை நாள் நான் என்ன கன்றாவியாவா இருந்தேன்…?” என்றாள் இசை.
“அம்மா தாயே..? தெரியாம சொல்லிட்டேன். இன்னைக்கு அழகா இருக்கேன்னு சொன்னது ஒரு குத்தமா..?” என்றாள் ரோகிணி.
“கண்டிப்பா சாமி குத்தம் தான். அதுக்கு பனிஷ்மென்ட்டா, இனி தினமும் என்னை அழகா இருக்கேன்னு சொல்லணும். ஓகே வா..!” என்றாள் இசை.
“இன்னைக்கு நீ அழகா மட்டுமில்லை இசை. கொஞ்சம் சந்தோஷமாவும் தெரியற.. அதான் உன் முகத்தை பளிச்சுன்னு காட்டுது..” என்றாள்.
“அப்படியா..? இருக்கலாம்..” என்றாள்.
“என்னன்னு சொன்னா, நாங்களும் சேர்ந்து சந்தோஷப்படுவோம்..” என்றாள் ரோகினி.
“அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. அப்பறமா சொல்றேன்..” என்றாள் இசை.
“அதுவரைக்கும் தாங்காது. இப்பவே சொல்லிடேன்..”
“அதெல்லாம் முடியாது. நிறைய வேலை இருக்கு. சோ, கண்டிப்பா அப்பறம் சொல்றேன். இல்லைன்னா, நீ மறந்த விஷயத்தை யோசிச்சு பாரு. அதான்..!” என்றவள், அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
“நான் என்ன மறந்தேன்..?” என்ற ரோகிணி யோசித்துக் கொண்டு நிற்க,
“ரோகினி, சார் உன்னை பேக்கிங் செக்சன் போக சொல்றார்..” என்று ஒருவர் வந்து சொல்ல, அப்போதைக்கு இசை சொன்ன விஷயத்தை மறந்து வேலையைப் பார்க்க சென்றாள் ரோகிணி. ரோகிணிக்கு திருமணம் முடிந்து, கணவர் துபாயில் இருக்க, இவள் இங்கே பெற்றோருடன் வசிக்கிறாள்.
அன்று மாலை வரை அவர்களுக்கு வேலை இருந்தது. ஹெல்த் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து வந்தவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அன்பு அசராமல் பதில் சொன்னான். அவர்கள் தயாரிக்கும் ஊறுகாய்க்கான தரம், அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள், அந்த இடம், பொருட்களின் தரம் என அனைத்தையும் ஆராய்ந்தனர். பொதுவாக வளர்ந்து வரும் உணவு கம்பெனிகள் சந்திக்க வேண்டிய சவால்களில் இதுவும் ஒன்று. என்னதான் தரமாக, சுத்தமாக பார்த்து பார்த்து செய்தாலும், வளர்ந்து கொண்டிருக்கும் கம்பெனியை நோக்கித் தான் அவர்களின் பார்வை இருக்கும். வளர்ந்த கம்பெனிகள் கொடுக்கும் நெருக்கடியாகக் கூட இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் அசராமல் சமாளித்தான் அன்பு.
அவன் அவர்களிடம் பேசும்போது தான் தெரிந்தது, அவனுக்கு இந்த தொழிலில் இருந்த ஈடுபாடும், ஆர்வமும். அவன் இதை தொழிலாக மட்டும் நினைத்து செய்யவில்லை என்பது அன்பின் பேச்சில் இருந்தே கண்டு கொண்டாள் இசை. இதில் அவனுக்கு இருந்த அறிவைக் கண்டு, உள்ளுக்குள் வியந்து போனாள் இசை. இதெல்லாம் ஒரே நாளில் வரக் கூடிய விஷயம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இந்த ஊறுகாய் தொழிலை அவன் தேர்ந்தெடுத்த காரணம் தான் இன்னமும் புரியாத புதிராய் இருந்தது அவளுக்கு.
வந்தவர்கள் சென்ற பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டான் அன்பு செழியன். மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வந்தவர்கள், நெகட்டிவாக எதையும் சொல்லாமல் சென்றதே, அவனுடைய வெற்றியாய் பார்த்தான் அன்பு. அவர்கள் சொல்லவில்லை என்பதை விட, அவன் சொல்ல விடவில்லை என்பதே உண்மை.
“என்ன சார்..? ரொம்ப சோர்வா தெரியறிங்க..?” என்றாள் இசை.
“இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு இசை. எல்லாருக்கும் ஒரு டீ சொல்லுங்களேன்..” என்றான் அன்பு.
“என்ன அன்பு சார்..? ஒரு டீயோட முடிக்கப் பார்க்குறிங்களே..?” என்றாள் ரோகிணி.
“சந்தோஷமா இருக்கேன்றதுக்காக காசை செலவு பண்ண முடியாது ரோகிணி..” என்றான் அன்பு.
‘இவன் ஒரு கஞ்சப் பிஸ்நாரின்னு தெரிஞ்சும் இவன்கிட்ட கேட்ட என்னை சொல்லணும்..?’ என்று அருகில் இருந்த இசையிடம் முனுமுனுத்தாள்.
“நியாயமானதை நான் எப்பவும் செய்ய தவறுனது இல்லைன்னு நினைக்கறேன். நீங்க என்ன சொல்றிங்க ரோகிணி..?” என்றான் அன்பு.
“உண்மை தான் சார்..!” என்ற ரோகிணி அமைதியாக,
‘இந்த அசிங்கம் உனக்குத் தேவையா..? அவரைப் பத்தித்தான் உனக்கு நல்லாத் தெரியுமே..? அப்பறம் ஏன் வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிற..?” என்றாள் இசை.
“ஆமா, எனக்கு வேண்டுதல் பாரு. இவருதான் கஞ்சன்னா… இவரு அம்மா அதுக்கு மேல கஞ்சம். குடும்பமே இப்படித்தான் போல..” என்றாள் ரோகிணி.
“அப்படியில்லை ரோகி, கஷ்ட்டப்பட்டு உழைக்கிறவங்களுக்கு தான், காசோட அருமை தெரியும்ன்னு சொல்லுவாங்க. அன்பு சார் அந்த வர்க்கத்தை சேர்ந்தவர். இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு பின்னாடியும், அவர் அப்படியே இருக்கார்ன்னு சொன்னா, அவர் எந்த சூழ்நிலையிலும் மாற மாட்டார். அவர்கிட்ட நிலையான குணம் இருக்கும். செய்ற செயல்ல ஒரு நேர்மை இருக்கும்..!” என்றாள் இசை.
“என்ன இசை..? நேர்ல பார்த்த மாதிரியே சொல்ற..?” என்று வியந்தாள் ரோகிணி.
“இதெல்லாம் பொதுவானது. அது அப்படியே அவருக்கும் பொருந்துது. அதைத்தான் நானும் சொல்றேன்..” என்றாள் இசை.
“நீ சொல்றது எல்லாமே உண்மை தான்..! அன்பு சாருக்கு எவ்வளவு கோபம் வரும்ன்னு, நான் ஒரு நாள் காட்டுறேன். இல்லைன்னா, அங்க குடி வந்த பிறகு உனக்கே தெரியும்..” என்றாள் ரோகிணி.
“அதெப்படி தெரியும்..?” என்றாள்.
“ம்ம்ம்.. வாடகையை கொஞ்சம் லேட்டா குடுத்துப் பாரு, அப்போ தெரியும்..!” என்ற ரோகிணி சிரிக்க,
“நாமளும் சரியா இருந்துட்டா, எந்த பிரச்சனையும் இல்லை தானே..!” என்ற இசைக்கு, அவனை நினைத்து கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.
ஒருவாரம் கழித்து, அவனுடைய வீட்டைப் பார்க்க சென்றிருந்தாள் இசை. ரோகிணியும் அங்கு சென்று ஒருவருடம் தான் ஆகியிருந்தது.
“வா இசை..! நடுவுல இருக்குற பெரிய வீடு தான் அன்பு சார் வீடு. சாவி அவங்க கிட்ட தான் இருக்கும்..!” என்ற ரோகிணி அவளை அழைத்துக் கொண்டு போக, காலையிலேயே அவளை எதிர்பார்க்கவில்லை அவர்கள்.
“ஆன்ட்டி..!” என்று ரோகிணி அழைக்க,
“இதோ வரேன்மா..” என்ற குரலுடன் வெளியே வந்தார் காதம்பரி. வந்தவர் அங்கு இசையைப் பார்க்க, யோசனையுடன் நின்றார்.
“ஆன்ட்டி.. இது இசை..!” என்று ரோகிணி சொல்ல,
“ஒரு தடவை பார்த்திருக்கேன் ரோகினி. சட்டுன்னு அடையாளம் தெரியலை. அப்போ பார்த்ததை விட, இப்போ இன்னும் அழகாய்ட்ட மாதிரி இருக்கேம்மா இசை..!” என்றார் காதம்பரி.
“ஆன்ட்டி..! வீட்டைப் பார்த்துட்டு, வாடகை விஷயத்தையும் பேசிட்டு போயிடலாம்ன்னு வந்தேன்..! அன்பு சார் இல்லையா..?” என்றாள் இசை.
“இன்னைக்கு சண்டே தானம்மா. அவன் கொஞ்சம் லேட்டா தான் எழுந்திருப்பான். நான் சாவி எடுத்திட்டு வரேன்..!” என்றவர், அந்த வீட்டின் சாவியை எடுக்க உள்ளே செல்ல,
‘வீட்டுக்குள்ள எல்லாம் கூப்பிட மாட்டாங்களா..?” என்றாள் இசை.
“அவங்க அப்படித்தான் இசை. அனாவசியமா யார்கிட்டயும் வச்சுக்க மாட்டாங்க..! எங்களுக்குப் பழகிப் போய்டுச்சு. உனக்கும் போகப் போகப் பழகிடும்..!” என்றாள் ரோகிணி.
காதம்பரி சாவியைக் கொண்டு வந்து குடுக்க, ரோகிணியுடன் சேர்ந்து வீட்டைப் பார்க்கப் போனாள் இசை. வீடு அவள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும், அளவாக கொஞ்சம் அமைப்புடன் இருந்தது.
“வீடு பிடிச்சிருக்கா இசை..?” என்றாள் ரோகிணி.
“ஓகே தான் ரோகி..! பாத்ரூம் உள்ளேயே இருக்கு. நோ ப்ராப்ளம்..” என்றாள்.
“இங்க பாதி வீட்டுக்கு தான் அட்டாச்சுட் பாத்ரூம். பாதி வீட்டுக்கு பொதுவா ஒரே பாத்ரூம் தான். அதுக்கு வாடகை கம்மி. இதுக்கு வாடகை கொஞ்சம் கூட..” என்றாள் ரோகிணி.
“வாடகை பத்தியெல்லாம் கவலை இல்லை..” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வந்தான் அன்பு. அவனின் பின்னால் காதம்பரியும் வந்தார்.
“வாங்க இசை..! இவ்வளவு காலையில வருவிங்கன்னு நான் எதிர்பார்க்கலை..!” என்றான் அன்பு.
“இன்னைக்கு தான சார் லீவ். அதனால முடிஞ்ச அளவுக்கு இன்னைக்கு செய்ய வேண்டிய எல்லா வேலையும் செஞ்சு முடிச்சுடுவேன்..!” என்றாள் இசை.
“வீடு ஓகேவா..?” என்றான்.
“ஓகே தான் சார்..! வாடகை எவ்வளவுன்னு சொன்னிங்கன்னா..நான் அந்த வீட்டை காலி பண்ணிட்டு வந்திடுவேன்..” என்றாள்.
அன்பு வாடகையை சொல்ல, அது அவளுக்கும் ஓகேவாக இருந்தது. கையோடு கொண்டு வந்திருந்த அட்வான்ஸை அவனிடம் கொடுத்தாள் இசை. மறுநாள் பாலைக் காய்ச்சிவிட்டு, அன்றே குடி வருவதாக சொன்னாள் இசை.
“அதாவது நாளைக்கு லீவ் வேணும்ன்னு சொல்லாம சொல்றிங்க.. இல்லையா இசை..?” என்றான்.
“இதை விட நேரா இனி கேட்க முடியாது சார்..!” என்றாள் இசை.
“காமெடியா..? சிரிப்பே வரலைங்க. வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டு போகலாம்..!” என்றான்.
“பரவாயில்லை சார்..!” என்றாள் இசை.
“ஒரு காபி தான். வாங்க..!” என்ற அன்பு அவளை அழைத்துக் கொண்டு செல்ல, காதம்பரி அவனுக்கு முன்னால் சென்றிருந்தார்.
அவனைத்தொடர்ந்து அவன் வீட்டிற்குள் நுழைந்த இசைக்கு, ஏதோ ஒரு உணர்வு மனதிற்குள் அதை என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.
“என்னாச்சு இசை..?” என்றான்.
“ஒண்ணுமில்லை சார்..!” என்றாள்.
காதம்பரி சூடாக காபியை கொடுக்க,
“தேங்க்ஸ் ஆன்ட்டி..!” என்றவள் அதை ரசித்துக் குடிக்கத் தொடங்கினாள். அவள் குடித்துக் கொண்டிருக்கும் போதே, காதம்பரியின் கண்கள் அவளை முழுதாக எடை போட்டது.
சாதரணமாக ஒரு காட்டன் புடவை அணிந்திருந்தாள். சிரத்தை எடுத்து சீவாத முடிகள் கலைந்து போய் இருந்தது. சரியாக தூங்கவில்லை போல, அவளின் கண்கள் பாதித் தூக்கத்தில் எழுந்தது போல் இருந்தது. வாடிய மலரைப் போல் இருந்தாள் இசை.
அன்புவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
‘என்ன ஆச்சு இவளுக்கு..? ஏன் ஒரு மாதிரி இருக்கா..? முகமே சரியில்லையே..?’ என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான் அன்பு.
“வீட்ல யார் யாரும்மா இருக்கீங்க..?” என்றார் காதம்பரி.
“புரியலை ஆன்ட்டி..!” என்றாள்.
“இல்லம்மா, வீட்ல மொத்தம் எத்தனை பேர்..?” என்றார்.
“அம்மா, அப்பா இல்லை ஆன்ட்டி..! நானும் என் பையனும் தான்..!” என்றாள் பட்டென்று.
“என்னது பையனா..?” என்று அதிர்ந்தது காதம்பரி இல்லை, அன்பு தான். காதில் கேட்டதை அவனால் நம்ப முடியவில்லை.
“ஆமா ஆன்ட்டி..! நானும் என் பையனும் தான். வேற யாருமில்லை..!” என்றாள்.
“உன்னோட வீட்டுக்காரர் எங்கம்மா..?” என்றார் காதம்பரி.
“அவர் வெளிநாட்ல இருக்கார் ஆன்ட்டி..!” என்றாள் இசை.
“அப்படியாம்மா, என் பொண்ணு சங்கீதா கூட அமெரிக்கால தான் இருக்கா. மாப்பிள்ளைக்கு அங்க தான் உத்தியோகம். கைநிறைய சம்பளம்..!” என்று காதம்பரி மகள் பெருமையை பேச ஆரம்பிக்க, அன்பிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
‘கல்யாணம் ஆகி, ஒரு பையனுக்கு அம்மாவா இருக்குற பொண்ணையா இத்தனை நாள் நினைச்சிருக்கேன். அவளைப் பத்தி யோசிச்சதே எவ்வளவு பெரிய தப்பு..!” என்று எண்ணிய அன்பு, தன்னுடைய செயலை எண்ணி, மனதிற்குள் வெட்கிப் போனான்.
“ஓகே.. இசை. நீங்க நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க. நாளைக்கு இங்க ஷிப்ட் ஆகிட்டிங்கன்னா, அடுத்த நாள் ஆபீஸ் வாங்க. இல்லைன்னா ரெண்டு நாள் கூட லீவ் எடுத்துக்கோங்க..!” என்று சொல்ல,
“ஓகே சார்..! அப்போ நான் கிளம்புறேன் சார். கிளம்புறேன் ஆன்ட்டி..!” என்றவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாள். அவள் சென்ற பிறகும் காதம்பரி யோசனையுடன் இருக்க,
“என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றான் அன்பு.
“இல்ல அன்பு..! அந்த பொண்ணு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லுது. ஆனா, கழுத்துல தாலி இல்லையே..?” என்றார் முக்கிய சந்தேகமாக.
“என்னம்மா சொல்றிங்க..? இந்த காலத்துல தாலியை கழட்டி வைக்கிறது எல்லாம் பேஷன் ஆகிடுச்சு. நீங்க சரியா பார்த்திருக்க மாட்டிங்க..” என்றான் அன்பு.
“இல்ல அன்பு..! அந்த பொண்ணைப் பார்த்தா, தாலியை கழட்டி வைக்கிற பொண்ணு மாதிரி தெரியலை. அந்த பொண்ணு எதையோ மறைக்குது. அது மட்டும் தெரியுது..!” என்றார் காதம்பரி.
“அவங்க எப்படி இருந்தா என்னம்மா..? நம்மகிட்ட நல்ல முறையில இருந்தா சரிதான்..!” என்றவன், அதற்கு மேல் அவரைப் பேசவிடவில்லை.
“அதுவும் உண்மைதான் அன்பு..!” என்றவர், அவர் வேலையை கவனிக்க சென்று விட்டார்.
ஆனால் அமைதியாய் இருந்த அன்புவின் மனம் தான், நிலையில்லாமல் தவித்தது, காரணமேயில்லாமல்.
“எப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவைப் போய்..!” என்று தன்னை எண்ணி தானே நொந்து கொண்டான் அன்பு. எப்படி யோசித்தாலும், இசையின் முகம் முன்பை விட அதிகமாய் அவன் முன்னே வந்து நின்றது.
“இதென்னடா புது வியாதியா இருக்கு..!” என்றவன் தலையில் கைவைத்து விட்டான். அவனின் பிரச்சனை அவனுக்கு.