Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-21

உனக்கென இருப்பேன் -21

வினோ உங்க மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணனும் , அதுக்கான பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டேன் .

கீர்த்தி படிப்பு முக்கியம், இன்னும் மூணு மாசம் தானே காலேஜ் இருக்கு . உங்க வீட்டில் சூழ்நிலை சரியில்லை .கீர்த்தியை இங்கே தனியா விட்டுட்டு பாண்டிச்சேரி போகாதே …

இங்கேயே பக்கத்தில் எங்கேயாவது வேலை தேடிக்கோ ! உன்னை மட்டுமே நம்பி வந்த பொண்ணு ….பார்த்துக்கோ ! அஸ்வின் கிளம்பி கடலூர் போய்விட்டான் .



Advertisement

“…………………..”

கீர்த்தி முகம் காணவே பிடிக்கவில்லை பத்மினிக்கு.

ஒன்னும் இல்லாம வெறுங்கையை வீசிக்கிட்டு வந்து நிற்கிறாளே …எப்படியாப்பட்ட இடத்தில என் பிள்ளைக்கு பொண்ணு பார்த்து கட்டியிருப்பேன்  …அவர் புலம்பாத நாளில்லை .

Advertisement

அஸ்வின் ஊர் பக்கமே அதிகம் வருவதில்லை.

Advertisement

வினோ பெரம்பலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை தேடிக் கொண்டான் .

கீர்த்தி கல்லூரிக்கு போகத்  தொடங்கிவிட்டாள்.

அஸ்வின் தான் உருக்குலைந்து போய்விட்டான் .அவனால் மிகப்பெரிய தோல்வியில் இருந்து வெளியில் வர முடியவில்லை .

Advertisement

கீர்த்தி படிக்க போவது மாமியாருக்கு பிடிக்கவில்லை. அவ்வளவு ஏச்சு பேச்சு .

அவள் படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தான் வினோ . தன்னை திருமணம் செய்து அவள் படிப்பு பாழானதாய் இருக்க கூடாது என்ற எண்ணம் அவனுக்கு .  

அடிக்கடி வந்து போகும் நாத்தனார்களின் ஏளனப்பேச்சும் மாமியாரின் குத்தல் மொழிகளும் கீர்த்திக்கு தினமும் கண்ணீரையே பரிசாய் தந்தது.

வினோ எவ்வளவு முயன்றும் தாயையும் சகோதரிகளையும் சமாதானம் செய்ய முடியவில்லை.

அவனுடன் பேச ஆரம்பித்தனரே அன்றி கீர்த்தியை ஏற்றுக் கொள்ள

அவர்கள் தயாரில்லை.

கீர்த்தி படிப்பு முடிந்து வேலைக்கு போகத் தொடங்கினாள்.

மேற்கொண்டு அவளை படிக்க வைக்க பத்மினி அனுமதிக்கவில்லை.

இனிமே இவள் படிச்சு என்னத்துக்கு ஆகப்போகுது என்றார்.

“…………………………………”

கீர்த்தியின் குடும்பம் ஊரை காலி செய்துக் கொண்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர் .

அஸ்வின் அடிக்கடி வினோவிற்கு அழைத்து அவர்கள் நலன் பற்றி அறிந்து கொண்டு தான் இருக்கிறான் .

நாட்கள் விரைந்தோட …கீர்த்தி இந்த  கடின வாழ்க்கைக்கு பழக்கப் பட்டிருந்தாள்.

தானே தேடிக் கொண்ட வாழ்க்கை இது ..இதில் வரும் இன்பத்துன்பங்களுக்கு  தானே பொறுப்பு என்ற பக்குவம் அவளுக்கு வந்திருந்தது.

இறுகி போயிருந்த மனைவியை ஆறுதல் படுத்தும் வழி அறியாது திகைத்த வினோத் அவளுடன் இல்லற வாழ்வை தொடங்கினான்.

கணவனின் ஆறுதலும்,காதலுமே அவளை  ஆற்றி தேற்றியது.

கீர்த்தி நாம வேணும்னா தனிக்குடித்தனம் போயிடலாமா ? மனைவியின் வாடிய  பொறுக்கவில்லை வினோவிற்கு.

வேண்டாங்க ….அத்தை பாவம், அவங்களுக்கு நான் தான் ஆகாத மருமகள் .நீங்க உயிரான மகன். உங்களை அவங்கட்ட இருந்து பிரிக்க என்னைக்குமே நான் நினைச்சதில்லை.

“……………………………….”

அஸ்வின் இருபத்தேழு முடியப்போகுது ! பொண்ணு பார்க்க தொடங்குவோமா ? ஆசையாய் கேட்டார் சரோஜினி .

இப்போ  என்னம்மா அவசரம்….கொஞ்ச நாள் போகட்டும் என்றான் .

உன்னை விட நாலு வயசு சின்னவன் வினோத் அவன் கல்யாணம் பண்ணிட்டான் . சரோஜினி அங்கலாய்த்தார் .

“………………………………”

கீர்த்தி நமக்கே நமக்கான ஒரு சொந்தம் வேண்டும் என்றான் வினோத்.

இப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போறோம் …ஓரளவு திருப்தியா சம்பாதிக்கிறோம், கல்யானம் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது.குழந்தை பெத்துக்கலாமா ? காதலனுடன் மனையாளின் கரம் பற்றி முத்தமிட்டான் வினோத் .

சம்மதமாய் தலையசைத்து தன்னவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அடுத்து மூன்று மாதமும் ஆவலுடன் காத்திருந்தனர். அவரகள் ஆசைப்படி கீர்த்தி கருவுற்றாள்.

அஸ்வினுக்கு மிகுந்த மகிழ்ச்சி . கீர்த்தி வாழ்விற்கு ஒரு அர்த்தம் வந்துவிடும் . மாமியார் நாத்தனார் இனி அவளை கொண்டாடி மகிழ்வார்கள்.

“…………………………..”

கீர்த்தி கருவுற்றபோதும் வினோத்தின் தாய்க்கு மனம் மாறவில்லை .

எங்கிருந்தோ வந்து இந்த வீட்டு வாரிசை பெத்துக்கிட்டு மகாராணியா கோலோச்ச போறா …அவர் மனம் ஆறவில்லை.

தாய் மனம் மாறிவிடாதபடி மகள்கள் இருவரும் தூபம் போட்டுக் மொண்டிருந்தனர் .

கோயில் திருவிழாவில் வினோத் கீர்த்தியை பார்த்தாள் அக்ஷ்யா . 

அவளுக்கு மனம் பொறுக்கவில்லை ,தன்  அண்ணனுடன் வாழ்ந்திருக்க வேண்டியவள் …..வினோத்துடன் அவளை பார்க்கவே பிடிக்கவில்லை . இவளுக்காக அண்ணன் அவ்வளவு அழுதானே 

வினோத் அக்ஷயாவை பார்த்துவிட்டு அருகில் வரும்படி அழைத்தான் . அவன் அழைத்து எப்படி மறுப்பது ?

இது அக்ஷ்யா நம்ம அஸ்வின் தங்கை என்று மனைவிக்கு அறிமுகம் செயது வைத்தான்.

ஹாய் …என்று கையசைத்துவிட்டு பக்கத்தில் அம்மா இருப்பதாக ஜாடை காட்டிவிட்டு  கிளம்பிவிட்டாள்.

தன்னால் முடிந்த வரை கண்ணும் கருத்துமாய் கர்ப்பினி  மனைவியை கவனித்துக் கொண்டான் வினோத்.

அவளுக்கு தாய் வீடு நினைவு இருக்கும் என்று எண்ணி வருந்திய அஸ்வின் நாகர்கோயில் சென்றான் அவளின் பெற்றவர்களை தேடி …

கீர்த்தியின் தந்தை மாரடைப்பால் காலம் ஆகி எட்டு எட்டு மாதம் ஆகிறது என்றனர் . தன் மாங்கல்யம் இறங்க காரணமான கீர்த்தியை மன்னிக்க மாட்டேன் என்றார் அவளின் அன்னை .

தன தங்கை இறந்துவிட்டாள் அவளுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டோம் என்றான் அவள் அண்ணன் .

மனமுடைந்து போனான் அஸ்வின் . கர்பகாலத்தில் அவளுக்கு எவ்வளவு ஏக்கம் இருக்கும் ? தாய்மடி தேடும் என்று பெண்கள் பேசிக்கொள்வார்களே …..! ஏதாவது அவளுக்க்காக செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டான்.

“……………………………”

ஊருக்குள் அவனுக்கு உற்ற தோழன் சுந்தர் தான்.அவன் அன்னையிடம் யோசனை கேட்டான் .

ஐந்தாம் மாதம் தாய் வீட்டில் பூ முடிப்பது வழக்கம் என்றார் .

ஐந்து வகை சாதம் ,ஐந்து வகை ஊறுகாய் ,ஐந்து வகை இனிப்பு ,பூ பழம் வளையல் வாங்க வேண்டும் என்றார் .

தாயில்லா பெண்ணிற்கு சுந்தர் வீட்டில் செய்வது போல் செட்டப் செய்து அனைத்து செலவுகளும் தானே ஏற்று பூ முடித்து மகிழ்ந்தான் அஸ்வின் 

அனாதை உணர்வில் இருந்தவளுக்கு சுந்தர் குடும்பத்தார் சீர் செய்தது அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது .

கையில் கண்ணாடி வளையல் குலுங்க அதை முன்னும் பின்னும் குலுக்கி குலுக்கி மகிழ்ந்தாள் கீர்த்தி.

“………………………………”

வினோ, அஸ்வின் வித்தியாசமான கேரக்டர்டா என்றான் சுந்தர் 

ஏன் அப்படி சொல்ற ?

இல்லை ….உன் பொண்டாட்டிக்கு யாரும் இல்லைன்னு அந்த பொண்ணு மனசில் ஏக்கம் வராம அஞ்சாம் மாசம் தாய் வீட்டு சீர் செய்தானே … நல்ல மனசுடா அவனுக்கு.

அப்போவே எனக்கு சந்தேகம் தான் …இது அஸ்வின் வேலையா ? நெகிழ்ந்து போனான் வினோ.

“………………………”

அண்ணா நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை …அம்மா அழுது மாயறாங்க . அக்ஷ்யா கடினமான முகத்துடன் அவனை முறைத்தாள்.

வினோத் கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துக்க போறான் , இவன் இன்னும் ஒத்தையில் நிற்கிறான்னு புலம்புறாங்க .

அவங்க இடத்தில இருந்து பாரு ! உனக்கு அப்போ தான் புரியும் .

இப்போ எதுக்கு இந்த பேச்சு ? சுள்ளென்று எரிந்து விழுந்தான்.

நீ இன்னும் கீர்த்தியை மனசுல நினைச்சுட்டு தானே இப்படி பண்ற ?

கண்ணீர் திரள விம்மினாள்.

ஆமா ….ஆமாம் ….என்னால் அவளை மறக்க முடியல …இனி இது பத்தி பேசாதே ….கோபமாய் கத்திவிட்டு போனான் .

அண்ணனின் கோபம் கண்டு பயந்து நின்றுவிட்டாள் அச்சு.

“………………………………”

ஒன்பதாம் மாசம் சீமந்தம் செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி .பதமினி காது கொடுத்து கேட்கவே இல்லை .

சிம்பிளாக வீட்டிலேயே வைத்து செய்து கொள்ளலாம் என்றான் வினோத். 

இல்லைனா மட்டும் ஓஹோன்னு செய்ய பிறந்த வீட்டில் ஜனம் 

ஜே ஜேன்னு  வருமாக்கும் என்று நொடித்தார் பத்மினி.

வினோ, கீர்த்திக்கு தாய் வீட்டில் என்ன முறை செய்யணுமோ அதை நான் செய்கிறேன் என்றான் அஸ்வின்.

நீ எங்களுக்கு எவ்வளவோ செய்துட்ட… உன் ஆசிர்வாதம்  மட்டும் போதும் என்று வினோ மறுத்தான்.

இல்லை வினோ …நம்ம வீட்டோட முதல் வாரிசு வரப்போகுது ! அதை சந்தோஷமா கொண்டாடணும் என்றான் அஸ்வின்

நீ எப்போ கல்யாணம் பண்ணப்போற ? பெரியப்பா பெரியம்மா ரொம்ப பீல் பண்றாங்கலாம் .

பண்ணுவோம் ….வலியை விழுங்கி கொண்டு சிரித்தான் .

சீக்கிரம் கல்யாணம் பண்ணி குழந்தை குடும்பம் என்று ஆக வேண்டாமா?  

மேரேஜ் தானே ….. பண்ணிட்டா போச்சு ! எனக்கு என்னடா வயசாகிடுச்சு? சிரித்து மழுப்பிவிட்டு நகர்ந்தான்.

“……………………………”

இரண்டு சவரன் வளையலும் பட்டுபுடவையும் அஸ்வின் வாங்கி வந்தான். 

பத்மினியும் அவர் மகள்களும் கலந்து கொள்ளவில்லை என்றால் சீமந்தம்  நின்றுவிடுமா என்ன? 

எளிமையாக அதேசமயம் மிக சிறப்பாக சாஸ்த்திர சம்பிரதாயத்துடன் நடந்தேறியது கீர்த்தியின் சீமந்த வைபோகம் .

தாய்மை பூரிப்பில் மாலையும் கழுத்துமாய் வளையல் அடுக்கிய கரங்களுடன் நிற்கும் கீர்த்தியை பார்த்து அவ்வளவு நிறைவு அஸ்வினுக்கு.

 காதலித்தவள் என்னோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது ஆசை ,எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது பெருன்தன்மை. அவன் பெரிய மனிதனாய் நின்றான் . 

தன் காதல் கை கூடாவிட்டாலும் தன் காதலியின் காதல் கைகூடி இன்று தாய்மை பூரிக்க அவள் நிற்கிறாளே  அந்த நிறைவு போதும் !

“…………………. “

அஸ்வின் கடலூரில் இருந்தாலும் தினமும் போன் செய்து வினோத்துடன் பேசிவிடுவான் .நிறைமாத கர்ப்பினியை  கவனமாக  பார்த்துக் கொள்ளும்படி வினோத்தை அறிவுறுத்துவான் .

மருத்துவர் குறித்த நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே பிரசவ வலி வந்துவிட …. சுகப்பிரசவத்தில் ஆண் மகவை ஈன்றெடுத்தாள் கீர்த்தி.

செய்திகேட்ட அஸ்வினுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ….இனி கீர்த்தனா வாழ்வில் ஒரு பிடிப்பு வந்துவிடும் . அவள் வாழ்வு பூரணம் அடைந்துவிட்டதாக மகிழ்ந்தான் .

குழந்தைக்கு வித விதமான உடைகள் ,பொம்மைகள் என்று வாங்கி வந்து குவித்தான் .

குழ்ந்தை வினோத்தின் நகலாய் இருந்தான் . தன் மகனை உரித்து வைத்து பிறந்திருக்கும் பேரனை கண்ட பத்மினி மெல்ல மெல்ல மனம் மாறினார் . மருமகளை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் இல்லை .பேரனை ஏற்றுக் கொண்டார் , அவர் வீட்டு வாரிசு அல்லவா ?

குழந்தையை அவர் கொஞ்சுவது கண்டு கீர்த்திக்கு மகிழ்ச்சி தான் . அவர் மாறுவார் என்று அவளுக்கு  நம்பிக்கை .

பார்த்தியா கீர்த்தி அம்மா கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டாங்க. வினோத் பெருமை கொண்டான் .

குழந்தைக்கு தியானேஷ் என்று பெயர் தேர்வு செய்தது அஸ்வின் தான் .

என் குழந்தை வாய் திறந்து உன்னை பெரியப்பான்னு  கூப்பிடறதுக்குள்ள நீ கல்யாணம் பண்ற …..அன்பு கட்டளையிட்டான் வினோத்.

அவன் குழந்தை அஸ்வினை அப்பா என்று அழைக்கும் நிலை வரும் என்று  யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

குழந்தை அனைவர் மனதிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருந்தது.

கீர்த்தியை எப்போதும் கொடுக்கால் கொட்டும் பத்மினியின் பொழுதுகள் இப்போதெல்லாம் பேரனோடு கழிந்தது.

கீர்த்தி இந்த பேட்ஜ் கவர்மெண்ட் போஸ்டிங்கில் எனக்கு கிடைச்சுடும் ….பெருமையாக மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தான் வினோ.

குழந்தைக்கு  ஐந்து மாதம் ஆகி விட்டது . கிருஷ்ணன் வாத்தியாருக்கு உலகமே பேரன் தான்  . பள்ளி முடிந்தால் பறந்தோடி வந்துவிடுவார் பேரனை தரிசிக்க ….

மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை…. கீர்த்தி இப்போது கொஞ்சம் சிரிக்க தொடங்கியிருந்தாள்.

“………………………….”

புதிய ராயல் என்பீல்ட் வாங்கியிருந்தான் வினோத் .

மனைவி குழந்தையை புல்லட்டில் வைத்து கோயிலுக்கு அழைத்து  சென்றான்.

அஸ்வினுக்கு இப்போது மனம் அமைதி அடைந்திருந்தது. கீர்த்திக்கு இனி கவலை இல்லை. உறவுகள் இணக்கமாய் இல்லை என்றாலும் அவளை நாவால் சுட்டு பொசுக்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு உறவும் உரிமையும் நிலைபெற்றுவிடும் .

“………………………….”

நள்ளிரவு மொபைல் அலறியது. பெரும்பாலும் நள்ளிரவு போன் கால்கள் அசுப  செய்தியை தான் சுமந்து வரும். அஸ்வின் பதறி அடித்து எழுந்தமர்ந்தான்.

சுந்தர் தான் அழைத்திருந்தான் ….வினோத் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் இருக்கிறான் சீக்கிரம் வா !

என்னடா சொல்ற? உலகமே தலை கீழாய் சுழன்றது.

கவர்மெண்ட்  ஜாப் கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இனிப்போடு வந்தவன் தொழுதூர் பக்கத்தில் வரும்போது NH ல ஆக்சிடென்ட் .

உனக்கு சொல்ல தோணல ….கை கால் புரியல அஸ்வின் .திருச்சி BHEL ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கோம். பிரெயின் இன்ஜுரின்னு  சொல்லியிருக்காங்க .பயமா இருக்கு அஸ்வின்.

ஒன்னும் ஆகாது சுந்தர் …நம்பிக்கை சொன்னான் .

கீர்த்தி எப்படி இருக்கா? குழந்தை எப்படி இருக்கான் ? நடுங்கியது குரல் .

அந்த பொண்ணு பிரம்மை பிடித்த மாதிரி இருக்கு . நிலவரம் ரொம்ப மோசமா இருக்கு அஸ்வின் .

சரி சுந்தர் நான் இப்போ கிளம்பிட்டேன்.அங்கே இருந்து பாரு .

நொறுங்கிய இதயத்துடன் அஸ்வின் கார் திருச்சியை நோக்கி பறந்தது.

விழுந்தடித்து ஓடிவந்த அஸ்வினை கட்டிக்க கொண்டு கதறினார் கிருஷணன்.

அஸ்வினை பார்த்து மௌன கண்ணீர் உகுத்தாள் கீர்த்தி.

அஸ்வினால் அவள் துடிப்பை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

 .

 

  

.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!