Skip to content
Post Views: 2,412
உனதன்பில் சரணாகிறேன் 15
உலகம் மறந்த உணர்வு.
ம்ருதவ்வுக்கு எதிர்ப்பார்த்த தருணமென்பதால், அதனை ஏற்கவும் கடக்கவும் மனதை பழக்கியிருந்தான்.
ஆனால் மித்யுகா?
Advertisement
அவனின் நலன் தெரிந்தால் போதுமென இரண்டு நாட்களாய் அலைப்புற்றிருக்க… இன்று அவனே கண்கள் முன் முழு உருவமாய் காட்சித்தர… இதயத்தின் துடிப்பை நிறுத்திவிடும் நிலை. அக்கணத்தை எப்படி பிரதிபலிப்பதெனத் தெரியாது மனதோடு துவண்டவளின் விழிகள் மட்டும் அவனது உணர்வுகள் தொலைத்த வெற்று கண்களோடு உறவாடியது.
மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து வெளியேற்றினால் நிலைபெறுவோமோ என மூளை எண்ண செயலாற்ற முடியாத பரிதாபநிலை.
‘உன்மீது நான் கொண்ட காதலே என் சிறு உலகத்தை நிரப்பியிருக்க… மீண்டும் உன்னில் காதல் கொள்ளும் மனதை இழுத்துப் பிடிக்க முடியாமல் தவிக்கின்றேன்.’
Advertisement
கோபமாக வந்த மகள் வந்திருப்பவர்களைப் பார்த்ததும் அமைதியாக நிற்பதில் ஆசுவாசம் கொண்ட செண்பகம், அவளுக்கு அவர்களை தெரியாது, நானும் உங்களை அறியேன் எனும் விதமாக அறிமுகம் செய்து வைத்தார்.
Advertisement
மித்யுகாவிடம் சிறு அசைவுமில்லை.
அவளின் தற்போதைய நிலையை மொத்தமாக உள்வாங்கியிருந்தான் ம்ருதவ்.
அவளின் அணுவும் அறிபவன் அவளது மனம் அருந்திடமாட்டானா?
Advertisement
‘நான் உங்களுக்கு வேண்டாம் ம்ருது. நான் உங்க அதே யுகா இல்லை.’ அவளின் உள்ளக் குமுறலை அவளது விழி மொழியில் வாசித்தவன்,
“உள்ள வரலாமா?” எனக் கேட்டிருந்தான்.
“இப்படியே போயிடுங்க” என்று சொல்லும் வாய்ப்பை அவளுக்கு வழங்கிவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தான் யுகாவின் ம்ருது.
மூளை வழங்கும் கட்டளைக்கு பணிந்து நின்றிருக்க, அவனது அனுமதி கேள்விக்கு தன்னைப்போல் அவளின் மனம் தலையசைத்திருக்க, கால்கள் நகர்ந்து வழிவிட்டது.
“நல்லவேளை உள்ள வரச்சொல்லிட்டா” என்று கமலேஷ் ரதியிடம் கிசுகிசுக்க, “நீ கொஞ்சநேரம் அமைதியா இருடா” என்று பல்லைக் கடித்தாள் ரதி.
மூவரையும் உள்ளே வரவேற்ற செண்பகம் அவர்களை இருக்கையில் அமர வைத்து, மகளின் புறம் திரும்பினார்.
“நீ உள்ளப்போ மித்யு. நான் கூப்பிடுறேன்” என்று செண்பகம் சொல்ல… அப்போதுதான் அவளுக்கு உணர்வு வந்தது. பார்வையும் அவனிலிருந்து பிரிந்தது.
“இல்லம்மா இது ஒத்துவராது. நான் அவங்ககிட்டப் பேசுறேன்” என்று மெதுவாகவே செண்பகத்திடம் மித்யுகா கூறியிருந்தாலும், மற்ற மூவருக்கும் கேட்கவே செய்திட,
“ம்மா ஒரு நிமிஷம்” என்று எழுந்த ரதி, “நீ வா” என மித்யுகாவின் கையை பிடித்து பக்கத்திலிருந்த அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள்.
நிமிடங்கள் பல நீண்டது.
“உள்ள என்ன நடக்குது தெரியலையே” என்று கமலேஷ் சொல்ல, “உங்க மனைவி அவளை சம்மதிக்க வச்சிடுவாங்க தோணுது. நான் பலகாரம் எடுத்துட்டு வர்றேன்” என்று செண்பகம் சமையலறைச் சென்றார்.
“அப்படியென்னடா பேசுவாள்?”
“வெளிய வந்ததும் நீயே கேட்டுக்கோ” என்ற ம்ருதவ், “என்னை பார்த்தப்பிறகும் கல்யாணம் வேணாம் சொல்ல நினைக்கிறாள்” என்றான். வருத்தமாக.
“அவளோட சிட்டுவேஷன் அப்படி. உனக்கு புரியுதுதான?” கமலேஷ் கூற,
“பாருடா… எப்பவும் திட்டிட்டே இருப்ப. இப்போ என்னவாம்… யுகாக்கு சப்போர்ட்” என ம்ருதவ் புருவம் உயர்த்தினான்.
“நீ சோகமா சுத்த அவள்தான காரணம். அதுக்காக அப்பப்போ திட்டியிருப்பேன். ஆனால் அவளும் சந்தோஷமா இல்லையே” என்ற கமலேஷ், “அவள் தொலைத்த சந்தோஷம் உன்கிட்ட தான் இருக்கு. ரெண்டுபேரும் சேர்ந்துட்டா போதும்” என்றான்.
“ஹ்ம்ம்” எனத் திரும்பிய ம்ருதவ், அங்கு ஓரமாக நின்று தங்களையே பார்த்திருக்கும் பிள்ளைகள் இருவரையும் பக்கம் அழைத்தான்.
இத்தனை வருடங்களில் அன்னை, பாட்டியைத் தவிர்த்து தங்கள் வீட்டில் இதுபோன்று புதிய நபர்களை பார்த்திராததால் குழந்தைகள் இருவரும் வரமாட்டோமென்று தலையசைக்க, ம்ருதவ் அவர்களின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து, சட்டைப் பையிலிருந்து சாக்லெட் எடுத்து இருவருக்கும் கொடுத்தான்.
தேநீர் கொண்டு வந்த செண்பகத்தை பிள்ளைகள் பார்க்க,
“வாங்கிக்கோங்க…” என்றார்.
“தேங்க் யூ அங்கிள்.” இருவரும் ஒன்றுபோல் கூறி புன்னகைக்க, இரு கைகளாலும் அவர்களின் தலையில் கை வைத்து கலைத்த ம்ருதவ்,
“ஆம் சிவா… யூ போத் கேன் கால் மீ சிவா” என்றான். புன்னகைத்து, கரம் நீட்டி…
தனது உடன் பிறப்பை ஒரு பார்வைப் பார்த்த சிவன்யா, மெல்ல தனது பூங்கரத்தை ம்ருதவ்வின் உள்ளங்கைக்குள் பாந்தமாய் நுழைத்து,
“ஆம் சிவன்யா” என்றாள்.
அவள் செய்ததால் அவளைப்போலவே, ம்ருதவ் நீட்டியிருந்த கரத்தில் தனது பிஞ்சு கரம் வைத்து குலுக்கி,
“ஆம் சிவேஷ்” என்றான்.
“சிவன்யா, சிவேஷ்… நைஸ் நேம்ஸ்” என்ற ம்ருதவ்,
“இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்று இருவரின் நெற்றியிலும் இதழ் பதிக்க, அவன் அவர்களிடம் அனுமதி கேட்ட வாசகத்தை காதில் வாங்கியவளாக ரதியுடன் அறையிலிருந்து வெளிவந்தாள் மித்யுகா.
“க்யூட் குட்டீஸ்” என்று எழுந்த ம்ருதவ், மித்யுகாவைப் பார்த்து,
“இப்போ ஓகேவா?” எனக் கேட்டான்.
அவன் திருமணத்திற்கு கேட்ட சம்மதமாகத்தான் மற்றவர்கள் நினைத்தார்கள், ஆனால் அவள் அறிவாள் அவனின் கேள்விக்கான உண்மையானப் பொருளை.
அவனைக் கண்டதும் உணர்விழந்த தனது இதயத்தின் நலம் அறிய விழைகிறான் என.
மெல்ல தலையசைத்தாள்.
மித்யுகாவின் அருகில் நின்றிருந்த ரதிதான் ஏதோ படபடப்பில் இருப்பதைப் போன்றிருந்தது.
கவனித்த ம்ருதவ்,
“ரதி என்னாச்சு. நீ ஓகேதான? டிராவல் செட் ஆகலையா?” எனக்கேட்டு அவளை இருக்கையில் அமர்த்தினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா!” என்று அனைவருக்கும் கேட்கும் விதமாக பதில் சொல்லிய ரதி, “உன் ஆளுகிட்ட மூச்சுப் பிடிக்க பேசினனா… அதான் ஒரு மாதிரி ஆகிட்டேன்” எனக்கூறி கண்ணடித்தாள்.
கமலேஷ் ரதியின் நெற்றியில் துளிர்த்த வியர்வைத் துளிகளை தனது கைக்குட்டைக் கொண்டு துடைத்தவாறு,
“எதுவும் அன்கம்போர்ட்டா இருந்தா சொல்லிடு ரதிம்மா… என் மச்சான்ஸ் கிட்ட அடி வாங்குற தெம்பில்லை” எனக்கூறி அவளிடமிருந்து இரண்டு அடிகளைப் பெற்றுக்கொண்டான்.
“பொண்ணு மாசமா இருக்குல்ல… நின்னா நடந்தா உடம்பு என்னமாச்சும் பண்ணிக்கிட்டேதான் இருக்கும்” என்ற செண்பகம், “இந்த ஜூஸ் குடிம்மா… இவ்வளவு தூரம் வந்தது வேற உடம்பு அசதியாகியிருக்கும்” என்றார்.
ரதி மறுக்க கமலேஷ் தான் வாங்கி புகட்டினான்.
கமலேஷ் என்னதான் விளையாட்டுப் பிள்ளையாகத் தெரிந்தாலும், அவன் ரதியிடம் நடந்துக்கொள்வது, தன்னுடைய மகளும் இதுபோன்ற மகிழ்வை உளமார அனுபவிக்க வேண்டுமென்று பிரார்த்தனையாய் நினைத்தார்.
“என்னை கவனிக்காம நடக்க வேண்டியதைப் பாருங்க” என்று ரதி சொல்ல…
“ஆமா ஆண்ட்டி… அடுத்து என்னன்னு ஒரு முடிவு தெரிஞ்சா. செய்ய வேண்டியதை செய்யலாம்” என்றான் கமலேஷ்.
“அதுவும் சரிதான்” என்ற செண்பகம், “இவள் தான் என் பொண்ணு மித்யுகா. நீங்க பார்க்க வந்தது. அவங்க ரெண்டு பேரும் அவள் குழந்தைங்கதான். இப்போ நேர்லே பாக்குறீங்க… எங்க குடும்பம் நாங்க மட்டும்தான். சொந்தம்ன்னு யாருமில்ல. உங்களுக்கு என் பொண்ணை கட்டிக்க சம்மதம்தான தம்பி” என்று கேட்டார்.
மித்யுகாவிற்காகத்தான் அவர் இதையெல்லாம் அழுத்தமாகக் கூறுகிறார் என்பதை அவளையும் சேர்த்து அனைவரும் அறிவர்.
“என் சம்மதத்துக்கு முன்னாடி உங்க பொண்ணு முடிவென்னன்னு கேளுங்க” என்ற ம்ருதவ்வின் பார்வை மித்யுகாவை ஏறிட்டது.
“எனக்கு சம்மதம்.” செண்பகம் கேட்கும் முன்பு பதில் வழங்கியிருந்தாள் மித்யுகா.
“ஒருமுறை ஓகே சொல்லிட்டா திரும்ப நோ சொல்ல நான் சான்ஸ் கொடுக்கமாட்டேன். நல்லா யோசிச்சு சொல்லுங்க” என்றான் ம்ருதவ்.
“அவள் தான் சரி சொல்லிட்டாளே! அப்புறம் என்னடா?” என்று ரதி வினவ,
“என்கிட்ட வரதா இருந்தா மனசார வரணும் ரதி. அம்மா சொல்றாங்க, நீ பேசினன்னு சொல்லக்கூடாது” என்ற ம்ருதவ், “என்னைக் கல்யாணம் செய்துக்க உங்களுக்கு சம்மதமா?” மித்யுகாவின் முகம் பார்த்து அழுத்தமாக வினவினான்.
“சம்மதம்.”
அத்தனை நாட்களிருந்த குழப்பம், தத்தளிப்பு எதுவுமின்றி அமைதியான மனநிலையில் ஒப்புதல் வழங்கியிருந்தாள். அத்தோடு அவன் மீதான புதிதான கோபத்தோடு. அக்கோபத்திற்கு காரணம் ரதி… ரதி மட்டுமே!
“உன் முகத்திலிருக்க படபடப்பையும், நீ உன் கையை போட்டு பிசையுறதையும் பார்த்தாக்கா மித்யு கிட்ட ஏதோ வில்லங்கம்மா சொல்லியிருக்கப்போல” என மெல்ல வினவினான் கமலேஷ்.
“நான் சொன்னது வில்லங்கமானாலும் பரவால்ல… கல்யாணம் முடியுற வரை அவளுக்கு நான் சொன்னது பொய்ன்னு தெரியாம இருந்தா போதும்” என்றாள்.
“அப்போ கன்பார்ம் உண்மை தெரியும்போது ஒரு வார் இருக்கு” என்ற கமலேஷ், ரதி முறைத்ததில் வாய் மூடிக்கொண்டான்.
“நீங்க தனியா பேசணும்னாலும் பேசுங்க தம்பி.” மகள் சம்மதம்மென்று அவள் வாயாலே சொல்லியதும், செண்பகம் தைரியமாகவே கூறினார்.
ம்ருதவ் மித்யுகாவைப் பார்க்க,
“இல்ல வேணாம்” என்றிருந்தாள்.
“அப்புறம் என்ன? ஆல் ஓகே! அடுத்து என்ன செய்யனும் ஆண்ட்டி?” என்றாள் ரதி.
“நாள் பார்க்கணும், மண்டபம் ஏற்பாடு பண்ணனும்” என்று செண்பகம், மகளுக்கு திருமணமாகவிருக்கிறது என்று உற்சாகமாகி அடுத்தடுத்த நிகழ்வுகளை வரிசையாகக் கூற,
“அம்மா…” என்று பற்களைக் கடித்தாள் மித்யுகா.
“என்ன மித்யு… கல்யாணம் அப்படின்னா எல்லாம் தான?” என்று செண்பகம் கூற,
“எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்கம்மா… இப்போ போய் மண்டபம் பார்த்து ஊரைக்கூட்டி கல்யாணம் செய்யவா?” என்ற மித்யுகா, “அவங்களுக்கும் ரெண்டாவது கல்யாணம் தான… எதுக்கு இதெல்லாம்” என்றாள். மித்யுகா ம்ருதவ்வைப் பார்த்தப் பார்வையில் அனல்.
அவனுக்கும் எதனால் என புரிந்தது.
ஆனால் தனக்கு இரண்டாவது திருமணமெனத் தெரிந்ததால் மட்டுமே அவளின் இந்த சம்மதமென, ரதி சொல்லி வைத்திருக்கும் பொய் தெரியாது எண்ணினான்.
“நீங்க சொல்றதும் சரிதான். உங்களுக்கும் செக்கென்ட் மேரேஜ் தான… சோ, சிம்பிளா பண்ணிக்கலாம்” என்றான் ம்ருதவ்.
அவன் சொல்லிய செக்கென்ட் மேரேஜ் எனும் வார்த்தைகள் அத்தனை அழுத்தம் பெற்றன. அவன் கொடுத்த அழுத்தத்தில் அவள்தான் வேதனை கொண்டாள்.
“அப்போ எங்க எப்படின்னு நீங்க சொன்னா, பண்ணிடலாம்” என்று கமலேஷ் கூற,
“சிம்பிளா அப்படின்னா கோவில் இல்லைன்னா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல தான் பண்ணனும்” என்றார் செண்பகம்.
“உச்சிப் பிள்ளையார் கோவில்…”
ம்ருதவ், மித்யுகா இருவரும் ஒன்றுபோல் ஒருசேர கூறிட, இருவரின் பார்வையும் கலந்து கரையேரத் துடித்தது.
“அச்சோ நான் இப்போவே மாட்டிப்பேன் போல…” ரதிக்கு கையெல்லாம் உதறியது.
“அங்கயே வச்சுக்கலாம்” என்ற செண்பகம், “சிம்பிளாங்கிறதால இந்த வாரம் புதன் கிழமையே நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கே வச்சுக்கலாமா?” எனக் கேட்டார்.
செண்பகம் ஏன் இத்தனை வேகம் காட்டுகிறார் என மித்யுகாவுக்குப் புரியத்தான் செய்தது. தன் மனம் மாறுவதற்குள் செய்ய வேண்டுமென்ற அவரின் எண்ணம்.
அவளுக்குமே ம்ருதவ்வை பார்க்கும்வரை எப்படியோ? பார்த்த பின்னர் தங்களின் காதலில் உருகி மீண்டும் அவனின் கைகளுக்குள் அடங்கிட அதீத ஏக்கம் கொண்டாள்.
அவனிடத்தில் சேரவே அவளிடம் தீரா ஆசை.
பிரித்து வைத்த காலமே ஒன்று சேரவும் அடிகள் வைத்திட, இத்தனை நாள் கொண்ட குற்றவுணர்வை ஒதுக்கி வைத்து அவனுடன் இணைந்திட விருப்பமாகவே விருப்பம் தெரிவித்தாள்.
இப்போதும் ம்ருதவ்வுக்கு தான் இழைத்தது பெரும் வலியெனப் புரிகிறது… அவள் நினைத்த பயந்ததைப்போன்று அவனைக் கண்டதும், அன்று அவனை வலிக்கத் துடிக்க வைத்திட்டப் பேச்சும், தான் செய்த தவறின் பலனாய் குற்றவுணர்வும் மனதில் தோன்றியிருந்தால் நிச்சயம் ரதி சொல்லியதையும் மீறி, இங்கு வரும் வரை ம்ருதவ் அதிகம் நினைத்து மருகியதுப்போன்று மறுப்பையேக் காட்டியிருப்பாள்.
ஆனால்,
ம்ருதவ்வை கண்டதும், துடிக்கும் ஜீவனும் துள்ளி அடங்கி அவனில் உயிர்த்திட… கொண்ட நேசமெல்லாம் இதயத்தில் ஆர்ப்பரிக்கச் செய்திட, அவளால் எப்படி மறுத்திட முடியும். அவள் கொண்ட மறுப்பெல்லாம் அவன் முகம் கண்டதில் நீர்த்துப் போனது.
இருவரின் காதலே பிரதானமாக…
மீண்டும் அவனுடன் சேர கிடைத்திட்ட வாய்ப்பினை இறுகப் பற்றிக்கொள்ளவே அவளின் மனம் நினைத்தது.
மித்யுகா தனக்குள் உழன்றிருக்க… அவர்கள் அனைத்தும் பேசி முடிவு செய்திருந்தனர்.
தற்போது பிள்ளைகள் இருவரும் ம்ருதவ்வின் இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
அங்கு நடந்த பேச்சுக்களை கவனித்து, என்ன புரிந்ததுவோ…
“நீங்க எங்க மம்மியை மேரேஜ் பண்ணிக்கப்போறீங்களா?” எனக் கேட்டான் சிவேஷ்.
“ஆமாங்க குட்டி பாஸ்…” என்று அவனின் மூக்கை நிமிண்டிய ம்ருதவ், “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்க,
“அம்மா உனக்கு சிவாவை பிடிச்சிருக்காம்மா?” என மித்யுகாவிடம் கேட்டிருந்தான் சிவேஷ்.
முன்பு சம்மதமென்றது திருமணம் குறித்தான பதில்… ஆனால் தற்போது சொல்லவிருப்பது தனிப்பட்ட விருப்பம் குறித்தானது. சிவேஷின் கேள்வியில் அதுவரையிலான திடம் முற்றிலும் குலைந்தவளாய், கண்கள் கலங்கியதை உணராது ம்ருதவ்வைப் பார்த்தாள்.
அவளின் அகமும், அதில் நீக்கமற தான் மட்டுமே நிறைந்திருப்பதையும் அவன் அறிவானே!
அவள் உள்ளத்தில் என்றும் அவனே!
இருப்பினும் அவளின் பதிலை அவனின் மனம் வேண்டியபோதும்… என்றுமே அவளின் நீர் ததும்பிய விழிகளை ஏற்க பழகியிராதவன்,
“உங்க மம்மி மேரேஜுக்கு ஓகே சொல்லிட்டாங்க. அப்போ அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னுதான அர்த்தம்” என குழந்தையிடம் கேட்டான்.
“ஆமா” என்ற சிறுவன், “அப்போ எனக்கு ஓகே” என்றதோடு, “உனக்கு அன்யா” என்றான் உடன் பிறந்தவளிடம்.
“சாக்லெட்லாம் கொடுத்தாங்களே! பிடிச்சிருக்கு” என்ற சிவன்யாவை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்ட ம்ருதவ், “அப்போ குட்டிக்கு இன்னும் நிறைய சாக்லெட் தரலாமே” என்று அவளின் குதிரைவாலை பிடித்து ஆட்டினான்.
குழந்தைகள் இருவரிடமும் ம்ருதவ் கனிவாய் பேசுவதை,
“நல்ல ஜெல்லாகிட்டான் ரதி” என்ற கமலேஷ், “புதன்கிழமை மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியாச்சு. ரொம்பவே சந்தோஷம். இங்க வந்த பின்னாடியும் கூட எனக்கு அவள் ஓகே சொல்லுவான்னு நம்பிக்கையே இல்லை” என்றான்.
“அதான் ஓகே ஆகியாச்சே! மேரேஜ் ஆகிட்டா, எல்லாம் சிவாவே பார்த்துப்பான்” என்றாள் ரதி.
“ஹ்ம்ம்…”
அடுத்தடுத்துப் பேச்சு வார்த்தையில் என்ன செய்வது, எப்படியென்பதில் ரதி, கமலேஷ், செண்பகம் மூவரும் தீவிரமாகியிருக்க, ம்ருதவ் குழந்தைகளுடன் ஒன்றிவிட்டான்.
மித்யுகா ஒருமுறை பார்த்திட முடியாதா என ஏங்கிய ம்ருதவ்வின் முகத்தில் ஆழ்ந்துவிட்டாள். அமைதியான ரசிப்பு. நிதானமான உள்வாங்கல். அவனில் சரணாகதியெனும் நிலை.
அவளின் பார்வை ஆழம் கொள்ள கொள்ள, ம்ருதவ்வின் இதயம் தனது துடிப்பின் வேகத்தைக் கூட்டியது.
இவ்வுணர்வுக்காக அவன் தவித்த நாட்களின் வலியை அவனது அறை மட்டுமே அறியும். துன்பம் மட்டுமே வலி கொடுத்திடாது. ஏங்கிய இன்பம் கை சேரும் நொடி, அனுபவித்த வலியை பன்மடங்காய் இதயம் சுவீகரிக்கும்.
மூச்சு முட்டும் உணர்வில் தத்தளித்தவன், அதற்கு மேல் அங்கு முடியாது எனும் மனதின் வலியுறுத்தலில், மடியிலிருந்த பிள்ளைகளை இறக்கி அமர்த்திட்டு,
“சரி நாங்க கிளம்புறோம்” என எழுந்துக்கொண்டான்.
“சிவா என்னடா?”
“என்ன தம்பி ஆச்சு?”
“பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சே! புறப்படுறோம். நான் வீட்டுக்குப் போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்” என்றான் ம்ருதவ்.
அவனின் முகத்தை அவதானித்த ரதி, உள்ளுக்குள் எதையோ நினைத்து படபடப்பாகிறானென யூகித்து,
“ஆமா ஆண்ட்டி… நாங்க புறப்படுறோம். எனக்கு மதியம் டாக்டர் அப்பயின்ட்மென்ட் இருக்கு. அதான் நேரமானதும் எப்படி சொல்றதுன்னு தெரியாம நிக்கிறான்” என்று சமாளித்தாள்.
“ஹோ… சரிம்மா சரி… நான் என்னவோன்னு நினைச்சிட்டேன்” என்றவர், “சாப்பிட்டுப் போகலாமே” என்றார்.
“இருக்கட்டும் ஆண்ட்டி… இனி அடிக்கடி வருவோம். சாப்பிட்டுக்கலாம்” எனக்கூறி மூவரும் புறப்பட்டிருந்தனர்.
மித்யுகாவின் பார்வை ம்ருதவ் மீதிருந்து அகலாதிருக்க… அவன் அவள் புறமே திரும்பவில்லை.
செண்பகத்திடம் போய் வருவதாகக் கூறியவன், குழந்தைகளிடம் கையசைத்து, வேகமாக வெளியேறி காரில் சென்றமர்ந்தான்.
“நாங்க கோவிலில் ரிஜிஸ்டர் பண்ணிட்டு சொல்றோம் ஆண்ட்டி” என்ற ரதி, “வர்றோம் மித்யு” என விடைபெற்றாள். கமலேஷிடம் பொதுவான தலையசைப்பு.
ரதி காரில் பின்னால் அமர்ந்திட, கமலேஷ் வந்த நினைவில் முன்னிருக்கையில் அமர கதவினைத் திறக்க ம்ருதவ் அமர்ந்திருந்தான்.
“நீ டிரைவ் பண்ணுடா” என்றிருந்தான் ம்ருதவ்.
“ம்ம்…” என்ற கமலேஷ் ஓட்டுநர் இருக்கைக்கு வர, தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து கார் கீயை ம்ருதவ் எடுக்க, உடன் வந்தது அவனது பைக் கீ.
கார் சாவியை கமலேஷிடம் கொடுத்த ம்ருதவ், மற்றொரு சாவியில் ஊசலாடிய ஜிமிக்கியின் வருடலில் தன்னை நிலைப்படுத்தினான்.
உள்ளங்கையில் வைத்து இறுக மூடி சுவாசத்தை உள்ளிழுத்தவன், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவனாக, சாவியை சட்டைப் பையில் போட்டு இதயத்தோடு சேர்த்து அழுத்தினான்.
“சிவா என்னாச்சு?” ரதி பின்னிருந்து அவனின் தோளில் கை வைக்க,
“அவளை அறையனும் போல வருது ரதி. என்னப் பார்வை அது. எனக்காக உருகுறவளுக்கு தானா என்கிட்ட… என்னைத்தேடி வரணும் தெரியாதா?” என்றான்.
“அதான் எல்லாம் ஓகே ஆகியாச்சே சிவா! நீ நினைச்சு பயந்த மாதிரி, அவள் நோ சொல்லாம ஓகே சொல்லிட்டாளே. அவளுக்கும் நீ வேணும்டா” என்றாள்.
“ஆமா சிவா… சில்” என்றான் கமலேஷ்.
“நீ அவகிட்ட என்ன சொன்ன?” எனக் கேட்டான் ம்ருதவ்.
“நானா? நான் என்ன சொன்னேன்” என்று ரதி நாவால் தந்தியடிக்க…
“நீயேதான்… ரூமுக்குள்ள” என்றான்.
“அது…”
“என்ன சொல்லியிருந்தாலும் சொல்லு ரதி. நானும் சமாளிக்கணுமே! அவளுக்கு நான் வேணுமா இருந்தாலும், இப்போ இன்னைக்கு எனக்கு நோ தான் சொல்ல நினைச்சாள். அவள் மனசு எனக்குப் புரியும். அவள் சொல்ல நினைச்ச நோ கொஞ்சநாளில் எஸ்ஸா மாறியிருக்கும். அதுவும் எனக்குத் தெரியும். காலம் கொடுக்கு செக்கென்ட் சான்சை அவள் இழக்க நினைக்கமாட்டாள். ஆனா இப்போவே எஸ் சொன்னதுக்கு, நீ சொன்ன எதுவோ ஒண்ணுதான் காரணம்னு தெரியுது. அது என்னன்னு சொல்லு” என்றான்.
“உனக்கு…
ரதி சொல்லியதில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கமலேஷ்,
“நாசமாப்போச்சு…” என சட்டென்று பிரேக்கை அழுத்தியிருந்தான்.
‘துவண்டு மீளும் காதலில்
கரை ஒதுங்கக் காத்திருக்கிறது
எனது நின்னுயிர்.’
error: Content is protected !!