“ஸ்வீட் கேர்ள். உங்க பேக் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா…? டிரசெல்லாம் எடுத்து வச்சாச்சா தங்கம்மா…?”
“ரெடி டாடி. நானே என் டிரஸ்லாம் எடுத்து பேக்ல வச்சேன். அம்மாக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்ணேன் டாடி…”.
“வெரி குட்,” என மகளை கொஞ்சியவன், தாத்தா பாட்டிக்கு கிப்ட் வாங்கினீங்களே…” என்றான்.
“அதுவும் அம்மா எடுத்து வச்சிட்டாங்க”.
“ஓகே. நீங்க விளையாடுங்க. அப்பா போய் ரெடியாயிட்டு வரவா…?”
“ஓகே டாடி”.
மகளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை கீழே இறக்கிவிட்டான். அவளும் தந்தையின் கன்னத்தை தனது கைகளால் பற்றி முத்தமிட்டுவிட்டே அவனை விட்டாள்.
சட்டையின் பட்டன்களை கழற்றியவாறே அறைக்குள் சென்றான். அங்கு அருந்ததி கட்டிலின் மேல் பரப்பி இருந்த துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டு நின்றிருந்தாள், இவனுக்கு முதுகு காட்டியபடி.
மனைவியை பார்த்துகொண்டே உடையை கழற்றி அழுக்கு கூடையில் போட்டவன், கையில் துண்டை எடுத்துகொண்டு பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
அவளுக்கும் இவன் வந்த அரவம் கேட்டாலும் எதையும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
இவன் குளித்து வெளியே வரும் போது, அருந்ததி பேக் செய்த ட்ராலியை மூடி ஜிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் வந்து நின்றவன், “ஹனி எனக்கு இப்ப போட்டுக்க டிரஸ்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்க்காமலே, வார்ட்ரோபை திறந்து அவனுக்கென்று எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள்.
“கையில் குடுக்க மாட்டியாடி…?”
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் ஏதும் பேசாமல் அறையை விட்டு வெளியேற முயன்றாள்.
சட்டென்று அவளது கையைப் பிடித்து இழுத்து அணைத்தவன், “கோவமாடா…” என முகத்தோடு முகம் வைத்து உரசினான்.
துண்டோடு நின்றிருந்தவனின் ஈர உடல் அவள் மேல் பட்டு உரசியதும், அருந்ததிக்கு உடலெல்லாம் கூசி சிலிர்த்தது.
“ஸாரி டா… சீக்கிரம் வரனும்னுதான் நினைச்சேன். வேலை இழுத்துடுச்சுடா. ஸாரி ஹனி…”.
“விடுங்க. எப்பவும் சொல்றதுதான். எனக்கும் கேட்டு கேட்டு பழகிடுச்சு” என முறைத்தாள் கணவனை.
“இப்படி சலிச்சுகிட்டா எப்படிடா? என் வேலையப்பத்தி தெரியுமில்ல. ஊருக்கு கிளம்பற நேரத்துல, நீ இப்படி முகத்த வைச்சிருந்தா.. எனக்கு கஷ்டமாயிருக்கு…”.
“ம்க்கும் ரொம்பதான்” என முகத்தை சுழித்தாள்.
“ரொம்ப நாள் ஆச்சு வெளியில கிளம்பி. அதனால இந்த டிரிப்ப என்ஜாய் பண்ணனும்னுதான பேசிட்டிருந்தோம். கிளம்பும்போதே நீ இப்படி இருந்தா மூட் அவுட் ஆகாதா…டா…?”
“ஓஹ்… உங்க மூட் அவுட் ஆக கூடாது. அப்ப நான் இங்க மூட் அவுட் ஆகி நின்னுட்டுருக்கறது உங்களுக்கு தெரியலையா…?” என முறைத்தாள்”.
“என்ன சொல்லிட்டு போனீங்க காலையில கிளம்பும்போது..? சீக்கிரம் வந்து கிளம்பறதுக்கு எனக்கு ஹெல்ப் பண்றேன்னுதான சொன்னீங்க. நானும் ஸ்கூல்ல இருந்து வந்து கவிய கிளப்பி, நானும் கிளம்பியே முடிச்சாச்சு. கரெக்டா கிளம்பற நேரத்துக்கு வரீங்க. பேமிலுன்னு ஒன்னு இருக்கு ஸாருக்கு. ஞாபகம் இருக்கா…?” என முறைத்து நின்றாள்.
“ஸாரிடா… நெக்ஸ்ட் டைம் பார். ஷார்ப்பா வந்துடுவேன். லேட் பண்ண மாட்டேன்” என கொஞ்சி நின்றான்.
“ம்க்கும். அப்பவும் இதே டயலாக்தான் சொல்லுவீங்க நீங்க. நகருங்க…” என அவனை தள்ளி நிறுத்த முயன்றாள்.
“கோச்சுக்காதடா… இங்க பாரு. நீ இப்படி இருந்தா, என்னால எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு தெரியுமில்ல. ப்ளீஸ் கொஞ்சம் சிரியேன்”.
“ம்ம்… சிரிக்கனுமா? இந்த சிரிப்பு போதுமா…” என இரண்டு ஆட்காட்டி விரலாலும் உதட்டைப் பிடித்து இழுத்து காட்டினாள் கிண்டலாக.
அவர்களுக்கு பின்னாலிருந்து கவிதாயினி சிரிக்கும் சத்தம் கேட்டு இருவரும் பட்டென விலகி நின்று அவளை பார்த்தனர். மகளின் சிரிப்பில் இருவரின் முகத்திலும் முறுவல் வந்தது.
அருந்ததிக்கு கூடவே வெட்கமும் எட்டிப் பார்த்தது முகத்தில், மகள் பார்த்ததை எண்ணி.
“குட்டிம்மா… அப்பாவ ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க. நான் அப்பாக்கு டிபன் எடுத்து வைக்கறேன். டைமாச்சு…” என அங்கிருந்து நழுவி விட்டாள் அருந்ததி.
“தப்பிச்சு ஓடற. இருக்குடி உனக்கு…” என முணுமுணுத்தவன் சிரித்துக் கொண்டே மகளை தூக்கி கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, அவளிடம் பேசிக் கொண்டே அருந்ததி எடுத்து வைத்திருந்த உடையை அணிந்து தயாராக ஆரம்பித்தான்.
அஸ்வத்தின் குடும்பம் மதுரைக்குதான் கிளம்பிக் கொண்டிருந்தனர். அருந்ததியின் அத்தை சித்ராவின் மகன் சரவணனின் திருமணத்திற்குதான் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதோ சரவணின் திருமணத்திற்கு என எல்லோரும் வந்திருந்தனர். அண்ணனின் சம்மந்தியை முறையாக நேரே வந்து பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தனர் சித்ராவும், அவரது கணவரும்..
அதுபோல் அருந்ததிக்கு திருமண அழைப்பு வைக்கும்போது, பூஜாவுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்திருந்தனர். ஆதலால் குடும்பமாக எல்லோரும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்.
சரவணின் தங்கை பானுமதிக்கு முன்று வருடங்களுக்கு முன்தான் திருமணம் முடிந்திருந்தது. அவளும் தன் ஒரு வயது குழந்தையுடன் வந்திருந்தாள்.
இரவு ரிசப்ஷன் முடிந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மதுரையிலேயே திருமணம் என்பதால் இரவு விருந்து முடிந்து, படுப்பதற்காக அருந்ததியின் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் இவர்கள் எல்லாம்.
அஸ்வத்தை பார்த்து “வீட்டுக்கு கிளம்பலாமா மாப்பிள்ளை. பாப்பாவும் தூங்க ஆரம்பிச்சிட்டா…” என்றார் ராஜேந்திரன் தோளில் இருந்த பேத்தியை தட்டிக் கொடுத்து கொண்டே.
பேத்தி என்றால் ராஜேந்திரனுக்கு உயிர். மகளிடம் நேரிடையாக காட்ட முடியாத பாசத்தை எல்லாம், அவளது மகளான பேத்தியிடம் பொழிந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல் கவிதாயினிக்கும். ராஜேந்திரன் தாத்தா என்றால் கொள்ளை பிரியம். அதுவும் அவரது மீசையின் மீது அலாதி ஆசை.
அவளுக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே தாத்தாவின் மீசையை இழுத்து விளையாடுவதில் அத்தனை இஷ்டம். முடிந்த போதெல்லாம் புவனாவுடன் சென்னைக்கு வந்து பேத்தியை பார்த்துவிட்டு சென்றுவிடுவார். வரும்போதெல்லாம் அவளுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் வாங்கி நிரப்பிவிட்டுதான் செல்லுவார்.
கவிதாயினியும் ஒவ்வொரு முறை தாத்தா பாட்டியை பார்க்க வரும்போது, ஏதாவது பரிசு பொருளை வாங்கி வந்து தந்து மகிழ்வாள்.
இன்றுகூட தாத்தாவுக்கு பாட்டிக்கு என தனித்தனியாக, அவர்களுக்கு பிடித்த மாதிரி பரிசு பொருட்கள் வாங்கி வந்து கொடுத்திருந்தாள்.
“ம்ம்… கிளம்பலாம் மாமா…” என தாய் தந்தையை திரும்பிப் பார்த்தான் அஸ்வத். அவர்களும் கிளம்பலாம் என தலையசைத்து கொண்டே எழுந்தனர்.
“ப்பா… நான் அத்தைகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என எழுந்தாள் அருந்ததி.
“வாங்க அண்ணி…” கிளம்பலாம் என பூஜாவை பார்த்து தலையசைத்தவள், சைந்தவியின் கையை பிடித்து எழுப்பியவாறே, பூஜாவின் கணவனையும் பார்த்து, “வாங்க ண்ணே” என எல்லோரையும் அழைத்து சென்றாள்.
புவனாவும், பாரிஜாதமும் மண்டபத்திலேயே தங்கிக் கொள்கிறேன் என சொல்லியிருந்தனர். ராஜேந்திரன் மட்டும் இவர்களை எல்லாம் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
எல்லோருக்கும் படுப்பதற்கு ஏதுவாக வசதி செய்து கொடுத்துவிட்டு, காலையில் வருவதாக சொல்லி ராஜேந்திரன் திரும்பவும் மண்டபத்திற்கு வந்துவிட்டார்.
அருந்ததி அஸ்வத் கவிதாயினி மூவரும் அருந்ததியின் அறையில் படுத்திருந்தனர்.
“யாராவது இப்படி நைட்ல தூங்கும்போதும் பட்டுப்புடவைய கட்டிட்டு தூங்குவாங்களா…? நீங்கதான் இந்த சேட்டையெல்லாம்…” என அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.
“ஸ்சு. பாப்பா முழிச்சிப்பாடி. எனக்கு உன்னை இப்படி பார்க்கதான் பிடிச்சிருக்கு” என அவள் புருவத்தை நீவி விட்டவன், அவளது கன்னத்தில் தனது மூக்கால் உரச ஆரம்பித்தான்.
“தெரியும் எதுக்கு நீங்க அடி போடறீங்கன்னு. இப்ப மட்டும் பாப்பா முழிக்க மாட்டாளா…?”
“அதெல்லாம் முழிக்க மாட்டாள். நான் பார்த்துக்கறேன். நீ சத்தம் காட்டாம இரு”.