காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கையேற்றி கடவுளை வணங்கிக்கொண்டிருந்தாள் எழில்விழி.
“ அம்மா மீனாட்சி என்னோட வாழ்க்கையை சந்தோஷமாவும் நிம்மதியாகவும் அமைச்சு தா ” என வேண்டிக்கொண்டு வெளிய வர ஏனோ நேற்று இருந்த கலக்கம் இன்று இல்ல எழிலின் மனதில்.
வெட்கமும் ஒரு வித சந்தோஷமும் மனதில் இருக்க புன்னகையுடன் அடுக்களைக்குள் செல்ல, அங்கு தெய்வானை அனைவருக்கும் டீ போட ஆயத்தமாக,
அவரை கண்டவுடன் ஒரு நிமிடம் தயங்கி பின் மெதுவாக தெய்வானையின் அருகில் செல்ல அவளை கண்டவுடன் எதுவும் பேசாது அமைதியாக அவரின் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
அதனை கண்டு மனம் சற்றே சுணங்க மெதுவாக,
“ அத்தை நான் டீ போடவா?? ” என மெல்லிய குரலில் கேட்ட எழில்விழியை கண்டு
“ இங்க பால் இருக்கு இதுல டீ தூள் இருக்கு இதுல சீனி இருக்கு எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வா ” என கூறி தெய்வானை நகர்ந்துவிட சரி என வேகமா தலையை ஆட்டி பாலை கொதிக்க வைத்த எழில்விழிக்கு,
“ என்ன அத்தை டீ போடுன்னு சொன்னாங்க எத்தனை பேருக்குன்னு சொல்லல இதுல பால் நெருக்கி ரெண்டு லிட்டர்கிட்ட இருக்கே. அப்பிடியே போடுறதா இல்ல கொஞ்சமா போடுறதான்னு தெரியல. பேசாம அவுங்க போட நாம பக்கத்துல நின்னுருக்கலாம் ” என தன்னை நொந்துகொண்டு பால் அடுப்பை சிறுத்து வைத்துவிட்டு தெய்வானையை தேடி செல்ல அவரை காணவில்லை.
அதில் கண்கள் கலங்க ஆரம்பிக்க சரியாக அதே நேரம் தூங்கி எழுந்து வந்த கதிரின் ரெண்டாவது அக்கா ஜெயா,
“ என்ன எழிலு இங்குன நிக்குற. எதாவது வேணுமா??…” என கேட்க
“ இல்ல அண்ணி அது டீ……”
“ டீ வேணுமா?…. போட்டுத்தரவா????… வா ” என கூறி அடுக்களைக்குள் சென்ற ஜெயாவை தொடர்ந்து வந்த எழில்விழி
“ இல்ல அண்ணி டீ அத்தைகிட்ட நான் போடுறேன்னு சொன்னே. ஆனா எத்தனை பேருக்குன்னு தெரியல. கேட்க மறந்துட்டேன் ”
“ ஓ!!… சரி சரி. இப்போதைக்கு ஒரு பத்து பேருக்கு போடு அப்புறம் தேவைன்னா போட்டுகலாம் ”
“ ஹ்ம்ம் சரிங்க அண்ணி ” என கூறி டீ போட ஆரம்பித்த எழிலை கண்டு
“ அப்புறம் எழிலு ”
“ என்னங்க அண்ணி ”
“ நேத்தவிட முகம் இன்னைக்கு இன்னும் ஜொலிக்குது ” என கூற எதுவும் கூறாது வெட்கத்துடன் சிரித்த எழிலை கண்டு
“ அதுசரி….” என கூறி சிறுது நேரம் பேசிவிட்டு தனக்கும் தனது கணவருக்கும் டீ எடுத்து சென்றுவிட அதற்கடுத்த வாணியும் சாரதாவும் அவரவர்கள் கணவர்மார்களுக்கு எடுத்து சென்றுவிட மிச்சத்தில் தெய்வானைக்கும் ஸ்வாமிநாதனுக்கும் விஜயனுக்கு கொடுத்துவிட மீதம் இருந்த ஒரு டீ பார்த்த எழில்விழிக்கு தன் மணவாளனை விட்டுவிட்டு அதை குடிக்க மனம் வர வில்லை.
அதனால் டீயுடன் தனது அறைக்கு சென்ற எழிலோ அங்கு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த கதிரவனை கண்டு மனதில் பயம் வராது இருக்க மெதுவாக அருகில் சென்று நிதானமாக ரசிக்க ஆரம்பித்தாள்.
‘ ஹையோ செமையா இருக்காரு. ஹ்ம்ம் பரவால கோவக்காரரா இருந்தாலும் முசுடு இல்ல நல்லா புரிஞ்சு நடந்துக்குவாரு போல ” என நேற்றைய இரவின் நினைவில் தனது கணவனை மனதில் கொஞ்சிக்கொண்டு தயக்கத்துடனும் வெட்கத்துடனும்,
“ என்னங்க… என்னங்க….” என மெதுவாக எழுப்ப அதற்கு அசையாது உறங்கிக்கொண்டிருந்த கதிரவனை கண்டு
‘ என்ன எழுந்திருக்கல…. ஆமா நீ பேசுறது முழுச்சுருக்கவுகளுக்கே கேட்காது இதுல தூங்குறவருக்கு மட்டும் கேட்குமாக்கும்’ என எழில்விழி மனசாட்சி திட்ட,
அதனால் இன்னும் சற்றே சத்தம் அதிகமாக கதிரின் கைகளை தொட்டு,
“ என்னங்க… என்னங்க.. எழுந்துரிங்க ” என எழுப்ப
“ ஏய்!!…. என்ன??…..” திடீரென கத்திக்கொண்டு எழுந்த கதிரவனை கண்டு பயந்து எழில்விழி வேகமாக எழ பக்கத்து மேஜையில் வைத்து இருந்த டீ கீழே விழுந்தது. அதனை பார்த்து பாவமாக எழில்விழி கதிரவனை நோக்க அவனோ அவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான்.
கணவனின் முறைப்புக்கு காரணம் புரியாது அத்தனை நேரம் விடுப்பு எடுத்திருந்த எழில்விழியின் பயம் மனதில் வந்தமர எதுவும் கூறாது நிற்க,
“ ஏய் உன்னையதான் என்ன??? ” மீண்டும் அதட்டிய கதிரவனிடம்
“ இல்ல…. இல்லங்க…. உங்களை எழுப்பலாம்ன்னு…”
“ நான் உன்னைய எழுப்ப சொல்லிட்டு படுத்தேனா??….”
“ இல்லங்க ”
“ தூங்குற எனக்கு எப்ப எழுந்திருக்கணும்ன்னு தெரியும். அலாரம் வச்சுட்டுதான் படுத்துருக்கேன் ”
“ சரிங்க ”
“ சரி எதுக்கு எழுப்புன?? ”
“ உங்களுக்கு டீ கொண்டுவந்தேன் ”
“ ம்ப்ச் உன்கிட்ட நான் எனக்கு டீ வேணும்ன்னு கேட்டேனா ”
“ இல்லங்க நானேதான்…..”
“ நீ கொண்டுவந்த நான் குடிக்கனுமா??? ” என மீண்டும் சிடுசிடுப்புடன் கேட்ட கதிரவனிடம்
என்ன கூறுவது என தெரியாது கண்கள் கலங்கி அழுகைக்கு தயாராக விழியின் விழி நீரில் ஆடவன் மனது ஏனோ சஞ்சலப்பட கண்களை மூடி ஒரு நிமிடம் கோவத்தை குறைத்த கதிரவன்,
“ இங்க பாரு எனக்கு டீ காபி குடிக்கிற பழக்கம் இல்ல. அதோட இந்த வெத்தலை பாக்கு தண்ணி சீகரெட்ன்னு எதுவும் இல்ல. அப்புறம் அலாரம் வச்சு நானே எழுந்துக்குவேன். நீ இனிமே என்னைய எழுப்ப வேணாம். இப்போ போ நான் அப்பறம் வரேன் ” என கூறி மீண்டும் உறங்க ஆரம்பிக்க
சற்று முன் மனதில் இருந்த துள்ளல் இல்லாமல் அமைதியாக எழுந்து செல்ல பார்க்க எழில்விழி என கதிரவன் தீடிரென அழைக்க,
‘ இப்ப என்னவோ ’ என சிறு பயத்துடன்
“ என்னங்க…” என கேட்ட எழில்விழியிடம்
“ கீழ கொட்டிருக்க டீய நானா சுத்தம்பண்றது ”
“ அச்சச்சோ…. இல்லங்க மறந்துட்டேன் ” என கூறி அருகே இருந்த பழைய துணியை வைத்து சுத்தம் செய்துவிட்டு கதிரவனை பார்க்க அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
ஏனோ இப்பொழுது கதிரவனை ரசிக்க தோணாது மனதில் பயம் ஏற்பட வேகமா அறையை விட்டு வெளியேறினாள்.
“ ச்ச…. காலைல எழுந்தவுடனே ஒரு மடக்கு டீயால தொண்டையை நனைக்கலைனா எனக்கு அன்னைக்கு முச்சூடும் நல்லாவே இருக்காது. எவ்வளவு ஆசையா அந்த டீயை போட்டேன் எழுப்புனவுடனே இல்ல எனக்கு வேணாம் நீ குடின்னு சொல்லிருந்தா நாவாட்டுக்கு சந்தோசமா குடிச்சுருப்பேன்.
“ ச்ச…. ஒரு வேலை அப்படி ஒன்னு நடக்கவே இல்லையோ!!!….. இல்லைதான் போல இன்னைக்கு இவுக முகமும் பேச்சையும் பார்த்தா நாம கனவு கண்டுருக்கோமா??….. இல்ல இல்ல நடந்துச்சு. ஐயோ….. ஐயோ…. அந்த டீய குடுச்சுருந்தா இப்படி தேவை இல்லாம புலம்பிகிட்டு இருந்திருக்க மாட்டேன். இப்போ மறுபடியும் கேட்க முடியுமா???” என புலம்பிக்கொண்டு வந்தாள் எழில்விழி.
எழில்விழி கூடத்திற்கு வருவதை கண்ட ஸ்வாமிநாதான்,
“என்னத்தா நீ தான் இன்னைக்கு டீ போட்டியாமே??” என கேட்க
“ ஹ்ம்ம் ஆமா மாமா ”
“ நல்லா இருந்துச்சுத்தா. இனிமே உன் மாமியார் டீன்ற பேருல வைக்குற சுடுதண்ணீல இருந்து எனக்கு விடுதலை ” என கூறி சிரிக்க
அதில் கடுப்பான தெய்வானை எழில்விழியை முறைக்க,
‘ என்னடா கொடுமை அம்மாவும் பையனும் திடீர் திடீர்ன்னு நம்மள முறைக்குறாங்க ஆனா எதுக்குன்னு தெரியல ’ என மனதில் புலம்பிக்கொண்டு சுவாமிநாதனை கண்டு சிறு புன்னகை சிந்த
“ அப்புறம் எழிலு ”
“ என்னங்க மாமா ”
“ உங்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ”
“ என்னது மாமா????”
“ அது உன் புருஷனை தூங்குறப்போ எழுப்பாதத்தா. அவனுக்கு தூக்கத்துல எழுப்புனா அம்புட்டு கோவம் வரும். சின்ன பிள்ளைல அடிக்கவே வந்துடுவான் நான் எல்லாம் குச்சியை வச்சு எழுப்பிட்டு போயிடுவேன். எழுந்து கத்திக்கிட்டு இருப்பான் அப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சவுடன் அலாரம் வச்சு எழுந்துக்குறான். நீ எழுப்பாத சரியாத்தா ” என ஸ்வாமிநாதன் கூற
‘ வா…. தெய்வமே… வா… இவ்வளவு நேரம் எங்க இருந்திங்க உள்ள வச்சு உங்க மகன் என்னைய அந்த பேச்சு பேசுறாரு. இதை செத்த நேரம் முன்னாடி சொல்லிருந்தா எனக்கு ஒரு டீயாவது கிடைச்சுருக்கும் ’ என மனதில் புலம்பிக்கொண்டு வெளியே சரி எனும் விதமாக தலையை ஆட்டிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் எழில்விழி.
இன்று முதல் நாள் என்பதால் எழில்விழியை சக்கரை பொங்கல் செய்ய சொன்ன வாணியிடம் பொருட்கள் எங்கிருக்கிறது என கேட்டுவிட்டு பொங்கல் செய்து சாமிக்கு முன் வைத்து வணங்கி எல்லாருக்கும் குடுக்க, அனைவரும் எழிலின் கைப்பக்குவத்தை பாராட்டினர் தெய்வானை சாரதாவை தவிர.
பொங்கல் அனைவரும் உண்ணும்போது எழுந்து குளித்து வந்த கதிரவனிடம் ஸ்வாமிநாதன்,
“ கதிரு சாமிய கும்புட்டு வாப்பா சாப்பிடலாம் ” என அழைக்க சரி என்னு விதமாக தலையை அசைத்து கடவுளை வணங்கிவிட்டு காலை உணவிற்கு அமர வாணி கதிரின் அருகில் எழில்விழியை அமர வைத்து ஜெயாவுடன் அனைவருக்கும் பரிமாறினாள்.
சாப்பிட்டு முடிந்தவுடன் ஸ்வாமிநாதன் கதிரிடம்,
“ கதிர் மருமகபொண்ணும் நீயும் சேர்த்து இன்னைக்கு ஒரு எட்டு நம்ம ஊரு முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க அப்பிடியே உங்க ரெண்டு பேரு பெயர்ளையும் அர்ச்சனை பண்ணிருங்க” என கூற சரி என கூறி இருவரும் நடக்கிற தொலைவுதான் என்பதால் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
மஞ்சள் வண்ண காட்டன் புடவையை நேர்த்தியாக கட்டி மல்லிகை சூடி நடந்துவரும் வஞ்சியின் வதனத்தை கண்டு மன்னவனுக்கு மனம் உல்லாசமாக முகத்தில் மாந்தச புன்னகை உருவானது.
“ ஏன் விழி உனக்கு மல்லிகைனா ரொம்ப பிடிக்குமோ??? ” என கேட்க
காலையில் இருந்து ஒரு மாதிரி இறுக்கத்துடன் இருந்த எழில்விழியின் மனம் கதிரின் விழி என்கிற அழைப்பில் புத்துணர்வு பெற கதிரவனை நிமிர்ந்து பார்த்து சிறு புன்னைகையுடன் ஆம் எனும் விதமாக தலை ஆட்ட,
அப்பொழுதுதான் அவளுக்கு உரைத்தது அவளை அனைவரும் எழில் என அழைக்க கதிர் மட்டும் நேற்றிலிருந்து விழி என அழைப்பது. அதில் மனதில் இருந்த சிறு சங்கடமும் விடைபெற உற்சாகமானாள் கதிரின் விழி.
பின் சிறு சிறு கதிரவனின் கேள்விகள் அதற்கு எழில்விழியின் ஓரிரு வார்த்தை பதிலும் அதிகப்படியான தலையாட்டலும் என அவர்களின் நடை பயணம் கோவிலில் முடிவடைய கோவிலுக்குள் நுழைந்தனர் அர்ச்சனை பொருட்களுடன்.
“ விழி நான் வேகமா நடந்து பழகிட்டேன். உன்னைய நான் யோசிக்கவே இல்லை. ரொம்ப வேகமா நடந்ததால உனக்கு தண்ணி எதுவும் வேணுமா வாங்கிட்டும் வரவா???” என கேட்ட கதிரவனை கண்டு விழிவிரித்தாள் எழில்.
உண்மையில் கதிரவனின் நடைக்கு எழில்விழி கிட்டத்தட்ட ஓடி வரவேண்டிய நிலையில் இருந்தாள். இருந்தாலும் பேச்சு ஸ்வாரஸ்யத்துடனும் மெதுவாக போக சொல்ல பயந்தும் வேக எட்டுகளுடன் கதிரவனுடன் கோவிலை அடைந்தாள்.
ஆனால் அதனை உணர்ந்து தண்ணீர் வாங்கிவரவா என கேட்ட கதிரவனை எழில்விழிக்கு ஏனோ இந்த நிமிடம் ரொம்ப பிடித்தது.
“ இல்ல வேணாங்க. தண்ணி தவிக்கல. வாங்க அர்ச்சனை பண்ணி ஸ்வாமி கும்புடுவோம் ” என கூறி பூசாரியிடம் அர்ச்சனையை குடுக்க சரியாக கதிரவனுக்கு தொலைபேசி இசைத்தது.
அதே நேரம் பூசாரியும் அர்ச்சனை யார் பேருக்கு என கேட்க எழில்விழி கதிரவனை நோக்க அவன் தொலைபேசியில் எதோ செய்ய,
‘ ஹ்ம்ம் எதோ முக்கியமான கால் போல’ என எண்ணி கதிரவன் எழில்விழி என பெயரும் ராசி நட்சத்திரமும் கூற பூசாரி அர்ச்சனை செய்ய நகர்ந்துவிட எழில்விழி கதிரவனை நோக்க அவன் எழில்விழியை முறைத்துக்கொண்டிருந்தான்.
அதில் ஒரு நிமிடம் ஜெர்க்கானவள்,
“ ஆத்தி!!…. இப்போ என்னன்னு தெரியலையே எதுக்கு முறைக்குறாரு ” என கலங்கி நின்றாள்.இருந்தாலும் அர்ச்சனை முடிந்து சுவாமி கும்பிட்டு இருவரும் கோவிலை சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர அதுவரை கதிரவன் எழிலை முறைத்துக் கொண்டிருதான்.
எதற்கு இந்த கோவம் என அறியாது பேதை கலங்கி கதிரவனிடம் சற்றே தைரியமா,
“ என்னங்க எதுக்கு கோவமா இருக்கீங்க??” என கேட்க
“ ஏன் உனக்கு தெரியல??” என பல்லைக்கடித்துக் கொண்டு கேட்ட கதிரவனின் கண் பார்வையில் பயம் வர,
“ இல்ல…. இல்லங்க…. தெரியல என்ன செஞ்சேன்னு”
“ என்ன தைரியம் உனக்கு??… புருஷன் பெயரை சொல்ற என் எதுக்கவே ”
“ போனை தானே பார்த்துகிட்டு இருந்தேன். கூப்பிட்டு என்னங்க பேரை சொல்லுங்கன்னா சொல்ல மாட்டேன்னா. நான் பக்கத்துல இருக்குறப்பவே அசால்ட்டா புருஷன் பேர சொல்ற. அப்போ நான் எங்கயாவது வெளியூர் போய்ட்டா என்ன சொல்லுவ அந்த கதிரவன் ஊருக்கு போயிருக்கான் அப்பிடின்னு சொல்லுவ.அவ்வளவுதான் உன்கிட்ட எனக்கு மரியாதை இல்ல” என கூறிய கதிரவனுக்கு பதில் கூற தெரியாது கலங்கி தவித்து நின்றாள்.