அத்தியாயம்-24
பெங்களூரின் மிக பெரிய மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவர் அறையின் முன்னே, காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் மதி..
மீனாவுக்கு ஒரு அவசர பிரசவ கேஸ் ஒன்று பார்க்க வேண்டி இருந்ததால், அவள் அங்கு இருந்தாள்..
அந்த மருத்துவமனை வாயிலுக்கு வந்தது ராஜாவின் கார்..
பெங்களுரில் ஒரு வேலை என்று கூறிவிட்டு ராஜா,பாண்டி, இருவரும் கிளம்பி வந்திருந்தார்கள்..
பாண்டியிடம் ராஜா,
“பாண்டி, உள்ள போய் அந்த பொண்ணை பத்தி விசாரி..நான் பார்க் பண்ணிட்டு வரேன்..”
“சரி மாப்பு..”
அவன் வரவேற்பில் சென்று மீனாவை பற்றி விசாரித்தான்..
“அவங்க ஒரு, எமெர்ஜென்ஸி டெலிவரி கேஸ்ல இருக்காங்க.. நீங்க நேரா போய், ரைட்ல செகண்ட் ரூம் முன்ன வெய்ட் பண்ணுங்க..அவங்க வந்ததும் வர சொல்லுறேன்..”
அவள் கூறியபடி அங்கு சென்றான்..அங்கு எந்த இருக்கையில் அமரலாம் என்று பார்வையால் சல்லடை போட்ட போது, மதி அவன் கண்ணில் பட்டாள்..
அதிர்ந்து போய் அவளை பார்த்தவன்,
‘இவ மதுவா?? மதியா??’
அவளை ஊன்றி கவனித்தான்..அவள் கழுத்தில் இருந்த ராஜாவின் சங்கிலி கண்ணில் பட்டது..
‘இவ மதி தான். ஆனா..??’
அவள் மேடிட்டிருந்த வயிற்றை பார்த்து குழம்பினான்..
தன் அலைபேசியை எடுத்து ராஜாவுக்கு அழைத்தான்..
“என்ன டா பார்த்துட்டியா??”
“இல்ல மாப்பு..அந்த பொண்ணு ஏதோ, அவசர கேஸ் பார்க்குதாம்..இங்க, நம்ம மதி இருக்கு மாப்பு..”
பரபரப்பான ராஜா,
“எங்க டா??அவளை மிஸ் பண்ணிடாத..பேசிட்டியா??”
“இல்ல மாப்பு..இங்க தான் இருக்கு. நீ உடனே வாயேன்..”
அவனின் குழப்பத்தில், காரை சரியாய் நிறுத்தாமல் வேகமாய் இறங்கி, அவனிடம் வழி கேட்டுக் கொண்டே சென்றான்..
அதற்குள், மதிக்கு மருத்துவர் அறையில் இருந்து அழைப்பு வர, அவள் உள்ளே சென்றாள்..
பாண்டியை கண்ட ராஜா,
“எங்க டா அவ??”
மகப்பேறு மருத்துவர் அறையை காட்டினான்..
அதை கண்டு ராஜாவின் முகத்திலும் குழப்பம்,புருவத்தில் யோசனை முடிச்சுக்கள்..
“சரி பாண்டி.. நான் காரை ஒழுங்கா நிறுத்தல..நீ போய் நிறுத்திட்டு வா..”
அவன் கையில் கார் சாவியை கொடுத்து அனுப்பினான்..
அவள் வருகைக்காக காத்திருந்தான்..
சில நிமிடத்தில் உள்ளிருந்து வெளியே வந்தாள் மதி..
[the_ad id=”6605″]
அவளின் நிலை பார்த்து, கண்ணில் அதிர்வோடு எழுந்து நின்றான் ராஜா..
அருகில் இருந்த செவிலி பெண்ணுடன், புன்னகையுடன் பேசிக் கொண்டே வந்தாள் மதி..
சில நொடியில் தன்னை சமாளித்து கொண்டவன்,அவள் முன்னே சென்று நின்றான்..
அந்த பெண் சென்றதும் திரும்பிய மதி, இவனை கண்டு உச்சபட்ச அதிர்ச்சியில் நின்றாள்..
அவளை கூர்ந்தபடி,
“வணக்கம் மேடம்..என்னை ஞாபகம் இருக்கா??”
“…”
“ஞாபகம் இருக்கு போல..எப்படி மறக்கும்??நீங்க என்ன சொன்னாலும், நம்பிட்டு இருந்த முட்டாளை மறக்குமா??”
“…”
அவள் கண்கள் கலங்கி, நீர் வெளியே வர காத்திருந்தது..
“அப்புறம், எப்படி இருக்கீங்க??உங்களுக்கு கல்யாணம் ஆகி, ஒரு ரெண்டு மூணு மாசம் இருக்குமா??இப்போ தானே ஆச்சு..உங்க அப்பா, பத்திரிகை கொண்டு வந்தாரே..”
யோசிப்பது போல, ஒரு விரலால் புருவத்தின் மேல் தேய்த்து, பார்வையை சுருக்கினான்..
பிறகு, அவள் மேடிட்டிருந்த வயிற்றை கேள்வியாய் பார்த்தான்..
“குழந்தைக்கு, அப்பா யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களா??”
“வரு..”
அதிர்ந்து போய் கத்தினாள்..
“ஷு..ஏன் கத்துற??நான் கேட்டதையே தாங்க முடியலையே..நாளைக்கு, இந்த ஊர் உலகம் கேட்குமே, அப்போ என்ன பதில் சொல்லுவ??ஹ்ம்ம்..நீ என்னமோ சொல்லிட்டு போ.. என்ன தைரியம் இருந்தா, என் குழந்தைக்கு அந்த நிலை வாரத்துக்கு காரணமா இருப்ப”
கண்களை இறுக்க மூடித் திறந்தாள்..
கண்ணீர் கன்னத்தில் வழிந்து இறங்கியது..
“மிஸ்ஸர்ஸ் ராஜவர்மன், உங்க ரிப்போர்ட்ஸ் டாக்டர் ரூம்ல மறந்துட்டீங்க..இந்தாங்க..”
ஒரு நர்ஸ், கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார்..
“மிஸ்ஸர்ஸ் ராஜவர்மன்??உங்க ஹஸ்பண்ட் பேர் வேற இல்ல??”
புருவத்தை உயர்த்திக் கேட்டான்..
“ப்ளீஸ் வரு..”
“அந்த பேரை சொல்லாத. சொன்னா, உன் நிலைமையை கூட பார்க்க மாட்டேன்..ஓங்கி அறைஞ்சுடுவேன்.. இப்படி சொல்லி சொல்லி தானே, நீ நெனச்சதெல்லாம் சாதிச்ச..”
பல்லை கடித்துக் கொண்டு கூறினான்..
“…”
“சொல்லுடி, எதுக்கு என் கிட்ட சொல்லாம கிளம்பி வந்த??எதுக்கு, என் மாமா மகளுக்கு பதிலா, என் வீட்டுக்கு வந்த??எதுக்கு, என்னை காதலிக்குற மாதிரி நடிச்ச??”
“நான் நடிச்சனா??”
திகைத்து போய் கேட்டாள்..
“ஓ..நடிக்கலையா??அப்புறம் ஏன், சொல்லாம கொள்ளாம ஓடி வந்த. சொல்லுடி, உனக்கும் என் மாமா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்..??”
“…”
“இப்போ பதில் சொல்லுறியா இல்லியா??”
அவன் கேட்டுக் கொண்டிருக்கையில்,
தன் கையில் இருந்த மருத்துவ சீட்டை பார்த்த படி வந்த மீனா,
“மித்து, இந்த மாத்திரை இப்போ ஸ்டாக் இல்லையாம்..நாளைக்கு வருமாம். வாங்கிட்டு வரேன்..இப்போ நீ கிளம்பு..கேப் புக் பண்ணவா??”
அவளிடம் பதில் இல்லை என்றதும், அவளை நிமிர்ந்து பார்த்தாள்..
அவள் கண்ணில் கண்ணீர்..
“ஏண்டி அழற??”
அவள் திரும்பி ராஜாவை பார்த்தாள்..
அவளின் பார்வையை தொடர்ந்து பார்த்த மீனா,
“யார் இவர்??”
“கேட்குறாங்கள்ல சொல்லு..நான் மிளகாய் அரைக்க, தலையை கொடுத்த கேணையன் இவன்னு..”
“ஹலோ மிஸ்டர், என்ன பேசுறீங்க??”
“நான் என்ன தப்பா பேசிட்டேன்..??உங்க பிரெண்ட் செஞ்சதை தான் சொன்னேன்..”
“இங்க பாருங்க..”
அவள் பேச்சை, அவளின் கையை பிடித்து தடை செய்த மதி,
“மீனு,அவர் வரு..”
சட்டென,
கண்ணில் ஆச்சர்யத்துடன், அவனை பார்த்தாள் மீனா..
“நீங்க தான் வரு வா?? உங்களை பத்தி தான், எப்போவும் பேசிட்டே இருப்பா மித்து..”
“என்ன பேசுவா??நான் என்ன சொன்னாலும் நம்பும் முட்டாள் இவன்னா??”
அவன் கோபம் புரிந்தது..
“உங்க கோபம் புரியுது..உங்க சார்பா இவளுக்கு, அறை கூட குடுத்துட்டேன்..அப்புறம், இவ நிலை தெரிஞ்சு, பொழச்சு போன்னு விட்டுட்டேன்..”
அப்பொழுது தான், இருக்கும் இடம் உணர்ந்தவள்..
“கொஞ்சம் இருங்க. நான் பெர்மிசின் போட்டுட்டு வரேன்..வீட்டுக்கு போய் பொறுமையா பேசுவோம்..”
வேகமாய் அங்கிருந்து சென்றாள்..
அவனை, பாவமாய் பார்த்துக் கொண்டு நின்றாள் மதி..அவள் புறம் திரும்பாமல் நின்றான் ராஜா..
மீனா திரும்பி வந்ததும்,
“என் பேர் மீனா..இவ பிரெண்ட், சின்ன வயசுல இருந்தே..என் அப்பா நடராஜன்..அம்மா மஞ்சுளா..நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு..அப்டி சொல்ல முடியாது, இவளும் அவங்களுக்கு ஒரு பொண்ணு..அப்புறம், உங்களை அண்ணானு கூப்பிட்டுகிறேன்..வித் யூவர் பெர்மிஸ்ஸன்..”
புன்னகையுடன் கூறினாள்..
“கேப் புக் பண்ணவா ண்ணா??நான் தினமும் பஸ்ல வருவேன்..”
“நான், கார்ல தான் வந்தேன் மா..”
பேசிக் கொண்டே, கார் இருக்கும் இடம் கேட்க, பாண்டிக்கு போன் செய்தான்..
“இங்க தான் மாப்பு..”
இடத்தை சொன்னான்..அந்த இடம் நோக்கி சென்றார்கள்..
தூரத்தில் இவர்களை பார்த்த பாண்டி, மீனாவை பார்த்து, இமைக்க மறந்தான்..
வெள்ளை உடை போட்ட தேவதைகள், அவனை சுற்றி நின்று கொண்டு, இசைஞானியின் இசைக்கு, நம்தன நம்தன பாடி, ஆடிக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் இவனை நெருங்கியதும், சுய நினைவுக்கு வந்தான்..
“யாரு ண்ணா இவர்??”
‘இவனை அண்ணன்னு கூப்பிடுது.அப்போ ரூட் கிளியர்.. என் நெஞ்சிலே பாலை வார்த்துட்ட மா, வார்த்துட்ட..அப்போ, எனக்கு முறை பொண்ணு..’
“இவன் பாண்டி.. என் பிரெண்ட்..”
“ஹாய் வணக்கமுங்க.. இவ்ளோ அழகா ஒரு பிரெண்ட் இருக்குறதா, மது சொல்லவே இல்லியே..”
அத்தனை பற்களையும் காட்டிக் கொண்டு கூறினான்
அவனை முறைத்தாள் மீனா..
‘ரூட்டை மாத்து..’
உஷார் ஆனா பாண்டி..
“ஏம்மா மது??இப்படியா சொல்லாம கிளம்பி வருவ. யார் கிட்ட சொல்லலைனாலும், உன் பாசமலர், என் கிட்ட சொல்லி இருக்கனும் இல்ல..நாம, சிவாஜி சாவித்ரி மாதிரி, எவ்ளோ பாசமா பழகுனோம்..”
அவனை பார்த்து சிரிக்க முயன்ற மதி,
“சாரி ண்ணா.. எப்படி இருக்கீங்க..??”
“உன்னை தேடி தேடியே, பத்து கிலோ குறைஞ்சுட்டேன்..”
சங்கடமாய் தலை குனிந்தாள்..
பிறகு அனைவரும் கிளம்பி, அவர்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு சென்றார்கள்..
உள்ளே நுழைந்ததும்,கூடத்தில் அவர்களை அமர சொன்ன மீனா, விரைந்து உள்ளே சென்றாள்..
மதி அமராமல், ராஜாவின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள்..
“உட்காரு மா, மது..”
“பரவால்ல ண்ணா..”
“உட்கார சொல்லுடா..இந்த நிலையில, ரொம்ப நேரம் நிற்க கூடாது..”
அவள் முகம் மலர்ந்தது..
எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..
சற்று யோசித்த பாண்டி,
“மாப்பு, உனக்கும் மதுவுக்கும்..”
எப்படி கேட்பது என்று தெரியாமல், தயங்கி நிறுத்தினான்..
“கல்யாணம் ஆயிடுச்சு..”
“என்ன மாப்பு..??இவ்ளோ நாள், என் கிட்ட கூட சொல்லல..”
[the_ad id=”6605″]
“இந்த மேடம் தான், யார் கிட்டயும் சொல்ல வேண்டாமுன்னு சொல்லிட்டு, கிளம்பி வந்துட்டாங்க, எனக்கே சொல்லாம..”
தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..
“அத்தை தான், பேரன் பேத்தியை பார்க்கணும் பார்க்கணுமுன்னு சொல்லிட்டே இருந்துச்சு..நீ, இவ்ளோ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவன்னு, எதிர் பார்க்கல மாப்பு..”
அவன் கிண்டலில், ராஜாவின் முகம் சிவந்தது..
“டேய், அடி வாங்காத..”
“என்னமோ போ மாப்பு..நானெல்லாம் பேசிட்டே இருந்து, ஒண்ணும் பண்ண முடியலை..ஆனாலும், நீ அமைதியா இருந்தே சாதிச்சுட்ட.அமைதியா இருக்குறவங்களை தான், நம்பவே கூடாது மாப்பு…”
“டேய்..”
“வாழ்த்துக்கள் டா மச்சான். அப்பா ஆக போற”
அவன் கையை பிடித்து குலுக்கினான்..
“உனக்கும் வாழ்த்துக்கள் பாசமலரே..”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, காபி கோப்பைகளுடன் வந்தாள் மீனா..
“எடுத்துக்கோங்க ண்ணா..”
பாண்டியிடமும் ஒன்று நீட்டியவள்,மதிக்கு பழச்சாறு கொடுத்தாள்..
“உங்க பிரெண்ட்க்கு எத்தனை மாசம்..??”
ராஜாவின் கேள்வியில்,
“ஆறு முடிஞ்சு, ஏழு ஆரம்பிக்க போகுது..”
மதியிடம் இருந்து பதில் வந்தது..
“நானா தேடி வர்லைன்னா, பிரசவம் முடிஞ்ச பிறகு கூட, எனக்கு தெரிஞ்சுருக்காது, என் பிள்ளையை பத்தி..அப்படி தானே..”
அவன் கேள்வியில், பதில் சொல்ல முடியாமல் இருந்தாள்..
“அண்ணா, நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்..அப்புறம், மீதி விளக்கம் எல்லாம், இவ கிட்ட தனியா கேட்டுக்கோங்க..
ஏன்னா, இவ எல்லாம் சொல்ல மாட்டா.. அதான்..”
அவள் முகத்தை பார்த்தான் ராஜா..
“இவளும், உங்க மாமா பொண்ணு தான்.. அவரோட, முதல் மனைவியோட பொண்ணு..
அப்புறம், இவ உங்க வீட்டுக்கு வந்தது,மது சொல்லி தான்..
அவளுக்கு, இங்க ஒரு அரசியல்வாதியால தொல்லை..அதுனால, சேகர் மாமா அவளை, உங்க வீட்டுக்கு அனுப்ப முடிவு செஞ்சார்..அவளுக்கு, அங்க வர விருப்பம் இல்லை..அதனால, அவ இவளை அங்க அனுப்பிட்டு, அவ வெளிநாடு போய்ட்டா..
இவ கொஞ்சம், இல்ல இல்ல, ரொம்பவே அப்பா பைத்தியம்..
அவருக்கு எதுவும் ஆக கூடாதுன்னு, அங்க வந்துட்டா..
சேகர் மாமாக்கு, ஹார்ட் பிரோப்ளேம் உண்டு..ஒரு அட்டாக் கூட வந்துருக்கு..பிரமிளா அத்தைக்கு கூட தெரியாது..
நாங்க வேலை பார்த்த ஹாஸ்பிடல்ல தான், ஒரு வாரம் இருந்தார்..வீட்டுல, பிசினஸ் விஷயமுன்னு சொல்லிட்டு, ஒரு மாசம் கொடைக்கானல்ல ஓய்வெடுத்தார்.
எங்க குடும்பத்துக்கும், இவளுக்கும் மட்டும் தான் தெரியும் அது..அதான், அவர் மனசு பாதிக்க கூடாதுன்னு, அவ சொல் பேச்சு கேட்டு, அங்க வந்துட்டா..
அவ ஏதோ, சத்தியம் எல்லாம் வாங்கி இருப்பா போல..அதான், அங்க ஒண்ணும் சொல்லாம, கிளம்பி வந்துட்டா..”
“அப்போ உங்க பிரெண்ட்க்கு, அப்பா மட்டும் தான் முக்கியம்..மத்தவங்க, யார் என்ன ஆனாலும், கவலை இல்லை, அப்படி தானே..”
“அப்படி இல்ல ண்ணா.. இதுக்கு மேல நீங்க தான் பேசிக்கணும்., நீங்க இவளை தேடி வந்தது, எனக்கு ரொம்ப ஆச்சர்யம்..மதுவுக்கு கல்யாணம் ஆன உடனே, நீங்க இவளை தப்பா நெனச்சு இருப்பிங்க, அப்டின்னு தான் நெனச்சேன்..ஆனா, நீங்க சரியாய் கண்டுபிடிச்சு வந்துருக்கிங்க..
இவ சொல்லும் போது கூட நம்பல. இப்போ நம்புறேன், நீங்க சூப்பர் ண்ணா..அந்த ரூம்குள்ள போய் பேசுங்க..”
அவன் எழுந்து அறைக்குள் சென்றான்..
அவன் பின்னே மதியும் சென்றாள்..
அவர்கள் சென்றதும்,
பாண்டி..
“அப்புறம்..”
“என்ன அப்புறம்??”
மீனாவின் சிடுசிடுப்பில்..
“இன்னொரு கப் காபி கிடைக்குமா..??”
அவனை முறைத்து விட்டு, சமையல் அறைக்குள் சென்றாள் மீனா..
‘சரியான சாப்பாட்டு ராமன்னு நெனச்சுருப்பா..நீ இதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்ட டா பாண்டி.. சாமியாருக்கு இருக்குற திறமை கூட, உனக்கு இல்ல..’
புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தான் பாண்டி..
அறைக்குள்..
அவளை கூர்ந்த படி நின்றான் ராஜா..
உன் கிட்ட எந்த விளக்கமும் கேட்க மாட்டேன் என்று, அவன் ஒரு முறை கூறியது ஞாபகம் வந்தது..
“வ.. சாரி.. நான் வேணுமுன்னு செய்யல..என் சூழ்நிலை..”
அவன் முறைப்பில்,
உதடு கடித்தாள்..
“உன்னை என்னால மன்னிக்கவே முடியாது..உன் பிடிவாதத்தாலை, நாளைக்கு என் குழந்தை, இந்த சமுதாயத்தை எப்படி எதிர் நோக்கி இருக்கும்ன்னு நெனச்சாலே, உன் மேல கோபம் அடங்க மாட்டேங்குது..
எங்க குடும்ப வாரிசுக்கு, எதுக்கு அப்படி ஒரு நிலை வரணும்..”
“ஐ ம் சாரி வரு..”
வேகமாய் அவனை அணைத்துக் கொண்டாள், கண்ணில் நீரோடு..
அவளை விலக்க கை உயர்த்தியவன் கரம், அந்தரத்தில் நின்றது. அவன் உடலில் ஏற்பட்ட தொடு உணர்வில்..மதியின் வயிற்றில் ஏற்பட்ட அசைவை, அவன் உணர்ந்தான்..
சற்று திகைத்தவன், அவளை குனிந்து பார்த்தான்..
புன்னகையோடு, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,அவன் கையை எடுத்து, அசைவு தெரிந்த இடத்தில் வைத்தாள்..
மீண்டும், குழந்தையின் அசைவு தெரிந்தது..
கண்ணில் நீர் கோர்க்க, உணர்ச்சி பெருக்கில் நின்றான் ராஜா..
“உங்க பையனுக்கு, உங்களை தெரிஞ்சுடுச்சு வரு..”
கண்ணில் ஆச்சரியத்தோடு..
“பையனா??”
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்..
அவன் முகத்தை, இவளை நோக்கி இழுத்தவள், ஆசை பொங்க முத்த மழை பொழிந்தாள்..
அவளுக்கு இசைந்து கொடுத்து நின்றான் ராஜா..
பிறகு மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் வயிற்றில் முகம் பதித்து, இடையை கட்டிக் கொண்டான், சில நிமிடம்..
அவன் தலை கோதினாள் பெண்..
இருவரும் அந்த மோன நிலையில், சிறிது நேரம் நின்றனர்..
சற்று நேரத்தில் எழுந்தவன், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, கட்டிலில் சென்று அமர்ந்தான்..
அவன் அருகில் சென்று அமர்ந்தாள் மதி..
“உனக்கு, அங்க இருக்கும் போதே, இந்த விஷயம் தெரியுமா??”
“தெ.. தெரியும்..”
கசந்த முறுவலுடன்,
“சொல்லணுமுன்னு கூட தோணலைல..”
“இல்ல வரு.. நான் சொன்னா, நீங்க ஊர் அறிய, நம்ம விஷயம் சொல்ல அவசர பட்டு இருப்பிங்க..நான் மதுவுக்கு பதிலா வந்திருக்கும் போது, அது சரி வராது.. அவளுக்கு அப்போ, கல்யாணம் முடிவாகி இருந்தது..நான் யாருன்னு சொல்லாம, நம்ம கல்யாணத்தை அறிவிக்க முடியாது..அதோட, அப்பா ஊர் முன்னாடி, நான் அவர் பொண்ணுன்னு சொல்ல மாட்டார்..பிரமி ம்மா கிட்ட சத்தியம் பண்ணி இருக்கார்..அவரை, சங்கடப் படுத்த விரும்பல..”
“அதுனால, என்னை சங்கடப்படுத்த முடிவு பண்ணிட்ட .என் குழந்தையையும் சேர்த்து..”
“அந்த முடிவெடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு, எனக்கு தான் தெரியும் வரு..”
“போடி.உன்னை தேடி மூணு மாசம், பைத்தியம் மாதிரி அலைஞ்சுருக்கேன்..பெருசா பேசுறா..”
“சாரி வரு..”
அவன் கன்னம் வருடி கூறினாள்..
[the_ad id=”6605″]
அவள் கைகளை தட்டி விட்டான்..
அவனின் உடல் மெலிவு, இப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு..
அவளின் வருத்தத்தை கூறினால், அதற்கும் திட்டுவான் என்று, அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் மதி..
“அம்மாக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியல..உன்னை காணாம, என்னால வேற எதையும் யோசிக்க முடியாம சுத்தி இருக்கேன்..
இதுக்கு இடையில, என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அம்மா வேற கட்டாயப்படுத்தி..அதை சமாளிச்சு..உன்னை கண்டுபிடிச்சு இங்க வந்தா, நீ, இந்த உண்மையை மறைச்சு இருக்க..உன்னை இந்த நிலையில் பார்த்தா, என்ன நினைப்பாங்க அம்மா..”
அவன் சங்கடம் புரிந்தது..
“உனக்கு எல்லாத்தையும் விட, உன் சத்தியமும், உன் அப்பாவும் பெருசா போய்ட்டாங்க..”
“வ..”
“பேசாத…நீ யாரு??,உன் அப்பா அம்மா யாரு??இது எதுவும் எனக்கு தேவை இல்லை..நீ என்னை காதலிச்சது உண்மைனா, என் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கனும் இல்ல.??.உனக்கு நான், எல்லாத்தையும் விட முக்கியமா இருந்துருக்கணும் தானே..?? முதல்ல சொல்லாட்டி கூட, நான் உன் காதலை ஏத்துகிட்டதுக்கு அப்புறம் ஆச்சும், சொல்லி இருக்கணும்..”
“வரு நீங்க, உங்களுக்கு பொய் சொல்லுறது, நம்பிக்கை துரோகம் பிடிக்காது. மன்னிக்கவே மாட்டேன்னு சொன்னிங்க..”
“அதே நேரத்துல, நீ எப்படி இருந்தாலும், உன்னை விட மாட்டேன்னும் சொன்னேன்.
அது ஞாபகம் இருக்கா??”
அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல், அமைதியாய் இருந்தாள்..
சற்று நேரம், எதுவும் பேசாமல் அமைதியில் கழிந்தது..
அவர்கள் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்த மீனா,
“அண்ணா, அவளுக்கு சாப்பிடும் நேரம்..மாத்திரை கொடுக்கணும்..”
“கொடு மா..”
கூறிவிட்டு, வெளியே வந்தவன்,
“பாண்டி.. அம்மா கிட்ட எப்படி சொல்லன்னு, தெரியல டா..”
“விடு மாப்பு..அகலுக்கு போன் போட்டு, பக்குவமா சொல்லுறேன்..அது, அத்தையை சமாளிச்சுக்கும்..”
“ஹ்ம்ம்..”
அவன் முகம் தெளியவில்லை..
அறையில் இருந்து வெளியே வந்த மீனா,
“அண்ணா, சாப்பிட வாங்க..சிம்பிள் அஹ் தான் சமைச்சு இருக்கேன்..”
ராஜாவிடம் கூறியவள்,
பாண்டியை பார்த்து,
“உங்களையும் தான், சாப்பிட வாங்க..”
ஒரு முறைப்புடன் கூறினாள்..
‘ஹப்பா, அனல் அதிகமா இருக்கே..’
சாப்பிடும் போது,
“இன்னிக்கு ராத்திரி கிளம்பலாமுன்னு இருக்கேன் மா.அவளுக்கு, இவ்ளோ தூரம் பயணம் ஒத்துக்குமா??”
“கூட்டிட்டு போலாம் ண்ணா.. பெரிய கார் தானே..நல்ல கம்பர்ட் அஹ், தூங்கி கிட்டு கூட போலாமே..”
“எதுக்கும், நீ கூட வரியா??”
அவன் பயம் புரிந்தது..
“வரேன் ண்ணா.. லீவு சொல்லிட்டு வரேன்..”
“அவ, வேலைக்கு போராளா??”
“இல்ல ண்ணா.. உங்க வீட்டுக்கு வரும் போதே, லாங் லீவ்ல வந்தா.. இங்க வந்த பிறகு, மார்னிங் சிக்நெஸ் ஜாஸ்தியா இருந்துச்சு..அதான், உடனே வேலையை விட சொல்லிட்டேன்..”
“சரி மா..அப்போ, கிளம்ப ஏற்பாடு செய்யுறேன்..”
“சரி ண்ணா..”
அதன் பிறகு, அகலுக்கு போன் செய்து பேசினான் பாண்டி..
“அகலு..”
“சொல்லு மாமா..”
“உன் அண்ணியை கண்டு பிடிச்சுட்டோம்..”
“அப்படியா மாமா..!!ரொம்ப சந்தோசம் மாமா..அப்போ, அண்ணா சொன்ன மாதிரி, இவங்க வேற பொண்ணா??எங்க இருந்தாங்க..??எப்படி கண்டுபிடிச்சிங்க..??”
“அகலு, நான் சொல்லுறதை கேளு முதல்ல.. உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும், அங்க இருக்கும் போதே கல்யாணம் ஆயிடுச்சு..”
“என்ன மாமா சொல்லுற??”
“எல்லாம், அங்க வந்து விளக்கமா சொல்லுறேன்..இப்போ, உன் அண்ணி கர்ப்பமா இருக்கு..”
“இப்படி, குண்டு மேல குண்டா போடுற”
“எனக்கே, இங்க வந்து தான் தெரியும்..நீ தான், அத்தை கிட்ட பக்குவமா பேசி சொல்லணும்..”
“மாமா,அம்மா பத்தி தெரியாதா உனக்கு.??.ஆஞ்சுபுடுமே..”
“நாளைக்கு காலையில வந்துடுவோம்.. அதுக்குள்ள சமாளிச்சு வை..”
பேசிவிட்டு வைத்தான்..
என்ன செய்வது என்னும் பதட்டதோடு அகல், அன்னை இல்லம் நோக்கி சென்றாள்..