மது இங்கு வந்து பதினைந்து நாட்கள் கடந்திருந்தது..ராஜா பார்க்காத நேரம் இவள் பார்ப்பதை விட வில்லை மது..அவனும் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வில்லை..
“ஏலே ராசா..”
“என்ன ம்மா..??”
“மது கண்ணும் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ளே இருக்கு..இந்த அகலு,பக்கத்து தெரு கோயிலுக்கு கூட்டிகிட்டு போறதோட சரி..
அதுக்கும் வீட்டுக்குள்ளயே இருக்க கஷ்டமா இருக்குமுள்ள..பட்டணதுல வளர்ந்த பிள்ளை..
மலைக்கோயில்,ஏரிக்கரை, நம்ம வயலு,மில்லு எங்கையாச்சும் கூட்டிகிட்டு போய்ட்டு வா..”
“அவ்ளோ கஷ்டபட்டு இங்க ஏன் வரணும்..அங்கேயே இருக்கலாம் இல்ல??”
“ஏலே,உன் பேச்சே சரி இல்ல..அன்னைக்கும் அப்படி தான் போனுல, ஏன் வந்தா?? எப்போ போறானு?? கேட்குற..
இதெல்லாம் நல்லா இல்ல..உன்னை அப்படியா வளர்த்துருக்கேன்..விருந்தோம்பல் தெரியாம..பண்பாடு அறியாம..
அவ உன்ற மாமா மக..
என்னமோ எதிரி நாட்டு பிள்ளை மாதிரி..அது கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குற..
அதுவும் உன்னை பார்த்தா பயப்படுது..
எதிரியா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்லி உட்கார வச்சு, தண்ணி கொடுக்கணும்..அதான் தமிழர் பண்பாடு..
அப்படி தான் உன்னை வளர்த்துருக்கேன்னு இம்புட்டு நாள் நெனச்சேன்..
என் வளர்ப்பு சரி இல்ல போல..”
“அம்மா..ஏன் இப்படி எல்லாம் பேசுற..??”
“பின்ன, நீ நடந்துக்குறது சரி இல்லியே..”
“சரி அவளை கிளம்பி இருக்க சொல்லு..ஒரு வேலை இருக்கு வெளில, முடிச்சுட்டு வரேன்..அகலையும் வர சொல்லு..மூணு பேரும் போயிட்டு வரோம்..”
“இப்போ தான் என்ற மவனா பேசுற..”
அவன் சென்றதும்,மாடிக்கு மதுவின் அறைக்கு வந்தவர்,
“மது கண்ணு,கிளம்பி தயாராகு.. மலைக்கோயில், வயல் எல்லாம் போய்ட்டு வரலாம்..”
முகம் மலர,
“நீங்க வரிங்களா அத்தை..??”
“இல்ல கண்ணு,அகலு வருவா..உன்ற மாமன் கூட்டிட்டு போவான்..”
முகம் வாட,
“நான் வரல அத்தை..”
“ஏன் கண்ணு??”
“கொஞ்சம் தலை வலியா இருக்கு அத்தை..”
“அதெல்லாம் வெளிய போய் கிராமத்து காத்தை சுவாசிச்சா சரி ஆகிடும்..”
“இல்ல…அத்தை.. அது..”
[the_ad id=”6605″]“கண்ணு,நீ ஏன் தயங்குறன்னு தெரியும் கண்ணு..உன்ற மாமன் முன் கோபி..ஆனா நல்லவன் கண்ணு..
என்னமோ ஒரு கோவம் உன் மேல, என்னன்னு எனக்கும் புரியல..
போக போக உன் மனசு புரிஞ்சு சரி ஆகிடுவான்..நீ குழப்பிக்காம கிளம்பு கண்ணு.”
இதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்று தலை அசைத்து விட்டு கிளம்ப தயாரானாள்..
அவள் மனதின் ஓரத்தில் ஒரு மகிழ்ச்சி ஊற்று கிளம்பியது..
அவள் மனதிற்கு இனியவனோடு வெளியே செல்ல போகும் உற்சாகம் அது..
அழகிய பேபி பிங்க் வண்ண அனார்கலி சுடிதாரில் தயாராகி,கூந்தலை தளர பின்னல் இட்டு, மிதமான ஒப்பனையோடு கிளம்பி கீழே வந்தாள்..
அகலும் வந்திருந்தாள்..
“புள்ளையை குடுத்துட்டு போடி..இல்லைனா உன் மவன் ஒரு இடமும் பார்க்க விட மாட்டான்..”
“சரி ம்மா..”
ராஜா வந்ததும், மூவரும் காரில் கிளம்பி மலைக்கோயில் சென்றனர்..
அடிவாரத்தில் நிறுத்தி விட்டு இறங்கினார்கள்..
“இனி நடந்து தான் போனும் அண்ணி..ஒத்தையடி பாதை தான் மலை மேல போறதுக்கு..
பைக்ல போறது கூட கஷ்டம்..
இந்த சாமி தான் எங்க குலதெய்வம்..
இங்க தான் என் கல்யாணம்,எங்க அம்மா,அப்பா கல்யாணம் எல்லாம் நடந்துச்சு..எவ்ளோ வசதி இருந்தாலும் இங்க தான் கல்யாணம் பண்ணுவாங்க..அப்புறம், வசதிக்கு தக்க, வீட்டுலயோ,இல்ல மண்டபத்துலயோ..மத்த சடங்கு செஞ்சு விருந்து கொடுப்பாங்க..
சக்தி வாஞ்ச அம்மன்..வேண்டுனா, அப்படியே நடக்கும்..
நல்லா வேண்டிக்கோ அண்ணி..”
பேசிய படியே ஏறினார்கள்..இல்லை இல்லை, அகல் மட்டும் பேசிக் கொண்டு வந்தாள்..
இருவரிடத்திலும் கனத்த அமைதி..
அகல் கூறியதை கவனமாய் கேட்டுக் கொண்டு வந்தாள் மது..
சிறிய கோவில் தான். நல்ல பராமரிப்போடு இருந்தது..குகைக்குள் இருந்தது..கோவில்..நன்கு பெரிய அம்மன் சிலை. தெய்வீக களை ததும்பும் புன்னகை முகத்தோடு காட்சி அளித்தாள் அம்மன்..
அம்மனை பார்த்ததும் கும்பிட தோன்றும் தெய்வீக அம்சம்..
பயபக்தியோடு மது அம்மனை வேண்டிக் கொண்டாள்..
ராஜாவும் அகலும் கும்பிட்டு முடித்ததும்..வெளி பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்தார்கள்..
“அகல்,இந்த கோவிலுக்கு அர்ச்சகர் இல்லையா..??”
“இருக்கார் அண்ணி..தினைக்கும் சாயங்காலம் வந்து,பூஜை பண்ணிட்டு போய்டுவார்..காட்டுக்குள்ள மலைக்கு மேல இருக்கதால,விஷேச நாளுக்கு மட்டும் தான் கூட்டம் வரும்..மத்த நாள் ஆளே இருக்காது..
அதுனால அர்ச்சகர் விஷேச நாளுல தான் முழுக்க முழுக்க இருப்பார்..
சாயங்காலம் வந்தா இருப்பார்..ஆனா, இருட்டி போய்டும்..”
“ஓ..சரி சரி..”
“என்ன வேண்டி கிட்ட அண்ணி..??”
ராஜாவை ஓரக்கண்ணால் பார்த்த படி,
“வேண்டுதல் வெளிய சொன்னா பலிக்காது அகல்..பலிச்சதும் சொல்லுறேன்..”
“கட்டாயம் பலிக்கும் அண்ணி..சீக்கிரம் பலிக்கும் பாரு..”
“பலிச்சா, உனக்கு தங்க வளையலே வாங்கி தரேன்..”
“அண்ணி பேச்சு மாற கூடாது…”
“நிச்சயம் மாற மாட்டேன்..”
மென் நகையுடன் கூறினாள்..
அதன் பிறகு கிளம்பி,ஏரிக் கரைக்கு வந்தார்கள்..வெள்ளம் அதிகம் வரும் நேரம் என்பதால், குளிக்க வேண்டாம் என்று முன்னவே மரகதம் கூறிவிட்டார்.எனவே அருகில் சென்று சாரலில் நனைந்து விட்டு,கிளம்பினார்கள்..
அதன் பிறகு, அவன் வயல்களுக்கு சென்றார்கள்..
ஒரு பக்கம் பூந்தோட்டம் போட்டிருந்தான்..ஒரு பக்கம் வாழை மரங்கள்..தென்னை மரங்கள்..
காய்கறிகள்,பழங்கள்..கடலை என்று பிரித்து,நிலம் பார்த்து பயிரிட்டு இருந்தான்..
“அண்ணன் மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி, அப்புறம் தான் நடவு நடும்..”
அவன் திட்டமிடல் கண்டு வியந்து, அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் அனைத்தையும் இடையிடாமல் கேட்டிருந்தாள்..
நேரமாகி விட்டதால்,மில்லுக்கு இன்னொரு நாள் செல்லலாம் என்று கூறிவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்..
இரண்டு நாட்கள் கழித்து …அருக்காணி மாட்டு கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்..
அப்பொழுது அங்கு வந்த மது,மாடுகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..
வரிசையாய் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சிவலை மாட்டின் அருகே வரும் போது,அதை ரசித்த மது,அதன் பக்கத்தில் சென்றாள்..
அதை கண்ட அருக்காணி,
“பாப்பா,பாப்பா..அந்த மாட்டு கிட்ட போகாத,சினை பிடிச்ச மாடு..இன்னிக்கோ நாளைக்கோ கன்னு போட்டுரும்..கிட்ட போனா, சில நேரம் வெறிக்கும்..”
“அக்கா இந்த மாடு ரொம்ப அழகா இருக்கு..ஒரே ஒரு செல்பி மட்டும் எடுத்துக்குறேன் க்கா.. பிளீஸ்..”
“சொன்னா கேளு பாப்பா..”
“ஒரு நிமிஷம் தான், நீங்க கூட நில்லுங்க..”
“இது முரட்டு மாடு கண்ணு,சின்னையா தவிர யாருக்கும் அடங்காது..பழகுனத்துக்காக என் கிட்ட வெறிக்காது.. ஆனா, என்னால அடக்க முடியாது பாப்பா..”
“ஒரு நிமிஷம்,ப்ளீஸ், ப்ளீஸ்,ப்ளீஸ் க்கா..”
“என்ன பாப்பா,சரி கொஞ்சம் தள்ளியே நில்லு பாப்பா..”
“சரி க்கா..”
மகிழ்ச்சியோடு அந்த மாட்டின் அருகே சென்றாள்.
அதன் அருகே மண்டியிட்டு, அதன் முகத்தை தொட கை கொண்டு சென்றாள்..
அது வேகமாய் முகம் திருப்பியது..மெதுவாய் அதன் அருகே நகர்ந்து, அலைபேசியை இயக்கி அதன் முகத்தின் அருகே இவள் முகம் வருமாறு சென்றாள்.மாடு முகம் திருப்பிய வேகத்தில் இவள் புறம் திரும்பி, தன் வாலை ஒரு சுழற்று சுழற்றியது..
[the_ad id=”6605″]அதில், இவள் கையில் இருந்த அலைபேசி விசிறி எறிய பட்டது..இவளும் அதிர்ச்சியில் தடுமாறி விழுந்தாள்..தன் கொம்பை கொண்டு குனிந்து, இவளை தாக்க வந்தது..
‘அவ்ளோ தான் ஜோலி முடிஞ்சுது..’
கண்களை இறுக்கி முடிய வண்ணம், கைகளால் தடுத்துக் கொண்டு படுத்திருந்தாள்..
ஒரு நொடியில் இதை அனைத்தையும் உணர்ந்தாள் மது.
அருக்காணியின் கத்தல், அதை தொடர்ந்து ஒரு ஆண் குரல்..பிறகு, சில காலடி சத்தங்கள்..
அதன் பிறகு கண் விழித்து பார்க்கையில்,
ராஜா மாட்டை இழுத்துப் பிடித்திருந்தான்.. அவனுக்கு பின்னால், வேலை ஆட்கள் சிலர்..தூரத்தில் அகல்,மரகதம் வந்து கொண்டிருந்தார்கள்..
மாட்டை இழுத்து சென்று, வேறு இடத்தில் கட்டிய ராஜா..அதே வேகத்தில் இவள் அருகே வந்து, இவள் கைகளை முரட்டு தனமாய் பற்றி தூக்கி நிறுத்தியவன்,நிறுத்திய வேகத்தில், ஓங்கி ஒரு அறை விட்டான்..
அதில் தடுமாறியவளை, அருக்காணி பிடித்து நிறுத்தினாள்..
கன்னத்தை பிடித்துக் கொண்டு, என்ன நடந்தது என புரியாமல், ஒரு நிமிடம் நின்றவளின் அருகே வந்த மரகதம்..
“ராசா…என்ன லே பண்ணுற..??ஒரு வயசு புள்ளையை, கை நீட்டி அடிச்சு புட்ட.. என்ன காரியம் லே பண்ண..??”
இன்னும் கோபம் அடங்காமல், அவளை முறைத்துக் கொண்டு நின்றான் ராஜா..
“உனக்கு யாரு லே இந்த உரிமை கொடுத்தா..?? அந்த புள்ளையை அடிக்க..சொல்லுலே..”
மரகதம் கோப மூச்சுகளுடன் கேள்விகளை அடுக்கினார்..
“உன்னை இப்படியா லே வளர்த்தேன்..ஒரு பொட்டை புள்ளையை கை நீட்டி அடிக்குறவ..
என்ன பழக்கம் லே இது..பதில் சொல்லு லே..”
எதற்கும் அவன் பதில் சொல்ல வில்லை..அவளை முறைப்பதையும் விடவில்லை..
“அவளை ஏன் லே முறைக்குற..??அடிச்சது நீ.. அவளை முறைக்க வேற செய்வியா??மன்னிப்பு கேளு லே..”
அது வரை அமைதியாய் இருந்த அகல்,அண்ணனை அம்மா மன்னிப்பு கேட்க சொல்லுவது பிடிக்காமல்,
“அம்மா,கோவ படாம பொறுமையா பேசு..என்ன நடந்துச்சுன்னு விசாரி..”
“என்ன நடந்தா என்ன?? ஊரா வீட்டு பிள்ளையை அடிக்க, இவனுக்கு யாரு உரிமை கொடுத்தா..”
“அம்மா,பாப்பா தான் சொல்ல சொல்ல கேட்காம, செவலை பசு கிட்ட போனாக.. அது முட்ட வந்துருச்சு..ஐயா வராட்டி, குடலை வெளியை எடுத்துருக்கும்..”
ஒரு நிமிடம் பேச்சற்று நின்ற மரகதம்..
“சரி காப்பாத்துனவன்..அந்த பிள்ளையை ஏன் அடிச்ச..??சொல்லு லே..”
“அறிவுகெட்ட தனமா நடந்தா, இப்படி தான்..அடிச்சதோட விட்டேன்னு சந்தோஷபடுங்க..”
“வேற என்ன லே பண்ணுவ..கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா..நான் கேட்பேன் லே..என்ற அண்ணன், என்னை நம்பி அனுப்பிச்சுருக்கு..உன்னை நம்பி இல்ல..
ஒழுங்கா மன்னிப்பு கேளு..”
இத்தனை நேரம் அவன் கோபத்தில் அதிர்ந்து நின்ற மது,இப்பொழுது அவனை மன்னிப்பு கேட்க சொல்லி அத்தை கூறியதும் சற்று தெளிந்து,
“அத்தை தப்பு என் மேல தான்.. அந்த பசு அழகா இருந்ததும்..ஒரு செல்பி எடுக்க போனேன்..அருக்காணி அக்கா சொன்னாங்க..நான் தான் கேட்கலை..”
“அதுக்கு இவன் அடிப்பானா..??”
“ஹ்ம்ம்..இங்க வந்து இவளுக்கு எதுவும் ஆச்சுன்னா.. உன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்லுவ சொல்லு..??”
“அது..அது..அதான் ஆகலை இல்லை..”
“ஆனா..??”
“அத்தை, ப்ளீஸ் விடுங்க..அவருக்கு உரிமை இருக்கு அடிச்சாரு..”
அனைவரும் அவள் முகம் பார்க்கவும் சுதாரித்து,
“மாமா மகள்னு உரிமையில, என் உயிருக்கு எதுவும் ஆகிடுமோன்னு பதட்டத்துல அடிச்சாரு..அதை பெருசு பண்ணாதீங்க அத்தை.. எனக்காக..”
“இல்ல கண்ணு..”
“ப்ளீஸ்,ப்ளீஸ் அத்தை..”
“சரி கண்ணு..ஏலே..இதான் உனக்கு முதலும் கடைசியும்.. இனி அவ மேல கையை வச்ச.. அப்புறம் என்ன நடக்குமுன்னு தெரியாது..”
கூறிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்..
அவனை திரும்பி பார்த்தாள் மது.இன்னும் முறைத்துக் கொண்டு தான் நின்றான்..
மின்னல் வேகத்தில் அவனை பார்த்து கண் அடித்து விட்டு, யாரும் பார்க்கும் முன் அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு சென்றாள்..
இவன் தான் ஒரு நிமிடம் அதிர்ந்து,பின்
“கேடி..”
முணுமுணுத்து விட்டு சென்றான்..
அவன் அடிக்கும் போது அதிர்ச்சி ஏற்பட்டாலும், அப்பொழுது அவன் கண்ணில் தோன்றிய பதற்றம் பார்த்து,அவனுக்கு இவள் மேல் உள்ள அன்பு புரிந்தது.
காதலா என்று தெரியவில்லை..நிச்சயம் அக்கறை இருப்பதை இப்பொழுது யோசித்தால்,புரிந்தது..
பிடிக்காதவள், எப்படி போனால் என்ன??,அவள் மேல் எதற்கு இவ்வளவு அக்கறை..??
தன் மாமனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற, பதற்றம் மட்டும் தானா??
யோசித்து பார்த்தால், இல்லை என்றே தோன்றியது..
அவனுக்கே தெரியாமல்,இவள் மேல் அன்பு உண்டு..
நிச்சயம் புரிந்து கொள்வான் என்னும் நம்பிக்கை இருந்தது..
இனி ஒதுங்கி போவதில்லை..
நீயாக காதல் சொல்லும் வரை விடுவதில்லை..
முடிவு செய்தவள், அதற்கு முதல் படியாக,கீழே விழுந்து உடைந்து போன தன் அலைபேசியை, அவனிடம் கொடுத்து சரி செய்து தர சொல்லலாம் என்று முடிவு செய்து,அவனை தேடி சென்றாள்..
வீட்டின் வெளி வராண்டாவில் அமர்ந்து, அவனை போல ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தான்..
அவன் அருகில் சென்றவள்,
“என் போன் உடைஞ்சு போச்சு, சரி பண்ணித் தாங்க..”
எந்த முகமனும் இல்லாமல் கூறினாள்.
ஒரு நிமிடம் இவள் வரவையும், இவள் கூறியதையும் எதிர் பார்க்காதவன்,பேச்சற்று நின்றான்..
எதிரில் இருப்பவனின் பேச்சு, அவனை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது..
“ராஜா,இந்த பொண்ணு யாரு..??நம்ம கிராமத்துக்கு ஒட்டாம,பளபளன்னு இருக்கு..”
அவன் பேச்சில் பல்லை கடித்து,
“உள்ள போ..”
அவன் கோபம் பார்த்து மிரண்டாலும்,
“போன்…”
தயங்கி இழுத்தாள்..
“ஏன் ராஜா பாப்பாவை மிரட்டுற..இருக்கட்டுமே..”
‘யாரு இவன்?? இவரு கோவத்தை அதிகம் ஆக்குறான்..??’
அப்பொழுது வந்த அகல்,அண்ணனின் கோபம்,இவளின் தயக்கம்..வந்தவனின் வழிசல், அனைத்தையும் ஒரு நொடியில் கணித்தவள்..
“உள்ள வா அண்ணி..அம்மா கூப்பிடுது..”
“என்ன அகலு..பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..கல்யாணம் ஆனா பிள்ளை மாதிரியே இல்ல..ஸ்கூல் போற பிள்ளை மாதிரி இருக்க..”
“என் பிள்ளையே இன்னும் ஒரு வருஷத்துல ஸ்கூல் போய்டும்..உன் நக்கல் எல்லாம் வேற எங்கையாச்சும் வச்சுக்கோ..
இல்ல கருக்கருவா எடுத்து, வகுந்துருவேன்..”
“என்ன அகல்,கோவப் படுற..??சும்மா விளையாட்டுக்கு பேசுனேன்..”
“உன் விளையாட்டெல்லாம் வேற எவ கிட்டயாச்சும் வச்சுக்கோ..வா அண்ணி..”
மதுவின் கை பிடித்து இழுத்து சென்றாள்..
ராஜாவின் புறம் திரும்பினான் அவன்..ராஜா இவனை முறைத்துக் கொண்டிருந்தான்..
“நான் எதர்த்தமா பேசுனேன் ராஜா..அகலு தப்பா எடுத்துகிச்சு..”
“இங்க பாரு பழனிசாமி..உன் வண்டவாளம் எல்லாம் தெரியும் எனக்கு..நீ பக்கத்து ஊருக்காரன்.. ஊர் பிரச்சனை வர கூடாதுன்னு.. பொறுமையா இருக்கேன்..என் வீட்டு பொண்ணுங்க கிட்ட வால் நீட்டுன..பின் விளைவுக்கு நான் பொறுப்பில்லை..
இப்போ என்ன விஷயமா வந்தியோ அதை மட்டும் கேளு..”
“சரி சரி கோச்சுக்காத ராஜா..”
“சொல்லு..எதுக்கு வந்த??”
“அது,என் பண்ணை மாடு எல்லாம் சரியா பால் கறக்க மாட்டேங்குது..சினை பிடிக்கவும் மாட்டேங்குது..
உன் பண்ணை மாடு எல்லாம் அதிகம் பால் கறக்குது..அதான், என்ன பண்ணலாம்னு ஆலோசனை கேட்க வந்தேன்..”
இங்கு ஹாலில் அமர்ந்திருந்த அகலுக்கும்,மதுவுக்கு அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது..
“கொல்லையில போறவன்..இவன் மாடு கறக்கலீனா அதுக்கு கேட்காம, நம்ம மாடு கறக்குறது பார்த்து வேகுறான்..”
அகலின் பேச்சில் தோன்றிய புன்னகையுடன்,
“யார் இவரு..??”
“அவனுக்கு என்ன மரியாதை??அவன்னே சொல்லு..பேர் பழனிச்சாமி..அண்ணன் கூட படிச்சவன்..படிப்பு ஏறலை,பத்தோட நிறுத்தி புட்டாக இவன் அப்பாரு..
படிப்பு வரலைன்னு, நாலு மாடு வாங்கி மேய்க்க விட்டுட்டாங்க.. அதை கூட ஒழுங்கா மேய்க்க துப்பில்லாம..இங்க வந்து நிக்குது..”
அவளின் பேச்சில் விரிந்த தன் புன்னகையுடன்,
“அந்தாளை பார்த்தா, மாடு மேய்க்குறவர் மாதிரியா இருக்கு..??வெள்ளை வேட்டி சட்டையில, டிப் டாப் அஹ் இருக்கார்..”
“அது அவன் அப்பாரு சம்பாரிச்சது.. பெரிய பணக்காரன்..மண்டையில மட்டும் களிமண் வச்சுட்டார் ஆண்டவன்..
மேய்க்குறது எருமை இதுல பெருமை வேற..
வெள்ளை வேட்டில தான் வருவார் மைனர்..
அப்போ தானே பொண்ணுங்களை கரெக்ட் பண்ணலாம்..”
“மைனர் அஹ்..??உன் அண்ணன் வயசுன்னு சொன்ன..”
“அச்சோ அண்ணி..உனக்கு விவரமே போதலை..
மைனர்னா, இப்படி டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு வெட்டியா சுத்தி,சோக்கு பண்ணிக்கிட்டு, பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையுறது..”
“ஓ…”
“அவன் முன்னாடி போகாத..பொறுக்கி பய..அண்ணனுக்கு பிடிக்காது..அதான் வெளி வராண்டால உட்கார வச்சு பேசுது..”
“என் போன் உடைஞ்சு போச்சு..அதான், உன் அண்ணா கிட்ட கொடுத்து சரி பண்ண சொல்ல போனேன்..இவன் இருப்பான்னு தெரியாம..”
“அண்ணன் உள்ள வந்ததும் கொடு..அண்ணன் ஏற்கனவே கோவமா இருக்கு..பார்த்து பேசு..”
சொல்லி விட்டு உள்ளே போனாள்.
இவள் கவனம் அவர்கள் பேச்சில் திரும்பியது..