“கங்கா, அவங்க ரெண்டு பேரோட ஃபேன்ஸி வரை போயிருக்கா..” என போனில் பதில் சொல்லிக்கொண்டே,
தான் ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய பையில் எல்லாவற்றையும் அடுக்கிக்கொண்டிருந்தாள் யமுனா.
Advertisement
***
ஒவ்வொரு ஞாயிறும் காலை நேரமாகவே உழவர் சந்தை சென்று அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்து விடுவது அவர்களின் வாடிக்கை.
அதன் பொருட்டு அன்று அவர்கள் சென்றிருந்த நேரம் தான் தீ விபத்து நடந்திருந்தது.
இவர்கள் பஸ் விட்டு இறங்கி வரும்போதே விசயம் தெரிந்துவிட வேகமாய் ஓடி வந்திருந்தனர் அவ்விடத்திற்கு.
“அக்கா.. அந்த அண்ணா..!” என்ற கங்காவின் குரலில் புரியாது யமுனா விழிக்க,
“ஏய் தீனா ண்ணே டீ..” என்றிருந்தாள் வசந்தி.
அப்போது தான் யமுனாவும் தீனாவை பார்த்தாள்.
அவன் ஏதோ சிந்தனையோடு கொழுந்து விட்டு எரியும் தீயின் பக்கம் போவது கண்டு ஓடி சென்று அவனின் கரம் பிடித்து தடுக்க, அவனோ சுயமின்றி மீண்டும் அந்த இடத்திற்கு நகர, “தயா..” என்றழைத்திருந்தாள்.
அவளின் அழைப்புக்கு அந்த மாதிரியான எதிர்வினையை சத்தியமாய் எதிர்பார்க்கவே இல்லை அவள்.
அவளை கட்டிக்கொண்டு அவன் சொன்ன வார்த்தைகள்.. அவனின் கண்ணீர்.. இதை விட என்ன வேண்டும் அவளுக்கு..?
அவனுக்கு தான் எவ்வளவு முக்கியம்.. என்பதை இதை விட எப்படி சொல்லிட முடியும்..? என்ற பெரும் நிறைவு வந்தாலும்,
சுற்றியிருந்த சூழலை கொண்டு ஒரு வழியாய் போராடி அவனை சுயத்துக்கு கொண்டு வர அவள் பட்ட பாடு..!!!
அவனின் புலம்பலும், நடுக்கமும் நின்று சுற்றம் உணர்ந்து அவன் விலகவே அவளால் மூச்சே விட முடிந்தது.
அந்த அளவுக்கு அவளை மொத்தமாக தன்னுள் புதைத்தல்லவா வைத்திருந்தான் ஒரு பொக்கிஷத்தை போல.
‘சுயத்திற்கு வந்ததும் அன்று போல சட்டென தன்னை விட்டு விலகி செல்வானோ..?’ என்ற அவளின் எண்ணத்தை தவிடு பொடியாக்கியவன், உரிமையாய் அவளின் கையை பற்றியபடியே கங்காவையும் மற்றவர்களையும் எதிர் கொண்டான்.
அன்று அவன் பிடித்த பிடியின் உறுதியே சொன்னது, ‘என் வாழ்வின் இறுதி வரை இனி உன்னை விட்டு விடமாட்டேன்..’ என்பதை.
கங்காவின் குழப்பமான முகத்தை கண்டு அவளிடம் வந்தவன், “உன்னோட அக்காவ நா பத்திரமா பார்த்துக்குவேன்னு நீ நம்புற தானே..?” என கேட்க,
“நம்புறேன் மாமா..” என்றிருந்தாள் தன்னை மறந்து உறவு வைத்தே.
“தேங்க்ஸ் கங்கா..” என்றவனுக்கு ஏதோ யமுனாவின் மொத்த குடும்பமும் அவள் ரூபத்தில் சம்மதம் சொல்லி விட்டது போலான ஒரு நிறைவு.
ஆரம்பமே தடையாக இல்லாமல் சுபமாய் இருந்ததே. அது கொடுத்த நிறைவு அவனை அப்படி யோசிக்க வைத்ததோ என்னவோ..!!!
ஆனால் சிறு பிள்ளை வெள்ளாமை வீடு போய் சேராது எனும் பழமொழி அறியாமல் போனானே..?!
இவர்கள் இருந்த வீடு கடைசியில் இருக்க.. அங்கு உள்ளே தீ பரவுவதற்குள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்திருக்க இவர்கள் பொருட்கள் ஓரளவு சேதாரமின்றி மீட்க முடிந்திருந்தது.
பொருட்களை மீட்டதும் இவர்களை வேறு இடத்தில் இரவுக்குள் பத்திரமாய் இருப்பதற்கான எல்லா வேலையையும் முடித்து கொடுத்து விட்டே கம்பெனிக்கு திரும்பியிருந்தான் அன்று.
****
“உன்னோட தம்பிக்கு டீ சர்ட் சரியா இருக்கும் தானே..? நீ சொன்ன சைஸ் தான் எடுத்தேன்..” என தீனா சந்தேகத்தோடு வினவ,
“அதெல்லாம் கரெக்ட்டா தான் இருக்கும். ஆமா, இதையே எடுக்க போறப்போ இருந்து பல தடவ கேட்டுட்டீங்க.. ஏன்..? என்றாள் யமுனா யோசனையாய்.
“அதுவா, அது.. உன் தங்கச்சி மாதிரி.. உன் தம்பியும் உனக்கு அண்ணா மாதிரி இருந்துட்டா..” என்றான் தீனா வந்த சிரிப்பை அடக்க முயன்றபடி கிண்டலாக.
“யோவ் கண்ணழகா.. நேர்ல இல்லன்னு சேட்டையா..?” என இவள் பேச்சோடு பெட்டியை நகர்த்தி வைத்து எழ,
“பாத்துடீ.. கழண்டிட போகுது..” என்றான் விசமமாய்.
அவனின் பேச்சு தோரணை வில்லங்கமான அர்த்தத்தை அவளுக்கு உணர்த்த, “கழண்டா.. எதூ…?” என்றவள் கைகள் தன்னை மறந்து தனது உடையை சீராக்கிக்கொண்டிருந்தது.
“அதுவா..? அது தான் உன்கிட்ட பளிச்சுன்னு.. எடுப்பா இருக்..” என அவன் சொல்வதை முடிக்கும் முன்பாக,
“என்ன நீங்க.. இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசறீங்க..? பூஜை நாள்ல இருந்து நீங்க பேசறதே சரியில்ல..” என்றாள் பதறி.
“பின்ன இருக்காதா..? காலம் முழுக்க தனிக்கட்டையா தான் இருக்க போறேன்னு இருந்த என்னைய.. ஒரு நாட்டுக்கட்ட வந்து கவுத்து போட்டா.. அடக்கி வச்சிருந்தது எல்லாம் பொங்காதா.. உள்ளுக்குள்ள..” என்றான் கள்ளனாய்.
“பொங்கும்.. பொங்கும். அப்படி பொங்கும் போது நல்லா சில்லுன்னு தண்ணீய தூக்கி அது மேல ஊத்துங்க.. தன்னால அடங்கிடும்..” என்றாள் நமுட்டு சிரிப்போடு.