Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 11.1

நதி 11
கண்ணீர் தடங்களோடு அடித்ததற்கான அடையாளமாய் கன்றி சிவந்த கன்னத்தோடு உயிரற்ற சிலை போல நின்றிருந்தாள் யமுனா.


Advertisement

அழுததோடு வாங்கிய அடியின் விளைவால் முகம் மொத்தமாய் வீங்கி போயிருக்க பேச திராணியற்ற நிலையில் அவள்.
அன்று கோவிலுக்கு செல்லும் வரை தோன்றாத சந்தேகம் அங்கு கூடியிருந்த உறவுகளை கண்டதும் யமுனாவுக்கும், கங்காவிற்கும் எழுந்தது.

Advertisement

Advertisement

“என்னடீ.. நம்ம குலதெய்வ கோவில்ல பங்காளிங்க தவிர, இவங்களுக்கு என்ன வேல..?” என கங்காவின் காதை யமுனா கடிக்க,
“அதே சந்தேகம் தான் அக்கா.. எனக்கும். ஒருவேல ஏதாவது விசேசமா இருக்குமோ..?” என்றிட,

Advertisement

“இருக்கலாம். நமக்கென்ன..?” என அவளோடு சேர்ந்து தங்கையையும் சமாதானம் செய்து கொண்டே கோவிலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள் யமுனா.
உள்ளே வந்ததும் கங்காவின் கரத்தை பற்றி நிறுத்திய ஒருவர், “நீயும் வேல பாக்க உன்னோட அக்கா இருக்கற இடத்துக்கு போயிருக்கீயாமே..?” பேச, 
‘என்ன அதிசயமா நம்மகிட்ட பேசறாங்க இவங்க..?’ என நினைத்த போதும் பதில் சொல்லவென கங்கா நிற்க, யமுனாவின் கரம் பற்றி அழைத்து சென்றார் மரகதம். 
“இந்தா பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாச்சு. சாமி முன்னாடி வச்சு எடுத்த அந்த மூகூர்த்த புடவைய கொண்டுவந்து பொண்ணு கையில கொடுங்க..” என்ற அத்தை முறையுள்ள ஒருவரின் பேச்சில், திடுக்கிட்டு தங்களுக்கு பின் திரும்பி பார்த்தவளுக்கு அப்போது கூட, ‘அவர் சொல்வது தன்னை தான்..’ என நினைக்கவில்லை.
“இந்தா யமுனா..” என தன் கண்முன் தட்டோடு வந்து நின்ற ஒன்றுவிட்ட அத்தை மாமாவை கண்டு அதிர்ந்து அவசரமாய் அவளின் தந்தை புறம் திரும்ப,
“தட்ட வாங்கிட்டு உள்ள போ யமுனா..” என்றார் இறுகிய குரலில்.
“அப்பா..” என ஆரம்பித்தவளை மேலே பேச விடாமல், 
“தட்ட கையில வாங்கு யமுனா..” என அவளின் கையை இழுத்து அதை வாங்க வைத்திருந்தார் அவளின் தாய் மரகதம்.
“ம்மா.. நா கொஞ்சம்..” என அவள் மீண்டும் தொடங்க, 
“எல்லாமே எங்களுக்கு தெரியும். வாய மூடிட்டு உள்ள வா..” என மற்றவரின் காதில் விழாதபடி அவர் சொன்ன வார்த்தை கேட்டவளுக்கு கால்களெல்லாம் நடுக்கம் கொண்டது.
விழியில் வழிய தொடங்கிய கண்ணீரோடு அவரை பார்க்க, அவரோ அதை கண்டு கொள்ளாமல் அவளின் முதுகோடு கையிட்டு உள்ளே தள்ளிக்கொண்டு சென்றார் வேகமாக.
அங்கிருந்த அறையின் உள்ளே போனதும், “எவ்வளவு தைரியமிருந்தா இப்படி ஒரு காரியத்த பண்ணியிருப்பே..? 
விசயம் தெரிஞ்ச அப்பவே இங்கே இருக்கறவங்க பேசின பேச்சுக்கு உன்னை தேடி வந்து வெட்டி போட்டிருப்பார் உங்க அப்பா.
நான் தான் கெஞ்சிக்கூத்தாடி அவரை சமாதானம் பண்ணி வச்சேன். ஒழுங்கு மரியாதையா நா சொல்ற படி நடந்து எங்க மானமரியாதைய காப்பாத்து.
இல்ல, உன்னையும் கொன்னுட்டு.. நாங்களும் செத்து போயிடுவோம்.. ஜாக்கிரதை..” என அவர் மிரட்ட,
“அம்மா..! ப்ளீஸ் ம்மா.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. நீங்களே என்னை புருஞ்சுக்கலைன்னா எப்படிம்மா..?” என யமுனா அவரின் காலை கட்டிக்கொண்டு கதற அந்த அறைக்குள் வந்திருந்தார் அவளின் தந்தை முத்தரசன். 
அவரை கண்டதும், “ப்பா.. வேணாம் ப்பா. தயவு செஞ்சு இந்த கல்யாணம் வேணாம் ப்பா..” என அவரின் காலிலும் யமுனா விழ,
அவளின் கூந்தலை பற்றி தூக்கியவரின் கை அவளின் கன்னத்தை பதம் பார்க்க ஒரு நிமிடம் ஆனது அவளுக்கு மீண்டும் பார்வையில் அனைத்தும் தெளிவாக.
கன்னம் வீங்கி வலித்த போதும் அதை விட பெரிதாய் வலித்த இதயத்தை கையோடு அழுத்தி பிடித்தவள், 
“ப்பா.. நா என்னோட தயாவ கூட கல்யாணம் பண்ணல.. கடைசி வரை உங்க பொண்ணா நம்ம வீட்டுலையே கூட வாழ்ந்துக்கறேன். இந்த கல்யாணம் வேண்டாம் ப்பா..” என அழுகையோடு கை கூப்பி யமுனா கெஞ்ச,
“ஓ.. இப்படி பேசி இந்த கல்யாணத்த நிறுத்திட்டு.. அப்புறம் ஓடுகாலி நா*** ஓடி போலாமுன்னு பார்க்கறையா..? எல்லாம் சம்பாதிக்கற ஏத்தம்.. 
நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்கறேன்னு நினைச்சா அங்கே எவனோடவோ படுத்து பணத்தை அனுப்பியிருக்கே.. 
நாங்க அந்த பணத்தை பாத்ததும் உன்ன தாராளமா போய் கூத்தடி ன்னு கூட்டி கொடுப்போமுன்னு நினைக்கறையா..?” என்றார் நாராசமாய்.
அவசரமாய் தன் காதை மூடிக்கொண்டவள், “ப்பா.. இப்படி பேசாதீங்கப்பா.. நாங்க அப்படி இல்லப்பா..” என யமுனா கதற,
“ஓ..! அப்படி இல்லாம தான் நடு ரோட்டுல உன்ன கட்டிக்கிட்டு நின்னானோ.. அந்த பர***
அத பாத்துட்டு என்கிட்ட இப்படி தான் கேட்டாங்க. நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருந்துச்சு..” என்றிட,
வாயில் கைவைத்து அதிர்ந்து அவரை பார்க்க, “என்ன.. எங்களுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு பார்க்கறையோ..? 
உன்னோட பொண்ணு லட்சணத்த பாருன்னு.. போட்டோ புடுச்சு அனுப்பி விட்டப்போ எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்..?
எங்களுக்கு மட்டுமா அனுப்பினாங்க.. நம்ம சொந்த பந்தத்துக்கு எல்லாமே தெரியற மாதிரி இல்ல அனுப்பிவிட்டிருக்காங்க. 
அத்தன பேரும் வீட்டு வாசல்ல வந்து கண்டபடி பேசும் போது நாண்டுக்கலாம் போல ஆகிடுச்சு. 
உன்னைய நம்பி.. இன்னொருத்தியையும் அனுப்பிட்டோமே.. அவளையும் உன்ன மாதிரி தருதலையா ஆக்கிவிட்டுடுவீயோன்னு எத்தன பயம் தெரியுமா..? 
இந்தா நிக்கறாளே.. அவ மட்டும் கால்ல விழுந்து என்னைய போகவிடாம தடுக்கலன்னா அப்பவே வந்து உன்னை வெட்டி போட்டிருப்பேன். 
இன்னும் ஒரு மாசம் தானே.. அவ வரும் போது கல்யாணத்த முடிக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு எல்லாரும் பேசி முடிவெடுத்ததோட இவளும் கொஞ்சினதால மட்டும் தான் பொறுத்தேன். 
உன்னோட வண்டவாளம் எல்லாத்தையும் மாப்பிள்ளை வீட்டுல சொல்லி தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு.. 
அதனால கோக்குமாக்கா எதாவது பண்ண நினைக்காம மரியாதையா வந்து தாலிய கட்டிட்டு போற வழிய பாரு..
அப்படி பண்ணா.. பெத்தவங்கன்னு காலத்துக்கும் உன்னோட உறவு எங்களோட இருக்கும்.. 
இல்ல.. அந்த பொறுக்கி தான் வேணுமுன்னா.. எங்களுக்கு கொள்ளிய போட்டுட்டு அதுக்கு அப்புறமா போய் எக்கேடோ கெட்டு சீரழி..” எனச் சொல்ல,
அவரின் பிடிவாதத்திலும் பேச்சிலும் சிலையாகி போனாள் யமுனா.
அறைக்கு வெளியே குடியின் பிடியில் நிற்க கூட இயலாமல் தடுமாறிக்கொண்டு இருந்தவனை காட்டி ‘யமுனாவ கட்டிக்கப்போற மாப்பிள்ளை..’ என்றதும் தூக்கிவாரிப் போட்டது கங்காவிற்கு.
‘தீனாவோடு ஒப்பிட்டு பார்க்க கூட லாயக்கு இல்லாத ஒருவன் தன் அக்காவோடா..?’ என்ற தவிப்பு அவளுக்கு.
‘எப்படி விசயம் தெரிந்திருக்கும்..?’ என்ற கேள்வி அவளுக்குள் ஓட, ‘என்ன செய்வது..?’ என புரியாது நின்றவளை நெருங்கிய உறவுக்காரப்பெண்மணி ஒருவர், 
“உன்னைய திருப்பூர்ல கொண்டு விட்டவ வந்தது கூட தெரியாம.. உன்னோட அக்கா நட்ட நடு ரோட்டுல ஒருத்தன கட்டிக்கிட்டு நின்னாளாமே..! 
கொஞ்சம் கூடவா கூச்ச நாச்சமில்லாம போச்சு..? சொந்த பந்தம் பெரியவங்கன்னு கூட யாரிருக்கங்கற தைரியத்துல தானே இப்படியான தப்பெல்லாம் செய்ய முடியுது. 
காலம் இப்படி சீரழிஞ்சு போச்சு பாரு. பணம் சம்பாதிக்க ன்னு போனா என்ன வேணுமின்னாலும் பண்ணலாமா..? வளர்ப்புன்னு ஒரு இருக்கே.. ஆமா நீயெப்படி..?” என்று இழிவான பார்வையோடு சொல்ல,
சகலமும் புரிந்து போனது.. கங்காவிற்கு.
‘அப்போ.. திட்டம் போட்டு தான் எல்லாமே செஞ்சிருக்காங்க. அதுலையும் இப்படி ஒரு தண்ணிவண்டிக்கு அக்காவ கட்டி வைக்கறதுக்கு பதிலா அவள மாமா கூடவே அனுப்பிடலாம்..” என மனதோடு தவித்தவள், ‘அக்காவிடம் பேச வேண்டும்..’ என்ற உந்துதலோடு உள்ளே விரைந்தாள்.
உள்ளே வந்த கங்காவையும் விட்டு வைக்காமல் அவளையும் அடித்த முத்தரசன்,
“உனக்கும் ஆம்பள சோக்கு எப்படின்னு பழக்கிவிடறேன்னு சொன்னாளோ உன்னோட அக்கா..? அதான் அவ பண்ணற களவாணி தனத்துக்கு கூட்டு சேந்தீயோ..?” என்றிட,
“ப்பா.. இல்லப்பா.. மாமா.. நல்லவங்கப்பா..” என அழுகையோடு திக்கி திணறி சொன்னவளை, 
“எது மாமாவா..? யாருடீ உனக்கு மாமா..?” எனக்கேட்டு மேலும் அடிக்க வர,
அவசரமாய் அவளை தனக்கு பின் இழுத்து மறைத்த யமுனா, “ப்பா.. தப்பு பண்ணது நா. ஒருத்தரை மனசால நினைச்சு.. வாழ்ந்தா உங்க கூட தான்னு ஆசைய அவருக்கும் விதைச்சு.. எல்லாம் பண்ண பாவி நான்.. அவள விட்டுடுங்க.. அவ இன்னும் குழந்தைப்பா..” என்றாள் அழுகையோடு.
“இங்க பாரு.. உன் முகத்தை பாக்க கூட எரிச்சலா வருது. என்கிட்ட இனி பேசற வேலையே வச்சுக்காத. 
என்ன பண்ண.. பெத்து தொலஞ்சுட்டேனே.. அந்த கருமத்துக்காக பாக்க வேண்டி இருக்கு.
ஏய் மரகதோ.. என்ன பாத்துட்டு இருக்கே.. இன்னும் அரைமணி நேரத்துல இவ மணவறையில இருக்கனும்.
புத்தி சொல்லுவீயோ..? இல்ல பொடலங்கா சொல்லுவீயோ..? அவள கிளப்பி இழுத்துட்டு வந்து சேரு..” என உருமிவிட்டு அவர் வெளியேறி செல்ல செய்வதறியாது திகைத்து நின்றனர் சகோதரிகள் இருவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!