சூரியன் சுள்ளென்று தகித்து தன் முழு ஆதிக்கத்தையும் மக்களிடம் செலுத்திக் கொண்டிருந்த மதியவேளையில் ஐம்பதாயிர சதுரடி பரப்பளவில் உருவாகிக் கொண்டிருந்த அந்த தனியார் பள்ளியின் கட்டுமான பணிகள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
நான்கு தனி தனி கட்டிடங்களின் மத்தியில் சற்று நீளமாக அமைக்கப்பட்ட செவ்வக வடிவிலான கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் நின்று பொறியாளரிடம் கத்திக் கொண்டிருந்தாள் அவள்..!!
வெள்ளை மற்றும் சாம்பல் கலந்த செமி ஃபார்மல் ஷர்ட்டும் கறுப்பு நிற பான்ட்டும் அவள் மேனியை தழுவியிருக்க பிரடியை தாண்டாத பாப் கட் சிகை அவள் அணிந்திருந்த மஞ்சல் நிற நெகிழி தொப்பியில் அடங்கி இருந்தது.
அவள் கோபக்குரல் மட்டும் கீச் கீச்சென்று இல்லாமல் இருந்திருந்தால் அவள் ஆணா..? பெண்ணா..? என பலருக்கு சந்தேகம் தோன்றி இருக்கும்..!!
அவளின் மூன்றாம் கையாக விளங்கும் மேக்புக்கில் கட்டிட வடிவமைப்பை காட்டி அவள் வாக்குவாதத்தில் இறங்க,
என்று அவரும் தீர்வு யோசித்து அவளை சமாதானம் செய்ய முனைந்தார்.
“உங்க இஷ்டம் போல எல்லாம் பண்ண இது உங்க வீடு இல்ல சர்.. கேப் வெறும் ரெண்டு இன்ச் கூட இருக்காது.. அதில் என்ன செய்ய முடியும்.. இந்த பக்கம் கீழ விண்டோஸ் கிடையாது.. அப்போ வெளிச்சமும் காத்தும் போதுமானதா இருக்குமா..?? உங்க எக்ஸ்பிரியன்ஸ்ல இதை கூட யோசிக்க மாட்டீங்களா சர்..”
அவளின் பிரவுன் நிற விழிகளால் உருட்டி முறைக்கும்போது அவருக்கு சிறிது அச்சமாக தான் இருந்தது.
அவர் முக பாவனையில் என்ன உணர்ந்தாளோ,
“பிளான் படி மறுபடியும் மாத்தி வைக்க சொல்லுங்க..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் விடுவித்தவர்,
“இந்தம்மா தான் ஒரு டென்ஷன் பார்ட்டி.. அது தெரிஞ்சும் ஏதாவது செஞ்சு இவ கிட்ட என்னை கோர்த்து விட்டுடுறானுங்க.. நேத்தி முளைச்ச நண்டு சிண்டு எல்லாம் என்னை கேள்வி கேட்டுக்கும்ன்னு
என் விதியில் இருக்கு..”
என புலம்பிக் கொண்டே அவள் சொன்னதை செய்ய நகர்ந்தார். பாவம் நளினின் திறமை அவரின் அனுபவத்திற்கு ஈடானது என அவர் அறிந்திருக்கவில்லை.
அவள் ஒரு கட்டிட வடிவமைப்பாளர்..!! துளிப் கன்ஸ்டிரக்ஷனில் இணைந்த பின் அவள் பொறுப்பில் உருவாகும் பத்தாவது ப்ராஜக்ட் இது என்றால் காரணம் அவளின் திறமை இன்றி வேறென்ன இருக்க முடியும்..!!
அங்கிருந்து அகன்றவள் ஆங்காங்கே கிடக்கும் கற்கள், பலகைகள், கம்பிகளில் கவனமாய் தன் ஷூ காலை பதித்து அந்த தளத்தின் முனையில் வந்து நின்றாள்.
முகத்தில் அடித்த சூரியனின் வெம்மையை காட்டிலும் அவள் உள்ளத்தின் வெம்மை கொளுந்து விட்டு எரிந்தது. அதனை தணிக்கும் யோசனையின்றி எங்கோ வெறித்து நிற்க,
“ஓய் நளின்.. நான் இல்லாத கொஞ்ச நேரத்தில் இங்க ஏகப்பட்ட
சம்பவம் போலயே.. என்ன காண்டு மேன்..”
என்றபடி அருகில் வந்தான் விஷால்.. அவனும் இந்த ப்ராஜக்ட்டில் பணியாற்றும் கட்டிட பொறியாளன் தான்..!!
“ஒரு காண்டும் இல்ல.. சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் எவ்வளவு வருது பார் விஷால்..!! அழிச்சு அழிச்சு செய்ய இதென்ன மணல் வீடா .?? நான் இவங்களையே பார்த்துட்டு இருந்தால் மத்த சைட்களுக்கு எப்போ போறது..”
“கரெக்ட் தான்.. ஆனால் உன்னோட மத்த ப்ராஜக்ட் விட இது பெருசு இல்லையா..?? ஆபியஸ்லீ இட் நீட்ஸ் மோர் அட்டேன்ஷன்..”
“உனக்கு புரியுது.. ஆனா இந்த சந்தரமௌலீக்கு புரிய மாட்டுதே விஷால்..!!
‘நளின் உங்க பொறுப்பை உணர்ந்து வேலை பார்த்தால் நல்லா இருக்கும்.. சைட் விசிடிங்காக மட்டும் இத்தனை நாள் கழித்தால் மத்த வேலையை யார் பார்ப்பா..? ப்ளா.. பிளா..”
என்று தன் மேலாளர் மாதிரியே பேசிக் காட்டி எரிச்சலாய் விழிகளை உருட்ட அவள் அபிநயத்தில் வாய்விட்டுச் சிரித்தான் விஷால்..!!
“விஷால்..!!!”
என அவள் அதட்டவும்,
“ஓகே.. ஓகே..” என அமைதியானவன்,
“நீ எவ்வளவு மூட் அவுட்டா இருக்கேன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது நளின்.. அதுக்கு காரணம் இப்ப நீ சொன்ன ரீசன் மட்டும் தான்னு சொன்னால்.. அதை நம்ப நான் ஆள் இல்ல..”
என்று அர்த்தமாய் கூறி தான் கொண்டு வந்த கூல் ட்ரிங்க் டின்னை அவளிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன் வாயில் ஒன்றை சரித்தான்.
விஷாலிடம் எதையும் மறைக்க முடியாது.. இத்தனை வருட நட்பில் என்றும் போல் இன்றும் எண்ணினாள்.
கையில் இருந்த டின்னை திறந்து ஒரு மிடறு விழுங்கியவள்,
“எல்லாம் வினோதகன் கேஸ் சம்பந்தமா தான்..” என அலுப்பாய் கூற அவனுக்கு விஷயம் பளீச்சென்று விளங்கியது.
“ஓஹோ..” என உள்வாங்கியன்,
“என்ன சொல்றார் வினோதகன்.??
உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டாரா..”
.
என்று காட்டமாய் கேட்க,
“ம்ச்.. என்ன சொன்னாலும் இறங்கி வர மாட்டேன்னு நிற்கிறான்.. அவ்வளவு கோபம் வருது விஷால்..!! இந்த ஒரு விஷயத்தை வைச்சு என்னை ஆட்டி படைக்க நினைக்கிறான்..”
என கூறும்போதே அவள் மூக்கு விடைத்தது.
“நீ ஏன் கெஞ்சிட்டு நிற்கிற.. இந்த கேஸை என் பொறுப்பில் விட்டால் நான் எனக்கு தெரிஞ்ச வக்கீல் வைச்சு வேற வழியில் ஹன்டில் பண்ணிருப்பேன்..”
“வேண்டாம் விஷால்.. என் பிரச்சனை இது.. என்ன ஆனாலும் ஐ கென் மேனேஜ்..”
“அப்போ இப்படியே முழிச்சிட்டு நில்லு… லூசுடி நீ..”
என்று கோபமாய் சொல்லிபின் மனம் கேட்காமல்,
“அவர் கிட்ட நேரடியாக பேசிப் பார்த்தியா..?”
என்று கேட்க மறுத்து தலையசைத்தவள்,
“அவன் கிட்ட எனக்கென்ன பேச்சு.. என் லாயர் தான் பேசுறது..”
என்று முகம் சுழித்து சொல்ல,
“அப்படி இல்ல நளின்.. சில நேரங்களில் நாமலே இறங்கினால் தான் வேலை நடக்கும்.. நீ அவரை மீட் பண்ணி பேசு.. தன்மையாவே பேசி இந்த கேஸ்ஸுக்கு ஒரு முடிவை கட்டு.. சில நேரம் வீரியத்தை விட காரியம் தான் முக்கியம்..”
என சொல்ல அவள் யோசனையாக பார்த்தாள். அவனிடம் நேரடியாய் இது குறித்து பேசியது இல்லை என்பதால் அவனும் அலட்சியம் காட்டுகிறானோ..? இறுதியாய் ஒரு முறை நேரில் சந்தித்து தன் பக்க கருத்தை அவனுக்கு விளங்கும் படி
சொல்லி தான் பார்ப்போமே..’
என தோன்றிட டின்னை முழுவதும் காலி செய்துவிட்டு,
“அப்போ நான் கிளம்புறேன் விஷால்..” என்று சொல்ல ஆச்சரியமாய் புருவம் உயர்த்தி,
“இப்பவேவா..?? நான் சொல்லி உடனே கேட்கிறியே ஆச்சரியம் தான்..”
என அவன் சொல்லவும்,
“எனக்கும் சரியா பட்டுது.. அப்புறம் ஏன் தள்ளிப் போடணும்.. நான் போறேன்..” என அவள் உறுதியாய் கூற,
“ஹே கைஸ்..” என்று அப்போது வந்தவனை கண்டு தங்கள் பேச்சை நிறுத்தி,
“ஹலோ சர்..” என இருவரும் மரியாதையாக விளித்தனர்.
கேஷ்வலாக டீ ஷர்ட்டில் உற்சாக நடையுடன் அவர்களை நெருங்கிய அவன் தான் இந்த பள்ளி கட்டிடத்தின் உரிமையாளன்.. சிபி நந்தன்..!!!
அவர்கள் விளிப்பில் வசீகரமாக புன்னகைத்து,
“என்னை சிபின்னே கூப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்றது..” என்றவன், “சோ.. வேலை எல்லாம் எப்படி போகுது..” என்று பொதுவாக கேட்க இதுவரை முடிந்த வேலைகளையும் இன்று நடப்பவைகளையும் விஷால் விளக்கி கூறினான்.
அவன் கர்ம சிரத்தையாக சொல்லும் விபரங்களை சிபி காதில் வாங்கினாலும் கண்கள் என்னவோ நளினை வட்டமிட,
‘ம்க்கும்..நீ அவளை சைட் அடிக்க என்னை ஏன்யா கரடியா கத்த விடுற..’
என மனதில் பல்லை கடித்தான்.
அவன் பேசி முடித்தபோது,
“குட்..” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து,
“தென் நளின்.. கிளம்பிட்டீங்களோ..?”
என்றான்.
“யா.. ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு..”
“நானும் கீழ தான் போறேன்.. வாங்களேன் சேர்ந்து போகலாம்..”
என அவன் சொல்லவே எதுவும் சொல்ல முடியாமல் “ஓகே..” என்று விட்டு தன் கேப்பை கழட்டி அங்கே வைத்தவள் கைப்பையினுள் மேக்புக்கை நுழைத்து கிளம்ப ஆயத்தமாக சிபி திரும்பியதும்,
“இங்க இருந்து கீழ போக எல்லாம் உனக்கு கம்பெனி கொடுக்க ஒரு ஆளா..?? நடக்கட்டும் நடக்கட்டும்..” என்று விஷால் கிண்டலாய் சொல்ல அவனை பார்வையால் மிரட்டிவிட்டு சிபியுடன் நடந்தாள்.
“நோ நீட் சர்.. இங்கெல்லாம் நட்ப்பது எனக்கு சாதாரணம் தான்..” என நாசூக்காய் மறுத்து தானே இறங்க லேசாய் புன்னகைத்தவன்,
“நளினை எப்பவும் ப்ரொபஷனலா மட்டும் தான் பார்க்க முடியும் போலவே..?? ஒரு ஜாலி மூட்ல உங்களை பார்த்ததே இல்லை..”
என்று சொல்ல இதழ் இழுத்து புன்னகையை வரவைத்தவள்,
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல சர்.. வேலை நேரத்தில் அதில் மட்டும் கவனமா இருப்பேன்.. அவ்வளவு தான்..”
என்று சொல்ல,
“நல்லது தான்..” என்று தானும் அதனை ஏற்ற சிபி,
“இந்த வொர்க் ப்ரஷர் எல்லாம் இல்லாம நளினுடன் ப்ரெண்ட்லீயா ஒரு மீட் கிடைச்சால் சந்தோஷப்படுவேன்.. ம்ம்ம்.. இன்னைக்கு நைட் டின்னர் போகலாமா நளின்..”
என்று ஆர்வமாய் சொல்லிவிட அவளுக்கு சங்கடமானது.
ஆரம்பத்தில் இருந்து சிபியின் ஆர்வ பார்வையை உணர்ந்தே இருந்தவளுக்கு என்றேனும் ஒருநாள் இப்படி ஏதாவது வரும் என தெரியும்..!! ஆனால் இன்றே எதிர்பார்க்கவில்லை.
என்ன பதில் சொல்வது என முழித்தது நொடி பொழுது தான் அதன்பின்,
“ஸாரி சர்.. மே பீ சம் அதர் டைம்.. இப்போ என்னோட பெர்சனல் வொர்க்ஸ் கொஞ்சம் இருக்கு..”
என பட்டும் படாமலும் கூறி விடைபெற்று தன் வெஸ்பாவில் பறந்துவிட அவளின் மறுப்பில் சற்று ஏமாற்றமாக இருந்தாலும்,
‘இட்ஸ் ஓகே சிபி.. அவங்க நோ சொல்லலயே..!! காத்திருப்போம்..’
என தன்னையே தேற்றி போகும் அவளை அசையாமல் பார்த்து நின்றான்.
சைட்டில் இருந்து கிளம்பிய வெஸ்பா நேராக சென்று நின்றது ‘கற்க..’ அலுவலகத்தில் தான்..!!
இதுவரை இங்கே வந்ததே கிடையாது. இப்போதும் இங்கே வர அவளுக்கு பிடிக்கவில்லை தான். ஆனால் தன் காரியமாக அவனை சந்தித்து தானே ஆக வேண்டும்..!!
ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவள் வரவேற்பு அறையில்,
“மிஸ்டர் வினோதகனை பார்க்கணும்..” என்று சொல்ல அவளின் பெயரை கேட்டுக் கொண்ட அப்பெண்ணும்,
“வெயிட் அ மினிட் மேம்..” என்று கூறி அலைபேசியில் தொடர்புக் கொள்ள மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ,
“ஸாரி மேம்.. பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..” என வழக்கமான தன் மரத்த குரலில் சொல்லிவிட அதிர்ச்சியில் அவளின் கண்கள் விரிந்தது. நிச்சயம் அவன் இப்படி சொல்வான் என எதிர்பார்க்கவே இல்லை.
‘ ஹவ் டேர் ஹி..’
ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பெருக,
“நான் இப்ப மீட் பண்ணியே ஆகணும்னு சொல்லுங்க… ரைட் நௌ..”
என்று அழுத்தமாய் அந்த பெண்ணிடம் சொல்ல,
“இல்ல மேம்.. சர் பெர்மிஷன் இல்லாம அப்படி எல்லாம் பார்க்க முடியாது..”
என்று அவளும் முடிவாய் சொல்லவே,
“ஓகே ஃபைன்.. உங்க சாரை மீட் பண்ணாம நானும் இங்கே இருந்து வெளியே போக போறது இல்ல.. முடிந்தால் என்னை வெளியே அனுப்பி பாருங்க.. இதையும் சொல்லுங்க உங்க சோ கால்ட் பாஸ் கிட்ட..”
என அலட்சியமும் ஆத்திரமும் போட்டியிட கூறிவிட்டு எதிரே இருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு சட்டமாய் அமர்ந்துவிட்டாள்.
‘இதேதுடா வம்பா போயிடுச்சு..’
பாவம் அந்த ரிஷப்ஷனிஸ்ட்
பெண் தான் முழிக்க வேண்டியதாக இருந்தது. இதுவரையில் இப்படி யாரும் அடாலடியாக பார்த்தே ஆக வேண்டும் என்று நின்றது இல்லை.
வேறு வழியில்லாமல் மீண்டும் வினோதகனை அழைக்க அவள் எதுவும் கேட்கும் முன்பே அங்கே பதில் வந்து இருந்தது. அதில் நிம்மதியாய் மூச்சுவிட்டு தன் அடுத்தடுத்த வேலையை கவனித்தாள்.
நளின் தன் பூட்ஸ் அணிந்த பாதங்களினால் தரையில் தாளமிட்டபடி நெற்றியை பிடித்துக் கொண்டு கடும் எரிச்சலோடு அமர்ந்து இருந்தாள்
இங்கே வந்து அரைமணி நேரம் கடந்து இருக்கும்..! நிமிடங்கள் கடக்க கடக்க அவளின் கோபமும் ஏறிக் கொண்டே போனது.
பொறுமையாக பேசி சமரசமாக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சுக்கு நூறாக உடைந்து இருக்க,
“நானா..? அவனா..?” என இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவுடன் பல்லை கடித்து காத்திருந்தாள்.
இங்கே சிறுத்தையாய் சீற்றத்தோடு
அவள் அமர்ந்திருக்கும் காட்சி வரவேற்பறை தாண்டி உள்ளே கிட்ட தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘கால் செண்டர்..’ போல்
ஹெட்போன் அணிந்து பேசிக் கொண்டும் கணினியில் மும்முரமாய் பணியாற்றிக் கொண்டும் இருந்த பெரிய அறையின் ஒரு பகுதியில் ‘கான்ஃப்ரென்ஸ் ரூம்..’ என்ற பெயர் தாங்கிய அறையில் அவனின் மடிக்கணினியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அவன் வினோதகன்..!!!
சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் இடமும் வலமும் லேசாய் சுழன்றப்படி தாடையை இரு விரலில் தாங்கி மடிக்கணினியில் தெரியும் அவள் முகத்தையே பார்த்தான்..
வினோதகன் மட்டுமின்றி அவ்வறையில் அவனின் நண்பர்கள் ஹரிஹரன், கார்த்தி மற்றும் ஈஸ்வரியும் இருந்தனர். இவர்கள் நால்வரும் சேர்ந்து உருவாக்கியது தான் கற்க..!!
பொறியியல் படித்த மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான மின்வழிக்கற்பிக்கும் செயலி..!!
உலகத்தின் ஓட்டத்திற்கு இணையாக நாமும் இயங்க வெறும் பட்டதாரியாக மட்டும் இல்லாமல் செயல்திறன் வாய்ந்தவர்களாகவும் இருப்பது அவசியம் என்ற நோக்கத்தோடு இணையம் வழியே தனித்தனி பாடப்பிரிவுகளாய் கற்பித்து, அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர்.
அதற்கென இந்தியாவின் மிக அனுபவமுள்ள, திறமையான விரிவுரையாளர்களை தேடிச் சென்று நியமித்து அவர்கள் கற்பிப்பதை படமாக்கியதோடு ‘உதவி பொறியாளர்கள்’ என மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் ப்ராஜக்ட்ஸ் அசைன்மென்ட்ஸ்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அலுவலகத்தில் திறமைமிக்க பொறியாளர்களை நியமித்து இத்தனை வருடங்களில் கல்வித்துறையில் தங்களுக்கு என தனி முத்திரையை பதித்து உள்ளனர்.
“ம்ச்.. அவளை இங்க யாரும் உட்கார சொல்லலயே.. தானா தானே உட்கார்ந்து இருக்கா..!! இருக்கட்டும்..”
என்றான் சலனமின்றி..
“உனக்கு இப்படி எல்லாம் வீம்பு பண்ண தெரியுமா வினோ.. நீயா இதுன்னு ஆச்சரியமா இருக்குடா..”
நம்ப முடியாமல் பார்த்த கார்த்தியிடன் பதில் சொல்லாமல்
திரையை மினிமைஸ் செய்துவிட்டு,
“நாம நம்ம மீட்டிஙை கண்டினியூ பண்ணலாமா..” என சொல்ல மற்ற மூவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். வினோதகனின் இந்த பிடிவாதமும் அழுத்தமும் அவர்களே இதுவரை காணாத ஒன்று..!!
“இது அவன் பர்சனல் டா.. அவன் போக்கில் விட்டுடுங்க..” என்ற ஹரி அதன்பின் தங்கள் புதிய திட்டங்கள் பற்றியும் மாணவர்களுக்கு புதிதாய் அறிமுகப்படுத்த வேண்டிய சலுகைகள் பத்தியும் பேச்சை தொடங்க மற்றவர்கள் கவனமும் அதில் சென்று கலந்துரையாடல் தொடர்ந்தது.
மேலும் அரைமணி நேரம் தான் சென்றிருக்கும்.. வினோதகன் மீண்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்துப் பார்க்க அவள் அமர்ந்த நிலையில் மாற்றம் இல்லை. முகம் மட்டும் செந்தனலாய் கொதித்து சிவந்து இருந்தது.
‘உன் திமிறு குறையவே குறையாது டி…’ மனதில் எண்ணமிட்டு அவளையே பார்க்க,
வினோதகனின் கவனம் இங்கில்லை என்பதனை உணர்ந்த மற்றவர்களும் மீட்டிஙை அத்தோடு முடித்துக் கொண்டு,
“நீ முதலில் இந்த பிரச்சனையை பார் வினோ.. நாம அப்புறம் கண்டினியூ பண்ணலாம்..”
என்று ஹரிஹரனே சொல்ல நெற்றியை பிடித்துக் கொண்டு,
“ஸாரி காய்ஸ்..” என்றான். அவளை இங்கே பார்த்ததில் இருந்து அவன் அவனாகவே இல்லை.
“இட்ஸ் ஓகே வினோ… ஆனா இப்படி பண்ணாத.. அவங்க வேற ஏதாவது காரணமாக கூட வந்து இருக்கலாம்.. போய் பேசுடா..”
என தன்மையாகவே கார்த்தி எடுத்து சொல்ல அவனும் போகலாமா என்று யோசித்த நேரம் சட்டென்று எழுந்த நளின் யாரும் எதிர்பார்க்காத நொடியில் ரிஷப்சனிஸ்ட் பெண்ணை மீறிக் கொண்டு உள்ளே நுழைய,
“மேம்.. இருங்க..” என்று பதறி அவளும் பின் தொடர இங்கே திரையில் பார்த்த இவர்களுக்கும் அதிர்ச்சி தான்..
வினோதகன் சட்டென்று இருக்கையில் இருந்து எழும்ப அந்த சூழ்நிலையில் சிரிப்புற்ற ஈஸ்வரி,
“வேங்கை வெறிக்கொண்டது.. அப்போவே போக சொன்னோமே கேட்டியா மகனே.. அவங்க வர ஸ்பீட்க்கு உன்னை அடிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல..”
என்று கிண்டலாக சொல்ல,
“ஏன் ஈஸ்வரி நீ வேற..” என்று சொல்லியவன் வேகமாய் அறையில் இருந்து வெளியேற அச்சமயம் அவளும் அவனை நேருக்கு நேர் பார்த்து விட்டாள்.
அதிரடியாய் நுழைந்த பெண்ணையும் பதற்றமாய் ஓடி வந்த வினோதகனையும் கண்டபின் அங்கிருந்த ஊழியர்கள் தங்கள் வேலையை மறந்து இவர்களை வேடிக்கை பார்த்தனர்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ..? பெரிய இவனா நீ..? என்னை உன் பின்னாலயே சுத்த விடலாம்ன்னா..? அதுக்கு எல்லாம் வேற ஆளை பார்..”
என எடுத்த எடுப்பில் சத்தமிட ஈஸ்வரி முதற்கொண்டு நண்பர்கள் மூவரின் முகமும் மாறிவிட்டது.
“ஷ்ஷ்.. கால்ம் டவுன்.. உள்ள போய் பேசலாம் வா..”
என்று அவன் பொறுமையாய் சொல்ல முயல,
“முடியாது.. நான் மரியாதையா பேச நினைச்சப்போ நீ வரலல.. அப்போ இங்க தான் பேசுவேன்.. என்னை மீட் பண்ண முடியாதுன்னு நீ சொல்றியா..?? இங்க நானும் உன்னை பார்க்க தவம் கிடக்கல ஓகே..!!! உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இருக்கவே கூடாதுன்னு தான் நினைக்கிறேன்..
நீ தான் பிரச்சனையை வளர்த்துட்டே போறது..!!
எனக்கும் இதனை வேற மாதிரி ஹன்டில் பண்ண தெரியும் வினோதகன்.. இங்க உன் ஆபிஸில் நின்னு பேசுற எனக்கு கோர்ட்டில் நின்னு பேசவும் தெரியும்.. உன் மரியாதையை நீயே காப்பாத்திக்கோ..”
என விரல் நீட்டி மிரட்டலாகவே அவள் பேச சுற்றி அனைவரின் பார்வையில் நிறுத்தி தன்னை அவள் பேசும் அத்தனை பேச்சிலும் முகம் மாறாமல் நின்றவன்,
“இங்க கெடுறது என் மரியாதை இல்ல.. உன்னோட தராதாரம் தான்.. ஒரு தேர்ட் ரேட்டட் பர்சன் மாதிரி நாகரீகம் இல்லாம நின்னு கத்திட்டு இருக்க..!! படிச்சு ஒரு கண்ணியமான வேலையில் இருக்கும் ஆள் தானே நீ..? இது தான் உங்கம்மா சொல்லி கொடுத்தாங்களா..??”
என நிதானமாய் அவளை எங்கே அடிக்க வேண்டும் என்று அறிந்தவனாய் சொல்ல இப்படியான பரிமாணத்தை வினோதகனிடம் எதிர்பார்க்காத நளின் வாயடைத்து நின்றாள்.
“உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ.. ஆனால் நீ நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது.. நடக்கவும் விட மாட்டேன்.. இந்த ஜென்மத்தில் உனக்கு டிவோர்ஸ் கிடைக்காது மிசஸ் நளினி வினோதகன்..”
என்று அழுத்தந்திருத்தமாய் உரைக்க அதுவரை அவனை எல்லார் முன்பும் அவமானப்படுத்திவிடும் வேகத்தில் பேசியவள் இப்போது எல்லார் பார்வையும் தன்னை மட்டுமே ஆராய்ச்சியாக பார்ப்பது போல் தோன்ற கண்கள் கலங்கிடும் போல் இருந்தது.
‘இவன் முன்னே அழுவதா..?’ தன்மானம் கொண்டவளாய் வினாடியும் தாமதிக்காமல் வெளியேறிவிட்டாள். ஆனாலும் அவள் கண்ணீரின் தடம் அவன் கண்களில் விழாமல் இல்லை.