இவர்கள் அனைவரும் மதுரையைச் சென்று சேர்ந்த போது, வேதவல்லியின் ரத்த போக்கு நிறுத்தப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் தயார் செய்து கொண்டிருந்தனர்.வேதவல்லி இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை. அவரைத் தனி வார்டில் வைத்திருந்தனர். அவரை அந்த நிலையில் பார்த்த சந்தியா மயங்கி விழுந்தாள். அவளும் ஒரு மருத்துவர் என்றாலும் முதலில் அவள் தன் தாய்க்கு மகள்.
மயக்கத்தில் இருந்து தெளிந்த சந்தியாவிடம் கதிர் ஒரு குளிர்பானத்தைக் கொடுக்க, சந்தியா அதைக் குடிக்க மறுத்தாள்.
“சந்தியா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. எல்லாருமே அத்தைய எப்படியாவது காப்பாத்ததான் பார்க்கிறோம். நீ இப்படி இருந்தா நான் எப்படி அத்தைய கவனிக்கிறது?நான் உன்னைப் பார்ப்பேனா இல்லை அத்தைய பார்ப்பேனா சந்தியா….” என்று கதிர் கேட்டதும்,
சந்தியா அவனிடம் இருந்த குளிர்பானத்தை வாங்கி ஒரே மூச்சில் குடித்தவள் “நீங்க போங்க மாமா. நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
அவள் அழுகையை அடக்கி கொண்டு இருக்கிறாள் என்று கதிருக்குப் புரிந்தது. ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு எழுந்தவன், துரையுடன் மருத்துவரை பார்க்க சென்றான்.
“அவங்க இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம். கட்டி ரொம்பப் பெரிசா இருக்கு. புற்று நோய் கட்டியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. அதனால டெஸ்ட் பண்ண சொல்லிருக்கேன்…” என்று மருத்துவர் ஒரு குண்டைத் தூக்கிப்போட, கதிர், துரை இருவருமே அதிர்ந்தனர்.
அவர்களின் கவலையை உணர்ந்த மருத்துவர் “அது புற்று நோய் கட்டின்னு நான் உறுதியா சொல்லல. எதுக்கும் பார்த்திடுறது நல்லது. சாதாரணக் கட்டியா இருந்தா நாளைக்கே ஆப்ரேஷன் பண்ணலாம். அவங்களுக்கு ரத்தம் தேவைப்படும். உங்களுக்குத் தெரிஞ்சவங்களே ரத்தம் கொடுத்தா இன்னும் நல்லது. அப்படி யாரவது இருந்தா ஏற்பாடு பண்ணுங்க.” என்று மருத்துவர் சொன்னதும்,
“காப்பாத்திடலாம் இல்லையா. உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே….” என்று துரை பயந்து கொண்டே கேட்க,
“இப்ப எதுவும் சொல்ல முடியாது. ஆப்ரேஷன் முடிஞ்சு அவங்க கண்டிஷன் பார்த்த பிறகு தான் சொல்ல முடியும்.” என்றார் மருத்துவர்.
கதிர், சித்தார்த், சுபாஷ், வெங்கி, சோலை அனைவரும் தங்கள் ரத்தத்தைக் கொடுக்கத் தயாராக இருந்த போதும், வேதவல்லிக்கு சித்தார்த் மற்றும் சுபாஷ் இருவரின் ரத்தம்தான் பொருந்தியது.அவர்களுடைய ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுத்து விட்டு காத்திருந்தனர். சந்தியா தானும் ரத்தம் தருவதாகச் சொல்ல,
“நீ தெம்பா இருந்தாதான் உங்க அம்மாவை கவனிக்க முடியும். ரிசல்ட் வரட்டும் பார்ப்போம். வேற யாருதும் சரி வரலைன்னா நீ கொடு…” என்று கதிர் சந்தியாவின் உடல் நிலையை மனதில் வைத்து சொல்ல, சந்தியாவும் சரி என்றாள்.
சந்தியா தன் அம்மாவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். வேதவல்லிக்கு இருப்பது சாதாரணக் கட்டிதான் என்பது உறுதி செய்யப்பட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.மறுநாள் அறுவை சிகிச்சைக்கு வேதவல்லியை கொண்டு செல்ல. எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியில் காத்திருந்தனர். பெரியசாமி தனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அங்கேதான் இருந்தார்.
அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த செவிலியர், கதிரிடம் ஒரு மருந்து சீட்டை கொடுத்து அதில் இருக்கும் மருந்தை உடனே வாங்கி வரும்படி சொல்ல, கதிரும், சித்தார்த்தும் மருத்துவமனையில் இருக்கும் மருந்தகத்திற்குச் செல்ல, அங்கே அந்த மருந்து இல்லை.
“ஆப்ரேஷன் நடந்திட்டு இருக்கு சார். இப்ப போய் இந்த மருந்து இல்லைன்னு சொல்றீங்களே…” என்று கதிர் கவலைப்பட,
“இங்க இருந்திருந்தா டாக்டர் போன் போட்டு எங்களயே நேரா கொண்டு வர சொல்லியிருப்பாங்க சார். இங்க இல்ல அதனாலதான் உங்கக்கிட்ட கொடுத்திருப்பாங்க…” என்றவர், வேறு சில மருத்துவமனைகள் பெயரை சொல்லி அங்கே சென்று விசாரிக்கச் சொல்ல, கதிர் சித்தார்த் ஒரு பக்கமும், சோலை ஒரு பக்கமும் சென்றனர்.
கதிருக்கு அந்த மருந்து கிடைக்கவில்லை. ஆனால் சோலை எப்படியோ வாங்கி விட்டான்.சோலை சரியான நேரத்தில் மருந்துடன் வர, துரை அவன் கையை நெகிழ்ச்சியுடன் பற்றிக்கொண்டார்.ஆப்ரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர் “ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிருக்கு. இப்போதைக்குப் பயப்பட ஒன்னும் இல்லை. ஆனா பேஷன்ட் கண்ணு திறந்த பிறகுதான் உறுதியா சொல்ல முடியும்.” என்றவர் தன் அறைக்குச் செல்ல,
டாக்டரின் வார்த்தையே இப்போதைக்கு எல்லோருக்கும் ஆறுதலாக இருக்க, அமைதியாக வேதவல்லி கண்விழிக்கக் காத்திருந்தனர்.வேதவல்லி அவசர சிகிச்சை பிரிவில் இருந்ததால், எல்லோரும் வெளியே காத்திருக்க, சந்தியா மட்டும் அடிக்கடி உள்ளே சென்று தன் அம்மாவை பார்த்து விட்டு வந்தாள்.வேதவல்லி மாலை வரை அனைவரையும் தவிக்க விட்டே கண் திறந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் நலமாக இருப்பதால் அறைக்கு மாற்ற சொல்லிவிட்டு செல்ல, எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு தான் எல்லோரும் சாப்பிட சென்றனர். சித்தார்த்தும் சுபாஷும் மட்டும் அன்று இரவு ஊருக்கு கிளம்ப, சந்தியா அவர்கள் இருவருக்கும் கண்ணீருடன் நன்றி சொன்னாள்.
“அவங்க உனக்கு மட்டும் அம்மா இல்லை எனக்கும்தான். அட்லீஸ்ட் நான் வந்ததுக்கு அவங்களுக்கு என்னால ரத்தமாவது கொடுக்க முடிஞ்சதே…” என்று அவன் செய்த பெரிய உதவியைச் சித்தார்த் சாதாரணமாகச் சொல்ல,
“நானும் இந்தக் குடும்பத்தில ஒருத்தன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன். நீ எனக்கு நன்றி சொல்லி பிரிச்சு வைக்காத.” என்றான் சுபாஷ்.
சந்தியா திரும்பி தன் தந்தையைப் பார்த்தவள் “அப்பா! சித்தார்த்தும் சுபாஷ் அண்ணனும் நம்ம ஜாதி இல்லை. ஆனா அவங்க ரத்தம்தான் அம்மாவுக்குப் பொருந்தி இருக்கு. பெரிய மாமா வேற ஜாதியில சம்பந்தம் பண்ணாருன்னு தான என்னைக் கதிர் மாமாவுக்குக் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க. இப்ப மட்டும் உங்க ஜாதி வெறி எங்க போச்சு. இப்பவும் நம்ம ஜாதிக்காரங்க ரத்தத்தை மட்டும் அம்மாவுக்கு ஏத்த வேண்டியது தான….” என்று சந்தியா ஆத்திரத்துடன் கேட்க, துரை மெளனமாகத் தலை குனிந்தார்.
சந்தியா மேலும் எதோ சொல்ல வர “போதும் சந்தியா… ஏற்கனவே அத்தைக்கு முடியலைன்னு கவலையில இருக்கிற மனுஷனை நீ வேற இன்னும் வாட்டாத…” என்று கடிந்த கதிர், துரையைப் பார்த்து “நீங்க போங்க மாமா… அவ அதோ கோபத்தில பேசிட்டா.. மனசுல வச்சுக்காதீங்க.” என்றான்.
அவனை நோக்கி நன்றி பார்வையைச் செலுத்திய துரை வேதவல்லி இருந்த அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார். கதிர் சந்தியாவைப் பார்த்து முறைக்க, சந்தியா அவன் பார்வையை அலட்சியப்படுத்தினாள். சித்தார்த்தும், சுபாஷும் சென்று வேதவல்லியை பார்த்துவிட்டுத் துரையிடம் விடைபெற, இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்,
“சந்தியா கேட்டது எதுவும் தப்பு இல்லை.நான் உங்க ரெண்டு போரையும் ரொம்ப அலட்சியப்படுத்தி இருக்கேன். எனக்கு அப்ப புரியலை… ஜாதி வெறி என் கண்ணை மறைச்சிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் மனசுல எதையும் வச்சுக்காம ரத்தம் கொடுத்தீங்க. எனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. இனி நீங்க ரெண்டு பேரும்தான் என் பிள்ளைகள். நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கணும்…” என்று துரை நெகிழ்ந்த குரலில் சொல்ல,
“ஆமாம் சித்தப்பா சித்துச் சொல்றது சரி தான். உங்களை டெரர்ராவே பார்த்துட்டு இப்படிப் பார்க்க நல்லாயில்லை….” என்று சுபாஷும் கேலி செய்ய, அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, சந்தியா மட்டும் உர்ரென்றே இருந்தாள்.
இரவு கதிர் சந்தியா துரையைத் தவிர மற்றவர்கள் வீட்டிற்குக் கிளம்ப, கதிர் துரையையும் வீட்டிற்க்கு போகச் சொன்னான்.
“நீங்க போய் நைட் தூங்கிட்டு, காலையில அத்தைக்குத் தேவையானது எல்லாம் எடுத்திட்டு வாங்க மாமா…” என, துரைக்கு வேதவல்லியை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. ஆனால் அதைக் கதிரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல், அவர் உதவிக்குச் சந்தியாவின் முகத்தைப் பார்க்க, அவள் நீயாச்சு உன் மாப்பிள்ளை ஆச்சு என்பதைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
துரையின் தயக்கத்தைப் பார்த்த கதிர், அவர் அங்கே சென்றாலும் நிம்மதியாக இருக்க மாட்டார் என்பதை உணர்ந்து, பிறகு எதுவும்சொல்லாமல் அமைதியாக இருந்தான்.சந்தியா அவள் அம்மாவோடு அறையில் இருக், கதிரும், துரையும் வெளியே காத்திருப்போர் இருக்கையில் உட்கார்ந்திருந்தனர்.முன் தினத்தில் இருந்து அலைந்த அலைச்சல் காரணமாகக் கதிர் சோபாவில் உட்கார்ந்தவாறே உறங்க, துரை மெதுவாக எழுந்து அவன் கால் வைத்துக்கொள்ள வசதியாக டேபிளை அவன் பக்கம் நகர்த்தியவர், ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் வேகத்தையும் அதிகப்படுத்தினார்.
கதிர் மட்டும் இல்லையென்றால், அவரால் தனியாக இந்த நிலையை நல்லபடியாகக் கடந்திருக்கவே முடிந்திருக்காது. அதிர்ச்சியில் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நொடியில் விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு அவன் செயல்பட்டதால்தான் வேதவல்லியை காப்பாற்ற முடிந்தது.வேதவல்லி அபாயக் கட்டத்தைத் தாண்டி இருந்தாலும், இன்றுதான் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கதிர் அடிக்கடி எழுந்து சென்று தன் அத்தையைப் பார்த்து விட்டு வந்தான்.
அவன் அப்படி எழுந்து வேதவல்லி இருக்கும் அறைக்குச் செல்லும் போது எல்லாம். அங்கே சந்தியா உறங்காமல் விழித்திருப்பதைப் பார்த்தான். சந்தியா அவனைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.விடியற்காலையில் கதிர் வந்த போதும் சந்தியா உறங்காமல்தான் இருந்தாள். துரையிடம் வேதவல்லியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சந்தியாவை டீ குடிக்க அழைத்துச் சென்றான்.
சந்தியா எதோ யோசனையிலேயே நடந்து வந்தாள். அவள் கை பிடித்து நிறுத்திய கதிர் “என்ன ஆச்சுடி? ஏன் ஒரு மாதிரி இருக்க? உங்க அப்பா மேல என்ன கோபம் சந்தியா உனக்கு?” என்று கேட்க,
“அம்மாவுக்கு எதாவது ஆகிருந்தா, அதை நினைச்சு பார்க்கவே முடியலை மாமா. அம்மா இல்லாம ஒரு நாள் கூட யோசிக்க முடியலை. எனக்கு அப்பா மேல மட்டும் இல்லை என் மேலயே கோபம்தான். அம்மா என்கிட்ட ஏன் அவங்களுக்கு உடம்பு முடியலைன்னு சொல்லல? அவங்களுக்கு என் மேல கோபமா…” என்று சந்தியா அழ,
அவளைத் தன் தோளோடு அணைத்த கதிர் “அப்படி இருக்காது சந்தியா. அவங்க சாதாரணமா நினைச்சி இருப்பாங்க. நீ மனசை போட்டு குழப்பிக்காம,, உங்க அம்மா நல்லா ஆனதும் அவங்கக்கிட்டயே கேளு…” என்று கதிர் சமாதனம் செய்ய, சந்தியா கண்ணீரை துடைத்தபடி அவனுடன் நடந்தாள்.