அத்தியாயம் 1
கோடைகாலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தின் எட்டாம் நாள், உலக மகளிர் தினம். காணொளிகளின் ஆதிக்கத்தால் வானொலிகளின் பயன்பாடு சற்று குறைந்திருந்தாலும்,
கண்கள் மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் சிற்சில இடங்களில் இன்றும் காணொளிகள் அதன் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு காணொளி நிகழ்ச்சிக்காக மகளிர் தினமான அன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள் நம் நாயகி,மகிழினி.
மகிழினி… மித்ரா என்ற புனைப்பெயரில், 15 வயது முதலே தன்னுடைய எழுத்துப் பயணத்தை தொடங்கியவள். பத்து வருட எழுத்துப் பயணம். இன்று அவளுடைய எழுத்திற்காய் எண்ணற்ற ரசிகர்களையும் ரசிகைகளையும் சம்பாதித்து விட்டாள். புத்தகம் வாசிப்பவர்கள் யாருக்கும் அவளை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
” சன்டே கூட லீவ் விடாமல் உங்களுக்கு ஹாப்பி மார்னிங் சொல்ல வந்திருக்கேன்… நான், உங்க வானதி. நீங்க கேட்டுட்டு இருக்கிறது மிர்ச்சி எஃப்எம் 98.5 வின் ஹாப்பி மார்னிங்“
“இப்போ நான் உங்க எல்லாருக்கும் ஹாப்பி மார்னிங் சொல்லறதுக்கு முன்னாடி நீங்க எனக்காக ஒன்னு பண்ணனும்…
ஆற அமர உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தாலும்… வேர்க்க விருவிருக்க ஜாகிங் போயிட்டு இருந்தாலும்… சண்டே ஒரு நாள் மட்டும் தான் தூங்குறேன் அப்படின்னு பெட் ஓட ரோமன்ஸ் பண்ணிட்டு இருந்தாலும், எல்லாத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு… உங்க வீட்டில இன்னைக்கு சண்டே ன்னு கூட யோசிக்காமல், ரெஸ்ட் எடுக்காமல் வேலை பார்த்துட்டு இருக்கும் உங்க அம்மா, இல்ல உங்க மனைவி, என்ன மாதிரி யூத் கேர்ள்ஸ், யார் இருந்தாலும் உடனே அவங்களுக்கு போய் விஷ் பண்ணுங்க ஏன்னா இன்னைக்கு மகளிர் தினம்”
“நானும் என்னோட விஷஸ் சொல்லிக்கிறேன் எல்லா மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.”
குரலிலேயே அனைத்து பாவங்களையும் கொண்டுவந்திருந்தாள் நிகழ்ச்சித் தொகுப்பாளினி வானதி.
அதிகாலையிலேயே பாடல் கேட்பதற்காக ஒரு கூட்டம் வானொலியை இயக்கினால் இவளுடைய குரலுக்காகவும் பேச்சிற்காகவும் ஒரு கூட்டம் வானொலியை இயக்கும்.
” இந்த மகளிர் தினத்தை இன்னும் சிறப்பிக்க நம்மோடு இணைந்திருக்காங்க… இன்றைய சிறப்பு விருந்தினர் எழுத்தாளர்… திருமதி மகிழினி என்கிற மித்ரா.”
“ஹாப்பி மார்னிங் மித்ரா மேடம்”
“ஹாப்பி மார்னிங் வானதி”
“இவ்ளோ சின்ன வயசுலயே நிறைய கதைகள் கவிதைகள் எழுதி சாதனை படைத்து இருக்கீங்க…
எழுத்து அப்படின்னு சொன்னாலே எனக்கெல்லாம் அலர்ஜிதான்…
எல்லாராலயும் எழுதிட முடியாது. எழுத்தை நோக்கிய உங்களோட பயணம் எப்படி ஆரம்பித்தது… எது உங்களை எழுத்தை நோக்கி கொண்டு போனதுன்னு சொல்ல முடியுமா?”
தன்னுடைய பாணியிலேயே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள் வானதி.
“என்னை மட்டும் இல்லை எல்லாரையும் எழுத்தை நோக்கி எதோ ஒரு விஷயத்தின் மேல் இருக்கும் காதல் தான் இழுத்துச் செல்லும்.
அது அவங்களுக்கு அந்த மொழியின் மேல் இருக்கும் காதலா இருக்கலாம்…
தன்னுடைய நாட்டு மேல் இருக்கும் காதலா இருக்கலாம்…
இயற்கையின் மேல் இருக்கும் காதலா இருக்கலாம்…
அவர்கள் நம்பும் இறைவன் மேல் இருக்கும் காதலா இருக்கலாம்…
அவங்களுக்கு பிடித்த மனிதர் மேல் இருக்கும் காதலா இருக்கலாம்…
இல்ல காதலால தோன்றின வெறுப்பா இருக்கலாம்.. மொத்தத்தில காதல் தான் எழுத்துக்கு முதல்படி”.
“வாவ்!!! மேம் நீங்க ஒரு கவிஞர் அப்படின்னு நீங்க பேசுறதுலையே தெரியுது”
“அப்போ உங்களோட அழகான எழுத்துக்கு காரணம் எதன் மேல் உள்ள காதல்ன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?”
“காதலின் மேல் உள்ள காதல் தான்” என்று அவள் சிரித்துக்கொண்டே கூறி அந்த கேள்வியில் இருந்து எளிதாக தப்பி விட்டாள்.
“கவிஞரே உங்ககிட்ட நான் வாயை கொடுத்து இருக்க கூடாது… என்னை சின்னப்பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க”
“நீங்க ரொம்ப நல்லாவே பேசறீங்க”
“தேங்க்யூ சோ மச் மேம். உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கமெண்ட் கேட்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு”
“உங்களுக்கு என்ன… என்னோட கணவர் உங்களோட பெரிய விசிறி. அவரோட காலை சுப்பிரபாதமே உங்களோட குரல் தான்.”
“நெஜமா தான் சொல்றீங்களா மேடம்… நீங்க பெரிய எழுத்தாளர்… உங்கள் வீட்டில் எனக்கு ஒரு விசிறி இருக்கிறார் என்பது கேட்கவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”
“மேடம் வேண்டாமே… மித்ரா இல்லனா மகிழினி ன்னு மட்டுமே கூப்பிடுங்க. அந்த மாதிரி அழகுனர் வார்த்தைகள் எல்லாம் மொழியிலேயே மரியாதையை தெரிவிக்க முடியாத போது அதை தெரிவிப்பதர்காக சேர்க்கப்பட்டது.நம்மோடு மொழிக்கு அது தேவையில்லை. நம்மளோட மொழியே ரொம்ப மரியாதை ஆனது. அதுமட்டுமில்லாம நான் உங்களோட உயரதிகாரியோ ஆசிரியரோ இல்லையே!!”
“சரி சரி மித்ரா… மகிழினி என்கிற பெயரே ரொம்ப அழகான தமிழ் பெயரா தான் இருக்கு… அப்புறம் ஏன் நீங்க மித்ரா ன்ற புனை பெயரில் எழுதறீங்க அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?”
“மித்திரன் என்றால் நண்பன். நான் ஒரு தனிமை விரும்பி நிறைய நண்பர்கள் கிடையாது புத்தகங்கள் தான் என்னோட பெரிய நண்பன். சொல்லப் போனால் புத்தகங்கள் மட்டும் தான் என்னோட ஒரே நண்பன். எழுதணும்னு ஆரம்பிக்கும்போது… என்னுடைய நண்பன்னான இந்த எழுத்துக்களுக்கு அதையே பெயரா வச்சா என்னன்னு தோனிச்சு வச்சிட்டேன்”
“இப்பதான் உங்களுக்கு கல்யாணம் ஆச்சு என்று கேள்விப்பட்டேன்”
“ஆமா ரெண்டு மாசம் ஆச்சு”
“காதல் திருமணமா?”
“இல்லைங்க வீட்ல பார்த்த திருமணம்”
“உங்களோட இந்தக் காதலை நோக்கிய காதல்…… அதாங்க உங்க எழுத்துக்கள் அதில் உங்கள் கணவருக்காக ஏதாவது எழுதி இருக்கீங்களா?
“ஏன் எழுதாமல்… என்னோட கவிதைகளின் நாயகனே அவர் தானே…”
“நீங்க சொல்வதை வவைத்துப் பார்த்தால் இப்போ உங்கள் கணவர் இந்த ஷோவை கேட்டுட்டு இருப்பார் அப்படித்தானே… அப்போ நீங்க இப்போ ஒரு கவிதை சொல்லுங்க உங்களுடைய கவிதைகளின் நாயகனுக்காக.”
கண்டிப்பாக என்றவள் ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு.
உன்னுடன் என் காதல்…
கண்களில் தோன்றி… இதயத்தில் நிறைந்தது அல்ல.
இளமையில் தோன்றி…. இறப்பில் முடிவதற்கு.
உணர்வுகளில் தோன்றி… ஆன்மாவில் நிறைந்தது.
இப்பிறவி மட்டும் இன்றி… எப்பிறவியிலும்
என் கவிதைகளின் நாயகன் நீ…
“வாவ் அமேஸிங்…. மித்ரா.
இந்த அழகான கவிதையுடன் நம்மளோட சிறப்பு விருந்தினருக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. ஒரு செலிபிரிட்டி கிட்ட பேசின மாதிரி இல்லை ஒரு தோழி கிட்ட பேசின மாதிரி தான் இருக்கு… உண்மையிலேயே நீங்க மித்ரா தான்.
ரொம்ப நன்றி மித்ரா நாங்க கூப்பிட்டதும் எதுவுமே கேட்காமல் உடனே ஷோக்கு வந்ததற்கு. “
“நீங்க எல்லாரும் சூடா ஒரு காஃபி குடிச்சிட்டே ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து பாட்டு கேளுங்க… நான் நம்மளோட சிறப்பு விருந்தினரை அனுப்பிவிட்டு வர்றேன்… நீங்க கேட்டுட்டு இருக்கிறது மிர்ச்சி எஃப்எம் 98.5 வின் ஹாப்பி மார்னிங்.”
என்று அவள் கூறவும் வானொலியில் பாடல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
வானொலி ஒலிபரப்பில் தான் மகிழினி மற்றும் வானதியின் உரையாடல் முடிந்திருந்தது உண்மையில் முடிந்திருக்கவில்லை.
“உண்மையிலேயே மித்ரா நீங்க பேசறத கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு… அதுவும் அந்த கவிதை சொல்லும் போது உங்க கண்ணில் இருந்தக் காதல்… நம்பவே முடியல உங்களுக்கு நிச்சயக்கப்பட்ட திருமணம் ன்னு… அவ்வளவு காதல் உங்கள் கணவரைப் பற்றி பேசும் போது. உங்க கணவரை நினைச்சா எனக்கு கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு.”
மித்ரா அந்தக் கவிதையை கூறியதைக் கேட்டவர்களுக்கு அவளுடைய காதலின் ஆழம் புரிவதை விட… அதை அவள் ஆழ்ந்து சொன்னதை கண்ட வானதிக்கு அவளுடைய காதலின் ஆழமும் அழுத்தமும் மிகத் தெளிவாக புரிந்தது… கணவனின் நினைவுகளே அவளுக்கு அத்தனை பூரிப்பை கொடுக்க முடியும் என்றால் எக்தகைய காதல் அவளுடையது?
இன்று இந்த வானொலி நிகழ்ச்சியை கேட்ட அனைவரும் அவளுடைய பேச்சையும்… அவளுடைய காதலையும் கண்டிப்பாக ரசித்திருப்பார்கள். அவன் ஒருவனைத் தவிர… அவன் வேறுயாருமல்ல மித்ராவின் கவிதைகளின் நாயகன் மித்ரன்.
அங்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்… இங்கு இவனை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதுவும் இறுதியில் அவள் கூறிய கவிதை, ‘அய்யோ இது உலக மகா நடிப்புடா சாமி’ என்று கவுண்டமணியின் பாணியில் அவனை சிந்திக்க வைத்தது.
ஏனெனில் மித்ரனை பொறுத்தவரை மகிழினி என்பவள் அவன் வாழ்வில் மகிழ்ச்சியை தருவதற்கு வந்தவளும் அல்ல. மித்ரா என்பவள் அவன் வாழ்வில் வந்த மித்ரனும் அல்ல.
மித்ரன்… இக்கதையின் நாயகன் பல கதைகளில் வருவதைப் போல… தொழில்துறையை தன் கையில் வைத்திருக்கும் தொழிலதிபன் இல்லை… அவனுடைய அறிவை மிஞ்சும் அறிவாற்றல் யாருக்கும் இல்லை என சொல்லுமளவிற்கு புத்திசாலியும் இல்லை… எல்லோரிடமும் வளைந்துக் கொடுத்துப் போகும் சாமர்த்தியசாலியும் இல்லை. ஆனாலும் அவன் லட்சத்தில் ஒருவன் தான்… கோடியில் ஒருவன் என்று கூட சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப நியாயத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில். அவன் தன்னுடைய நியாயத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை.
இதனால் அவன் இழந்ததுதான் அதிகம் என்றாலும் என்றும் அவன் தன்னுடைய கொள்கையிலிருந்து சிறிதும் விளகுவதாக இல்லை.
இப்பொழுது கூட அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான். தவறு செய்வது தன்னுடைய முதலாளி என்று அறிந்ததும் அந்த அலுவலகத்தில் வேலை புரியும் மற்றவர்களைப்போல் தன்னுடைய வேலையை மட்டும் பார்க்காமல்… தட்டிக் கேட்க போய் வேலையை இழந்துவிட்டு, சான்றிதழ்களையும் இழந்துவிட்டு மூன்று மாதங்களாக என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே இருக்கும் ஒரு சாதாரண விஐபி தான். கோபம் அதுதான் அவனுடைய மிகப் பெரிய பலவீனம்.
அன்று அவன் அடித்த அடியில் சுருண்டு விழுந்த முதலாளி இப்பொழுதுதான் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவர் செய்த தவறு வெளியில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் காவல்துறையிடம் செல்லவில்லை இல்லையெனில் இந்நேரம் அவன் வீட்டிலிருந்திருக்க மாட்டான். சிறையில் தான் இருந்திருப்பான்.
ஆனால் இப்பொழுது அலனுடைய மிகப்பெரிய கவலை அவனுக்கு வேலை இல்லை என்பதில்லை… ஒருவேளை மகிழினி கூறியதுபோல அவளே அடுத்த ஜென்மத்திலும் அவனுக்கு மனைவியாக வந்து விடுவாளோ என்பதுதான்.
“பிள்ளையாரப்பா அவ ஒரு ஃபிராடு அவ சொல்றதெல்லாம் நம்பி அடுத்த ஜென்மத்திலும் என்னைஅவளோடு கோர்த்து விட்டுறாத… அதுக்கு பதிலா நான் உன்னை மாதிரி சிங்கிள் ஆ இருந்துட்டு போய்டுவேன். நான் உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன் என்னை அவ கிட்ட இருந்து மட்டும் காப்பாத்து.”
என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தவன் காலை உணவையும் தயார் செய்துமுடித்திருந்தான். காலை உணவு தயாராகவும் மகிழினி வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.