அத்தியாயம் 4
“அண்ணா எனக்கு ஒரு வேலை வேணும்… என்ன வேலைன்னாலும் பரவாயில்லை… எதாவது பார்த்து கொடுங்கன்னா”
காலையிலும் சாப்பிடாததால் மதியமாவது சாப்பிடுவோம் என, எண்ணி தன் அறையில் இருந்து வந்த மகிழினியின் காதில் விழுந்தது இந்த வார்த்தைகள்.
‘இப்போ போய் நம்ம எதாவது சொன்னோம் நம்மல மறுபடியும் வச்சு செஞ்சிருவாங்க. சைலன்ட்டா சாப்பிட்டு ஓடிடவேண்டியதுதான். அவங்க சாப்பிட்டாங்களான்னு தெரியலையே…’ என்று எண்ணியபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு ஏதாவது இருந்தால் தானே சாப்பிடுவதற்கு மித்ரன் தான் சமைக்கவே இல்லையே…
அவள் சமையல் அறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டு வந்தவன். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க”
“கிச்சன்க்கு எதுக்கு வருவாங்க?… சாப்பிட வந்தேன்” என்க
“சமைக்கவும் வரலாம்….” என்றான் அவன் நக்கலாக.
“நீங்க சமைக்கலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். பசி வேறு காதை அடைத்தது அவளுக்கு.
“ஆமா டி உனக்கு சமச்சி போடத்தான் எங்க வீட்டுல என்ன வளர்த்து விட்டுருக்காங்க பாரு… இன்னைக்கு நீ பண்ணினதுக்கு நான் இந்த வீட்ட விட்டே கிளம்பிருக்கனும். ஆனால் அம்மா அப்பா வருத்தப்பட கூடாதேன்னு தான் இன்னும் இங்கயே இருக்கேன்… இனிமேல் உனக்கு சேவை எல்லாம் என்னால பண்ண முடியாது. வேணும்னா சமைச்சு சாப்பிடு.”
” நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.” என்றவள், மீண்டும் அவனிடம் திரும்பி “உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்.”
“எனக்கு எதுவும் வேண்டாம்… இனி உன் காசுல உட்கார்ந்து சாப்பிடுரதா இல்லைன்னு சொன்னதா நியாபகம்.”
“அதுக்காக சாப்பிடமலே இருப்பீங்களா? பசிக்கலையா?” அவன் சாப்பிடாமல் இருக்க தான் மட்டும் எப்படி சாப்பிடுவது என்னும் அக்கறையில் அவள் கேட்க அவனோ சாவகாசமாக…
“நான் ஏன்டி சாப்பிடாம இருக்கனும் நான் சாப்பிட்டு வந்து ஒரு மணி நேரம் ஆச்சி” என்றான்.
‘கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்ல ச்ச ‘ என்று அவள் முணுமுணுத்த படி சொல்ல
அவள் பின்னே சென்றவன்… அதைக் கேட்டு “எனக்கு உன் மேல அக்கறை எல்லாம் இந்த ஜென்மத்துக்கும் வராது கவலையே படாத” என்றவன் அவள் அலைபேசியில் ‘ஸ்விகி’ செயலிக்குள் செல்வதைப் பார்த்து…
“தினமும் இப்படி வெளிய ஆர்டர் பண்ணி சாப்பிடுவியா? சமைக்க கூட தெரியாமலா உன்ன வளத்தாங்க உங்க வீட்டில”
இப்பொழுது அவளுடைய தன்மானம் அடிவாங்கிவிட பேசியை அணைத்தவள் “எனக்கு சமைக்க தெரியாதுன்னு யாரு சொன்னா? நான் நல்லா சமைப்பேன்” என்றபடி சமையல் அறையை நோக்கி மீண்டும் நடந்தாள்.
‘ஐயையோ பெருசா பேசிட்டு வந்துட்டோம் எது என்ன பொடின்னு கூட தெரியாதே… சரி சமாளிப்போம். அவங்க தான் சாப்பிட மாட்டாங்களே… எப்படி இருந்தாலும் சூப்பர்ன்னு சொல்லிற வேண்டியதுதான்.’
என்று தனக்குள் பேசியபடி சமைக்க… இல்லை இல்லை சமாளிக்க ஆரம்பித்தாள்.
முதலில் அவள் கைக்கு வந்த சில காய்கறிகளை எடுத்து வெட்ட ஆரம்பித்தாள்.
“ஆஆஆ…” என்று வீடே அதிரும் படியான சத்தம் கேட்டு சமையல் அறைக்கு விரைந்தான் மித்ரன்.
“எய்… என்னாச்சு” என்று பதறியபடி அவளிடம் விரைந்தான், சிறிது நேரத்திற்கு முன் உன் மேல் எனக்கு இந்த ஜென்மத்தில் அக்கறை வராது என்று கூறியவன்.
“கை கட் ஆகிடிச்சு” என்று அவள் கூறவும்.
“காட்டு பார்போம்” என்று அவள் கையை பிடித்து பார்த்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
மிக மிக மெல்லிய கீறல். இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்… எனத்தான் தோன்றியது அவனுக்கு. “கொஞ்சம் அந்த கத்திய கொடு” என்றவன் கேட்க
“நீங்களே காய்கறி வெட்டி கொடுக்க போறீங்களா?” என்றபடி சிரிப்புடன் கத்தியை அவனிடம் நீட்டினாள்.
“இல்ல நீ கத்துன கத்துக்கும் உன் கையில இருக்கிற காயத்துக்கும் சம்மந்தமே இல்ல அதான் கொஞ்சம் சம்மந்த படுத்தலாம்ன்னு… ஆமா.. என்ன சொன்ன கை கட் ஆகிடுச்சா கைய கொடு உண்மையா கட் பண்ணி விடுறேன்” என்று அவன் கூறவும் கையை முதுகுக்குப் பின்னால் மறைத்தவள்.
“நீங்க எனக்கு எதுவும் கட் பண்ணி தர வேண்டாம் நானே பார்த்துகறேன். சமையல் பண்ணும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க வெளிய போங்க” என்றபடி அவனிடம் இருந்து கத்தியை வாங்கி மீண்டும் ஒரு மாங்காய்யை எடுத்து வெட்ட ஆரம்பித்தாள்.
“இல்ல இல்ல நீ பண்ணு நான் பார்க்கிறேன்” என்றபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“நீங்க பார்த்து கிட்டே இருந்தா நான் எப்படி சமைக்கிறது…”
“இப்போ என்ன சமைக்க தான செய்ற எதோ டிரெஸ் சேன்ஞ் பண்ணும் போது நான் பாக்கற மாதிரி சொல்ற…” என்று சொல்லி முடிக்கவும் தான் அவன் பேசியதற்கான அர்த்தமே அவனுக்கு உறைத்தது.
‘ஐயோ அது கூட எனக்கு பராவால்லையே டா… நீ இங்க நிக்கிறது தான எனக்கு பிரச்சனையே. யூடியூப் கூட பாக்க முடியாதே… சரி இந்த டயலாக்கை வச்சி ரோமன்ஸ் ஆவது கன்டின்யு ஆகுதான்னு பாப்போம்’ என்று மனதிற்குள் நினைத்தவள்….
“என்ன சொன்னீங்க” என்று கேட்க
“ஒன்னுமில்லை. நீ எப்படி இன்னைக்குள்ள சமைச்சி முடிச்சிடுவியா?” என்று அவன் நக்கலாய் கேட்க.
“நீங்க தான் என்ன டிஸ்டர்ப் பண்றீங்க இல்லன்னா நான் அப்போவே சமைச்சு முடிச்சிருப்பேன்.” என்று அவள் சிடுசிடுத்தாள்.
“ஓ சாரி செஃப்… ஃபிங்கர்ஸ் ஆன் மை மௌத். நான் இனிமேல் எதுவும் பேச மாட்டேன் நீங்க கன்டின்யு பண்ணுங்க.”
‘அடப்பாவி பழிவாங்க இதுவா டா நேரம். பசிக்க வேற செய்யுதே நானும் எவ்வளவு நேரம் தான் இப்படி காய்கறியே வெட்டிட்டு இருக்கறது…’ என்று மனதில் புலம்பியவள் மீண்டும் ஒரு மாங்காயை எடுக்க போக… மித்ரனுடைய பொறுமை காற்றில் பறந்தது.
“ஏய் என்னடி சமைக்க போற? எதுக்கு இத்தனை மாங்காய்?”
“சாம்பார் வைக்க போறேன்.”
“எத்தனை பேருக்கு ஒரு ஊருக்கா? இதுக்கு மேல உன்னை சமைக்க விட்டேன்னா எல்லாத்தையும் நீ வேஸ்ட் பண்ணிருவ. தள்ளிப் போ நானே பண்றேன்” என்றவன் விறுவிறுவென அவள் வெட்டிய மாங்காயை ஊருகாய்க்கு தயார் செய்து விட்டு. மற்ற காய்கறிகளைக் கொண்டு காய்கறி சாதத்தை தயாரிக்க ஆரம்பித்தான்.
” நான் கூட நினைச்சேன் என்னடா இந்த பொண்ணு இவ்ளோ அழகா இருக்கு… திறமையான எழுத்தாளரா வேற இருக்கு… இவ அப்பா எப்படி நமக்கு போய் இவள கல்யாணம் பண்ணி தரணும்னு நினைக்கிறாருன்னு… இப்ப தான புரியுது நான் தான் அவருக்கு கிடைச்ச ஒரே அடிமைன்னு.”
“நான் அழகா இருக்கேனா?” என்றாள் அவன் அணிந்திருந்த சட்டை கையினை பிடித்து திருகிக் கொண்டு.
“அப்போ நான் சொன்ன வேற எதுவுமே உன் காதுல விழல அப்படித்தான?” என்றபடி அவள் கைகளை விலக்கினான் அவன்.
“ம்ம்ம்” என்றவள் இடம் வலமாக பின் மேல் கீழாக என எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.
“இப்போ மட்டும் என் அம்மா இங்க இருந்திருக்கனும்… உன்னை யெல்லாம் தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சிருப்பாங்க… ஆன அவங்களையும் ஃபளன் பண்ணி என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட?”
அது வரை அவள் முகத்தில் இருந்த உற்சாகம் மெல்ல வடிய… ” நா.. நான் என்ன பண்ணேன்? அத்தை.. அத்தான்னோட குழந்தையை பாத்துக்க தான போயிருக்காங்க?”
“அண்ணனுக்கும் அண்ணிக்கும் இது ஒன்னும் முதல் குழந்தை இல்ல… அவங்களுக்கு முதல் குழந்தை பிறந்த அப்போ கூட அம்மா என்னை விட்டுட்டு போகல… ஆன இப்போ போயிருக்காங்க. நீ மட்டும் ஒழுங்கா அந்த வீட்டிலேயே இருந்திருந்தன்னா அவங்களும் கூட இருந்திருப்பாங்க. இது உன் வீடு நானும் வேலைக்கு எங்கேயும் போகல எப்படி அவங்க இங்க வந்து இருப்பாங்க?”
மித்ரன் முதலில் வசித்து வந்தது ஒரு வாடகை வீட்டில் தான் மகிழினி வந்ததும் ‘நமக்குன்னு சொந்த வீடு இருக்கும் போது நம்ம ஏன் வாடகை வீட்ல இருக்கணும்’ என்று கூறி அவர்களை இப்புதிய வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்.
இப்பொழுது அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதை ரணமாக்கியது. இவ்வளவு நேரம் இருந்த இதம் மறைய துவங்கியது. அவன் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் அவளுடைய தாக அவள் எண்ணியிருக்க அவனோ உன் வீடு… உன் அம்மா… உன் அப்பா… என்றுதான் இப்பொழுது வரை பேசிக்கொண்டிருக்கிறான்.
திருமணமான புதிதில் பல பெண்களின் நிலையும் இதுதான். பிறந்த வீடு உடனே அந்நியமாகி விட புகுந்த வீடு பழக்கமாவதற்கும் பலநாட்கள் ஆகிவிடுகிறது. அந்த நாட்களில் கணவனும் அவன் காட்டும் காதலும் மட்டுமே ஒரு பெண்ணை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் அதுவும் இல்லை என்றால்?
ஆனால் மித்ரன் கூறிய வார்த்தைகள் யாவும் அவள் செய்த காரியத்திற்காக அவளைக் காயப் படுத்துவதற்காவே அவன் கூறியது.. அதில் எள்ளளவும் உண்மை இல்லை. இது மகிழினிக்கும் தெரியும் அவள்தான் தினமும் அவளுடைய அத்தையிடம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது கதைக்கின்றாளே.
மித்ரனுக்கும் கூட சில நேரங்களில் சந்தேகம் வரும் ‘நான் அவருடைய மகனா இல்லை அவளா’ என்று.
மகிழினியை இப்பொழுது காயப்படுத்தியதும் தன்னவன் தன்னைப்பற்றி இப்படியா எண்ணிக் கொண்டிருக்கிறான்? என்னும் எண்ணம் மட்டுமே.
உடனே கைபேசியை எடுத்தவள் தன்னுடைய அத்தைக்கு அழைத்தாள்
அதைக் கண்டதும் அவனுக்கு தான் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. இப்பொழுது, தான் பேசியது எல்லாம் தன்னுடைய அன்னைக்கு தெரிந்தால் அவளை தூக்கி போட்டு மிதிக்க மாட்டார்கள் தன்னைத்தான் தூக்கிப்போட்டு மிதிப்பார்கள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.
“ஹலோ அத்தம்மா எப்படி இருக்கீங்க?
“நான் நல்லா இருக்கேன் டா நீ எப்படி இருக்க?”
“நான் நல்லா இல்ல அத்தம்மா… எதுக்கு நீங்க இங்க இல்ல? எப்போ வருவீங்க?”
“இன்னும் இரண்டே மாசம் டா… எனக்கும் அங்க வந்து உன்னோட இருக்கனுன்னு ஆசைதான். இரண்டு புள்ளைங்களையும் அவளாள தனியா சமாளிக்க முடியல… பெரியவன் வேற ரொம்ப சேட்டை… சின்னவ இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வந்துடுறேன். சரியா?”
“ம்ம்ம் சரி….”
“எய் என்ன குரல் உள்ள போகுது… புதுசா கல்யாணம் ஆன யாரும் உன்ன மாதிரி அத்தைய தேட மாட்டாங்க டி. என்ன, உன் புருஷன் எதாவது சொன்னானா?” என்று அவர் கேட்கவும்
“ஆமா அத்தை அவங்க எப்ப பார்த்தாலும் என்ன திட்டிட்டே இருக்காங்க” என்று பாவமாய் கூறியவள்… இங்கு அவனை பார்த்து கண்ணடித்தாள்.
‘ஐயோ போட்டுக் குடுத்துட்டாளே… செத்தடா நீ இன்னைக்கு… அப்பா அம்மா அண்ணன் அண்ணின்னு எல்லாரும் வரிசையா ஃபோன் போட்டு கிளிப்பாங்களே’ என்று அவன் எண்ணி கொண்டிருக்கையிளேயே குக்கர் விஸ் என சத்தம் எழுப்பி அவன் சிந்தனையை களைத்தது. அடுப்பை அணைத்தவன். ஒரு நிமிடம் தன் நிலையில் இருந்து இரங்கிவந்து அவளிடம் சொல்லாதே என்று கெஞ்சலாமோ என்று கூட தோன்றியது. ஆனால் மறுநிமிடமே அதற்கு அவர்களிடமே திட்டு வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்து விட்டான்.
“அதான பார்த்தேன் இல்லன்னா நீ எங்க என்னை தேட போற?….” என்று அலைபேசியில் கனகவல்லி குறைப்பட
“அத்தம்மா….” என்று சினுங்கினாள் மகிழினி.
இவர்களுடைய சிறு பிள்ளை தனத்தை நினைத்து சிரித்தவர்
“திட்டுறானா உன்னை… நீ ஃபோன வை இப்போ அவனை என்ன பண்ணறேன்னு பாரு… “
“அத்தம்மா அவங்க இங்க கிட்ட தான் இருக்காங்க. நான் ஸ்பீக்கர்ல போடுறேன் அவங்கள என்னை திட்ட கூடாதுன்னு சொல்லுங்க.” என்றவள் அலைபேசியை அவன் முன் நீட்ட…
” டேய் என்னடா பண்ற என் புள்ளைய நான் மட்டும் அங்க இருந்தேன்னு வை… தொலைச்சுருவேன் உன்ன… அவள ஒழுங்கா பாத்துகுறத தவிர உனக்கு வேற என்னடா வேலை…? புள்ளைய பத்திரமா பாத்துக்கோ புரியுதா”
சரிமா என்றவன்அவளை முறைத்தவாறே பேசி அவளிடம் கொடுத்தான்
“சரி அத்தம்மா எனக்கு பசிக்குது நான் இன்னும் சாப்பிடவே இல்ல சாப்பிட்டு வர்றேன் வச்சிடறேன்”
என்றவள் பேசிய அணைத்துவிட்டு “என்ன ஒழுங்கா பாத்துக்கணும்ன்னு அத்தம்மா சொல்லி இருக்காங்க. சும்மா நிக்காம போய் சாப்பாடு எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள்ள வைங்க”
என்றவாறு அவள் உணவு மேசையை நோக்கி நடக்க.. அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன்… ‘இருடி உன்ன என்ன பண்றேன்னு பாரு’ எனக் கருவிக்கொண்டே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு உணவு மேஜைக்கு சென்றான்.
“என்ன பாத்துகிட்டே இருக்கீங்க பரிமாற மாட்டீங்களா”என்று அவள் கேட்டதும் அவன் பார்த்த பார்வையில் மிரண்டவள் “சரி… சரி பரவால்ல நானே பரிமாறிக்கிறேன்” என்றவாறு சாப்பாட்டை எடுக்கப் போக…. அவனோ அதை அவள் கைகள் படாத தூரத்தில் நகற்றிவைத்தான்.
“என்ன பண்றீங்க எனக்கு பசிக்குது ப்ளீஸ் ” என்றவாரு சாப்பாட்டு பாத்திரத்தை நோக்கி கை நீட்டி அதை எடுக்க முற்பட அவனோ அதை மீண்டும் நகற்றினான் அவள் அவனைப் பாவமாய் பார்க்க ….
“500 ரூபாய் கொடு” என்றான்.
“உள்ள போய் என் பர்ஸ்ல இருக்கும் எடுத்துக்கோங்க”
“எடுத்துக் கொடுத்தன்னா உனக்கு சாப்பாடு…. இல்லைன்னா இல்ல. இனிமே உனக்கு ஃப்ரியா எல்லாம் சமைச்சு கொடுக்க முடியாது.”
“ஹோட்டலுக்கு கூட சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பில் போடுவாங்க… நீங்க பண்றது உங்களுக்கே ஓவரா தெரியல?”
என்று அவள் கேட்கவும்
“அதெல்லாம் எனக்குத் தெரியாது 500 ரூபாய் எடுத்துட்டு வா… வந்து கொடுத்துட்டு சாப்பிடு”
” இவ்வளவு நாள் நான் சாப்பிட்டதுக்கு எல்லாம் சேர்த்து 500 ரூபாயா?”
“இல்ல ஒரு நாளுக்கு இல்லை ஒரு வேளைக்கு மட்டும் தான் 500 ரூபாய். இவ்ளோ நாளோட பில் நான் கல்குலேட் பண்ணி சொல்றேன்.”
‘ஐயோ நம்மலே தான் வாய குடுத்து மாட்டிக்கிட்டோம்மா?’ என்று அவள் மனதில் எண்ணமிட்டுக் கொண்டே…
“ஹோட்டல்ல கூட இவ்வளவு காஸ்ட்லியா இருக்காது” என்க
“சரி அப்போ ஹோட்டல் போய் சாப்பிடு” என்றவாறு சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நகர பார்த்தவனை… கைகளைப் பிடித்துத் தடுத்தவள்.
“எனக்கு பசிக்குது இருங்க எடுத்துட்டு வரேன்” என்று அவனை கோபமாய் பார்த்துக்கொண்டே அவள் அறைக்கு சென்று 500 ரூபாயைக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
“இது சும்மா ட்ரைலர் தான்… இனி தான் நீ நான் எவ்வளவு பெரிய பிஸ்னெஸ் மேன்னு பாக்கப்போற.” என்றவாறு அவ்விடம் விட்டு அகன்றான்.