Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 2.2

குருவிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. பக்கத்து வீட்டில்  ஒரு பாட்டி சில மாதங்களாக தங்கி இருந்தார். அவர் பேத்தி வீட்டிற்கு வந்திருந்தார். அருணா தினமும் அந்த பாட்டியிடம் ஐந்து நிமிடமாது பேசுவாள். விரைந்து சென்று அவரை அழைத்தான். அவர் வடநாட்டை சேர்ந்தவர். அருணா நன்றாக ஹிந்தி பேசுவாள். குருவிற்கு அவ்வளவு சரளமாக வராது. இவனது பதற்றத்தை பார்த்து, ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டு அந்த மூதாட்டி உடனே வந்தார். வந்ததும், அருணாவை பார்த்ததும் நிலைமையின் தீவிரம் புரிந்து, விரைந்து அவள் அருகில் வந்தார். மெதுவாக அவளை தூக்கி மடியில் படுக்க வைத்து, குருவை தண்ணீர் கொண்டுவர பணித்து,  கொஞ்சம் தண்ணீர் குடிக்க கொடுத்தார். விழுந்ததும் வலி சுலீர் என்று இருந்தது. இப்பொழுது வலி சற்று குறைந்தது போல இருந்தது.

பின், அந்த மூதாட்டி அவளை மெல்ல எழுப்பி, அவளை பாத்ரூம் அழைத்து சென்று தேவையான உதவிகள் செய்து, உடை மாற்றி அழைத்து வந்தார். அதற்குள் குருவை வண்டியை எடுக்க கூறினார்.



Advertisement

பக்கத்து வீடுகளில் இருந்து மேலும் இருவரை அழைத்து கைத்தாங்கலாக அருணாவை வண்டியில் ஏற்றினார்.

வீட்டை பூட்டி சாவியை அந்த மூதாட்டியை வைத்து கொள்ளுமாறு கூறிவிட்டு கந்தகுரு அருணாளினியுடன் ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.

Advertisement

Advertisement

அதற்குள் மீண்டும் வீட்டில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. காரில் ஸ்பீக்கரில் அழைப்பை ஏற்றான்.

“அருணாவிற்கு வலி கொஞ்சம் பரவால்ல அம்மா. ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கோம்” என்றான்.

Advertisement

“பார்த்து ஜாக்கிரதையா இருக்க கூடாதா?” என்று கடிந்துகொண்டார் அன்னை.

அடுத்த லைனில் அருணாவின் அம்மா வந்தார். “அம்மா, அத்தை கூப்பிட்றாங்க“.

“இரு நான் கான்பரன்ஸ் கால்ல அவங்களையும் ஆட் பண்றேன்”. அருணா அதிக ரத்த போக்கினால் மெல்ல மயக்கநிலைக்கு சென்றுகொண்டிருந்தாள். குருவிற்கு பதற்றம். அழைப்பில் மஞ்சுளாவும் வந்தார்.

“எங்க இருக்கீங்க குரு. இன்னுமா ஹாஸ்பிடல் ரீச் ஆகல?”என்றார் மஞ்சுளா.

“நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு கூப்பிடறேன். அருணா மயக்கமாகிற மாதிரி இருக்கா”

“இரு இரு, நாங்க லைன்ல இருக்கோம், பார்த்து போ, டாக்டர் என்ன சொல்றாங்கனு கேட்டுட்டு சொல்லு.” என்றார் அஞ்சனா உடனே.

“வேகமா போப்பா “ என்றார் ஒருவர்.

“வேகமா போய் அதுல என்ன ஆபத்து வருமோ, மெதுவா போ” என்றார் இன்னொருவர்.

“எந்த முடிவை எடுக்கனாலும் யோசிச்சு எடுக்கணும். எங்க கிட்ட கேட்டு செய்” என்றார் ஒருவர்.

“ஒன்னும் ஆகாது, ஒருத்தருக்கு இரண்டு டாக்டர்கிட்ட கேட்டு முடிவு எடு” என்றார் இன்னொருவர்.

கந்தகுருவிற்கு, கை எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இவர்கள் பேசுவது கொஞ்சம் கூட ஆறுதலோ தைரியமோ தரவில்லை. அரை மயக்க நிலையில் இருந்த அருணா, கஷ்டப்பட்டு கண்களை திறந்து அந்த அழைப்பை துண்டித்தாள். பின், அவன் கைபேசியை வாங்கி அணைத்து பின் சீட்டில் போட்டாள். 

“மெதுவாவே போங்க” என்று கணவனின் தோளில் அழுத்தமாக தன் கையை வைத்துக்கொண்டாள்.

பிறகு ஹாஸ்பிடல் சென்று எமெர்ஜென்சியில் சேர்த்தார்கள். இவர்கள் பார்க்கும் மருத்துவர் அங்கே இருந்ததால், உடனே சிகிச்சை தொடங்கியது.

“ஐ  அம்  சாரி… குழந்தையோட ஹார்ட் பீட் ரொமப வீக்கா இருக்கு. காப்பாத்தறது கஷ்டம். உடனே சி.செக்ஷன் பண்ணி குழந்தையை எடுக்கனும். இல்லனா அருணா உயிருக்கும் ஆபத்து” என்றார் அந்த மருத்துவர் கந்தகுருவிடம்.

“வேற வழி இல்லையா டாக்டர்?” என்றான் கலங்கி போய்.

“சாரி மை சன், சீக்கிரம் குழந்தயை எடுக்கனும். இல்லனா அம்மா உயிருக்கும் ஆபத்து”  என்று நிதர்சனத்தை கூறிவிட்டார் அந்த அனுபவம் வாய்ந்த டாக்டர்.

அருணாவிடமும் விஷயம் கூறப்பட்டது. துடித்துப் போனாள் பெண். கனத்த இதயத்துடன் கையெழுத்துப் போட்டான் கந்தகுரு. அருணாவை ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

அதற்குள் மருத்துவமணை வரவேற்பிற்கு அழைத்து பேசினார்கள் இவர்களின் அன்னைமார்கள், இவர்கள் வரும் மருத்துவமணை தெரியுமாதலால். அங்கே ரிசெப்ஷனனில் இருந்து ஒரு பெண் இவனிடம் வந்து, உங்க பேரன்ட்ஸ்  கூப்பிட சொன்னாங்க சார், உங்க போன் சுவிட்ச் ஆப்பாம்” என்று கூறி சென்றாள்.

தன் கை பேசியை ஆன் செய்தான். உடனே கான்பரன்ஸ் கால்.

“என்னாச்சு குரு?”

“ஏன் போன சுவிட்ச் ஆப் பண்ண?”

“ என்ன சொல்றாங்க டாக்டர்”

“ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று மாறி மாறி  படபடத்தனர்.

“குழந்தையை காப்பாத்த முடியாதாம். அருணாவிற்கும் உடனே சி.செக்ஷன் பண்ணனும் சொல்லிட்டாங்க. இப்ப தான் கூட்டிட்டு போயிருக்காங்க.” என்றான் குரு.

“எதுக்கு இவ்வளவு அவசரபடற. எங்க கிட்ட கேக்கணும் இல்ல? நாங்க இப்ப தான், ஒரு பெரிய டாக்டர்கிட்ட பேசுனோம். அவங்க அருணாவை பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னும் ஆப்பரேஷன் ஆரம்பிக்கவில்லைனா  நிப்பாட்டு.” என்றார் அஞ்சனா.

“அருணா உயிர் எனக்கு முக்கியம். வேற வழி எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் யாரும் போன் பண்ணாதீங்க” என்று போனை வைத்து விட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில், வெள்ளை துணியில் சுற்றிய பிஞ்சு குழந்தையை காட்டினார் ஒரு செவிலியர். சுருள் சுருளாக அவ்வளவு தலை முடி. அருணாவிற்கு ஒன்பது மாதமும் வாந்தி இருந்தது. இவ்வளவு முடின்னால தான்  போல என்று எண்ணினான்.

மெல்ல குழந்தையை வாங்கினான். பெண் குழந்தை என்றார் அந்த செவிலியர் சோகமாக.

மெல்ல தொட்டு பார்த்தான். ஜில்லிட்டு இருந்தது. மிக மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான், தன் முகத்தை பார்க்காமல் தன்னை விட்டு சென்ற அவன் தங்க மகளின் நெற்றியில்.

அருணாளினி கண் விழிக்கவும், முதலில் குழந்தையை பார்க்க கேட்டாள். “வேண்டாம் அருணா. கஷ்டமா இருக்கும்” என்றான் குரு.

“ஒரு முறை மட்டும். ப்ளீஸ்.. அப்புறம் பார்க்கவே முடியாது தானே” என்றாள்.

பின் தன் கைகளால், மகளை மனைவியிடம் காட்டினான்.

மெல்ல குழந்தையின் தலை முதல் கால் வரை வருடினாள். கண்களில் இருந்து  இருவருக்கும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

மருத்துவர் வந்தார்,“கஷ்டமான சூழல் தான்,  இதை நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கடந்து வந்து தான் ஆகனும். உங்க பாப்பா திரும்ப உங்க கிட்ட வருவா. டோன்ட் ஒர்ரி” என்று ஆறுதல் கூறினார்.

அருணாளினி, “டாக்டர்,என் பொண்ணு… என் பொண்ணு” என்று தேம்பினாள்.

மெதுவாக அவள் தலையை வருடிவிட்டார் அந்த மருத்துவர்.

“உங்க இரண்டு பேருகிட்டயும் ஒரு வேண்டுகோள்” என்றார் மருத்துவர்.

“உங்க குழந்தையோட கண்களை நீங்கள் விரும்பினால் தானம் செய்யலாம் என்றார்.

“எங்களை தான் பார்க்க பிடிக்காம எங்க பொண்ணு போய்ட்டா. ஆனால் அவள் மூலம் வேற ஒருவர் இந்த உலகை பார்க்கட்டும் டாக்டர். அவள் கண்களாவது வாழட்டுமே.” என்றாள் அருணா.

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு, உங்க வீட்லயும் கேட்டுட்டு சொல்லுங்க” என்றார் மருத்துவர்.

“என் மனைவி சொல்றது சரி டாக்டர், நீங்க செய்யுங்க, நாங்க இரண்டு பேரும் மனசார சம்மதிக்கிறோம். வேற யாரையும் நாங்க கேக்க விரும்பலை” என்றான் கந்தகுரு.

இவர்கள் கையெழுத்து இட்டு, உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு குழந்தையின் கண்கள் எடுக்கப்பட்டது.

அருணாவை ரூமிற்கு மாற்ற இரவு ஆகி விட்டது. மருத்துவரின் உதவியுடன் குழந்தையின் இறுதி சடங்குகள் அனைத்தும் குருவே பார்த்துக்கொண்டான்.

அனைத்தும் முடிந்து களைத்து ரூமிற்கு வந்தால், பல அழைப்புகள் வீட்டில் இருந்து. பின் சலிப்பாக அழைத்து விவரங்களை  சுருக்கமாக கூறினான்.

அதன் பின், அவர்கள் புறப்பட்டு வந்து சேர்ந்திருந்தனர்.

நடந்ததை நினைத்து கொண்டே இருவரும் மீதமிருந்த இரவை தூங்காமலே கழித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!