“உள்ள வா.. நான் தண்ணி எடுத்துட்டு வர்ரேன்” என்று கூறி ஆதிகேசவன் கதவை திறந்து உள்ளே செல்ல, மிருதுளாவும் பின்னால் சென்றாள்.
ஹாலிலேயே அவள் நின்று விட, ஆதி மட்டும் உள்ளே சென்று மறைந்தான். மிருதுளா அந்த வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினாள். சிறு வீடு. நேர்த்தியாக இருந்தது. எங்கும் தேவையற்ற பொருட்கள் இல்லை.
பார்வை அருகே இருந்த அறைப்பக்கம் திரும்பியது.
‘பெட் ரூம் போல’ என்று நினைத்தவள் பார்வையை திருப்பும் முன், அது கண்ணில் விழுந்தது. ஒரு நிமிடம் குழம்பி விட்டாள்.
கண்ணை சுருக்கி நன்றாக பார்த்தாள். சந்தேகமே இல்லை. அது மனோகரியின் புகைப்படம் தான். கதவை நன்றாக திறந்தவள் உள்ளே செல்லும் முன், ஆதி வந்து விட்டான்.
“இந்தா தண்ணீர்” என்று பாட்டிலை நீட்ட, அதை வாங்காமல் அவனை கேள்வியாக பார்த்தாள்.
“என்ன? புடி”
“இது யாரு?” என்று மனோகரியின் படத்தை சுட்டிக் காட்டி கேட்டாள்.
ஆதி அதை பார்த்து விட்டு ஒரு நொடி அதிர்ந்து விட்டு, உடனே உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டான்.
மிருதுளா வரிசையாய் கேள்வியை அடுக்க, ஆதி மிருதுளாவை பார்க்காமல், அந்த படத்தை எடுத்து உள்ளே வைத்து விட்டு வந்தான்.
“சொல்லுங்க ஆதி சார்.. உங்க ரிலேட்டிவா?”
மறுப்பாக தலையசைத்தவன், “என் மனைவி” என்று அழுத்தமாக ஒரு பிடிவாதத்துடனே கூறினான்.
அது வரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, இப்போது அதிர்ந்து போய் பார்த்தாள்.
“மனைவி? மனைவியா? அப்போ..” என்றவளுக்கு அதீத அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
மனம் மளமளவென எதெதோ யோசிக்க ஆரம்பிக்க, “அ.. அப்போ.. இவங்கள என் கிட்ட தேடிட்டு இருக்கீங்க இல்ல?” என்று கேட்டு விட்டாள். கேட்கும் போது முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு.
இப்போது ஆதி அதிர்ந்து போய் பார்த்தான். ஆனால் அவளுக்கு விளக்கம் கொடுக்காமல் இறுகி நின்று விட்டான். இல்லை என்று மறுக்கலாம். அதன் பிறகு அவளோடு பழகுவதற்கான உண்மையை சொல்ல வேண்டும். சொன்னால் இதை விட மோசமாக பார்த்து வைப்பாள். அதற்கு இது பரவாயில்லை என்று, அவளது வெறுப்பான பார்வையை தாங்கி நின்றான்.
எதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த மிருதுளா, அவன் அவளது குற்றசாட்டை ஏற்றுக் கொள்வது போல் அமைதியாய் இருக்க, மொத்தமாய் உடைந்து விட்டாள்.
அவள் மனதில் கட்டிய கண்ணாடி மாளிகையில், ஆதியின் மௌனம் கல்லாய் விழ, மொத்தமும் கீறல் விழுந்து நொறுங்கியது.
“அப்படித்தான் இல்ல?” என்றவளுக்கு தொண்டை அடைப்பது போல் இருந்தது. அவன் காட்டிய அக்கறை எல்லாம், இப்போது தொண்டையில் சிக்கிய அரளிக்காயாய் கசந்து உயிரைக்குடித்தது.
கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவள், “இவங்கள என் கிட்ட தேடி வந்துருந்தீங்கனா.. ஐம் சாரி.. உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க” என்றவள், விறுவிறுவென வெளியே ஓடி விட்டாள்.
‘மிருதுளா..’ என்று ஆதிகேசவன் மனதில் தான் அழைக்க முடிந்தது. வெளியே அவளை தடுக்காமல், இறுகி கல்லாய் நின்று விட்டான்.