கௌசி வீட்டின் உள்ளே செல்கையில் வீடே ஆரவாரம் நீங்கி அமைதியாகி இருந்தது.
‘எல்லா ஆம்பளையும் நீங்களா ஆகிட முடியாதுல!’ என்று சொல்லிவிட்டாள்.
அவன் என்ன சொல்லுவானோ? தன்னை தவறாய் நினைப்பானோ? ஒருவேளை சுள்ளென்று ஏதேனும் சொல்லிவிட்டால்?
சொல்லும்போது தோணாதது, சொல்லிமுடித்ததும் தோன, ‘எதையும் சொல்லிவிடாதே!’ என்ற இறைஞ்சலோடு அவனை பார்த்துக்கொண்டு நின்றிந்தவளை பார்த்து என்ன தோன்றியதோ?
‘இருட்டுது! வீட்டுக்குள்ள போ!’ என்றுவிட்டான்.
இவளும் ஒன்றும் சொல்லாமல் விட்டதே போதுமென ஓடிவந்துவிட்டிருக்க, வீட்டில் இருந்த அமைதி அவளை நிறுத்தி வைத்தது.
அன்பழகன் ஒரு நாற்காலியில் அமர்ந்து தனது மொபைலை பார்த்துக்கொண்டிருந்தார். மதன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, புவனா வீட்டை ஒழுங்குப்படுத்த வேலையாட்களுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார்.
எல்லாம் அமைதியாகவே நடந்துக்கொண்டிருந்தது.
தன்னறைக்குள் சென்று விடலாமா? என்று நினைத்தாள்.
‘எதுக்கு சும்மா சும்மா ரூமுக்குள்ள புகுந்துக்குற?’ என்று அன்னை திட்டிவிட்டால்?!
எதற்கு வம்பென்று அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்துவிட்டாள்.
அதன் மறுமுனையில் உர்ரென்று அமர்ந்திருந்த ஆர்த்தி, இவள் அமர்ந்ததும், தன் தலையில் வைத்திருந்த பூவை கொத்தாக இழுத்து அப்படியே கௌசியின் காலடியில் விசிறியடித்தாள்.
அதில் திகைத்தவள், “வாடாத பூவை ஏன் தரைல போடுற? கொஞ்ச நேரம் வச்சுருக்கலாமே!” என்று கேட்டுவிட,
“இப்போ நான் பூ வச்சா என்ன? வைக்கலன்னா உனக்கென்ன? நீதான் நான் சொல்லியும் கேட்காம நல்லா மினுக்கிக்கிட்டு வந்து நின்னுட்டியே… உன்னை பார்த்து எல்லாரும் வாயை பொளந்து ஜொள்ளு விடனும்ன்னு தானே செஞ்ச? அதான் நடந்துடுச்சுல்ல?” என்றாள் ஆத்திரமாய்.
‘மினுக்கிக்கிட்டா!? என்ன பேசுறா இவ’ இந்த வார்த்தையில் திடுக்கிட்டாள் கௌசி.
ஆர்த்தி போட்ட சத்தத்தில் அங்கிருந்த அத்தனை பேரின் கவனமும் அவர்கள் மீது விழுந்தது.
“நான் அலங்காரம் பண்ணாதன்னு சொன்னதுக்காகவே தானே நல்லா சீவி சிங்காரிச்சுக்கிட்டு வந்து நின்ன? எனக்கு தெரியும்!” என்றாள் ஆங்காரமாய்.
அவர்களை வேடிக்கை பார்க்கும் தன் வீட்டாட்களை சங்கடமாய் பார்த்த கௌசி, அங்கே வேலையாட்கள் இருப்பதை கருத்தில் கொண்டு,
“எதுவா இருந்தாலும் மாடிக்கு போய் பேசுவோம் வா!” என்றாள்.
அதை புவனாவும் உணர்ந்துக்கொண்டு, “மித்த வேலையை காலைல வந்து செஞ்சுக்கலாம்! எல்லாரும் கிளம்புங்க” என்றதும், அவர்கள் உடனே அகன்றுவிட்டனர்.
புவனா, “என்ன பேசிட்டு இருக்க ஆர்த்தி? கௌசி என்ன செஞ்சா?” என்றார்.
“அதை அவக்கிட்டயே கேளுங்க” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் ஆர்த்தி.
இதற்கிடையே மதனோ, ‘இங்க ஒரே சத்தமா இருக்கு! நான் நம்ம ரூமுக்கு போயிட்டு பேசுறேன்’ என அலைபேசியில் முனகிக்கொண்டு சத்தமின்றி இடத்தை காலி செய்திருந்தான்.
கௌசி, “நான் அலங்காரம் ஒண்ணுமே செஞ்சுக்கலையே ஆர்த்தி? இந்த ட்ரெஸ் கூட அம்மா தான் குடுத்து விட்டாங்க! அவங்க குடுத்த நகைல கூட பாதியை நான் போடாம வச்சுட்டேனே!” என்றாள் தவிப்பாய்.
“உனக்கு இப்போ என்ன பிரச்சனை ஆர்த்தி?” என்று நேரிடையாய் கேட்டார் புவனா.
“இவ தான்… இவ தான் என் பிரச்சனை! இவளை எதுக்கு இப்போ வர சொன்னீங்க?” என்றாள்.
அதுவரை அமைதியாய் இருந்த அன்பழகன், “இப்போ அவ வந்ததால என்ன ஆச்சு?” என்றார்.
“என்ன ஆச்சா? எல்லாம் போச்சு! ஆர்த்தி ஆர்த்தின்னு என்னை பார்த்தாலே சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த பவானி அத்தை இன்னைக்கு என்ன கண்டுக்கக்கூட இல்லை” என்று ஆர்த்தி சொன்னது கேட்க சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.
“புதுசா பாக்குறனால அவக்கிட்ட பேசிருப்பாங்கடி!!!” என்று புவனா சொன்னதும் மூக்கை இழுத்துக்கொண்டு கோபமாய் நின்றவள் தன் அலைபேசி ஒலியெழுப்ப, கையில் இருந்ததை இயக்கி பார்த்தாள்.
அதை பார்த்ததும் அதுவரை இல்லாத கோபம் பெருகி வர, மொபைலை கௌசியை நோக்கி விட்டெறிந்தாள் ஆர்த்தி.
“ஏய்!”
“ஆர்த்தி!!!”
பெரியவர்கள் அதட்டல் வேகமாய் வர, தன் கரத்தின் மீது அதிவேகத்தில் வந்து விழுந்த மொபைலை பிடிக்க முயன்று தவறவிட்டாள் கௌசி. அது வந்து விழுந்ததில் வேறு வலி எடுக்க தொடங்கியது.
“என்னடி கிறுக்குத்தனமா செஞ்சுட்டு இருக்க?”
புவனா பொறுக்கமாட்டாமல் கேள்வி கேட்க,
“அந்த அசோக் இதுநாள் வரை ஒரு முறை கூட என்கிட்ட நின்னு பேசுனதே இல்லை!
இப்போ எனக்கு மெசேஜ் போட்டுருக்கான்! உன் அக்கா நம்பர் வேணும்ன்னு கேட்டு!! இவ அதுக்காக தானே இப்படி நல்லவ வேஷம் போட்டா!
என்ன நினைச்சு செஞ்சாலோ அது நடந்துடுச்சு…” என்றவள்,
“போதுமாடி உனக்கு?” என்று கௌசியிடம் கத்த,
அந்த களேபரத்தில் ‘அசோக்’ யாரென்று கூட அவளுக்கு சட்டென நினைவு வரவில்லை. பேந்த பேந்த விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
புவனாவுக்கும் அன்பழகனுக்கும் இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
வரப்போகும் மருமகளின் அண்ணன் எதற்கு கௌசியின் எண்ணை கேட்க வேண்டும்? என்று அன்பழகன் நினைக்க,
‘ஓ! முன்னாடியே பார்த்துருந்தா வேற மாறி முடிவெடுத்துருப்போம்ன்னு அந்தம்மா சொன்னதுக்கு இப்படி ஒரு ரூட்டு இருக்குமோ?’ என புவனாவின் மூளை யோசித்தது.
சின்ன மகளிடம் “சரி விடு! இதை பெருசுப்படுத்தாத!” புவனா இலகுவாய் சொல்ல,
“அதெல்லாம் முடியாது!” என குதித்தாள் அவள்.
“இப்போ என்ன தாண்டி செய்யனுங்குற நீ?” ஆயாசமாய் வந்தது புவனாவுக்கு.
“எனக்கு அசோக் தான் வேனும்! நான் அவரை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்! இவளை எங்களுக்கு குறுக்க வரக்கூடாதுன்னு சொல்லிவைங்க” என அவள் சொன்னதும் மொத்தமாய் திடுக்கிட்டு போயினர்.
புவனா தான் தெளிந்து, “அறைவிட்டேனா வையேன்! இப்போதான் காலேசுலையே காலெடுத்து வைச்சுருக்க! அதுக்குள்ள என்னடி கல்யாண பேச்சு உனக்கு?” என அடிக்க கையை ஓங்கிக்கொண்டு போக,
“நான் கல்யாணம் தானே செஞ்சு வைங்கன்னு கேட்டேன்! உன் மூத்த பிள்ளை மாறி எவனோடவாது ஓடிப்போனேனா? இல்ல எவன் புள்ளையயோ வயித்துல வாங்கிட்டு வந்து நின்னேனா?” என ஆர்த்தி கேட்ட மறுநொடி அவள் தோள்பட்டை தீப்பிடிக்கும் அளவுக்கு ஆத்திரத்துடன் அறைந்துவிட்டிருந்தார் அன்பழகன்.
கௌசிக்கு அழுகை கூட வரவில்லை.
தன்னைவிட வயதில் சிறியவள் தன்னை இப்படி தவறாய் பேசும் அளவு தான் தரம் தாழ்ந்து விட்டதை எண்ணி நெஞ்சம் அடைத்தது.
அன்பழகன் சின்னமகளை சரமாரியாய் அடித்துவிட்டிருக்க, தந்தை தன்னை அடித்துவிட்ட அதிர்ச்சியில் சமைந்துப்போய் நின்றாள் ஆர்த்தி.
புவனா அவர் அடிப்பதை தடுக்கவில்லை.
“வயசுக்கு தகுந்த பேச்சாவா பேசுற நீ?” ஆத்திரம் அடங்காமல் கேட்டார் அன்பழகன்.
“இனி ஒருமுறை உன் வாய்ல இருந்து இப்படி ஒரு பேச்சு வரட்டும்… தோலை உரிச்சு தொங்க விட்டுடுவேன்” என்று கர்ஜித்ததும்,
“அப்ப அவதான் உங்களுக்கு முக்கியமா? தப்பு பண்ணவளை விட நான் ரொம்ப கேவலமா போயிட்டேன்னா உங்களுக்கெல்லாம்? அவ செஞ்ச தப்பை யாருக்கும் தெரியாம மூடி மறைச்சுட்டு, இப்போ என்னய்யா அடிக்குறீங்க?” அழுகையும் ஆத்திரமுமாய் வந்தது ஆர்த்தியிடம் இருந்து!
மறுபடியும் அவளை அறைய கை ஓங்கியவரை வந்து தடுத்தார் புவனா.
“விடுங்க விடுங்க! நான் பேசிக்குறேன்! நீங்க போங்க!” என அவர் சமாதானம் சொல்ல,
“அவ செஞ்ச தப்பை நீ செஞ்சுருந்தாலும், நாங்க அதே தான் செஞ்சுருப்போம்! அவ உன் அக்காங்குறத மறந்துட்டு பேசாத!” என்றவரை,
“நாந்தான் பேசிக்குறேன்னு சொல்றேனே! நீங்க போங்க முதல்ல” என்று வம்படியாய் அனுப்பி வைத்தார் புவனா.
ஆத்திரத்துடன் நின்றுக்கொண்டிருக்கும் சின்ன மகளை பார்த்த புவனா, “இந்த மாதிரி பேச்சு இன்னைக்கு பிறகு உன் வாய்ல இருந்து வரவே கூடாது! சம்பந்தி வீட்டு ஆளுங்க காதுக்கு விஷயம் கசிஞ்சு எதாவது அவமானம் ஆச்சு! உன்னை என் பொண்ணுன்னு கூட யோசிக்க மாட்டேன்! கொன்னுடுவேன்… ஜாக்கிரதை” அடிக்குரலில் சீற, அன்னையின் பேச்சு ஆர்த்தியை உறைய செய்தது.
அவர் சொன்னதை செய்யும் ரகம் என்று அறிந்தவள் அவள்!
அமைதியாய் விசும்பிக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆடாது அசையாது சிலையென நின்றிருந்த மூத்தவளை பார்த்த புவனா, “உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா? போ இங்கிருந்து” என்று அதட்ட, பொம்மையாய் நடந்து வந்து தன் கட்டிலில் விழுந்தாள் கௌசி!
ஆர்த்தி பேசிய பேச்சின் தாக்கம் அவள் அடிநெஞ்சம் வரை சென்று தாக்கியிருந்தது.
ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த அந்த மழை நாட்கள் எல்லாம் மனதின் மேல எழும்பி விஸ்வரூமெடுக்க ஆரம்பித்தன.
#######
உள்ளங்கை அளவு இருந்த பலவண்ண சாந்து பொட்டில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து நெற்றியின் நடுவே இருந்த வட்ட பொட்டிற்கு வேலி போல புள்ளி வைத்துக்கொண்டிருந்தாள் கௌசல்யா.
“ப்ச்! அக்கா ஸ்கூலுக்கு நேரமாச்சு க்கா” தோளில் மாட்டிய தன் பையை சுமக்க முடியாமல் கூன் போட்டு தரைப்பார்த்து தொங்கிக்கொண்டு நின்றபடி கண்ணாடியே கதியாய் நிற்கும் தன் அக்காளிடம் சலித்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.
“இருடி! என்ன அவசரம்? இன்னும் ஸ்கூலு பெல்லுக்கு பத்து நிமிஷம் இருக்கு” என்றவள், கோகுல் சேன்டல் பவுடரை தன் கர்சீஃபுக்குள் கொட்டி வாசம் பிடிக்க,
“பத்து நிமிஷத்துல எப்படி க்கா அவ்ளோ தூரம் போவ முடியும்? என்னால உன் அளவுக்கு எல்லாம் வேகமா சைக்கிள் ஓட்ட முடியாது” என்றாள் ஆர்த்தி.
“ம்ச்! சைக்கிள் எதுக்குடி? மனோ மாமாட்ட சொன்னா கார்’லயே கொண்டு போய் விட போறாங்க!” அலட்சியமாய் ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்பது போல பேசினாள் கௌசி.
“அலங்காரம் எல்லாம் போதும் க்கா… வா…க்கா” பொறுமை பறந்தது ஆர்த்திக்கு.
“இருடி, இந்த சந்தன கீத்து மட்டும் லேசா வச்சுட்டு வரேன்!” தீக்குச்சியின் பின்புறத்தில் சந்தனத்தை தொட்டு இருபுருவங்களின் மத்தியில் நேக்காக கோடிழுத்துக்கொண்டிருந்தாள் கௌசி.
ஆர்த்திக்கு அதற்குமேல் அங்கே நிற்க பொறுமை இல்லை. வேகமாய் கூடத்தில் அமர்ந்திருந்த ஆத்தாவிடம் ஓடினாள்.
“ஆத்தா! இந்த அக்காவை பாருங்க, கிளம்பவே மாட்டேங்குறா! எனக்கு இன்னைக்கு மொதோ வகுப்பு டெஸ்ட் இருக்கு” கிட்டத்தட்ட அழும் நிலையில் பேச,
“அந்த சிங்காரி இன்னமும் சிங்காரிச்சுக்கிட்டு தான் இருக்காளா?” என்ற தனபாக்கியம், “அடியேய் கௌசி” என உரக்க அழைக்க, தன் பள்ளிப்பையுடன் வந்திருந்தாள் அவள்.
“இன்னைக்கு ஒரு நாள் கார்ல கொண்டு போய் விட சொல்லுங்க ஆத்தா! சாப்பிட்டுக்கிட்டே போய்டுவேன்” என்றாள்.
அப்போது அங்கே வந்த அன்பழகன், “என்ன கௌசி இதெல்லாம்?” என்றிட, தந்தையை கண்டதுமே ‘ஐயோ’ என்றிருந்தது பெரியவளுக்கு.
‘லேட்டா கிளம்புனதுக்கு பேசுறதும் இல்லாம கார்ல வேற போகனுமான்னு பாடம் நடத்துவாரே!’ என்று மனதுக்குள் அவள் மருக,
“ஏன்டி டிரைவர் பயலுவ கூட எல்லாம் உங்களை தனியா அனுப்ப மாட்டோம்ன்னு தெரியாதா உங்களுக்கு? வீட்டு கட்டுப்பாடு தெரிஞ்சும் கொஞ்சிக்கிட்டு வந்து நிக்குறீங்க?” என்றார் தனப்பாக்கியம்.
ஆர்த்திக்கு நேரம் போக போக கணக்கு டீச்சரை நினைத்து கதி கலங்கியது. ஒன்பதாம் வகுப்பு முடிய இன்னும் சில மாதங்கள் தான் மீதம்! ஆனால், பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தாமதமாக வருபவர்களை வாசலிலேயே நிற்க வைத்து முதல் நாள் நடத்திய பாடத்தில் இருந்து ஒரு கணக்கை கொடுத்து அதை சரியாய் செய்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிப்பார்.
அவரிடம் மாட்டிவிட கூடாதென்றே பயமே அவளுக்கு கண்களில் நீர் கோர்க்க செய்து விட்டது.
கண்கலங்க நிற்க்கும் சின்னவளையும், முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும் பெரியவளையும் பார்த்ததும் கோபம் தான் வந்தது அன்பழகனுக்கு.
“இதுக்குதான் ஊரோட இருக்க ஸ்கூல்ல சேர்க்கலாம்ன்னு சொன்னேன்! கேட்டியா நீ? இங்க படிச்சுக்கிட்டு இருந்ததுங்களை தூக்கி நாலு பர்லாங்கு தள்ளி இருக்க ஸ்கூல்ல தான் சேர்க்கனும்ன்னு ஒத்த கால்ல நின்னியே? இப்போ பாரு! ஒரு ஆத்திர அவசரம்ன்னா சட்டுன்னு கிளம்ப முடியுதான்னு” என்றார் மனைவியை முறைத்து.
“இங்க இருக்கிறதுல ஆம்பளை பசங்களும் படிக்குதுங்க! மதன் இருக்க தைரியத்துல அனுப்பி வச்சுட்டு இருந்தேன்! அவன் திருச்சில காலேஜு சேர்த்த பிறகு இதுங்க ரெண்டையும் யாரை நம்பி ஒத்தைல அனுப்புறது? அதான் கொஞ்சம் தள்ளி இருந்தாலும் சரின்னு பொம்பளை புள்ளைங்க பள்ளிக்கூடமா பார்த்தேன்”
‘நான் செஞ்சதுல ஒரு தப்பும் இல்ல’ என ஸ்திரமாய் நின்றார் புவனேஸ்வரி.
“ஆமா.. ஆமா..” என திருப்பிக்கொண்ட அன்பழகன், “இன்னைக்கு ஒருநாள் ரெண்டு பேரும் லேட்டா போங்க ஸ்கூலுக்கு. அப்போதான் நாளைல இருந்து சீக்கிரம் கிளம்ப தோணும்” என்றவர், உணவுண்ண சென்றுவிட,
ஆர்த்தி அழுகவே ஆரம்பித்துவிட்டாள்.
“ஆத்தா… ஆத்தா! என் செல்லம் ல? இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கார்’ல போயிட்டு வரோமே? அப்பாட்ட சொல்லுங்க ஆத்தா!” கௌசி தனப்பாக்கியத்தின் கரத்தை பிடித்துக்கொண்டு கெஞ்ச, மறுகரத்தை பற்றிக்கொண்டாள் ஆர்த்தி.
இருவரும் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி அவரை கரைத்ததில், “உங்கப்பன் கொண்டாந்து விட மாட்டேனேடி! அவனுக்கு வேலை கடக்கே” என்றார் அவர்.
“அப்பா எதுக்கு ஆத்தா? அதான் மனோ மாமா இருக்காருல? அவரை கொண்டு வந்து விட சொல்லுங்க…” என்ற கௌசியை பார்த்தவர், “எல்லாம் விவரமா யோசிச்சு தான் பண்றடி நீ” என்று போலியாய் பேத்தியை கடிந்துவிட்டு, மகனிடம் பேசபோனார்.
அவள் ‘மாமா’ என விளித்தது புவனாவுக்கு கேட்டிருந்தால், ‘யாரு, யாருக்கு டி மாமன்?’ என அப்போதே சாமியாடியிருப்பார்.
சில நிமிடங்கள் பேசி அன்பழகனை சம்மதிக்க வைத்த தனபாக்கியம், மனோகரை அழைத்து வேலையை சொன்னார்.
பத்தாவது முடித்துவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்தவனை மேற்கொண்டு படிக்க வைக்க அன்பழகன் முன்வந்தபோது, அவருக்கு அதிகம் சிரமம் கொடுக்காது ‘பாலிடெக்னிக்’ கல்லூரியில் சேர்ந்துக்கொள்வதாக சொல்லிவிட்டான் மனோகர்.
படிப்பை முடித்ததும் அன்பழகனின் கயிறு தொழிற்சாலையிலேயே வேலையில் அமர்ந்துக்கொண்டான்.
கார் கிளம்பியதும் பின் சீட்டில் அமர்ந்திருந்த ஆர்த்தி முதல் வகுப்பில் நடக்கப்போகும் டெஸ்டுக்காக ரிவைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
முன் சீட்டில் மனோகர் அருகே இருந்த கௌசி சட்டமாய் சம்மணம் போட்டு அமர்ந்து தன் அன்னையிடம் மறக்காமல் வாங்கி வந்திருந்த காலை உணவை பிரித்து மொக்க ஆரம்பித்தாள்.
நாலு வாய் உள்ளே போனதும், நிலவும் அமைதி பிடிக்காமல் அவள் எஃப்.எம்’ஐ தட்டிவிட,
‘கரு கரு விழிகளால்
கயல்விழி கொல்கிறாள்…
வலித்தாலும் ஏதோ சுகம்!!!’ வரிகள் ஓட, உடன் சேர்ந்து தானும் பாட ஆரம்பித்தாள் அவள்.
‘குழி விழும் கன்னத்தில்
குடியிரு என்கிறாள்…
விலையில்லா ஆயுள் வரம்…’ பாடிக்கொண்டிருந்தவள்,
“மாமா! என் கன்னத்துல குழி விழுது தானே?” என மனோகரை பார்த்து கேட்க, அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை அவன்.
“மாமாஆஆ… பாத்து சொல்லுங்க மாமா” அவன் பக்கம் சாய்ந்து தன் கன்னத்தை காட்டிக்கொண்டு அவள் கத்த,
“நான் படிக்குறதா வேண்டாமா அக்கா? அந்த ரேடியோவை மொதோ அமத்தி போடு” என ஆர்த்தி கத்தியதில், கௌசியின் கவனம் பாட்டையும், குழியையும் விட்டு தங்கை பக்கம் போனது.
“ஏன் மகாராணி படிக்குறப்போ பாட்டு ஓடக்கூடாதோ?”
“பாட்டை போட்டுக்கிட்டு எந்த கிறுக்கச்சியாச்சும் படிப்பாளா?”
அதன்பின் பள்ளிவரும் வரை இருவரும் வாய்சண்டை வாய்க்கால் சண்டையாக வர, ஸ்கூல் வாசலில் கார் நின்றதும், “போடி லூசு” என திட்டிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் ஆர்த்தி.
தங்கையை திட்டிக்கொண்டே காரை விட்டு இறங்கிய கௌசிக்கு அதற்குமேல் கவனமெல்லாம் பள்ளிக்கு எதிரே இருக்கும் பன்மாடி வளாகத்தின் மீது தான்!
பள்ளிக்கு நேரெதிரே பலதரப்பட்ட தொழில்களை தாங்கி நிற்கும் வளாகத்தில் இல்லாத கடைகளே கிடையாது!