“இப்போ ஒரு முடிவெடுத்துட்டு, அது சரியா தப்பான்னு பின்னாடி நீ ஒருமுறை யோசிச்சா கூட அது நல்லா இருக்காது நிலா… சொன்னா கேளு” அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சொல்ல, இவனிடம் இந்த சின்ன சின்ன செய்கைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது என்று தெரிந்துக்கொண்டாள் நிலா.
சட்டென அவன் கைகளுக்குள் புகுந்து அவன் முன்னே சென்றவள், அவனை உரசிக்கொண்டு நிற்க, விலகப்பார்த்தான் கோவர்த்தன். விடாமல் கட்டிக்கொண்டவள், “ஏய்… என்னைப்பாரு!” என்றாள்.
அவனுக்கு கண்கள் எல்லாம் சிவந்து கலங்கப்பார்க்க, அதை அவளிடம் காட்டவே கூடாதென முரண்டுப்பிடித்தான். விடாப்பிடியாய் அவன் முகத்தை திருப்பி தன்னிடம் இழுத்தவள், “வேணும்ன்னு சொல்ற… வந்தா வேணாங்குற! என்ன பிரச்சனை உனக்கு?” மிரட்டல் போல என்றாலும் கொஞ்சலாக தான் கேட்டாள் அவள்.
தனக்காக ஒருவன் ஏங்குவதை விட அவளுக்கு வேறென்ன வேண்டும் என்று தோன்றியது.
“வேணுன்னு சொல்லி கமிட் ஆகிட்டன்னா அதுல மாறவே கூடாது எனக்கு!” தீவிரமாய் சொன்னான் அவன்.
“என்னை பார்த்தா மாறுற மாறி தோணுதா?” அவன் தாடையை பற்றிக்கொண்டு அவனை அசையவிடாமல் கேட்டாள் நிலா.
“மாற மாட்டேன்னு சொல்லு” அவன் வாய்மொழி கேட்டான்.
“சொல்லனுமா என்ன?” தன் விழியால் அவள் கேள்வி வைக்க, ‘சொல்லு’ என்ற பார்வை அவனிடம்.
வஞ்சிக்கு வார்த்தை வரவில்லை. அவன் கேட்ட வாய்மொழியை அவனிடம் ‘வாய்’மொழியாய் சொல்ல உணர்வுகள் உந்தியது. தன் கைக்குள் நிற்பவன், தன்னிடம் காதலை மட்டுமே யாசிக்கும் தன் கணவன் என்பதை அவள் மனம் அந்த கணத்தில் பரிபூரணமாய் ஏற்றுக்கொண்டது. அலைபாயும் அவன் கண்களில், அதில் தளும்பும் அவளுக்கான காதலில் தன்னை மீறி கரைந்தவள், சற்றே எக்கி அவன் இதழ்களில் பதில் எழுத தொடங்கினாள்.
அவளிடம் ‘பதில்’ கேட்டு நின்றவன் தான். ஆனால், இப்படி ஒரு பதிலை அவன் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை. விம்மிதத்தில் விரிந்தன அவன் விழிகள்.
எழுத தொடங்கியவளுக்கோ தடுமாற்றம். பரீட்சை நேரத்தில் கேள்விக்கு விடை மறந்ததை போல படபடப்பில் மெலிதாக நடுங்கினாள். நினைத்த அளவுக்கு ‘பதில்’ எழுத வரவில்லை. முதல் தேர்வில் தோல்வி கண்ட மாணவி போல சிறு சுணக்கத்தோடு அவளது எம்பிய கால் விரல்கள் தரை தொடப்போக, நொடிப்பொழுதில் அவள் கீழிடையோடு கைகொடுத்து அள்ளி தூக்கிக்கொண்டான் பெண்ணை.
அவளை மீறி ‘ஹக்’ என்ற ஒலி வர, அவள் கண்களோடு ஆவலாய் அவன் கண்கள் கலக்க, மெலிதான வெட்கத்தோடும், அதிகமான எதிர்ப்பார்ப்போடும் அவனை பார்த்தாள் வாணிலா. அவன் தன்னை இறுக்கிக்கொண்ட வேகத்திற்கு என்னென்ன செய்யப்போகிறானோ என்றவள் இதயம் துடிக்க, அவனோ நிதானமாக அவள் முகத்தையே அளந்துக்கொண்டிருந்தான் பார்வையால்.
ஒரு நிமிடம் வரைக்குமே அதே படபடப்போடு பொறுத்தவளுக்கு அதற்குமேல் பொறுமையில்லை.
“என் மூஞ்சில என்ன அகழ்வாராய்ச்சி இப்போ?” பல்லைக்கடித்துக்கொண்டு அவள் கேட்க, “இல்ல, நான் உன்னை தொடும்போது உனக்கு பிடிக்குதான்னு உன் கண்ணை பார்த்து தெரிஞ்சுக்குறேன்” அவன் இன்னமுமே ஒரு ஆராய்ச்சி பார்வையோடு தான் சொன்னான்.
முறைத்தவள், “உங்க தீஸிஸ் எல்லாம் என்கிட்ட செஞ்சு பாக்காதீங்க டாக்டர் சார்… உங்க மனசு என்ன சொல்லுதோ அதை அப்படியே நம்ப பழகுங்க” என்றவள் அவன் கைப்பிடியில் இருந்து விலக முற்பட, விடாமல் இறுக்கிப்பிடித்துக்கொண்டவன், “நம்புறேன் நம்புறேன்” என்றான் அவசரமாய்.
“சரி, நம்பிட்டீங்கள்ள…. விடுங்க” அவள் பிகு செய்ய, அவள் நெளியும் வேகத்தில் அவனுக்குள் பல ரசாயன மாற்றங்கள்.
“உனக்கு கிஸ் பண்ணவே தெரில நிலா” அவன் சொன்னதும், அவள் துள்ளல் அடங்கி, முகத்தில் செம்மை பூச, “பரவால, விடுங்க” என்றாள் அவனை பாராது.
ஒரு கையால் அவள் இடையை இறுக்கியவன், மறுகையில் அவள் கன்னம் தாங்கி, “நான் சொல்லித்தரவா?” என்றான் ரகசியமாய். அவன் சொன்னதற்க்கே அவள் மயிர்க்கால்கள் எல்லாம் கூச்சொரிந்து நின்றன.
கேள்வியாய் கேட்டவன், பதில் வரும்முன்னே சொல்லித்தர ஆரம்பித்திருந்தான். மெதுமெதுவாய் அவள் வரியோடிய இதழ்களை அவன் முரட்டு இதழ்கள் உரச, மெல்லிய மின்சாரம் தாக்கிய உணர்வு இருவருக்கும். விலகிப்போக தோன்றாமல் இன்னும் நெருக்கமாய் ஒட்டிக்கொண்டனர். ஒட்டி உரசிய இதழ்கள் ஒருவருக்குள் ஒருவரை தொலைத்து, தேடி, அணைத்து, நனைந்து, சிவந்து விலகியபோது இருவருக்கும் அத்தனையாய் மூச்சு வாங்கியது.
தொட்டதும் முடிவதா காமம்!? ஒவ்வொரு தொடுகையிலும் முடியாமல் தொடர்வது தானே காமம்!
காமம் ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல! மனிதன் மட்டுமல்லாது அத்தனை உயிர்க்கும் உணவை போல, மூச்சை போல… காமமும் இன்றியமையாதது தானே!
இங்கே தொட்டதும் துவங்கியது. இதழ்களை விட்டவன் அவளை விடவில்லை. காதோரமாய் அழுந்தி நகர்ந்த அவன் இதழ்கள் மூச்சு விட, அவன் தந்த மூச்சுக்காற்றின் வெம்மையில் அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு கண்களை மூடினாள் பெண்.
அவன் இதழ்களின் பயணம் கழுத்தில் இறங்கி அவளை பின்னே வளைக்க, அலுங்காமல் அவளை படுக்கையில் கிடத்தி, அழுத்தாமல் மேலே படர்ந்தவனுக்கு என்னென்னவோ செய்ய தோன்றியது. தன் முன்னே விருந்தாய் அவள் இருக்க, பத்தியம் இருக்க வேண்டிய கட்டாயம். முடிந்த மட்டும் அழுத்தமான முத்தங்களில் அவன் தாபத்தை அவளுக்கு உணர்த்தினான் கோவர்த்தன்.
வானிலாவுக்கு ஏதோ புது உலகத்திற்குள் போவதை போன்ற உணர்வு. மயங்கி கிறங்கிய விழிகளை திறக்கவே முடியவில்லை. அவன் உருவாக்கிய உணர்வலையில் சுகமாய் நீந்திக்கொண்டிருந்தாள். அவன் வேகத்தில் சற்றே மிரண்டாலும் அவனை விலக்கவே தோன்றவில்லை. ‘இன்னும் இன்னும்’ என்ற உணர்வு தான் பிரதானமாய் எழ, அவனை கட்டிக்கொண்டு திளைத்தவலுக்கு, அவன் திடீரென்று தன் முத்தங்களை நிறுத்திக்கொண்டதும் அந்த மாயவலை அறுந்ததை போல ஆனது.
கட்டில் பாடத்தின் அடி நுனி அறிந்தவள் தான் அவள். அடுத்து என்ன செய்வான் என்றுக்கூட ஒரு எதிர்ப்பார்ப்பும் கூடவே அளவான வெட்கமும் உண்டு என்றாலும் அவன் சட்டென நிறுத்திவிட்டிருக்க, கண்களை திறந்து, “என்னாச்சு?” என்பதை போல பார்த்தாள் வாணிலா.
அவள் கழுத்தடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு அசையாமல் கிடந்தவன், மேற்கொண்டு ஒன்றுமே செய்யாமல் போக, “என்ன ஆச்சு?” என்றாள் மெல்லிய குரலில், வெகுவாக தயங்கி.
நிமிர்ந்தவன், “ஒன்னும் இல்லடி!” என்று சிரிக்க, “அப்புறம் என்ன?” என்றவளுக்கு வார்த்தை முழுதாக வரவில்லை.
“சும்மா தான்…!” அவள் விரல்களுக்கு குட்டி குட்டி முத்தம் வைத்தபடி அவளை உரசிக்கொண்டு படுத்திருந்தான் கோவர்த்தன்.
‘அப்பறம் ஏன் நிறுத்திட்ட?’ என்றா வெளிப்படையாய் கேட்க முடியும்!?
அவன் விரல்களை கொஞ்சுவது தான் முக்கியம் என்று செய்துக்கொண்டிருக்க, “எனக்கு ஓகே தான்!” என்றாள் அவன் கழுத்தை பார்த்தபடி.
“அதான் சொல்லிட்டியே நிலா… இதுக்கு மேல என்ன வேணும்? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நீ என்னோட இருந்தா மட்டும் போதும் எனக்கு” அவன் வார்த்தைகள் ஆத்மார்த்தமாய் ஒலித்தாலும், அதில் முற்று முழுதாய் லயிக்க முடியவில்லை பெண்ணால்.
‘இது அந்த ஓகே இல்லடா!’ திட்ட வேண்டும் போல வந்தது.
அவளே நெருங்கி அவனை கட்டிக்கொள்ள, அவனும் பதிலுக்கு கட்டிக்கொண்டானே ஒழிய, வேறு எதுவுமே செய்யவில்லை.
‘என்ன அப்படியே இருக்கான்?’
தனக்கு வேண்டியதை எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தாள். உணர்வுகள் பொதுவானவை தானே!? அதில் ஆணென்ன? பெண்ணென்ன?
பெண் இதையெல்லாம் கேட்க கூடாது என்று கட்டுப்பெட்டித்தனமாக நினைக்கும் அளவுக்கு வாணிலா மோசமில்லை. இருபத்தி எட்டு வயது ‘தெரிவை’க்கு தெரியாதது எதுவும் இல்லை. உணராதது மட்டும் தான் மிச்சம். உணர்ந்து பாக்க தான் உணர்வுகள் உந்திக்கொண்டிருன்தது. அதிலும் அவன் ‘கணவன்’ என்றப்பின் தயக்கம் எதற்கு!?
“கோ…!” அவள் அழைக்க, “ம்ம்ம்!” என்றான் அவள் மீது சாய்ந்து.
“அதான், we got married la? Why don’t we make love? I mean… intimately…” ஒவ்வொரு வார்த்தையும் தயங்கி தயங்கி, இழுத்து இழுத்து அவள் சொல்ல, “I would love to…” (எனக்கும் ஆசை தான்) என்றான் கோவர்த்தன்.
அவள் பதில் சொல்லாமல், அவன் நெஞ்சில் தன் தாடை ஊன்றி, எதிர்ப்பார்ப்போடு அவன் முகம் பார்க்க, “இந்த செகன்ட்… உன்னை அப்படியே கடிச்சு திங்கணும் போல கன்னாபின்னான்னு தோணுது” என்றபோது அவன் முகம் காட்டிய பாவனையில், குப்பென சிவந்துப்போனது அவளுக்கு.
“என்ன?” அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள் மொத்தமாய் அதிர்ந்து கேட்டாள்.
“ஆமா… அம்மாக்கு தெரிஞ்சா விளக்கமாத்துலயே அடிப்பாங்க” அவன் அத்தனை பயந்து, பாவமாய் சொல்ல, என்ன மாதிரி பதிலாற்றுவது என்றே தெரியாமல் திணறி நின்றிருந்தாள் வாணிலா.