நால்வரின் கண்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டிலியர் மீது தான்! இமைகள் என்ற ஒன்று இருக்கிறதா? இல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டதா என்று புரியாதபடி விரிந்த கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்க, அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தது, கதவின் மேல் சுவற்றில் காஞ்சிபுரம் இட்டலி தட்டு சைசில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் ‘டங்’கென்ற சத்தம்!
இமைகள் தங்கள் வேலையை தொடர, அனிச்சையாய் தலைகள் சத்தம் கேட்ட திக்கில் அண்ணார்ந்து பார்த்தன. மணி ‘மூன்று’ என்று காட்டியது அது!
வித்தகன் இழுத்து பிடித்த மூச்சை அயர்வுடன் விட்டு, அப்படியே அங்கேயே அமர்ந்துவிட, “மூணா?” என முனகிய சம்யுக்தா, “இந்த கடிகாரம் ரொம்ப ஸ்லொவ்’வா ஓடுது போல ஜி!” என்றாள் பேதலித்த முகத்துடன்.
‘ரொம்ப முக்கியம்!’ என்ற பார்வையில் அவளை நிமிர்ந்து முறைத்தவன், வெளியேறும் மார்கத்தை உள்ளுக்குள் அலசிக்கொண்டிருக்க, பிரஷாந்த்’க்கு இன்னுமே கண்கள் அந்த சான்ட்லியரில் தான் இருந்தது. அவன் கண் பார்க்கவே விழுந்து நொறுங்கிப்போனது, சொடுக்கிடும் நேரத்தில் மேலே சென்று ஒட்டிக்கொண்டதை இன்னமும் அவனால் நம்பவே முடியவில்லை.
பவித்ரா இழுத்துப்பிடித்த மூச்சோடு, “இ…இங்க என்ன நட…க்குது?” என்று உதடு அசையாது வெறிய முகத்தோடு வினவ, “ஐ தின்க் பேய் அதோட வேலையை ஆரம்பிச்சுடுச்சு!” என்று சலனமின்றி சொன்னாள் சம்யுக்தா.
வித்தகன் உட்பட மூவருமே ‘திக்’கென்ற பார்வையோடு அவளை ஏறிட, எழுந்து அவள் கைசந்தை பிடித்து இழுத்த வித்தகன், “என்ன சொல்ற?” என்றான் அவள் கண்களை பார்த்தபடி.
“எனக்கு தெரியும் ஜி!” என்றவள், “உங்க பிரன்ட்’க்கிட்ட இந்த இடம் பத்தி கேட்டுட்டு உடனே கூகுள் செஞ்சு பாத்தேன்!” என்று மெல்லிய குரலாய் சொன்னவள், அவன் நிலைத்த பார்வை கண்டு தலைகுனிய,
“ஹே… என்ன நடக்குது இங்க? ஒன்னும் புரியல எனக்கு!” என்றான் பிரஷாந்த், இருவரையும் திகிலுடன் பார்த்துக்கொண்டு.
இருவரும் அவனை பார்க்க, “சொல்லுங்க… இது என்ன இடம்? நீங்க தெரிஞ்சே தான் வந்தீங்களா? கொஞ்சம் முன்னாடி பேசுனது யாரு? கீழ விழுந்தது எப்படி மேலே போச்சு? கதவு ஏன் திறக்க மாட்டேங்குது!? நான் ஏன் இங்க நிக்குறேன்? ஐயோஓஓ… எனக்கு ஒண்ணுமே புரியல! தயவுசெஞ்சு சொல்லித்தொலைங்க!” பேசிக்கொண்டே இருந்தவன், இறுதியில் தலையை பிய்த்துக்கொண்டு கத்த, சம்யுக்தா வித்தகனுடன் ஒடுங்கிக்கொண்டாள், கூடவே பவித்ராவும்!
மூவரும் சேர்ந்துக்கொண்டு அவனை பார்க்க, விடை தெரியா குழப்பத்தில், “சொல்லித்தொலைங்களேன்! இது என்ன இடம்?” வினவினான் பிரஷாந்த்.
வித்தகன் வாயை திறக்காமல் இருக்க, “இது ஒரு ஹான்டட் பிளேஸ்!” என்றாள் சம்யுக்தா.
“ஹான்டட்’ஆ? புரியல!” காதில் விழுந்தாலும், கருத்தில் ஏறவில்லை பிரஷாந்துக்கு.
பவித்ரா, “ஹான்டட்’ மீன்ஸ்… இட்ஸ் அபவுட் எ கோஸ்ட் ஆஃப் அ டெட் பர்சன், டு அபீயர் இன் எ பிளேஸ் ரெகுலர்லி” என்று சொல்ல,
அப்படி சொன்னவளை விழி விரிய பார்த்தவன், “ஏய்… உசுரு உள்ளுக்குள்ள இருந்து ஊசலாடிட்டே வந்து உள்நாக்குல ஒட்டிக்கிட்டு நிக்குது… இந்த நேரத்துல கூட எப்படி உன் வாய்ல இங்க்லீஷ் வருது?” என்று கடுப்பாய் கேட்டான் பிரஷாந்த்.
“ஹான்… ஸீ! இதான் பிரச்சனையே…!!! உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு சொன்னேன். புரியுதா உனக்கு இப்போ?” பவித்ரா அழுத்தமாய் அவனிடம் சொல்ல, “அப்ப உனக்கு நான் இங்க்லீஷ் பேசாதது தான் பிரச்சனையா?” அவன் கேட்க,
“இல்லையே…!” என்று தோளை குலுக்கினாள் பவித்ரா.
“அப்ப வேற என்ன தான் பிரச்சனை?”
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது!” அவள் அசட்டையாய் சொல்ல, இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் மாட்டிக்கொண்ட சூழ்நிலை கூட மறந்து போயிருந்தது அவர்களுக்கு.
“சொல்லாம எப்படி லூசு புரியும்?”
“ஏய், லூசு கீசுன்னு பேசுன உனக்கு ரெஸ்பெக்ட் இல்ல பார்த்துக்கோ!” அவளும் எகிற, “உன் ரெஸ்பெக்ட் வச்சு தான் நான் உயிர் வாழ போறேன் பாரு… போவியா?” என்றான் பிரஷாந்த் அசட்டையாய்.
“ச்ச… உன்னை போய் ஆஹா ஓஹோன்னு பேசுனாரு பாரு எங்கப்பா!” அவள் சலிக்க, “ஹான், அந்தாளை சொல்லணும்! வச்சான் பாரு ஆப்பு எனக்கு! அந்தாளு பொண்ணை கட்டிக்குறேன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு என்னை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாரு!” அவன் கத்த,
“ஓ, உனக்கு என்னை விட…” என பவியும் மல்லுக்கு நிற்க, பொருத்து பொருத்து பார்த்த வித்தகன், “வாயை மூடுறீங்களா ரெண்டு பேரும்?” என கத்திவிட்டிருந்தான்.
அவன் சத்தத்தில் இருவரும் விவாதத்தை விடுத்து முறைப்பை மட்டும் தொடர, “நம்ம இங்கிருந்து எப்படி வெளில போறதுன்னு தான் இப்போ யோசிக்கணும்! உங்க சண்டையை இந்த வீட்டை விட்டு வெளில போன பிறகு” என்றவன் நிறுத்தி, “உயிரோட இருந்தீங்கன்னா கன்டின்யூ பண்ணிக்கோங்க!” என்று சொல்ல, இருவரின் விழிகளும் ஒரு அங்குலம் விரிந்தது அதிர்வில்.
“என்னய்யா சொல்ற நீ!?” பிரஷாந்த் பதற, “பயப்படாதீங்க! நான் என் அப்பா’க்கிட்ட இந்த லொகேஷன் குடுத்துட்டு தான் வந்தேன்! என்கிட்ட இருந்து கம்யூனிகேஷன் இல்லன்னா அவரே இங்க என்னை தேடி வருவாரு! நம்ம எல்லாரும் எஸ்கேப் ஆகிடலாம்!” என்றாள் சம்யுக்தா.
வழி கிடைத்த பூரிப்பில் இருவரும் அவளை ‘உண்மையா?’ என்பது போல பார்க்க, வித்தகனோ, ஒரு யோசனையோடு அவள் சொன்னதை அசைப்போட்டான்.
“அப்பறம் என்ன? அதான் அவ அப்பா வந்துடுவாருன்னு சொல்றாளே… அவர் வர வரைக்கும் பொறுமையா இருக்கலாம்!” என்றான் பிரஷாந்த்.
“அதுக்குள்ள இங்க எதாவது வந்துட்டா? ஏதோ வாய்ஸ் கேட்டுச்சே! அது எதாவது செஞ்சுட்டா?” பவித்ரா பதட்டமாய் கேட்க, “ஸீ, மணி மூணு ஆகிடுச்சு, இன்னும் த்ரீ ஆர்ஸ்ல கண்டிப்பா வெளிச்சம் வந்துடும்! பாரஸ்ட் கார்ட்ஸ் யாராவது ரவுண்ட்ஸ் வருவாங்க, நம்ம ஈசியா வெளில போய்டலாம்!” என்று நம்பிக்கையாய் சொன்னாள் சம்யுக்தா.
வித்தகனுக்கு ஒருபக்கம் பயம் கவ்வினாலும், மறுபக்கம் சிரிப்பு தான் வந்தது. அவனுக்கு மட்டும் தானே அந்த ‘மூணு மணி’ ரகசியம் தெரிந்திருந்தது.
ஒருமனதாய் முடிவெடுத்து அவ்வீட்டின் எந்த பொருளையும் தொடாமல், முக்கியமாய் சான்ட்லியருக்கு வெகு தொலைவில், ஆளுக்கு ஒரு இடமாய் அமர்ந்துக்கொள்வது என்று பேசி, கதவருக்கு சற்று அருகிலேயே சதுர வடிவில் நால்வரும் அமர்ந்துவிட, அந்த வீட்டில் அவர்களின் நேரம் ஆரம்பமாகியிருந்தது.