இப்படியாக அன்றே, தலைவர் தேர்தல் நாளும் முடிவு செய்யப்பட்டது, எனவே துர்காவின் வேலைகள் சரியாக சென்றது. மணி இப்போதே 11. அடுத்த நடைமுறைகள் எல்லாம், அடுத்த வாரம் என தீர்மானம் போடப்பட்டு, கூட்டம் கலைந்தது.
துர்காவும் ராஜேஷும், இரவு உணவு அங்கேயே முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். வினோவும் வந்திருந்தான், அகில் குடும்பம் வந்திருந்தது. அங்கே ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
மகி இதுவரை ராஜேஷுக்கோ, துர்காவிற்கோ போன் செய்யவில்லை அமைதியாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். வினோ தான் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான்.
வைதேகி கூட உறங்காமல் அங்கு தான் இருந்தார். அனைவர் முகத்தையும் பார்த்திருந்தார், அவற்கு தான் வருத்தம் மகி சங்கத்தில் தலைவர் ஆகவில்லையே என. எனவே சற்று அமைதியாக அமர்ந்திருந்தார். சர்வேஷை தவிர மற்ற பசங்க உறங்கியிருந்தனர்.
துர்கா முதலில் உள்ளே வரவும் அனைவரையும் பார்த்து அசந்தே போனாள், “வாங்க வாங்க “ என அகிலை பார்த்து சொன்னவள், வினோவையும் பார்த்து அவ்வாறே கேட்டாள்.
மகியை பார்க்கவே இல்லை அவள். உள்ளே சென்று பூஜை அறை சென்று வணங்கி திரும்பி வந்தாள். மகியும் அலட்டிக் கொள்ளவில்லை.
ராஜேஷ் உள்ளே வந்தவனுக்கும் ஆச்சிர்யமே, ஆனால், அதை அவன் முகத்தில் காட்டால் “அப்பப்பா, அதென்ன சங்கமா, ஊரெல்லாம் இங்க தான் இருக்கு, என்னா சத்தம், ஒரே கூட்டம், என்ன இத்தனை மெம்பர்கள் இருக்காங்க, கச கசன்னு“ என புலம்பி தள்ளினான்.
வினோ தான் பொறுமையாக சொன்னான் “இது எல்லா மாவட்டத்தினுடைய தலைமை டா, அப்படி தான் இருக்கும்” என சொல்லி “சரி அதை விடு என்ன ஆச்சு சொல்லு” என ஆவலாக கேட்க.
ராஜேஷ் கொஞ்சம் விளையாடிய பிறகே எல்லாம் சொன்னான், வினோவிற்கு இப்போது தான் சற்று நிம்மதி. அகில் தான் “ஆனாலும், பார்த்து மகி, அடிப்பட்டவன் எப்போ எழுவான்னு தெரியாது“ என்றான்.
மகி அசரவில்லை “அதெல்லாம் பார்த்தா முடியுமா, எல்லாம் பார்த்துக்கலாம் டா” என்றான் பழைய மகியாய்.
இதில் எதிலுமே துர்கா வரவில்லை அமைதியாய் டைன்னிங் ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளிற்கும் அகில் சொன்னது தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
நித்யா, ராஜேஷ் சொன்ன எல்லாம் கேட்டு துர்காவை தேட, துர்கா அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
மகியும் இப்போது தன் மனையாளைதான் தேடினான் “ஸ்ரீ “ என்றான் அத்தனை பேர் எதிரிலும். இந்த உரிமையெல்லாம் புதிது அவளிற்கு, மகி வைத்த கண் வாங்காமல் வரும் அவளையே பார்க்க, இவள் அருகில் வரவும் வினோ எழுந்து “துர்கா, கலக்கிட்ட போ” என அவள் புறம் தன் கைகொடுத்து பாராட்டினான்.
மகி நொந்தே போனான். அவள், சற்றும் மகியை பார்க்கவில்லை. தன்னை தான் விடாமல் பார்க்கிறான் என்ற படபடப்பு வர அனைவரையும் விரட்டினாள்.
வைதேகியிடம் திரும்பி “மணியாச்சு, அத்தை நீங்க போய் படுங்க” ராஜேஷை பார்த்து “தம்பி நீங்களும் தான்” ,என்றவள், திரும்பி வினோவிடம் “இங்கயே ராஜேஷுடன் தங்கிக்கங்க” என்றவள் நித்யாவிடம் “எப்போ வந்தீங்க, சொல்லவேயில்ல கிளம்பறேன்னு” என்றாள் ஆற்றாமையாய். இப்போது தான் அடங்கியது அவளின் படபடப்பு.
ராஜேஷ், இதை பார்த்து மகியிடம் “ண்ணா, நீ கிளம்பு நான் கொண்டுபோய் ரூம்ல விடறேன். இவர்கள் பேச தொடங்கினா ஏதோ பத்து வருஷம் பாக்காத மாறியே இரண்டு பேரும் பேசுவாங்க, நீ கிளம்பு” என மகியின் அருகில் வந்தவன் அவனை எழுப்ப.
அகில் ராஜேஷ் சொன்னதில் சிரித்தவன் ஏதோ நல்ல மூடில் இருப்பான் போல, “டேய் தூக்குடா அவர, அப்படியே தூக்கிட்டு போய் ரூம்ல போட்டுடலாம்” என்றான் ஏதோ சிறு பையன் போல்.
வினோவும் சேர்ந்து கொண்டு “தூக்குங்க டா, இவன” என மகியை, அவனின் கால் அசையாமல் பிடிக்க, மகி “விடு வினோ, நானே போவேன்” என்றான்.
அங்கு, அவன் பேச்சை யார் கேட்டார்கள். ராஜேஷ், மகியின் தோளை பிடிக்க, அகில் அவனின் இடுப்பை பிடித்து தூக்க, மூவரும் சேர்ந்து அவனை அலேக்காக தூக்கி இருந்தனர்.
வைதேகி “டேய், விடுங்க டா, எல்லாம் விளையாட்டு, டேய், அவனே இப்போதான் எழுந்து உட்காருறான், ஏதாவது பண்ணிடாதீங்கடா, விடுங்கடா” என சொல்லிக் கொண்டே மகியின் பின்னோடு சென்றார்.
துர்காவும் நித்யாவும் “பார்த்து பார்த்து” என சொல்லிக் கொண்டே சிரித்தபடி நின்றிருந்தனர்.
அந்த பத்தடி தூரத்தை கடந்து மகியை ஏதோ தெய்வம் போல் இறக்கி வைத்தனர். வைதேகிதான் உள்ளே வந்தவர் தூக்கி வந்த மூவர் முதுகிலும் ஒரு அடி போட்டார்.
மகியும் “போடும்மா, இன்னும் நாலு போடு” என ஒரு விரிந்த சிரிப்போடு சொல்லிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் திரும்பவும், பேசி விட்டு, வினோ வீடு கிளம்பினான். எல்லோரும் படுக்க சென்றனர். துர்காவும் சர்வேஷுடன் உறங்க வந்தாள்.
மகி விழித்தே இருந்தான், ஏதும் பேசவில்லை. அவளின் நடமாட்டத்தை பார்த்தபடி தான் இருந்தான். துர்காவும் அதனை உணர்ந்து அவனை தொந்தரவு செய்யாமல் ஒரு குளியல் போட்டு இலகு உடைக்கு மாறினாள்,
சர்வேஷுக்கும் மகிக்கும் நடுவில் தலையணை வைத்து, இவள் விளக்கணைத்து படுக்க, அவளின் கைகளை தேடி பிடித்துக் கொண்டான் மகி. எல்லா நேரத்திலும் வார்த்தைகள் தேவையில்லை தானே, அன்றைய இரவு அமைதியான இரவாக இருந்தது அவனுக்கு.
மறுநாளிலிருந்து அமைதியாக அவரவர் வேலையை சரியாக செய்தனர். ராஜேஷ் தான் ஏற்காடு சென்று வந்தான். மேட்டூர் சென்றான். அவனிற்கு தான் கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருந்தது.
மகி இப்போதெல்லாம், தன் மகன்களின் மீதும் கவனம் செலுத்தினான். தன் அருகிலேயே மகன்களை வைத்துக் கொண்டான். உறங்கும் போதும் சர்வாவை பெரியம்மாவுடன் அனுப்பவில்லை.
மகி, துர்காவையே அதிகம் தேடினான். எதுவாக இருந்தாலும் இப்போது துர்கா வேண்டும் அவனிற்கு. சாப்பாடா, “ஸ்ரீ “ என்பான். போன் அடித்தால் “ஸ்ரீ “ என்பான். அவளை கிட்ட தட்ட தன் கைவளைவில் வைக்காத குறை தான்.
துர்காக்கு, இப்போது இதுவும் பயத்தை தந்தது. அதீத அன்பும் ஆபத்தோ என ‘பாவம் இயல்பான கணவனின் அன்பை கூட ஏற்க முடியவில்லை’ அவளால். அவன் கூப்பிட்டால் அன்றி இவள் அவன் கண்ணில் இப்போதெல்லாம் படுவதேயில்லை. ஆனால், மகி தான் ‘ஸ்ரீ’ ஜபம் செய்கிறானே.
துர்காவிற்கு ஷோரூம் தவிர மற்ற வேலைகள் வைக்கவில்லை மகி. வினோ, ஓபன் டாக் பார்த்துக் கொண்டான். ஒரு மாதம் சென்றிருந்த நிலையில்.
சில சமயம் மகியை எப்படி சாமாளிப்பது என தெரிவதில்லை, இப்போதெல்லாம். மகி படும் வலியை விட, துர்காவும், வைதேகியும் படும் வலிதான் அதிகம்.
வேலைகள் இருக்கும் வரை சுறு சுறுப்பாக இருப்பவன். வேலை முடித்து அமரும் நேரம் ஓய்ந்து போனது போல் அமர்ந்திருப்பான்.
இதனை அவர்கள் இருவராலும் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் சாக்காக வைத்து கவனம் திருப்பினாலும், ஒரு கட்டத்தில் குழந்தைகள் மேல் கோவம் கொள்ள தொடங்கிவிட்டான் மகி.
ஓடி ஓடி வேலை செய்தவர்களை இப்படி வீட்டில் அமர்த்தி வைப்பது முடியாத காரியம். அப்படியும் மகி தன்னை முயன்று கட்டுபடுத்தி தான் வைத்திருந்தான். அந்த நிலையையும் பார்க்க முடியாது தானே. இப்படியே தான் இந்த ஒன்றரை மாதமும் சென்றது.
இதோ இப்போது, மகியும் துர்காவும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். டாக்டரின் செக்கப் முடித்து இனி கொஞ்சம் கால் ஊனி நடக்கலாம் என்று கூறிய பிறகே துர்காவிற்கு சற்று நிம்மதி.
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் கண்கள் கலங்கிய நிலையிலேயே காரை செலுத்தி வந்தாள். மகிக்கும் அதே நிலை தான். இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.
வீட்டிலுள் வரும் போது மகியை பிடிக்கவே இல்லை அவள். மகியும், அவனே, மருத்துவர் சொன்னது போல் பொறுமையாக நடந்து உள் வந்தவன், நேரே தன் மனையாளை அழைத்துக் கொண்டு பூஜையறை சென்று தன் தந்தையை வணங்கிய பிறகே அமர்ந்தான்.
துர்காவிற்கு, நித்யாவிடமிருந்து போன் வந்தது எல்லா விவரமும் சொல்லி முடித்தாள். நேரே சென்று வைதேகியை அழைத்து வந்து எல்லாம் சொன்னாள். அவர் தான் துர்காவிடம் “ஏதாவது இனிப்பு செய் துர்கா” என்றார்.
மகி தான் “இரும்மா, வினோ வாங்கி வருவான்” என்றான். இப்போது துர்காவின் பெற்றோர் வந்தனர் மகியை பார்க்க.