அண்ணன் அப்படிச் சொல்லவும் அதில் இருந்து தப்பிக்க “சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணிக்கணும். அது நடந்தா நான் எந்த மறுப்பும் சொல்ல மாட்டேன். அது வரைக்கும் நான் வேலைக்கு போவேன்”, என்று சொல்லி அப்போதைக்கு நிலைமையை தள்ளிப் போட முயன்றாள் வெண்ணிலா. ஏனென்றால் புவி திருமணம் செய்யாமல் இருப்பது வேறு அவளை அரித்துக் கொண்டிருந்தது.
“எனக்கு கல்யாணமா? அதுக்கு வாய்ப்பே இல்லை”, என்று புவி சொல்ல “என் முடிவு இது தான். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கணும். அது வரைக்கும் நான் வேலைக்கு போவேன். அப்பா நான் சொல்றது சரி தானே?”, என்று வெண்ணிலா கேட்க மகனின் வாழ்வுக்காக மகளுடன் கூட்டு சேர்ந்த பாரி வெண்ணிலா வேலைக்குச் செல்ல அனுமதி கொடுத்தார். என்ன செய்ய என்று தெரியாமல் புவி அங்கிருந்து எழுந்து செல்ல தன்னறைக்கு வந்த வெண்ணிலா மைதிலிக்கு அழைத்தாள்.
“சொல்லு வெண்ணிலா. சுஜியைக் கூப்பிடவா?”
“அவ கிட்ட அப்புறம் பேசலாம். முதல்ல இங்க நடந்ததை உன் கிட்ட சொல்லணும். அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”
“என்ன ஆச்சு?”, என்று மைதிலி கேட்க அனைத்தையும் புலம்பி தீர்த்து விட்டாள் வெண்ணிலா.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட மைதிலி “சூப்பர் டி. நல்லா பேசிருக்க. இப்படியே மெயிண்டேயின் பண்ணு. நீ இப்படி பேசினா உனக்காகவாது உன் அண்ணா கல்யாணம் பண்ணிப்பாங்க”, என்றாள்.
“ஆமா டி, அதான் அப்படிச் சொன்னேன். சரி நாம வேலைக்கு போகலாம்னு போட்ட பிளான் என்ன ஆச்சு? யார் கிட்டயாவது கேப்போமா எங்கயாவது வேகண்ட் இருக்கான்னு?”
“என்னால வேலைக்கு வர முடியாது வெண்ணிலா”
“என்ன ஆச்சு மைத்தி? உங்க அப்பா ஏதாவது சொன்னாங்களா?”
“ஒண்ணும் சொல்லலை. வேலைக்கு போகணும்னு சொன்னேன். காதுல வாங்காத மாதிரி போய்ட்டார். அவர் என்னை அனுப்புறது கஷ்டம் தான். அப்புறம் சுஜி வீட்லயும் கவர்ன்மெண்ட் வேலைக்கு படிக்கச் சொல்லிட்டாங்களாம். அவ இப்ப தான் புலம்பிட்டு போனை வச்சா”, என்றாள்.
“போச்சா, நாம ஒண்ணு நினைச்சா அது இப்படி தான் ஆகும் போல? சரி விடு, என்ன ஆகுதுன்னு பாப்போம். கெட்டதுலயும் நல்லதா அண்ணன் கல்யாணம் நடந்தா நல்லது தான். சரி அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அவள் எண்ணியது போல புவி சம்மதம் தெரிவிக்கவே இல்லை. திருமணம் வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் வெண்ணிலா சொன்னதால் வீட்டில் அனைவரும் அவனுக்கு தெரியாமலே பெண் பார்த்தார்கள்.
ஆனால் அவன் ஒரு டிகிரி கூட முடிக்காததால் எந்த வரனும் சரியாக அமைய வில்லை. கடையும் அவனது சொந்த கடை இல்லையே. அந்த கடை அனைவருக்கும் பொது என்பதால் பெண் வீட்டில் யோசிக்க தான் செய்தார்கள். படிப்பும் இல்லை, நிலையான வருமானமும் இல்லாதவனுக்கு பெண் கொடுக்க அனைவரும் யோசிக்க தான் செய்தார்கள்.
புவிக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்கள் என்ற விஷயம் சுஜிக்கு தெரியாமலே போனது. மைதிலி அதை அவளுக்கு தெரிய வைக்க வில்லை.
புவிக்கு சரியான பெண் அமையவில்லை என்பதை மைதிலியிடம் சொன்னாள் வெண்ணிலா. “அண்ணனுக்கு ஒரு பொண்ணும் கிடைக்க மாட்டிக்கு டி. என்ன செய்யன்னு தெரியலை”, என்று வெண்ணிலா சொல்ல “ஏன்?”, என்று கேட்டாள் மைதிலி.
“கடை அப்பா பேர்ல இருக்கு டி. நாளைக்கு பிரிச்சா கூட அது பரணி மாமாவுக்கும் மகேஷ் அண்ணாவுக்கும் பங்கு போகும். அண்ணா படிக்கவும் இல்லை, எல்லாரும் அதை தான் சொல்றாங்க”
“எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு இருக்கு டி. அவ இதெல்லாம் எதிர் பாக்க மாட்டா”, என்றாள் மைதிலி.
“யாரு டி அது?”
“யாரா இருந்தாலும் அவளை உங்க அண்ணனுக்கு கட்டி வைப்பியா வெண்ணிலா?”
“கண்டிப்பா டி”
“அவங்க நம்ம ரெண்டு பேர் குடும்பம் மாதிரி ரொம்ப பணக்காரங்க இல்லை. மிடில் கிளாஸ் குடும்பம் தான்”
“அதனால என்ன டி? பொண்ணு எப்படி?”
“பொண்ணுக்கு நான் கேரண்டி. அவங்க வீட்ல பேச வேண்டியதும் என்னோட பொறுப்பு. ஆனா உங்க வீட்ல நீ தான் பேசணும்”
“எங்க அண்ணனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் டி. பொண்ணு யாருன்னு சொல்லு”
“நம்ம சுஜி தான்”
“சுஜியா? என்ன டி சொல்ற?”
“அவளுக்கு உங்க அண்ணன் மேல கொஞ்சம் கிரஷ். சோ அவ இந்த கல்யாணம் நடந்தா சந்தோஷம் தான் படுவா”
“நிஜமாவா டி? சுஜி மட்டும் எனக்கு அண்ணியா வந்தா அதை விட பெரிய சந்தோஷம் எனக்கு வேற என்ன இருக்க போகுது?”
“அது நடக்கணும்னா அது நம்ம கைல தான் இருக்கு”
“கண்டிப்பா டி, என்ன செய்யணும்னு சொல்லு”
“சொல்றேன், அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. சுஜிக்கு உங்க அண்ணனைப் பிடிக்கிற விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. உனக்கு தெரியும்னு கூட நீ சுஜி கிட்ட காட்டிக்க கூடாது. அவ என் கிட்ட கூட சொல்லலை. நானா கண்டு பிடிச்சு தான் சொல்றேன். அப்புறம் இந்த கல்யாணத்துல காதல்ன்னு ஒண்ணு வரவே வரக் கூடாது. கண்டிப்பா இந்த கல்யாணம் அரெஞ்ச் மேரேஜா தான் இருக்கணும். ஏன்னா சுஜி அம்மாவுக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது”
“கண்டிப்பா டி. என்னைக்கு எங்க வீட்ல சொல்லி அவங்க வீட்ல பேசச் சொல்லட்டும்? பொண்ணு கேக்குற மாதிரி கேக்க சொல்றேன்”
சுஜிக்கு தெரியாமல் இருவரும் பிளான் போட்டார்கள். அடுத்த நாள் காலை பதினொரு மணிக்கு மைதிலி கிளம்பி அறையை விட்டு வெளிய வந்தாள். அவளை புருவச் சுளிப்போடு பார்த்தார் அவளது தந்தை கேசவன்.
அப்படிப் பார்த்தால் அவள் எங்கே போகிறாள் என்று விசாரிக்கிறார் என்று அர்த்தம். அதனால் “பிரண்டைப் பாத்துட்டு வரேன்”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல “நம்பி அனுப்புறேன். சீக்கிரம் வீடு வந்து சேரனும்”, என்று சொல்லி அனுமதி கொடுத்தார் கேசவன்.
“சரி”, என்று சொல்லி மைதிலி செருப்பை மாட்ட “ஐயா வெண்ணி தயார் ஆகிருச்சு. குளிக்க வாங்க”, என்று கொஞ்சிய படி வேலைக்காரி அழைப்பதும் இவர் செல்வதும் கண்ணில் பட்டது. அவர் போவது எதற்கு என்று தெரியாத முட்டாளா இவள்?
மனதில் எழுந்த அருவருப்பை மறைத்துக் கொண்டு காரை கிளப்பினாள். அவள் கார் காம்பவுண்டு விட்டுச் சென்றதும் “செல்வா பாப்பா காரைக் பாலோ பண்ணு. பாப்பா எங்க போறான்னு பாத்து எனக்கு தகவல் சொல்லு”, என்றார் கேசவன். இவ்வளவு தான் அவரது நம்பிக்கை.
“சரிங்க ஐயா”, என்று சொல்லி விட்டு வேறொரு காரில் அவளை பின் தொடர்ந்தான் செல்வா என்ற அவரின் அடியாள்.
மைதிலி நேராக சென்று நின்றது சுஜியின் அண்ணன் மதன் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு தான். அவன் வேலையைப் பற்றி சுஜிக்கு தெரியமாலே அவளிடம் விசாரித்து தெரிந்து கொண்டதால் இன்று அவனைக் காண மைதிலிக்கு எளிமையாக இருந்தது.
தன்னை தேடி வந்த பெண் யாரா இருக்கும் என்று குழப்பத்தோடு வந்த மதன் மைதிலியைக் கண்டு கொஞ்சம் ஜெர்க் ஆகி விட்டான். அவனுக்கு அவள் யாரென்று தெரியாது. ஏதோ ஒரு பெண் போல என்று எண்ணிக் கொண்டான்.
“பொண்ணு சும்மா நச்சின்னு இருக்கு. சூப்பரா இருக்கா? இவ யாரா இருக்கும்? வேற ஏதோ ஒரு மதனைப் பாக்க வந்துருக்காளோ?”, என்று எண்ணிக் கொண்டு அவளை நெருங்கினான்.
“நான் தான் மதன். நீங்க யாரு?”, என்று கேட்க “என் பேர் மைதிலி. நான் சுஜியோட ஃபிரண்ட்”, என்றான்.
“ஓ நீ தான் அந்த மைதிலியா? பேர் தெரியும், ஆனா ஆள் தெரியாது. வெண்ணிலாங்குற பொண்ணும் உங்க கேங்க் தானே? சரி என்னைப் பாக்க எதுக்கு வந்த? இங்க உனக்கு வேலை கிடைச்சிருக்கா?”