அவன் ஆவலுடன் எதிர்பார்த்த அன்றைய இரவும் வந்தது. அவன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரியாமல் அறைக்குள் வந்தாள் சுஜி.
எப்போதும் போல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து விட்டு தான் கொண்டு வந்திருந்த பாலை கட்டிலில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.
எப்போதும் இந்நேரம் படுத்திருப்பவன் இப்போது எழுந்து அமர்ந்திருக்கவும் அவனை தயக்கமாக நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளையே பார்த்த படி இருக்கவும் “என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா?”, என்று கேட்டாள் சுஜி.
ஆசை இருந்தாலும் கொஞ்சம் படபடப்பாக இருக்க “ஒண்ணு கேக்கணும்”, என்றான் புவி.
“என்ன?”
“அன்னைக்கு எங்க அம்மா அப்படிப் பேசும் போது ஏன் அமைதியா நின்ன? எங்க வாழ்க்கையைப் பத்தி நீங்க யாரு பேசுறதுன்னு கேக்க வேண்டியது தானே?”
அவனை வியப்பாக பார்த்தவள் “அவங்க உங்க அம்மா”, என்றாள்.
“யாரா இருந்தாலும் தப்பு தப்பு தான். இனி ஏதாவது கேட்டா பதிலுக்கு பேசிடு. நான் என்ன சொல்வேன்னு யோசிக்க வேண்டாம்”
“சட்டுன்னு பெரியவங்களை அப்படி பேச வராது. அப்புறம் என் மேலயும் தப்பு இருக்கே? நான் வெண்ணிலா கிட்ட நம்மளைப் பத்தி பேசினது தப்பு. நம்ம ரெண்டு பேருக்கும் இடைல இருக்குறதை அடுத்தவங்க கிட்ட சொன்னது தான் வினை. என்னை மன்னிச்சிருங்க”
“நீயும் வெண்ணிலாவும் குளோஸ்ன்னு எனக்கு தெரியும். அதனால நீ அவ கிட்ட சொன்னது எனக்கு தப்பா தெரியலை. ஆனா இந்த வீட்ல அதைப் பேசினது தான் தப்பு. இனி கவனமா இரு. எப்பவும் அக்கம் பக்கம் பாத்து பேசணும்”
“சரி”, என்று சொன்னவளுக்கு சந்தோஷம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. இத்தனை நாள் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காதவன் இப்போது இவ்வளவு பேசி விட்டானே?
அதற்கு பின்னரும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு படபடத்துப் போனது. “தூங்கலையா நீங்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”, என்று கேட்டாள். ஏனென்றால் அவன் எப்போதும் இப்படி கிடையாது.
“சும்மா தலை வலிக்குது. ஏதாவது சூடா குடிச்சா நல்லா இருக்கும்”, என்று சொன்ன புவிக்கு உண்மையாகவே ஒரு மாதிரி தான் இருந்தது.
“டீ எடுத்துட்டு வரவா?”
“அதெல்லாம் வேண்டாம். உன் கையில இருக்குற பாலை வேணும்னா கொடு”, என்று சொல்ல அவனை திகைப்பாக பார்த்தாள். ஏனென்றால் அவனுக்கு தான் பால் பிடிக்காதே.
“உங்களுக்கு பால் பிடிக்காதே?”, என்று அவள் கேட்க “இன்னைக்கு குடிக்கணும் போல இருக்கு”, என்றான்.
“இதைப் பாதி குடிச்சிட்டேன். நான் உங்களுக்கு வேற எடுத்துட்டு வரேன்”
“இல்ல, இன்னும் நீ போய் பாலை சூடு பண்ணி எடுத்துட்டு வந்தா நேரம் ஆகிரும். வேணும்னா இதையே கொடு”, என்று அவன் கேட்க திகைத்தவள் “இது எச்சி. சூடும் ஆறிப் போயிருச்சு”, என்று சங்கடமாக சொன்னாள்.
“தரனும்னா தா. இஷ்டம் இல்லைனா வேண்டாம்”, என்று சொல்ல தயக்கத்துடன் அதை நீட்டினாள்.
“இவ்வளவு வேண்டாம். இன்னும் கொஞ்சமா குடிச்சிட்டு கொடு”, என்று அவன் சொன்னதும் குடித்து விட்டு கொஞ்சமாக கொடுத்தாள்.
அவனும் அதை வாங்கி பருகினான். அதை குடித்த பிறகும் அவன் அவளையே பார்த்த படி இருக்க “இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று எண்ணியவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள். அதற்கு பின்னரும் அவன் ஏதோ யோசனையிலே இருக்க “படுக்கலையா?”, என்று கேட்டாள்.
“ம்ம்”, என்று சொல்லி அவனும் படுத்ததும் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள் சுஜி. இருவரும் அமைதியாக படுத்திருந்தாலும் உறக்கம் தான் சட்டென்று வந்த பாடில்லை.
இவனுக்கு என்ன ஆச்சு என்ற அவளின் போராட்டமும் அவளை எப்படி தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள என்ற அவனின் போராட்டமும் அவர்களை உறங்க விட வில்லை. அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவன் மெல்லமாக அவள் புறம் திரும்பிப் படுத்தான். அவள் முதுகைப் பார்த்தவனுக்கு அவளை எப்படி அணுக என்று தெரிய வில்லை.
தயக்கத்துக்கும் அவன் எடுத்த முடிவுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்தான். அவளுடன் வாழ வில்லை என்றால் இன்று நடந்த பிரச்சனை மீண்டும் நடக்கும் என்று அவனுக்கு தெரியும். கூடவே அவனுக்குள் எழுந்த ஆசைகள் வேறு அவளை வேண்டும் என்று கேட்டது.
முதுகில் ஊசி குத்தும் உணர்வு எழ அவன் பக்கமாக திரும்பி படுத்தாள் சுஜி. அவளின் மனதுக்கு பிடித்த கணவன் உறக்கம் வராமல் போராடுகையில் அவளால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்? அவள் பார்த்த பிறகும் அவன் பார்வை அவள் முகத்திலே இருக்க சற்று படபடப்பாக கூட இருந்தது சுஜிக்கு.
இருவருமே ஒரு மாதிரி அவஸ்தையில் இருக்க “நீ தூங்கலையா?”, என்று கேட்டான் புவி.
“தூங்கணும். நீங்க ஏன் தூங்கலை? உங்களுக்கு என்ன ஆச்சு?”
“இல்லை வந்து…. ஒரு வேளை அவங்க சொன்ன மாதிரி நீங்களும் என்னை…. வெட்டி விட்டுட்டு….. உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு நினைக்கிறீங்களோ?”, என்று தயக்கத்துடன் கேட்க அவன் கை நீண்டு அவள் உதடுகளை மூடியது. அவன் செய்கையில் அதிர்ந்து போனாள் சுஜி.
அவள் இமைக்காமல் அவனைப் பார்க்க அவனுடைய விரல்கள் அவள் உதடுகளை மெதுவாக வருடியது. முதல் முறை அவன் தொடுதலில் உள்ளம் சிலிர்த்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அந்த நிமிடம் இருவருமே ஒருவரை ஒருவர் ஏற்க தயாராகி இருந்தார்கள். ஆனால் அவனுக்கு தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல பெரிய தயக்கம். என்ன தான் கிருபா கவுன்சிலிங் கொடுத்திருந்தாலும் சற்று திணறத் தான் செய்தான். ஆனால் அவள் உதடுகளில் இருந்து அவனால் விரலை எடுக்கவே முடியவில்லை.
அவன் விரல்கள் அவளுடைய இதழ்களின் மென்மையை சிறிது நேரம் சோதித்து விட்டு, கன்னம் மூக்கு என்று பயணித்தது. “இது என்ன இப்படி எல்லாம் பண்ணுறான்? இவனுக்கு இன்னைக்கு என்ன தான் ஆச்சு?”, என்று மனதுக்குள் புலம்பியவள் அவன் கொடுத்த உணர்வுகளின் தாக்கத்தில் வெந்து கொண்டிருந்தாள்.
அவன் தொடுகையில் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புகள் கிளர்ந்தது. அவள் முகம் முழுவதும் விரலால் கோலமிட்டவன் தன்னுடைய கையை முகத்தில் இருந்து விலக்க “அவ்வளவு தானா?”, என்ற ஏமாற்றம் வந்தது சுஜிக்கு.
அவளுடைய முகத்தில் இருந்து கையை எடுத்தவன் அவளது வலது கையை தன் பக்கம் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு விரலாக முத்தமிட்டான்.
அவள் தன்னுடைய கரத்தை உருவிக் கொண்டால் அவன் தயக்கம் மேலும் கூடி இருக்கும். ஆனால் கண்களை மூடி அவள் அமைதியாக இருக்கவும் அவன் தயக்கம் கொஞ்சம் குறைந்தது. அவன் மீது பைத்தியமாக இருப்பவள் எதற்காக கையை உருவிக் கொள்ளப் போகிறாள்?
அவள் கண்களை மூடி படுத்திருக்கவும் அவள் கையைப் பற்றிச் சுண்டி இழுத்தான். அவன் இழுத்ததால் அவன் அருகில் வந்தவள் கண்களைத் திறந்து அவனை ஏறிட்டாள். இருவர் கண்களும் மோதிக் கொண்டது. ஒருவரை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டார்கள். இருவர் கண்களிலும் ஆசையும் காதலும் போட்டி போட அதற்கு மேல் முன்னேற தயாராக இருந்தான் புவி. அவன் உணர்வுகள் கிளர்ந்து கொள்ள அவன் தயக்கம் காணாமல் போனது.
அவன் கைகள் அவள் இடையை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொள்ள அவனது வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் சுஜி. எப்போதும் உள் பனியன் அணிந்திருப்பவன் இன்று போடாமல் இருந்தது கூட அவளுக்கு அதிசயம் தான். அவன் முகம் அவள் தோளில் பதிய அவள் கரங்களும் அவனை அனைத்துக் கொண்டது.