“ஏய்… நீ என்ன இங்க? இங்க என்ன பண்ணுற?”, என்று தடுமாறிய படியே கேட்டான்.
இது வரை ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தன்னை ஒதுக்கி வைத்தவன் இன்று பேசவும் உற்சாகமானவள் அதை அவனுக்கு காட்டாமல் “நான் ஒண்ணும் உன்னைப் பாக்க வரலை. நான் உன் அக்காவையும் தாத்தாவையும் தான் பாக்க வந்தேன். எங்க அவங்க?”, என்று கேட்டாள்.
“அவங்களை எதுக்கு நீ பாக்கணும்? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிரு”
“நான் வாழ்வா சாவா போராட்டத்துல இருக்கேன். நீ தான் என்னை விட்டு ஒதுங்கிட்டல்ல. இனி நீ இதுல தலையிடாத. என் காதல் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிக்கிறேன்”
“ஏய் என்ன டி பண்ண போற?”, என்று அவன் பதட்டத்தில் கேட்க அவள் உள்ளம் துள்ளியது.
“நான் என்ன பண்ணா உனக்கு என்ன?”, என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே “யார்க் கிட்ட கிரி பேசிட்டு இருக்க?”, என்று கேட்ட படி அங்கு வந்தாள் இந்து.
அவளைக் கண்டு எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று அஞ்சலி திருதிருவென்று விழிக்க அதைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை வெளியே காட்டாமல் “இவ பேரு அஞ்சலிக்கா. என் கூட தான் வேலை பாக்குறா”, என்றான்.
“ஏன் பிரண்டுன்னாவது சொன்னா தான் என்னவாம்?”, என்று சிணுங்கியது அஞ்சலியின் மனது.
“வா மா, உள்ள வா”, என்று அழைத்தாள் இந்து.
“அது வந்து… அது…”, என்று திணறினாள் அஞ்சலி. என்ன தான் பேச வந்து விட்டாலும் “நான் உங்க தம்பியை லவ் பண்ணுறேன்”, என்று சொல்லும் தைரியம் அவளுக்கு வர வில்லை.
ஆனால் “இப்ப வாயை மூடிட்டா பின்னாடி உன் நிலைமை சிக்கலாகிரும் டி. ஒழுங்கா உன் மனசுல உள்ளதைச் சொல்லிரு”, என்று உள்ளிருந்து குரல் கொடுத்தது அவள் மனசாட்சி.
“அதெல்லாம் உள்ள வந்துட்டு பேசலாம். நீ முதல்ல உள்ள வா. முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்க வாசலோடயா அனுப்புவாங்க?”, என்று சொல்லி விட்டு இந்து உள்ளே செல்ல “வலது காலை எடுத்து வச்சு உள்ள போகவா?, என்று கேட்டு கிரியின் ரத்த அழுத்தத்தை சோதித்தாள் அஞ்சலி.
“இப்ப வாயை மூடிட்டு நீ உள்ள போகலை ரெண்டு காலும் உனக்கு இருக்காது. ஒழுங்கு மரியாதையா உள்ள போனோமா அக்கா கொடுக்குற காபியைக் குடிச்சோமா போனோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு நம்ம விஷயம் ஏதாவது சொல்லிட்டு இருந்த உன் முகத்தைக் கூட இனி திரும்பி பார்க்க மாட்டேன் டி”, என்று மிரட்டினான் கிரி.
“அடப் போடா, என்னமோ இது வரை நீ என்னை திரும்பி திரும்பி பாத்த மாதிரி தான். நானே நீ வேணும்னு கேக்க தான் இங்க வந்துருக்கேன். அப்படி இருக்க அதைச் சொல்லக் கூடாதுன்னா எப்படி?”, என்று மனதில் எண்ணிக் கொண்டவள் “முயற்சி பண்ணுறேங்க மாமா”, என்று புன்னகையுடன் சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
அவள் அப்படிச் சொன்னதில் அவன் தான் நே என்று விழித்த படி நின்றான். பின் சரியான வாலு என்று புன்னகையுடன் எண்ணிக் கொண்டு “எதுக்கு காலங்காத்தால வேலைக்கு கிளம்பாம இங்க வந்துருக்கா? என்ன தான் சொல்றான்னு பாப்போம்”, என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே இந்து அஞ்சலியை குணசேகரனுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள். பின் அஞ்சலி குணசேகரனிடம் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு டீ எடுத்து வந்து கொடுத்தாள் இந்து.
“வீட்டுக்கு வந்தவங்களை எதுக்கு வந்தீங்கன்னு கேக்க கூடாது தான். ஆனா உன் முகத்தை பாத்தா ஏதோ சொல்ல தவிக்கிற மாதிரி இருக்கு. அதனால கேக்குறேன். என்ன விஷயம் அஞ்சலி? தயங்காம சொல்லு”, என்றாள் இந்து.
அவள் அப்படிச் சொன்னதும் தைரியத்தை வரவழைத்த அஞ்சலி “எனக்கு நாலு வருஷமா கிரியை ரொம்ப பிடிக்கும். பிடிக்கும்னா சும்மா இல்லை. நான் அவனை உயிருக்கு உயிரா விரும்புறேன்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டாள்.
இதை உளறுவாள் என்று யூகிக்க கூட செய்ய கிரி திகைத்துப் போனான். “அடப்பாவி”, என்று எண்ணிய படியே இந்து மற்றும் குணசேகரனை அவன் பார்க்க அவர்களோ அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தலை இல்லையென்னும் விதமாய் மறுப்பாக ஆடியதும் அஞ்சலியைப் பார்த்தார்கள் இருவரும். அதிலே கிரி அவளை விரும்ப வில்லை என்று புரிந்தது.
“அஞ்சலி, கொஞ்சம் தெளிவா சொல்லு மா”, என்றார் குணசேகரன்.
“தாத்தா, உங்க பேரன் என்னை விரும்பலை. நான் மட்டும் தான் அவனை விரும்புறேன். படிக்கும் போதே என் காதலை அவன் கிட்ட சொன்னேன். ஆனா அவன் காதல் பிடிக்காது அதனால காதலிக்க மாட்டேன்னு சொல்லிருந்தா பரவால்ல. இல்லை உன்னைப் பிடிக்கலை அதனால உன் மேல காதல் வரலைன்னு சொல்லிருந்தா கூட பரவால்ல. ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா?”, என்று அஞ்சலி கேட்க “என்ன சொன்னான்? எனக்கு வாழ்க்கைல நிறைய லட்சியம் இருக்கு. அக்காவை பாத்துக்கணும். தாத்தாவை பாத்துக்கணும்னு சொன்னானா?”, என்று புன்னகையுடன் கேட்டாள் இந்து.
இந்துவுக்கு தங்களின் வீட்டுக்கே வந்து தம்பியை விரும்புறேன் என்று சொன்ன அஞ்சலியை மிகவும் பிடித்திருந்தது. கூடவே தம்பிக்கும் அவளுக்கும் இருக்கும் பொருத்ததையும் எண்ணி இந்துவின் மனது வியந்தது. கிரிக்கு இவள் தான் பொருத்தமாக இருப்பாள் என்று இந்துவின் மனது எண்ணியதால் தான் இந்துவால் புன்னகைக்க முடிந்தது.
ஆனால் அக்காவைப் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கு அஞ்சலி யார் என்ற உண்மை தெரிந்தால் நிலைமை எப்படி மாறும் என்று எண்ணி மனதுக்குள் ரயில் தடதடத்தது.
இந்துவின் புன்னகை கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால் “கிட்டத் தட்ட நீங்க சொன்ன மாதிரி தான் சொன்னான். கூடவே இன்னொரு விசயத்தையும் சொன்னான்”, என்று சொல்லி தயங்கினாள் அஞ்சலி.
“அஞ்சலி எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. நீ கிரிக்கு மனைவியா வரதுல எனக்கு பரிபூரண சம்மதம். இப்பவாது தயங்காம என் தம்பி என்ன சொல்லி உன்னை வேண்டாம்னு சொன்னன்னு சொல்லு மா”, என்று சொன்னதும் சந்தோஷமாக அதிர்ந்த அஞ்சலி “என் அண்ணன் பேரைக் கேட்டதும் அவன் தங்கச்சினால உன்னை எனக்கு பிடிக்கலை. இனி நீ எனக்கு பிரண்டா கூட வேண்டாம்னு சொல்லிட்டான்”, என்று சோர்வாகச் சொன்னாள்.
குணசேகரனும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் இருவரும் கிரியைப் பார்த்தார்கள். கிரியின் பார்வை விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தது. அதைக் கண்டே நிலைமையின் தீவிரம் கொஞ்சம் அதிகம் என்று இருவருக்கும் புரிந்தது. அதனால் “கிரி அப்படி சொல்லிருக்கான்னா கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்குமே? யாருமா உன் அண்ணன்?”, என்று கேட்டார் குணசேகரன்.
“என் அண்ணன் பேரு இன்பன். பெரிய தொழில் அதிபர்”, என்று அஞ்சலி சொன்னதும் இருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
“இன்பனோட தங்கச்சியா நீ?”, என்று கேட்டாள் இந்து.
“ஆமா”, என்று சொன்ன அஞ்சலிக்கு அவர்கள் முகத்தில் இருந்த அதிர்ச்சி கலக்கத்தைக் கொடுத்தது. அந்த கலக்கம் உண்மை என்பது போல அடுத்த நொடி “வெளிய போ”, என்று சொன்னாள் இந்து. அதுவும் அவளுடைய சுட்டு விரல் வாசலைப் பார்த்து நீண்டிருந்தது. கிரி கண்களை ஒரு நொடி இறுக மூடித் திறந்தான். அவனால் தாத்தா மற்றும் அக்காவின் மனதை புரிந்து கொள்ள முடிந்தது. கூடவே இது அஞ்சலிக்கு எப்படி வலிக்கும் என்றும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அஞ்சலி அதிர்வாக இந்துவைப் பார்த்துக் கொண்டிருக்க “உன்னைத் தான் சொல்றேன். வெளிய போ. உன் விருப்பம் எந்த சூழ்நிலையிலும் நிறை வேறாது. அந்த இன்பனோட நிழல் கூட எங்க மேல படுறதை நாங்க விரும்பலை. நான் சொல்றது தான் முடிவு., ஒரு நாளும் என் தம்பி உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டான்”, என்று அவ்வளவு கடுமையாக பேசினாள் இந்து.
இவ்வளவு நேரம் தன்னிடம் கனிவாக அன்பாக பேசியவங்களா இப்ப இப்படி பேசுறாங்க என்று எண்ணி இந்துவையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள் அஞ்சலி.