“ஆமா பாத்தேன். அப்படி தான் போட்டுருந்துச்சு. அவங்க தாத்தா நம்பர் கிடைக்குமா?”, என்று கேட்டான் வினித்.
“அவங்க தாத்தா நம்பர் என் கிட்ட இல்லை. இந்து நம்பர் இருக்கு. தரட்டுமா?”, என்று கேட்டான் இன்பன்.
“ஓகே தாங்க”, என்று வினித் சொன்னதும் அவள் நம்பரை அனுப்பி வைத்த இன்பன் இந்துவை அழைத்து வினித் வீட்டில் இருந்து கால் செய்வார்கள் என்று சொல்லி விட்டு வைத்தான்.
அதே போல வினித்தின் அன்னை இந்துவிடம் நல்ல படியாக பேசினாள். இந்துவின் சொந்த ஊர், பூர்வீகம் எல்லாம் பற்றி விசாரித்தாள். இந்துவும் பொறுமையாக அனைத்துக்கும் பதில் சொன்னாள்.
“வீட்ல பெரியவங்க இருந்தா கொடு மா”, என்று அந்த அம்மா சொல்ல “நான் இப்ப தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு கால் பண்ணுறீங்களா?”, என்று கேட்டாள்.
அந்த அம்மா சரி என்றதும் போனை வைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள் இந்து.
அப்போது இன்பன் அவளை அழைத்தான். அதை எடுத்த இந்து “என்ன சொல்லு?”, என்றாள்.
“அவங்க வீட்ல இருந்து கூப்பிட்டாங்களா?”
“ஆமா”
“என்ன பேசினாங்க? அவங்க கிட்ட நீ தன்மையா தானே பேசின? என் கிட்ட பேசின மாதிரி திமிரா பேசலையே? அவங்களுக்கு உன்னைப் பிடிக்கும் தானே? இந்த கல்யாணம் நடந்துரும் தானே?”, என்று ஆர்வமாக கேட்டான் இன்பன்.
“நான் சரியா தான் பேசினேன். அதுக்கு மேல அவங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா நான் ஒண்ணும் பண்ண முடியாது. தாத்தா கிட்ட பேசணும்னு சொன்னாங்க. நான் ஆஃபிஸ்ல இருக்கேன்னு சொன்னேன். வீட்டுக்கு போனதும் கால் பண்ணுறேன்னு சொல்லிட்டு வச்சிட்டாங்க”
“அபசகுணமா பேசாத இந்து. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும். அவங்களுக்கு உன்னை கட்டாயம் பிடிக்கும். உன்னை யாருக்கும் பிடிக்காம இருக்காது”, என்று அவன் சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு வியப்படைந்த இந்து “சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன். வைக்கிறேன்”, என்றாள்.
“சரி பாத்து கவனமா வீட்டுக்கு போ”
“கவலைப்படாதே, நான் கவனமா தான் போவேன். நான் செத்து போனா உன் தங்கச்சி கல்யாணம் நின்னுருமோன்னு தானே இந்த அக்கறை. அப்படி ஒண்ணும் செத்துற மாட்டேன்”, என்று கடுப்புடன் சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள் இந்து.
“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்துறா? பாத்துப் போன்னு ஒரு அக்கறைல தானே சொன்னேன்? அதுக்கு இவ்வளவு கோபப் படணுமா? ஆனாலும் நான் ஏன் அவளை அப்படிச் சொன்னேன்? அவளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படி இருக்க அவ மேல எனக்கு எதுக்கு அக்கறை வந்துச்சு?”, என்று சுய அலசலில் இறங்கினான் இன்பன்.
அதே நேரம் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த இந்துவும் எதற்காக அவனிடம் அப்படி கோப பட்டோம் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள். எதனால் அப்படி கோபம் வந்தது என்று அவளுக்கு புரியவே இல்லை.
அவளுக்காக அவன் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறான். அது அவனது சுயநலத்துக்காக தான் என்றாலும் அவளுக்கும் அது நல்லது தானே? அப்படி இருக்க பாத்துப் போ என்று சொன்னதற்கு அவ்வளவு கோபப் பட வேண்டிய அவசியமே இல்லையே. எதற்கு அப்படி செய்தேன் என்று எண்ணிய இந்துவுக்கு பதிலே கிடைக்க வில்லை.
பார்க்கப் போனால் அவளுக்கு திருமணம் கூடி வரப் போவதை நினைத்து அவள் சந்தோஷம் தான் பட வேண்டும். ஆனால் அவள் மனது முழுவதிலும் சந்தோஷம் துளி கூட இல்லை.
இன்பனைப் பற்றி எண்ணிக் கொண்டு சோர்வுடனே வீட்டுக்குச் சென்றாள். தாத்தாவிடம் இப்படி ஒரு வரன் இன்பன் மூலமாக வந்திருக்கிறது என்று எப்படிச் சொல்ல என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் சொன்னால் அவன் எதுக்கு உனக்கு மாப்பிள்ளை பாக்குறான் என்று கேப்பார். அதுக்கு விளக்கம் சொன்னால் மீண்டும் இன்பன் மிரட்டியதைச் சொல்ல வேண்டும். அதனால் எப்படிச் சொல்ல என்று அவள் தவிப்புடனே நடமாடிக் கொண்டிருக்க பேத்தியை அவர் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அவளிடம் எதுவும் அவர் விசாரிக்க வில்லை.
சிறிது நேரம் பார்த்தவர் அவள் எதுவும் சொல்லாததால் “நான் வாக்கிங் போயிட்டு வரேன் மா”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது அவளது போன் அடித்தது. அந்த அம்மா தான் அவளை அழைத்திருந்தாள். அதை எடுத்த இந்து “ஹலோ, தாத்தா இப்ப தான் வாக்கிங் போனாங்க. அவங்க நம்பர் தரட்டுமா?”, என்று கேட்டாள்.
“அது இருக்கட்டும் மா. நான் வேற ஒண்ணு உன் கிட்ட கேக்கணும். நீங்க திருநெல்வேலில தான் சின்னப் பிள்ளைல இருந்து இருந்தீங்களா?”, என்று எடுத்த உடனே கேட்டாள் அந்த அம்மா.
“ஆமா”, என்று சொன்ன இந்துவுக்கு அந்த அம்மா பேசுவதில் எதுவோ வித்தியாசமாக பட்டது.
“அங்க வச்சு நீ ஏதோ தப்பான வேலை எல்லாம் செஞ்சியாமே?”, என்று அந்த பெண்மணி கேட்டதும் விதிர்த்துப் போனாள் இந்து.
“என்ன அமைதியாகிட்ட? நைட் எல்லாம் எங்கயோ போயிருவியாம்? காலைல கார்ல வந்து இறங்குவியாம்? இப்ப தான் விசாரிச்சோம் உன்னைப் பத்தி”
“அதெல்லாம் உண்மை இல்லை மா. அது ஒரு ஆள் வேணுக்குன்னு கிளப்பின புரளி”, என்று தவிப்புடன் சொன்னாள் இந்து.
“அது உண்மையா பொய்யான்னு காலம் முழுக்க யோசிச்சிட்டு இருக்குறதுக்கு நாங்களும் எங்க பையனும் தயாரா இல்லை. இந்த சம்பந்தம் எங்களுக்கு இனி வேண்டாம். வைக்கிறேன் மா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
உள்ளம் எல்லாம் நடுங்க, கை கால் எல்லாம் கோபத்தில் வெடவெடுக்க அதே இடத்தில் தளர்ந்து போய் அமர்ந்து விட்டாள் இந்து.
அவள் முகம் கோபத்தில் சிவந்து விட்டது. முன்பே அவள் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர் பார்த்தது தான். ஆனால் நடந்த பிறகு அதை தாங்க தான் அவளுக்கு சக்தி இல்லை.
கடைசியில் என்னோட வாழ்க்கையைவே அந்த இன்பன் கெடுத்துட்டானே என்று எண்ணி அவன் மேல் கோபமாக வந்தது. உடனடியாக அவனைத் தான் அழைத்தாள் இந்து.
அவளே அவனை முதல் முறை அழைக்கவும் புருவம் உயர்த்தியவன் அதை எடுத்து காதில் வைத்து “சொல்லு”, என்றான்.
“இப்ப உனக்கு சந்தோஷமா? இதுக்கு தானே நீ ஆசைப் பட்ட? என்னை அசிங்க படுத்த தானே இவ்வளவு நாள் காத்திருந்த. இப்ப நீ நினைச்சது எல்லாம் நடந்துருச்சு போதுமா? இனி நிம்மதியா இரு. ஆனா நீ இனி என்ன மிரட்டினாலும் கிரி உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ண மாட்டான். நான் பண்ண விட மாட்டேன். என் கல்யாணமும் நடக்காது. அவங்க கல்யாணமும் நடக்காது”, என்று உக்கிரமாக பேசினாள்.
அவள் எதற்கு கோபமாக பேசுகிறாள் என்று புரியாத இன்பன் கடைசியாக கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு கோபம் தலைக்கேற “ஏய்”, என்று கத்தினான்.
“என்ன டா கத்துற? உன் கத்தலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் தாத்தாவையும் என் தம்பியையும் கொன்னுருவேன்னு மிரட்டி தானே என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச? அதை எல்லார்க் கிட்டயும் இப்பவே சொல்லிறப் போறேன். நீ உண்மைலே என் தாத்தாவையும் என் தம்பியையும் கொன்னா கொன்னுக்கோ டா. நானும் அவங்க கூடவே செத்துப் போயிருவேன். உன்னை மாதிரி ஒரு கேவலமான ஜந்து இருக்குற இந்த உலகத்துல நாங்க இருக்க கூட விரும்பலை. இனி எனக்கு மாப்பிள்ளை பாக்குறேன் மண்ணாங்கட்டி பாக்குறேன்னு சொல்லிட்டு என் பின்னாடி வந்த செருப்பைக் கழட்டி அடிப்பேன்”
“நீ அதிகமா பேசுற இந்து. வார்த்தையை அளந்து பேசு. முதல்ல இப்ப எதுக்கு குதிக்கிற?”, என்று அவன் கேட்க அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் போனை கட் செய்து விட்டாள்.
“இவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்தினா. கடைசில என் மிரட்டலையும் ஒண்ணும் இல்லாம பண்ணிட்டா. கிரி அஞ்சலி கல்யாணத்தை நிறுத்திருவாளோ?”, என்று அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது.
அவன் பதிவு செய்திருந்த மேட்ரிமோனியலில் இருந்து இந்துவின் புரோபைலை எடுத்து விட்டதாக வந்திருந்தது. குழப்பத்துடன் அவர்களுக்கு போன் செய்து விசாரித்தான்.
வினித் என்பவர் இந்துவைப் பற்றி தவறாக ரிப்போர்ட் செய்திருக்கிறார் என்றும் மேலும் நான்கு பேர் அப்படியே செய்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
மேலும் குழப்பம் அதிகமாக தான் ஆனது. அவனுக்கு இப்போது பழைய விஷயங்கள் எல்லாம் நினைவிலே இல்லை. இந்துவை விட இந்த கல்யாணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்று இன்பன் தான் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தான். அப்படி இருக்க அவள் திருமணமே பண்ண மாட்டேன் என்று சொன்னது அவனுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. அதனால் தான் ஏன் இப்படி என்று கேள்வி வந்தது. உடனே வினித்தை அழைத்தான்.