அதை எடுத்த வினித் “ஏன் சார் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? மேட்ரிமோனியல்னா நல்ல குடும்பத்து பொண்ணுங்களைப் பத்தி போடுவாங்கன்னு தெறிஞ்சிக்கிட்டு தான் எங்களை மாதிரி ஆட்கள் பொண்ணு தேடுறாங்க. ஆனா நீங்க தப்பான பொண்ணைப் பத்தி போட்டு அவளுக்கு மாப்பிள்ளை தேடுறீங்க?”, என்று கேட்டான்.
“ஏய் வார்த்தையை அளந்து பேசு. யாருடா தப்பான பொண்ணு?”, என்று கோபத்தில் கத்தினான் இன்பன். அவளைச் சொன்னதும் அவனுக்கு ஏன் அப்படி கோபம் வந்தது என்று அவனுக்கே தெரியாது.
“இந்த கத்துற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. போய் அவ ஊர்ல அவளைப் பத்தி விசாரிச்சுப் பாரு. ஊரே அவளைப் பத்தி பேசி காரித் துப்புது. எவன் கூடவோ நைட் எல்லாம் இருந்துட்டு வந்திருக்கா. அதுவே தொடர்ந்திருக்கு. அதை அந்த ஊரே பாத்துருக்குது. அங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுனால தான் வேற ஊருக்கு குடும்பத்தோட ஓடிப் போய்ட்டாங்களாம். ஆள் அழகா இருந்தா ஆபத்தும் அதிகம்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன். ஒரு வேளை நீயும் கூட அவளை வச்சிட்டு இருந்தியோ என்னவோ?”, என்று சொல்லி விட்டு வினித் போனை வைத்து விட்டான்.
அவன் வைத்தது கூட தெரியாமல் திக் பிரம்மைப் பிடித்து அமர்ந்திருந்தான் இன்பன். இது அவன் செய்ய காரியத்தின் விடை அல்லவா?
அவனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே இப்போது கேள்விக் குறியாக இருக்கிறது. ஒரு பெண் இல்லை. இரண்டு பெண். இவன் செய்த செயலால் இந்துவின் திருமணம் மட்டும் அல்ல. அவனுடைய தங்கை அஞ்சலியின் திருமணமும் கேள்விக் குறி தான்.
கடவுளே நான் எதுக்கோ அப்படி செய்யப் போய் இப்ப எப்படியோ ஆயிருச்சே? இந்த விஷயம் என் வீட்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சா என்னை மன்னிக்கவே மாட்டாங்க. அதுவும் அக்காவைப் பத்தி தப்பா பேசி அவ கல்யாணம் நடக்காதுன்னு கிரிக்கு தெரிஞ்சா கண்டிப்பா அவன் எப்படி அஞ்சலியைக் கல்யாணம் செய்வான்?
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் இன்பன். அவனால் அடுத்து என்ன என்று சுத்தமாக யோசிக்க முடியவில்லை. முதல் முறையாக இந்துவை நினைத்து அவன் மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது. அவளைத் தவறாக பேசும் பொது அவனுக்கே இவ்வளவு வேதனையாக இருக்கிறது என்றால் இந்நேரம் அவள் எப்படி துடித்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணி அவன் கண்களில் கண்ணீர் வந்தது.
அவளை உடனே பார்க்க வேண்டும் என்று அவன் மனம் கிடந்து அடிக்க அடுத்த நொடி அவளுடைய வீட்டுக்கு கிளம்பி விட்டான். யாரோ கதவைத் தடவும் கதவைத் திறந்த இந்து சத்தியமாக அவனை அங்கே எதிர் பார்க்கவே இல்லை. அவள் கதவை ஆராய்ந்து சாத்தப் போக அவன் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
“நீ எதுக்கு டா இங்க வந்த பொறுக்கி ராஸ்கல்? நான் இருக்கேனா செத்தேனான்னு பாக்க வந்தியா? உனக்கு நான் என்ன டா பாவம் செஞ்சேன்? நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு வாழ்ந்துட்டு இருந்தோமே டா. எதுக்கு எங்க வாழ்க்கைல வந்த? உன்னால எங்க குடும்ப நிம்மதியே போயிருச்சு. இப்ப எதுக்கு வந்த? ஓஹோ உன் தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்த வந்தியா? கண்டிப்பா கிரி உன் தங்கையை கல்யாணம் பண்ண மாட்டான். என்னைக் கொன்னு போட்டா வேணும்னா உன் தங்கை கல்யாணம் நடக்கும். கொன்னுறு, என்னை கொன்னுறு. நான் தப்பானவன்னு எல்லார் கிட்டயும் பேச்சு வாங்குற வலியை விட நீ கொல்லுற வலி எனக்கு வலிக்காது டா. என்னைக் கொன்னுறு”, என்று கதறிய அஞ்சலி அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தாள்.
அவள் கண்ணீரில் இன்பன் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. அவன் செய்த காரியத்தின் வீரியம் இப்போது நன்றாகவே அவனுக்கு புரிந்தது. அவன் அவளை சமாதான படுத்துவதற்காக “இந்து”, என்ற படி அவளை நெருங்க நிமிர்ந்து அமர்ந்து அவனைக் கண்டு இரு கை கூப்பிய இந்து “உன்னைக் கெஞ்சி கேக்குறேன். தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு. யாரும் இல்லாத நேரம் உன்னை என் கூட வச்சு யாராவது பாத்தா இங்க இருக்குற எல்லாரும் கூட என்னை கேவலமா பேசுவாங்க. தயவு செஞ்சு போயிரு. வாழ்க்கையை தான் அழிச்சிட்ட. இதுக்கு மேலயும் என் மானத்தை வாங்காத. இனி எதையும் தாங்குற சக்தி எனக்கு இல்லை. வாங்க கூடாத பேர் எல்லாம் வாங்கிட்டேன். இனியும் எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று அழுத படியே பேச அதற்கு மேல் அவளுடைய கண்ணீரை காண மன மில்லாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டான்.
அவன் சென்றதும் அங்கேயே மடங்கி அமர்ந்து அழுதாள் இந்து. என்ன முயன்றும் அவளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. தன்னுடைய வாழ்வை எண்ணி அழுதாள். அப்போது கிரி நினைவு வந்தது. என்ன தான் இன்பனிடம் கிரி அஞ்சலி திருமணம் நடக்காது என்று சொல்லி விட்டாலும் இப்போது தன்னால் அவர்கள் வாழ்க்கை கெட்டு விடுமோ என்று எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள்.
இன்று இன்பன் பார்த்த வரன் என்பதால் இவர்கள் இருவருக்கும் மட்டும் வினித் வீட்டில் பேசியது தெரிந்தது. இதுவே கிரியோ குணசேகரனோ அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தால் அந்த மாப்பிள்ளை வீட்டிலும் இதே தானே பேசுவார்கள். அப்படி பேசினால் கிரியே இன்பன் மேல் உள்ள கோபத்தால் அஞ்சலியை திருமணம் செய்ய மாட்டான்.
அஞ்சலி பாவம். அக்கா அக்கா என்று தன் மேல் அன்பாக இருக்கும் அவள் இனியனுக்கு தங்கையாக பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தாள்?
இப்போதெல்லாம் இரவு வெகு நேரம் கிரியும் அவளும் போன் பேசிக் கொள்வதைப் பார்க்க தான் செய்கிறாள். அவர்களின் காதல் பயிரை விளைய வைத்த இந்துவே அதை பிடுங்கி எறியலாமா?
அது மட்டுமில்லாமல் தங்களுக்கு தாயுமானவனாக இருந்த தாத்தா தனக்காக மாப்பிள்ளை தேடி ஒவ்வொரு முறையும் அவமானப் பட முடியுமா?
எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு வர வேண்டும் என்றால் நான் உயிரோட இருக்க கூடாது. இனி இந்த உயிர் எதற்காக இருக்க வேண்டும். நான் காரணமே இல்லாம செத்துப் போயிட்டா நாலு நாள் கிரியும் தாத்தாவும் அழுதுட்டு அப்புறம் அவங்க வாழ்க்கையைப் பாத்துட்டு போயிருவாங்க. ஆனா நான் உயிரோட இருந்தா தினம் தினம் அவங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் நரகம் தான். இனி உயிரோட இருக்க கூடாது. அதுக்கு தற்கொலையும் பண்ணக் கூடாது. தற்கொலை பண்ணினா வீணா அந்த இன்பன் தான் மாட்டுவான். அப்பவும் அஞ்சலி கல்யாணம் நின்னுரும். அதனால என் சாவு இயற்கையான மரணமா தான் இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்ட இந்து அவசர அவசரமாக வீட்டைப் பூட்டு விட்டு வெளியே நடந்தாள்.
இரவு ஏழு மணி போல் வீட்டுக்கு வந்த கிரி, அக்கா மற்றும் தாத்தாவை தேடினான். அப்போது வாக்கிங் சென்று விட்டு வந்த குணசேகரன் இந்துவைக் காணாமல் திகைத்தார்.
கிரி அவளுக்கு போன் செய்ய அந்த போன் அவர்கள் வீட்டுக்குள்ளே அடித்தது.
“தாத்தா அக்கா எங்க தான் போனா?”, என்று கேட்டான் கிரி.
“தெரியலையே கிரி. வந்ததுல இருந்து ஏதோ டல்லாவே இருந்தா. கொஞ்ச நேரத்துல சரியாகிருவான்னு பாத்தேன். ஆனா சொல்லாம கொள்ளாம எங்க போனா? இந்த நேரத்துல அவ எங்கயும் போக மாட்டாளே டா. இரு பக்கத்து வீட்ல கேக்குறேன்”, என்று வெளியே சென்றார். கிரியும் அவருடன் சென்றான்.
பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இந்துவைப் பற்றி விசாரிக்க அவளோ “ஒரு பையன் வந்தான். ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு அவன் கிளம்பினான். அவன் போய் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணும் கிளம்பிருச்சு”, என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு இருவரும் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் அவள் சொன்ன பையன் யாரென்று தெரிய வில்லையே. அவர்களுக்கு தெரிந்து இந்துவுக்கு எந்த ஆண் நண்பர்களும் கிடையாது. அதனால் அவர்களுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“ஒரு நிமிஷம் தாத்தா”, என்று சொன்ன கிரி தன்னுடைய போனை எடுத்து பேஸ்புக்கில் உள்ள இன்பன் புகைப்படத்தைக் அந்த பெண்ணிடம் காட்டி “இவன் தான் வந்தானா அக்கா?”, என்று கேட்டான்.
“ஆமா இந்த பையன் தான்”, என்று அந்த பெண்மணி சொல்லி விட்டுச் சென்றதும் “தாத்தா மறுபடியும் அக்காவை அவன் தான் தாத்தா கடத்திட்டான்”, என்றான் கிரி.
“என்னப்பா சொல்ற? அவன் எதுக்கு இப்ப கடத்தணும்?”
“தெரியலை தாத்தா. கண்டிப்பா எங்க கல்யாணத்தை சம்பந்த படுத்தி தான் கடத்திருக்கணும்”
“ஆனா அவளா போனதா தானே இந்த அம்மா சொல்லுது?”
“அக்கா கிட்ட ஏதாவது ஏமாத்தி சொல்லி கூட கூட்டிட்டுப் போய் கடத்திருக்கலாம்ல?”
“அவன் ஏண்டா நம்ம வாழ்க்கைல வந்தான்? திருப்பி திருப்பி நம்மளையே அடிக்கிறான். ஐயோ பிள்ளை எங்க எப்படி கஷ்டப் படுறாளோ? அவளுக்கு என்ன ஆச்சோ?”
“அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது தாத்தா. அவன் ஒண்ணும் செய்ய மாட்டான். அப்படி அவனால என் அக்காவுக்கு ஏதாவது ஆச்சினா அவனைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன்”
“முதல்ல வா டா அவன் வீட்டுக்கு போவோம். அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்டா தான் என் ஆத்திரம் தீரும். அந்த அஞ்சலிக்காக நாம பொறுமையா இருந்தா இவன் பொம்பளைப் பிள்ளை வாழ்க்கைல திருப்பி திருப்பி விளையாடுவானா?”, என்று குணசேகரன் கேட்டதும் அவரை அழைத்துக் கொண்டு இன்பன் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான் கிரி.