அதன் பின் அவள் கண் விழிக்கும் போது அவளைச் சுற்றி இருள் போர்வை மட்டும் தான் இருந்தது. இப்போது அவள் கை கால்கள் எல்லாம் ஒரு கயிரினால் கட்டப் பட்டு ஒரு சேரில் அமர வைக்கப் பட்டிருந்தாள்.
இப்போது அவள் வாய் கட்டப் படாததால் “இங்க யாராவது இருக்கீங்களா? யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்”, என்று கத்தினாள்.
அவள் கத்தலுக்கு பதிலாக எந்த சத்தமும் அங்கே இல்லை. படத்தில் இது போல காட்சிகளைக் கண்டே பயப்படும் இந்துவுக்கு அதே நிலைமை தனக்கு வந்ததும் பயத்தில் உயிர் போனது. அடுத்து என்ன ஆகுமோ? தாத்தாவும் கிரியும் என்னை நினைச்சு பயப்படுவாங்களே என்று அழுத படி இருந்தாள். சுற்றி இருந்த சூழ்நிலையே அது இரவு என்று அவளுக்கு எடுத்துரைத்தது.
“ஐயோ நைட் ஆகிட்டா? மதியத்துல இருந்து தாத்தா என்னைத் தேடுவாரே. எதுக்கு டா என்னை இப்படி கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க? நீங்க எல்லாம் யாரு டா?”, என்று அவள் கதறிய படியே கேட்க அவளுக்கு எந்த பதிலும் கிடைக்க வில்லை.
அப்படியே அழுது கொண்டே தான் இருந்தாள். எப்போது என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது. அவள் பின்னால் இருந்த ஜன்னல் கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் அது திறந்து வைக்கப் பட்டிருந்ததால் அதிக காற்றில் அந்த ஜன்னல் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தது. அது ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் அவளுக்கு பக் பக்கென்று இருந்தது.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்திலே அழுத படியும் பயந்த படியும் இருந்தாள். ஆனால் அவள் நல்ல நேரம் காலை விடியும் வரைக்கும் அவளுக்கு எந்த அசம்பாவிதமும் அரங்கேற வில்லை.
அடுத்த நாள் காலை அந்த அறைக்குள்ளே வெளிச்சம் முழுமையாக பரவி இருந்தது. கண்களைச் சுழற்றிப் பார்த்தாள். அது பாழடைந்த வீடு என்று மட்டும் புரிந்தது.
பயத்துடனே அவள் அமர்ந்திருக்க அப்போது அந்த அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவசரமாக அங்கே திரும்பிப் பார்த்தாள்.
யாரென்றே தெரியாத ஆறு பேர் வந்து கொண்டிருந்தனர். யாருமே முக மூடி எல்லாம் அணிய வில்லை. வந்த அத்தனை பேரில் அவளுக்கு மூர்த்தியை மட்டும் நன்கு அடையாளம் தெரிந்தது.
“இவனா? அன்னைக்கு அண்ணன்னு எல்லாம் சொன்னானே?”, என்று அதிர்ந்து போன இந்து அவனை எரித்து விடுவதைப் போல பார்த்தாள். அவள் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் தலை குனிந்தான் மூர்த்தி. அடுத்த நொடி அவர்கள் தன்னை எதற்கு கடத்தி இருக்கிறார்கள் என்று புரிந்து போனது.
கேவலம் நிலத்துக்காகவா என்னைக் கடத்தி இருக்கிறான் என்று எண்ணி மூர்த்தியை முறைத்து பார்த்தாள்.
“என்ன அவனையே பாக்குற? உன்னைக் கடத்துனது அவன் இல்லை. நான் தான். அவன் இது வேண்டாம்னு தான் சொன்னான். ஆனா என்னால உன்னை எப்படி விட முடியும்?”, என்று சொன்னான் அனைவருக்கும் முன்னால் நின்ற இன்பன்.
இப்போது அவனைத் திரும்பி பார்த்தாள் இந்து. “நீ யாரு டா? என்னைக் கடத்த உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா? இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா நீ கம்பி தான் எண்ணனும்”, என்று கோபமாகச் சொன்னாள் இந்து.
“ஹா ஹா போலீசா? ஐயோ பயமா இருக்கே. அட போ மா. நாங்க பாக்காத போலீசா? என்னை யாருன்னு கேட்டல்ல? நான் தான் பாஸ், நீ சொன்ன மொட்டை பாஸ். உன் திமிர் தனத்தை அடக்கி உன் நிலத்தை வாங்க தான் உன்னைக் கடத்த சொன்னேன். ஆனாலும் நைட் முழுக்க கடத்தி வச்சும் உன் திமிர் குறையலையே? என்ன செய்யலாம்?”
“நானா திமிர் பிடிச்சவ? நீ தான் பொறுக்கி. பொம்பளை பொறுக்கி. ஒரு பொம்பளை பிள்ளையை கடத்தி வச்சு மிரட்டுறியே? நீ எல்லாம் ராட்சசன்”
“எனக்கு இன்பன்னு தான் பேர் வச்சாங்க. ராட்சசன்னு எல்லாம் பேர் வைக்கலை மேடம். அப்புறம் ஒரு காத்தாடி போட தானே உன் கிட்ட இடம் கேட்டேன். ஆனா நீ அவ்வளவு திமிரா பேசிருக்க? அதுக்கு தான் டி உன்னைத் தூக்குனேன். மரியாதையா இந்த பத்திரத்துல கையெழுத்தைப் போடு”, என்று சொல்லி அவள் முன் ஒரு பத்திரத்தை நீட்டினான்.
“என்ன பயமுறுத்துறியா? அதுக்கு வேற ஆளைப் பாரு. என்னை கொன்னே போட்டாலும் நான் அந்த இடத்தை உனக்குத் தர மாட்டேன்”, அவனை முறைத்த படி சொன்னாள் இந்து.
“வேற ஆளை எப்படிப் பாக்க? நிலம் உன் பேர்ல தானே இருக்கு? அப்ப உன்னை தான் பாக்கணும்? என்ன பாக்குற? எல்லாம் விசாரிச்சிட்டேன். நானும் கூட நிலம் உன் தாத்தா பேர்ல இருக்குனு நினைச்சு உன்னைக் கடத்தி வச்சிட்டு அவர் கிட்ட கையெழுத்து வாங்கலாம்னு தான் உன்னைக் கடத்தினேன். ஆனா அப்புறம் தான் நிலம் உன் பேர்ல இருக்குறது தெரிஞ்சது. இப்ப கையெழுத்து போட்டா எந்த சேதாரமும் இல்லாம உன் வீட்டுக்கு போவ? இல்லைன்னா அதுக்கு அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை”
“இல்லைன்னா என்ன பண்ணுவ? ஆன்? என்ன டா பண்ணுவ?”
“இந்த திமிர் பேச்சுக்கு நீ இன்னும் அனுபவிக்கணும் டி. இப்ப நீ கையெழுத்து போட்டா உனக்கு இப்ப ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குற மாதிரி செட் பண்ணி நீ நைட் எல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருந்த மாதிரி செட் பண்ணி ஆம்புலன்ஸ்ல கொண்டு போய் உன் வீட்ல விடுவோம்”
“கையெழுத்து போடலைன்னா உண்மைலே கொன்னுருவியா?”
“உன்னைக் கொன்னா எனக்கு எப்படி நிலம் கிடைக்கும்? அதனால உன்னைக் கொல்ல எல்லாம் மாட்டேன். அதிக விலையுள்ள சொகுசு கார்ல போய் உன் வீட்ல உன்னை இறக்கி விடுவேன்”
“என்ன இவன் இப்படிச் சொல்றான்?”, என்று அவள் குழப்பமாக பார்க்க “என்ன புரியலையா? அப்படி போய் நீ இறங்கினா எல்லாரும் நைட் முழுக்க நீ எங்க இருந்தேன்னு நினைச்சு உன்னை எப்படி பாப்பாங்கன்னு நினைச்சு பாரு? நீ கிராமத்துல வளந்த பொண்ணு வேற, நீ அவங்க பார்வைல எப்படி துடிச்சு போய் நிக்குறதை நான் சந்தோஷமா வேடிக்கை பாக்க வேண்டி இருக்கும். எப்படி வசதி?”
“போடா பொறுக்கி. இது என் சொந்த ஊர். நான் பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கேன். அக்கம் பக்கம் உள்ளவங்க எல்லாம் எனக்கு சொந்தக்காரங்க மாதிரி. நீயே வந்து நான் உன் கூட இருந்தேன்னு சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க. நான் மட்டும் நீ தான் கடத்துனேன்னு சொன்னாப் போதும். உன்னை கொன்னுருவாங்க”, என்று தெனாவெட்டாய் சொன்னாள்.
“அப்ப கையெழுத்து போட மாட்ட?”
“சத்தியமா போட மாட்டேன்”
“பாய்ஸ், இந்த பொண்ணை நான் ஏற்கனவே சொல்லிறுக்குற மாதிரி அவ வீட்ல கொண்டு போய் விட்டுருங்க. இவ நிலம் கண்டிப்பா நம்ம கைக்கு கூடிய சீக்கிரம் வரும். எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“இப்படி நடக்கும்னு தான் நான் அன்னைக்கே சொன்னேன். ஆனா என் பேச்சை நீ கேக்கலை. இப்பவாது கையெழுத்து போட்டுருக்கலாம்ல மா?”, என்று கேட்டான் மூர்த்தி.
அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் அவனை அவள் முறைத்துப் பார்த்தாள் இந்து. அவள் பார்வையைக் கண்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான் மூர்த்தி. அவளை எப்படி கடத்தி வந்தார்களோ அதே போல அவளை மீண்டும் அழைத்துச் சென்று அவள் வீட்டின் முன்பு இறக்கினார்கள்.
காரில் இருந்து அவள் இறங்கியதும் குணசேகரனும் கிரியும் “இந்து”, என்ற படி ஓடி வர அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அங்கே வந்து விட்டார்கள்.
“நேத்து மதியத்துல இருந்து நீ எங்க மா போன? நாங்க உன்னைத் தேடாத இடமே இல்லை தெரியுமா? இப்ப தான் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்லைண்ட் கொடுக்க கிளம்பிட்டு இருக்கோம்”, என்றார் குணசேகரன்.
சுற்றி இருந்த அனைவரும் அவள் என்ன சொல்வாள் என்று பார்க்க “என்னை நம்ம நிலத்தைக் கேட்ட அந்த ஆள் கடத்திட்டு போய்ட்டான் தாத்தா. உன் நிலத்தை எழுதிக் கொடுன்னு மிரட்டினான்”, என்றாள்.