கிரியிடமும் வேறு ஊருக்கு போகலாம் என்ற தகவல் சொல்ல அவனுக்கும் இந்த ஊர் பிடிக்க வில்லை என்பதால் உடனே சரி என்றான். ஊருக்கு செல்ல மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.
அதற்கு அடுத்த இரண்டு நாளில் அவர்கள் ஊரை விட்டுக் கிளம்பினார்கள். திடீரென்று அவர்கள் வீட்டின் முன் நின்ற லாரியில் அவர்கள் ஜாமான்களை ஏற்ற அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் குழப்பமாக பார்த்தார்கள்.
அவர்கள் எங்கே போகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தாலும் அதை யாராலும் அவர்களிடம் கேட்க முடியவில்லை. ஏனென்றால் அனைவருமே அவர்களை தவறாக பேசியவர்கள் ஆயிற்றே.
எதிர் வீட்டுப் பெண் விடை தெரியாமல் இருக்க முடியாது என்று எண்ணி “ஏப்பா கிரி என்ன வீட்டைக் காலி பண்ணிட்டு இருக்கீங்க? எங்க போறீங்க?”, என்று கேட்டாள்.
அவளை முறைத்துப் பார்த்த கிரி “நாங்க மனுசங்க இருக்குற ஊருக்கு போறோம். உங்களை மாதிரி சந்தர்ப்பவாதிகள் கிட்ட இனியும் இருந்தா நாங்களும் மிருகங்களாகிருவோம்ல அதான்”, என்று அவன் நக்கலாக பதில் சொன்னதும் அவள் முகம் செத்துப் போனது.
அப்போது அங்கே வந்த குணசேகரன் “கிரி கண்டவங்க கிட்ட ஏன் பேசுற? உள்ள போ”, என்று குணசேகரன் சொல்ல “ஏன் சித்தப்பா நான் என்ன கண்டவளா?”, என்று கேட்டாள் அந்த பெண்.
“சித்தப்பாவா? யாருக்கு யார் சித்தப்பா? உண்மை என்னன்னு தெரியாம என்னல்லாம் பேசின? என் பேத்தி தப்பானவளா? இத்தனை நாள் அத்தைன்னு மறு சொல் உன்னைப் பாத்து சொல்லிருப்பாளா? அவளைப் போய் தப்பானவன்னு சொன்னா உன் நாக்கு அழுகிறாதா? என் பேத்தியைக் கடத்தி எங்களை கொன்னுருவேன்னு மிரட்டி எங்க இடத்தை அந்த படுபாவி விலைக்கு வாங்கிட்டான். அது தெரியுமா உனக்கு? உங்க கிட்ட இனி எனக்கு என்ன பேச்சு?”, என்று சொல்லி விட்டு வேலையைக் கவனித்தார் குணசேகரன்.
அந்த பெண் குற்ற உணர்வுடன் அங்கிருந்து நகன்றாள். ஒரு வழியாக இவர்கள் வீட்டை காலி செய்து விட்டு மதுரைக்கு வந்தார்கள்.
அங்கே உள்ள வீட்டை எல்லாம் செட் செய்து விட்டு எல்லாம் முடிக்க ஒரு வாரத்துக்கும் மேல் ஆகியிருந்தது. அதன் பின் குணசேகரனும் அவருக்கு விருப்பமான விவசாயத்தை செய்தார். அப்போது இந்து சின்ன தாத்தாவிடம் சென்று தனக்கு ஒரு வேலை வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாள்.
அவரும் அவருடைய மகனிடம் சொல்லி ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை வாங்கிக் கொடுத்தார். கிரிக்கும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவன் ஹாஸ்டலில் தங்கி தன்னுடைய படிப்பை படித்தான். அதன் பின் மூவருக்கும் வாழ்க்கை அமைதியான நதி போல சென்று கொண்டிருந்தது. பழைய விஷயங்கள் எல்லாம் அவர்கள் மறக்க வில்லை என்றாலும் அவை அதிகம் நினைவுக்கு வந்து அவர்களை இம்சிக்கவும் வில்லை.
அதே போல தான் இன்பனும். அவர்களிடம் நிலத்தை அபகரித்துக் கொண்டதைப் பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் தான் நடமாடிக் கொண்டிருந்தான்.
அவர்களுடைய நிலத்தில் அவன் வேலையையும் ஆரம்பித்து விட்டான். பின் சில மாதங்கள் கழித்து இன்பனும் அந்த புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து விட்டு அங்கிருந்த ஆபீஸ் எல்லாம் மூடி விட்டு அவனுடைய சொந்த ஊரான சென்னையில் மற்ற வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். இந்துவையும் அவளுடைய குடும்பத்தையும் மறந்தும் போனான். அதைப் போல் எத்தனை பேரை அவன் பார்த்திருப்பான்? அதனால் அவனுக்கு அது பெரியதாக தெரியவில்லை.
அவன் ஜெயிக்க என்றே பிறந்தவன். நினைத்ததை நடத்தியே பழக்கப் பட்டவன். அவனிடம் யாராலும் வாலாட்ட முடியாது. தோல்வி கூட அவனைக் கண்டால் வெற்றியாக மாறி விடும். அப்படி இருக்க ஒரு சாமானியப் பெண்ணான இந்துவால் முடிந்து விடுமா?
அதன் பின் மூன்று வருடங்கள் யாருக்கும் நிற்காமல் கடந்து ஓடியது. கிரி இப்போது பொறியியல் மூன்றாம் ஆண்டு சென்னையில் படித்துக் கொண்டிருந்தான். இந்துவும் குணசேகரனும் சேர்ந்து தான் அவனைப் படிக்க வைத்தார்கள். இடையில் வந்த வரன்களை எல்லாம் இருபத்தி அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணிக்கிறேன்….. கிரி படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன்…. கொஞ்ச வருஷம் ஆகட்டும் தாத்தா…. என்று காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள் இந்து. தான் திருமணம் ஆகி போய் விட்டால் தாத்தாவை யார் பார்ப்பது என்ற கவலை தான் அவளை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல விட வில்லை.
ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்த கிரி, அக்கா மற்றும் தாத்தா மேல் உயிரையே வைத்திருந்தான். அதனால் அவன் நன்றாக படித்ததால் பெரிய காலேஜில் அவனுக்கு சீட் கிடைத்தது. அந்த காலேஜிலே அவன் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். இப்போது அழகான இளைஞனாக இருந்தான். அழகில் அக்காவை கொண்டு பிறந்ததால் கிரிக்கு காலேஜில் விசிறிகள் ஏராளம். படிப்பதிலும் நம்பர் ஒன் என்பதால் ஸ்டுடண்ட் முதல் புரபஸர் வரை கிரியை யாருக்கும் பிடிக்காமல் இருக்காது.
பல பெண்கள் அவனிடம் பேச ஆசைப் படுவார்கள். ஆனால் அவன் படிப்பில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படி அவன் பார்வைக்காக ஏங்கியவள் தான் அஞ்சலி. அஞ்சலி வேறு யாரும் அல்ல. இன்பனின் தங்கை.
கிரி மற்றும் அஞ்சலி இருவரும் ஒரே கிளாசில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் கடந்த மூன்று வருடமாக கிரியை அவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அந்த கிளாசிலே அஞ்சலி தான் அழகு. கூடவே பணக்காரியும் கூட. அவளிடம் பேச பல ஆண்கள் காத்துக் கிடக்க அவளையும் கிளாசில் உள்ள மற்ற மாணவிகள் போல நடத்தும் கிரியை நினைத்து ஆச்சர்யம் வந்தது. அந்த ஆச்சர்யம் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பாக, ஆசையாக உருமாறி கடைசியில் காதல் என்ற நிலையில் வந்து நின்றது. ஆனால் பெண்ணான அவளுக்கு அவனிடம் காதலைச் சொல்ல தயக்கம் இருந்ததால் அதை சொல்லாமலே நாட்களைக் கடத்தினாள்.
கிரிக்கோ அஞ்சலி ஒரு நல்ல தோழி. அவ்வளவே. பணக்காரி என்ற திமிர், அகங்காரம் எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சாதாரணமாக பேசிப் பழகும் நல்லவள் என்ற எண்ணம் மட்டும் தான் அவள் மீது உண்டு. மற்ற படி அவன் காதல் என்றெல்லாம் இது வரை யோசித்ததே இல்லை.
நாளையோடு அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நிறைவடையும் நிலையில் அன்று மாலை கல்லூரி முடிந்ததும் கிரி ஹாஸ்டலுக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவன் முன்னே வந்து நின்றாள் அஞ்சலி.
அவளைக் கண்டதும் “என்ன அஞ்சலி வீட்டுக்கு போகலையா? கார் வரதுக்காக வெயிட் பண்ணுறியா?”, என்று சாதாரணமாக கேட்டான் கிரி.
“போகணும். ஆனா உன் கிட்ட கொஞ்சம் பேசணும். கேண்டீன் போகலாமா கிரி?”, என்று கேட்டாள் அஞ்சலி.
வியப்பாய் புருவம் உயர்த்தி ஒரு நொடி யோசித்த கிரி “ஓ போகலாமே. ஒரு நிமிஷம் இரு”, என்று சொல்லி விட்டு அவனுடைய நண்பனான அருண் அருகே சென்று “அருண் நீ ஹாஸ்டல் போ. அஞ்சலி என் கிட்ட ஏதோ பேசனுமாம். நான் கேண்டீன் போயிட்டு வரேன்”, என்றான்.
“மச்சி அஞ்சலியா உன்னை பேசக் கூப்பிட்டா? இது நல்ல சான்ஸ் டா. இன்னைக்கே அவ கிட்ட நான் அவளை விரும்புறதைப் பத்தி சொல்லிரு டா”, என்றான். ஏனென்றால் அருண் அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு அருண், இதுல எல்லாம் தூது போக கூடாது. அதுவும் நான் கட்டாயம் போக மாட்டேன். இப்பவே என் கூட வா. உன் மனசுல இருக்குறதை அவ கிட்ட சொல்லு. ஆனா என்னால முடியாது”, என்றான் கிரி.
“முடியாதுன்னு சொல்லிருவான்னு தெரிஞ்சிக்கிட்டு தான் அவளை லவ் பண்ணுறியா? சுத்தம். சரி நீ ஹாஸ்டல் போ. நான் அவ கிட்ட என்னன்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவளுடன் சென்றான் கிரி.
கேண்டீன் சென்றதும் இருவரும் டீ வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள். “இப்ப சொல்லு அஞ்சலி, என்ன விஷயம்?”, என்று கேட்டான் கிரி.
“நான் சொல்றதை வச்சு என்னை தப்பா நினைக்காத கிரி. பர்ஸ்ட் இயர்ல இருந்து நான் உன்னை விரும்புறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யு கிரி”, என்று சொன்னாள் அஞ்சலி.
அவள் சொன்னதைக் கேட்டு திகைத்து போனான் கிரி. சத்தியமாக அவள் இப்படி வந்து சொல்வாள் என்று அவன் எதிர்ப் பார்க்கவே இல்லை.