குளித்து தயாராகி அன்பரசு வெளியே வர, ஹாலில் படுத்து மொபைல் பார்த்துக்கொண்டிருந்த சரவணன் “கிளம்பனுமா அன்பு?” என வினவினான் அதிர்வாக.
“ஹம்… அப்பாகிட்ட காலைல சொல்லிடு”
“எப்படிபோவ?” என்றான் சரவணன்.
“கேப் புக் பண்ணிப்பேன்”
“வேணாம் நான் வரேன்” என்று சரவணன் பைக் சாவியை எடுத்தான். பின்னே இருவரும் வெளியேற, “உனக்கு தனியா கார் வாங்கலாமில்ல அன்பு? நான் இருக்கவும்தான் வரேன், இல்லைனா கஷ்டம்தானே?” என்றபடி பைக்கை கிளப்பினான்.
“வாங்கனும் சரவணா. கார் மட்டும் இல்ல, பி.எ கூட அப்பாய்ண்ட் பண்ணனும், கால்ஷீட் நியாபகம் வச்சிக்க முடியல. சில நேரம் கொடுத்த டேட்லயே திரும்ப டேட் கொடுத்துடறேன். இன்னைக்கும் அப்படித்தான் கிளம்பவேண்டியதாகிடுச்சு” என்றான் சலிப்பாக.
“நம்ம ஆதியை வச்சிக்கலாமே அன்பு”
“அவனும் என்கிட்ட எதாவது வேலை இருந்தா சொல்ல சொல்லியிருக்கான். எனக்குத்தான் அவனை சேர்த்துக்க விருப்பமில்ல. ஐ.எஃப்.எஸ் ஆகனும்ன்றது அவனோட ஆசை. டிகிரில நல்லா பர்சண்ட்டேஜ் வச்சிருக்கான்.
அவனோட இப்போதைய நிலை பார்த்து எதாவது ஓரிடத்துல சேர்த்துவிட்டா அதுவே வாழ்க்கையாகிடும். கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணினான்னா அவன் திறமைக்கான பதவி அவனை தேடி வரும். என்னோட சேர்ந்தான்னா அவன் திறமை காணாம போய்டும். அதனாலதான் அவனை கூப்பிட்டுக்கல”
“ம் நீ சொல்றதும் சரிதான்”
“சரவணா பைக்கை முல்லை வீட்டுக்கு விடு” என்றான்.
“இந்த நேரத்துக்கா? உனக்கு ட்ரைன் எத்தனை மணிக்கு?”
“ப்ச் ட்ரைன் மிஸ் ஆனா வேற எதாவது ஏற்பாடு செய்துக்கலாம், நீ முல்லை வீட்டுக்கு போ, இன்னைக்குத்தான் முதன் முதலா அவளை பிரிஞ்சிருக்காங்க, ஃபீல் பண்ணிட்டிருக்காங்களா? இல்ல தூங்கறாங்களா பார்த்துட்டு கிளம்பிடலாம்” என்றான்.
சரவணன் பைக் முல்லை வீட்டின் முன் நிற்க, கேட் திறக்கப்படவில்லை. “அண்ணா நான் அன்பு வந்திருக்கேன், திறங்க” என்று அன்பரசு சொல்ல, சத்தமேயில்லை.
“வாட்ச்மேன் இப்படி இருக்கமாட்டார் சரவணா, கேட் மேல ஏறு” என்று இருவரும் ஏறி உள்ளே குதித்து வீட்டின் முன் கதவை அடைய, அங்கே நிறைய காலனிகள் இருந்தது.
ஹாலிலும் லைட் எரிவதை வலது பக்க ஜன்னல் வெளிச்சம் சொல்ல, அழைப்பு மணி அடித்தான். பதிலில்லாமல் போக, “அன்பு வந்திருக்கேன் மாமா, கதவை திறங்க” என்று கதவை தட்டினான் வேகமாக.
“ம்… ம்…” என்ற முணகல் சத்தம் மட்டுமே வெளிவர, உள்ளே கை கால் கட்டப்பட்டிருந்த காவலாளி முகத்தில் ஒளி வீசியது.
உள்ளே நடப்பதை அறியாமல் போகமாட்டான் மருமகன் என்றுணர்ந்து ரங்கசாமி கதவை திறந்தார்.
உள்ளே சென்றதும் காவலாளி வாயிலிருந்த துணியை அவிழ்த்து விட, “எப்படி தம்பி தெரியும்? இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு” என சங்கடமான போதும் இவர்கள் வரவில் அவரின் முகம் பெரும் நிம்மதியை உணர்ந்தது.
அன்பரசையும் சரவணனையும் இந்த நேரத்தில் சுத்தமாய் எதிர்பார்க்காத நிதீசும், அவனின் பெற்றோர், மற்றும் நாராயணன் அவனின் மகன் அனைவரும் விழி பிதுங்கி உறைந்து போயினர்.
“இந்த நேரத்துல என்ன விசயமா வந்திங்க மாப்பிள்ளை?” என ஜானகி பதட்டமாய் விசாரிக்க, சில பத்திரங்கள் டேபிள் மேல் இருந்தது.
ரங்கசாமியின் முகம் வேதனையின் உச்சத்தில் இருக்க, “சரவணா” என வாயிலை காண்பித்தவன், “நாங்க வந்தது இருக்கட்டும் அத்தை, இங்க என்ன நடக்குது?” என்றான்.
அன்பரசுக்கும் முல்லைக்கும் இன்று முதலிரவு, அன்பரசு வீட்டில் மற்றவரும் திருமணம் முடிந்த களைப்பில் அயர்வாய் உறங்கிடுவார்கள். இன்றைக்கு விட்டால் ரங்கசாமியை தனியே சந்திப்பது சாத்யமில்லாமல் போய்விடும்
ஒருவேளை என்றாவது சாத்தியம் இருந்தாலும் அன்பரசு முல்லை தலையீட்டால் தமக்கு சொத்து கிடைக்கவிடாமல் செய்திடுவார்கள், என அக்காள் தம்பி குடும்பம் திட்டம் போட்டு வந்திருந்தனர்.
ஆனால் அன்பரசு வரவால் அனைத்தும் தவிடுபொடி ஆனது மட்டுமல்லாமல், உருப்படியாக வீடு போய் சேர்வோமா என்ற பதட்டம் அப்பிக்கொண்டது சொத்து கேட்டு வந்தவர்களுக்கு.
ஜானகி அமைதியாக இருக்கவே, “சொல்லுங்க மாமா, இங்க என்ன நடக்குது?” என்றான் சற்று குரலுயர்த்தி.
“அது… கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடாததால கோபத்துல உறவை அத்து விட வந்தோம்” என வனிதா தைரியத்தை வரவழைத்து உரிமை பிணக்கு போல் சொன்னார்.
“இந்த நேரத்துக்கா? அதுக்கு எதுக்கு பத்திரம்? வாட்ச்மேனை எதுக்கு கட்டி வச்சிங்க?” என முறைக்க, அன்பரசின் கோபத்தில் வியர்த்த வனிதா, “அது அவர் உங்களுக்கு போன் செய்வாருனுதான் கட்டிவச்சோம், இப்போ கிளம்பும்போது அவுத்து விட்டுடுவோம்” என்றார் இறங்கிய குரலில்.
ரங்கசாமி அமைதியில் அன்பரசுக்கு கோபம் அதிகமாக “ப்ச்” என சலித்தவன், நிதீஷை பார்க்க, நிதீஷ் ஓடிடலாமா என்பதாய் வாயிலை பார்த்தான். அங்கே சரவணன், வாடா வா என்பதாய் கால்களை அகட்டி வைத்து சர்ட்டை மடித்துவிட்டான் வெறிகொண்ட பார்வையோடு.
ஜானகியிடம் “வாட்ச்மேன் நிலைமை நாளைக்கு மாமாக்கும் உங்களுக்கும் வரலாம். என்ன நடந்ததுனு உண்மையை சொல்லுங்கத்த” என்றான் மிரட்டலாக.
“பூர்வீக சொத்தை எழுதி வாங்க வந்திருக்காங்க தம்பி, கையெழுத்து போட மிரட்டினாங்க” என்றார் காவலாளி.
“என்ன? மிரட்டுனாங்களா?” என நொடிப்பொழுதில் நிதீஷை கொத்தாய் பிடிக்க, வெடவெடத்து போன வனிதா, “அவன் ஏதும் பேசல, நான்தான் என் தம்பிகிட்ட கேட்டேன், என் மகனை விட்டுடு” என்றார் மன்றாடலாக.
ரங்கசாமி பேச்சுக்கு மதிப்பளித்து நிதீஷை உள்ளடக்கிய கோபத்தோடு விட்டான். “நம்ம தம்பிகிட்ட மறைச்சா அது அவரை அசிங்கப்படுத்துறதா ஆகும்ய்யா” என்று ரங்கசாமியிடம் தன்மையாகவே சொல்லி,
“என் தம்பியோட பேசும்போது இடையில வர உனக்கென்ன உரிமையிருக்கு? நீயே ஒத்த பிள்ளையா பிறந்து வளர்ந்தவ, பத்து வருஷம் முன்ன உன் அப்பாம்மா போனதும் உன் மகளோட சேர்த்து நீயும்தான் அநாதைதானு அம்மாவையும் பேசினாங்க” என்று காவலாளி சொன்னதுதான் நிதீஷை தூக்கி எறிய, அவன் நல்லநேரம் சோபாவில் விழுந்தான்.
பொம்மை போல நிதீஷை தூக்கியெறிந்ததால் “அன்பு” என அருகே வந்த சரவணன் அண்ணனை கட்டுப்படுத்தி, “இவனை அடிச்சு என்னாகப்போகுது? உன் இரண்டடிக்கு தாங்குவானா இவன்? செத்துகித்து போய்டப்போறான்” என்றான்.
“ம் நீ சொல்றதும் சரிதான். இவனைலாம் என் கையால கொன்னா செத்த பாம்பை ச்சீ ச்சீ பாம்பில்ல, செத்த புழுவை கொன்ன மாதிரி, அதுக்கு வேற என் நேரத்தை ஒதுக்கி இவனுக்காக கோர்ட் கேஸ்னு அலையனும்.
அதனால, எல்லாரும் சேர்ந்து சொத்துக்காக என் மாமா அத்தையை கொல்ல வந்தாங்கனு கம்ப்ளைன் கொடுத்துடலாம்” என்று சரவணன் நினைத்ததையே அன்பரசும் சொல்லி மொபைலை எடுக்க, பீதி கிளம்பியது வனிதா மற்றும் நாராயணனுக்கு.
“கேஸ்லாம் கொடுக்க வேணாம் மாப்பிள்ளை” என்று ரங்கசாமி கெஞ்சுதலாய் சொல்ல, என்ன மனிதர் இவர் என்று கோபம்தான் வந்தது அன்பரசுக்கு.
நிதீஷை காண்பித்து, “இதோ இவனை என் மகனாத்தான் நினைச்சேன், என்னைக்கு முல்லை மேல அவன் பார்வை மாறுனுச்சோ அன்னைக்கே மொத்தமா வெறுத்துட்டேன்.
இவங்களைப் பத்தி தெரிஞ்சும் என் இயலாமையை நினைச்சுத்தான் வீட்டுக்குள்ள அனுமதிச்சேன். வயசாகிடுச்சே… என்னால இவங்கிட்ட மல்லுகட்ட முடியாது, மகளை ஏதும் செய்துட்டா என்ன பண்றதுனு பயந்து” என்றதும் கண்ணீர் பெருக்கெடுத்தது ரங்கசாமிக்கு.
“நான் செத்த பின்ன கண்டிப்பா இவங்களால மகளுக்கு பிரச்சனை வரும்னு, பூர்வீக சொத்தை பிரிக்கும்போது எனக்கான பங்கு என் வாரிசு முல்லைக்குனு உயில் எழுதி உயிலை ரிஜிஸ்த்ரேசனும் பண்ணிட்டேன்.
நான் இல்லாத காலத்துக்கு உன்னை தொல்லை செய்யலனா அவங்களுக்கு எழுதி கொடுத்துடுடா, உனக்கு நம்ம அப்பார்மண்ட், காம்ப்ளக்ஸ், வீடு போதும்னேன். என் மகளும் சம்மதிச்சா.
பத்து வருசம் மார்ல போட்டு வளர்த்தவன் என்னையே மிரட்ட வருவான்னும், என் பொண்டாட்டியை இப்படி பேசுவாங்கனும் நான் நினைச்சே பார்க்கல அன்பு” என்றார் வேதனையோடு.
அன்பரசு முகம் கோபத்தில் இறுக, வனிதாவிடம் “எழுந்து போய்டுங்க, இல்ல உன் மகனை உயிரோட பார்க்க முடியாது” என்றார் ஜானகி.
அன்பரசு “என்ன அவசரம் அத்தை? மிட்நைட்ல என் மாமனார் மாமியாரை தொல்லை பண்ற அளவுக்கு தைரியம் வந்துருக்கு. பாராட்டி சீராட்டி அனுப்பலாம்” என்றான் அதீத கோபத்தோடு.
அன்பரசு கோபத்தில் விபரீதம் நடந்திடுமோ என்று ரங்கசாமிக்குமே பயம்தான் ஆதலால் நிலைமையை சமாளிக்க நினைத்து “முல்லையை நீங்க கேட்டு வரும் முன்னவே வீட்டை சுத்தி கேமரா வச்சிருந்தேன் அன்பு. இப்போ இவங்க வந்தது, என்னை பேசினதுனு எல்லாமே பதிவாகியிருக்கும். எனக்கு எதாவதுனா இவங்க தப்பிக்கவே முடியாதளவுக்கு எவிடன்ஸ் போலீஸ்கிட்ட சிக்கிடும்” என்றார் ரங்கசாமி.
உயில் முல்லை பேரில் எழுதியிருப்பதையும், வீட்டை சுற்றி கேமரா இருப்பதையும் எதிர்பார்க்காத வனிதா “ரங்கசாமி” என பேரதிர்வோடு பார்த்தார்.
“எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற வாட்ச்மேன் மேல கை வச்சதே என்மேல வச்சமாதிரிதான். என் உயிரைவிட நீங்க எனக்கு முக்கியமில்ல, அப்படி நினைக்கிற அளவுக்கு யாரும் நடந்துக்கவும் இல்ல. உங்களால எனக்கே என் பொண்டாட்டிக்கோ எதாவது ஆனா கொலை கேஸ்ல உள்ள போய்டுவிங்க” என எச்சரித்து “என் மருமகன் கோபத்துக்கு ஆளாகாம முதல்ல எல்லாரும் கிளம்புங்க” என்றார் ரங்கசாமி.
இவர்களை தண்டிப்பதில் ரங்கசாமிக்கு விருப்பமில்லை என்பதால் போய் தொலையட்டும் என அமைதியாய் இருந்தான் அன்பரசு.
“எங்களுக்கு சொத்து வேணாம், போலீஸ் அது இதுனு போய்டாத ரங்கசாமி” என வனிதா ரங்கசாமியிடம் மன்றாட, “அது இனி நீங்க நடந்துக்கிறதை பொருத்து” என்றான் அன்பரசு.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவரும் சென்ற பின்னே, “எதுக்கு மாமா அவங்களுக்கு இவ்வளோ பார்க்குறிங்க? உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுனா நாங்க இத்தனை பேர் இருந்து என்ன லாபம்?” என்றான் கோபமாக.
“என்னால அவங்களை பழிவாங்க முடியலயே அன்பு. இப்பத்தான் இத்தனை விரோம், குரோதம். எனக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சதுலயிருந்து முல்லை வரும் வரைக்கும் இவங்களையெல்லாம் உசுரத்தான நினைச்சிருந்தேன்” என்றார் தாளமுடியாத வேதனையோடு.
“ஆனா இனியொருமுறை இப்படி நடந்த்துனா உங்களுக்காக கூட பார்க்கமாட்டேன்” என்றான் தீராத கோபத்தோடு.
ரங்கசாமி அமைதியாக இருக்க, “அவங்க்கிட்ட சொன்ன மாதிரி கேமரா வச்சிருக்கிங்களா?” என்றான்.
“முல்லைக்கு வெளில மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சதுமே வச்சிட்டேன் அன்பு. என் குடியை கெடுக்க சிரமப்பட்டாவது மெனக்கெடுவாங்கனு நான் பயந்தது சரியா போச்சு”
முல்லையை வேணாம் என்று நாம் சொன்னபின்னே மிகவும் பயந்திருக்கிறார். யார் என விசாரிக்காமலே தந்தையிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை நினைத்து வருந்தியவன்,
“சரவணா என்னை விட்டுட்டு வந்து இங்கையே படுத்துக்க” என்று வெளியேற எத்தனிக்க, படபிடிப்பிற்கு செல்கிறான் என்றறியாமல் “மாப்பிள்ளை, இந்த நேரத்துல இங்க வந்துருக்கிங்க, நாங்க தனியா இருப்போம்னு பயந்து முல்லை உங்களை படுத்திட்டாளா? எதாவது தவறா நடந்துகிட்டாளா?” என்று ஜானகி பரிதவித்தார்.
“என் பொண்டாட்டி அப்படி நடந்துக்கமாட்டா அத்தை, தகுதியில்லாதவங்களுக்கு மன்னிப்பு கொடுத்து நீங்கதான் அவளை கஷ்டப்படுத்தப் போறிங்க. இந்த விசயம் அவளுக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிங்க” என்றான் கோபத்தோடு.
“ட்ரைன் எத்தனை மணிக்கு அன்பு?” என்று சரவணன் நினைவூட்ட, நேரம் பார்த்து “இன்னும் அரைமணி நேரம் இருக்கு” என்றவன், “ஊருக்கு போகும் வரை இங்க வந்து படுத்துக்கோ சரவணா, இரண்டொரு நாள்ல ஆதிகிட்ட பேசி இவங்க பாதுகாப்புக்கு வேற ஏற்பாடு பண்ணிடறேன்” என்றான்.
“சரி அன்பு, இங்க நாங்க பார்த்துக்கிறோம், நீ டென்ஷன் ஆகாத” என்று சரவணன் சொல்ல, சரியென தம்பியிடம் தலையசைத்து “தைரியமா இருங்க, எதுனாலும் கால் பண்ணுங்க” என்று ரங்கசாமி ஜானகியை தேற்றி கிளம்பினான் அன்பரசு.
*** *** *** *** *** ***
அனைவரும் உண்டு உறங்கச் சென்றதும் மாடிக்கு சென்ற சத்யன், நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் அறைக்கு வந்தான். “நீ பட்டினி கிடக்குற அளவுக்கு நான் என்ன தப்புடா பண்ணினேன்?” என வெம்பினாள் சுகந்தி.
“ப்ச் இன்னும் தூங்கலயா நீ?” என்றவன், வழக்கமாய் அவன் படுக்கும் இடத்தில் படுத்து கண்மூடினான்.
“என்ன உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?” என சத்யனை நெருங்கி வர, “என் பக்கத்துல வராத, நான் நிதானத்துல இல்ல, குடிச்சிருக்கேன்” என்றான்.
“என்ன?” என அதிர்வானவள் சத்யனருகே சென்று வாசம் பிடிக்க, “ப்ச் போடீ” என சுகந்தி கையை பிடித்து தள்ளிவிடாத குறையாக கட்டிலில் சுகந்தி படுக்கும் இடத்தின் அருகே நிறுத்தினான்.
“என்னடா புது பழக்கம்?” என சுகந்தி கோபத்தோடு அதட்ட, “புது பழக்கமில்ல, அவ போனதுக்கப்புறம் என் மனசு அவளை தேடும்போதெல்லாம் குடிப்பேன். ஆனா நாலு வருசம் வருசம் முன்ன என் பொண்ணு பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் சுத்தமா நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் இன்னைக்கு குடிச்சிருக்கேன்” என்றான்.
இன்று அன்புக்கு முதலிரவு என்பதால், சத்யனுக்கும் அவனின் மனைவியோடு சந்தோசமாக வாழ்ந்தது நினைவு வந்திருக்குமோ? அவளை மறக்க குடித்திருப்பானோ என கட்டிலில் அமர்ந்து “எதுக்கு குடிச்ச?” என பொறுமையாக கேட்டு சத்யனை தன் புறம் திருப்பினாள்.
“என் பொண்டாட்டி அவ புருசனோட படுத்ததை நினைச்சிட்டிருக்கா. வெட்டி போடுற கோபம் வருது. ஆனா என்னால அப்படி முடியலயே. என்ன பண்ண? அதான் குடிச்சேன்” என்றான் அதீத கோபத்தோடு.