“சந்தேகம்லாம் இல்ல, நீ அவனை நினைக்கிறனு உறுதியா சொல்றேன்.” என்று அழுத்தமாய் சொல்லி, “உன்னை எப்பவும் எனக்கு பிடிக்கும்” என்று சுகந்தி கழுத்தில் உறவாடி மஞ்சள் கயிற்றை காட்டி, “என் பொண்ணுக்காக உன்னை கல்யாணம் செய்துக்கிட்டாலும், இதை கட்டும்போது உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சுதான் கட்டினேன்.
ஆனாலும் உன்னோட உறவு வச்சிக்கனும்னு நினைச்சிலாம் கட்டல. உன் உணர்வுக்கு மரியாதை கொடுத்து விலகியிருந்தேன். இன்னும் எவ்வளோ வருசமானாலும் உன்னை தொடாம என்னால வாழ முடியும். அதுக்காக… நீ அவனை நினைச்சிட்டிருக்கறதை சகிச்சிட்டிருப்பேனு நினைச்சியா?”
உண்மையாய் அப்படி நினைத்ததாய் நியாபகமே இல்லை சுகந்திக்கு, ஆனாலும் சத்யன் கோபத்தில் வாதாட முடியாமல் போக, “நிஜமா இல்லடா” என சுகந்தி கண்ணீர் விட, “ஸ்ஸ்…” என அவளின் வாய் மேல் விரல் வைத்து அதட்டி,
“நீ அவனை நினைச்சதை நான் பார்த்த அடுத்த நிமிஷமே ரூம்க்கு உன்னை இழுத்துட்டு வந்து தாம்பத்தியம் அப்படியில்லனு நிரூபிக்க என் மனசும் உடம்பும் பாடாபடுது. அதை அடக்கத்தான் குடிச்சேன். உன்னாலதான் குடிச்சேன். அழுகையை நிறுத்திட்டு பேசாம படுத்துடு, இல்ல நான் மனுஷனா இருக்கமாட்டேன்” என்று கடுங்கோபத்தோடு உண்மையுரைத்து கண்மூடினான் சத்யன்.
பேச்சு வரவில்லை சுகந்திக்கு. சிலையாய் அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் கழித்து சத்யனை பார்க்க, அவனுக்கும் ஆழ்ந்த உறக்கமில்லை என்று புரிய, சத்யனோடு நெருங்கிப்படுத்து, “உன் மனசும் உடம்பும் என்ன சொல்லுதோ அதை செய்டா. எதையும் அடக்காத” என்றாள் கோரிக்கையாக.
சத்யனிடம் பதிலில்லாமல் போக, போதை மயக்கத்தில் நான் சொன்னது கேட்கல போல, நாளைக்கு பேசிக்கலாம் என்று அவனின் கையை எடுத்து தனது தலைமீது வைத்து உறங்க முற்பட்டாள்.
*** *** *** ***
காலை ஆறு மணிக்கு எழுந்தவன் சுகந்தியை பார்க்க ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குளித்து வெளியே வர, கிச்சனில் யாரும் இல்லாமல் போகவே, சத்யனே டீ வைத்துக்கொண்டிருந்தான்.
வாசலில் கோலமிட்டு வந்த கல்பனா, சுகந்தியாய் இருக்குமென நினைத்து கிச்சன் வர, சத்யனை கண்டதும் “சுகந்தி எழலையா? நகரு சத்யா நான் போடுறேன்” என்றார்.
“என்ன சத்யா கண்ணு இப்படி சிவந்திருக்கு? உடம்பேது சரியில்லையா?” என தொட்டுப்பார்த்தார் கல்பனா.
“அதெல்லாம் ஒன்னுமில்லத்த, நைட் ரொம்ப நேரம் லேப்டாப் பார்த்துட்டிருந்தேன், கொஞ்சம் தலைவலி” என்றான் மிகுந்த தலைவலியோடு.
தைலம் எடுத்து வந்து தோல் சூடாகும் வரை தேய்ச்சு விட, சோபாவில் சாய்ந்து கண்மூடினான் ஆயாசமாக.
சுகந்தி எழுந்தால் முல்லையைப் பற்றி அறிவாள் என மகளை எதிர்பார்த்திருப்பதால் “உன்னை கவனிக்காம என்ன தூக்கம் அவளுக்கு?” என்றார்.
எப்படியும் இரவு சீக்கிரம் தூங்கியிருக்கமாட்டாள் என, “என்னை கவனிச்சதாலதான்த்த தூங்குறா, என் தூக்கம் கெடுதேனு, நான் படுத்தாதான் படுப்பேனு அவளும் இரண்டு மணிவரை வீம்புக்கு முழிச்சிட்டிருந்தா” என்றான்.
“கோவிலுக்கு போகனும் சத்யா, போய்ட்டு வந்து தூங்கிக்கட்டும்” என்று அறையருகே சென்று “சுகந்தி எழுந்துக்கோ” என்று சத்தம் கொடுத்து, சரவணனையும் எழுப்பி கிச்சன் செல்லும் நேரம் முல்லை வெளியே வந்தாள்.
“வா முல்லை அன்பு எழுந்துட்டானா?”
“அவர் பனெண்டு மணிபோல கிளம்பிட்டார்ம்மா”
“என்ன கிளம்பிட்டானா? இவனை என்னதான் பண்றது? கோவிலுக்கு போகனும்னு அன்புக்கு தெரியுமே, எப்படி போனான்?” என புலம்பியபடி மாதவன் அறைக்கும் சென்று அன்பு கிளம்பிய விசயத்தை சொல்லி, “என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று கிச்சன் சென்றார்.
பிறகு “முல்லை உனக்கு டீயா காபியா? பாலா?” என்று குரல் கொடுக்க, கிச்சன் சென்ற முல்லை, “நீங்க போடப்போறிங்களாம்மா?” என்றாள்.
“இங்க வேலைக்காரங்கலாம் இல்லை, வீட்டு வேலையும் இல்லைனா எனக்கு பொழுதே போகாது, சங்கடப்படாம என்ன வேணும்னு சொல்லு” என்றார்.
“டீ” என்றவள், “மாமாக்கு உடம்பு சரியில்லையாம்மா? டல்லா படுத்துருக்க மாதிரி இருக்கே” என்றாள்.
“நைட் ரொம்ப நேரம் வேலை பார்த்திருக்கான், தலைவலி வந்துருச்சு” என கடிந்தபடி முல்லையை ஆராய, ஏதும் விசேஷமாய் தெரியவில்லை கல்பனாவிற்கு.
‘எழுந்திரிக்கிறாளா இவ’ என மகளை மனதில் கடிந்தபடி டீ வைத்து முல்லைக்கு கொடுத்து, மீதத்தை ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்து, சத்யனிடம் வந்தார்.
மாதவன் அறையிலிருந்து “பெரியம்மா” என்று ஜனனி வழக்கம்போல் குரல் கொடுக்க, வெகு சிரமத்திற்கு பிறகு கண்விழித்தாள் சுகந்தி.
மீண்டும் ஜனனி குரல் கொடுக்கவே, எழுந்து முகம் கழுவி ஜனனியிடம் வந்தாள். “நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னா வேணாம்ன்றாக்கா, நீங்க சொல்லுங்க” என்றாள் முல்லை.
“போகப்போக பழகிடுவா முல்லை” என்றவள், “வா” என படுக்கையிலிருந்து எழ கை கொடுக்க, ஜனனி எழவும், “அம்மாகிட்டயும் பழகிக்கனும்” என்று கண்டித்து குளியலறை சென்று பிரஸ்ஸில் பேஸ்ட் வைத்து கொடுத்து, “தண்ணில விளையாடாம பிரஸ் பண்ணிட்டு கூப்பிடு” என்று வெளியே வந்தாள்.
மாதவன் சரவணனை பார்க்க, “முன்னாடியே தெரியாதுப்பா, ஆனா நைட் நான்தான் போய் ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்தேன்” என்றான்.
“அப்போவே என்னை எழுப்பி சொல்லியிருக்கலாமில்ல சரவணா, இன்னைக்கொருநாள் இருந்துட்டு போக சொல்லியிருப்பேனே, குல தெய்வ கோவிலுக்கு போகனும்டா” என்றார் ஆற்றாமையோடு.
“அவன் சூழ்நிலை அப்படிப்பா, நாம போலாம்” என்றான் சரவணன்.
“கல்யாணம் முடிச்சு மருமகளை முதல்முதலா அழைச்சிட்டு போறோம், அவன் இல்லாம எப்படி போறது?” என்றான் கோபமாக.
“நாம போலாம் மாமா, அவர் வந்த பின்ன திரும்ப ஒருமுறை போலாம்” என்று சமாதானம் சொன்னாள் முல்லை.
“உனக்கு வருத்தமா இல்லையாம்மா?”
“இல்ல மாமா, அவரும் வருத்தத்தோடதான் கிளம்பினார். முன்னாடியே டேட் கொடுத்துட்டு மறந்துட்டார், கமிட் ஆன ஒர்க்கை முடிச்சிதானே ஆகனும். நாமளும் புரிஞ்சிக்கலனா இன்னும் வருத்தப்படுவார்” என்றாள் பொறுப்பாக.
மருமகளின் புரிதலில் மனம் நிறைந்த மாதவன் “அவன் இல்லாம கறி விருந்து வைக்க எனக்கு மனசு வராதும்மா. அவன் வந்த பின்னயே போய்க்கலாம்” என்றார் தன்மையாக.
முல்லை முகம் லேசாய் வாட, “கோவிலை பார்க்கனுமா அண்ணிம்மா?” என்றான் சரவணன்.
ஆமாம் என்பதாய் முல்லை தலையசைக்க, “இன்னைக்கு போய்ட்டு சர்கரை பொங்கல் வச்சு பூஜை பண்ணிடலாம்ப்பா, அன்பு வந்த பின்ன ஆடு வெட்டிக்கலாம்” என்றான்.
“அப்படியே பண்ணிக்கலாமா சத்யா?” என்று பெரிய மகனிடம் வினவ, “பண்ணிக்கலாம்ப்பா, ஆனா நீங்க எல்லாரும் போய்ட்டு வரிங்களா? எனக்கு டையர்டா இருக்கு” என்றான்.
“டையர்டா இருந்தா நாளைக்கு போய்க்கலாம் மாமா” என்றாள் சுகந்தி.
சுகந்தியை முறைக்க, “மருமகளை ஏண்டா முறைக்கிற? அவன்தான் கிளம்பிட்டான்னா நீயும் இப்படி சொன்னா என்ன அர்த்தம்? நம்ம கோவிலை பார்க்க மருமக ஆசைப்படுதில்ல? ஒரு மணி நேரத்துல வந்திடலாம் கிளம்பு” என்றார் மாதவன்.
“அம்மா டிபன் செய்துட்டியா?” என்றாள்.
“பாப்பா ஸ்கூலுக்கு லேட்டாகிடும்னு அவளுக்கு மட்டும் செய்தேன், நமக்கு சித்த நேரத்துல செய்துடறேன்”
“சுகந்திக்கா இன்னும் குளிக்கல போல, நீங்க போய் குளிங்கக்கா, பாப்பாக்கு நான் ஊட்டறேன்” என்க, சரியென தலையசைத்து குளிக்கப்போனாள் சுகந்தி.
ரங்கசாமி ஜானகிக்கும் அழைப்பு விடுக்கலாம் என்று மாதவன் சொல்ல, அவர்கள் வந்தால் முல்லைக்கு உண்மையை சொல்லிவிடுவார்கள், அண்ணியோட நல்ல மூட் ஸ்பாயில் ஆகிடும் என்று “ரொம்ப டையர்டா இருப்பாங்கப்பா, நாம போய் வரலாம், இன்னொரு நாளைக்கு அழைச்சிக்கலாம்” என்றான் சரவணன்.
“ஆமாம் மாமா, இரண்டு மூனு நாளாவே இரண்டு பேரும் சரியா தூங்கவேயில்ல, காலைல போன் செய்தேன், இரண்டு பேருமே எடுக்கல, வாட்ச்மேன் அண்ணாக்கு கால் பண்ணினா தூங்கிட்டிருக்காங்கனு சொன்னாங்க. நாம போய் வரலாம், அப்பாம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று முல்லையும் சொல்ல, பிறகு ஜனனியை பள்ளிக்கு அனுப்பி அனைவரும் கோவில் சென்று வந்தனர்.
மாதவன் இன்ஸ்டியூட்டிற்கு கிளம்ப, பின்னோடு போன சரவணன், இரவு முல்லை வீட்டில் நடந்த்தை விளக்கி, “விடியகாலம்தான் வீட்டுக்கு வந்தேன்ப்பா, நைட் நடந்தது அண்ணிக்கு தெரிய வேணாம், ஊருக்கு போகும்வரை அங்கதான் தூங்க போறேன்” என்று தகவல் கொடுக்க, பதறிப்போனார் மாதவன்.
முல்லை தனது தாய் தந்தையை காண கல்பனாவிடம் கேட்டுக்கொண்டிருப்பது காதில் விழவே, “வாம்மா இரண்டு பேரும் போய்ட்டு வரலாம்” என்று முல்லையை அழைத்துக்கொண்டு சம்மந்தி வீட்டிற்கு கிளம்பினார் மாதவன்.
சத்யன் அவனறைக்கு செல்ல, சுகந்தியும் உள்ளே வந்தாள். “ப்ச்” என்று சத்யன் படுத்து கண்மூடிட, “இரண்டு ஸ்பூன் சர்கரை பொங்கல் எப்படிடா பத்தும்? வந்து கொஞ்சமா சாப்பிட்டு படு” என்றாள் அக்கறையாக.
“சத்யமா நான் அவனை நினைக்கலடா, நீ அப்படி நினைக்குறதை என்னால சகிக்க முடியல, என்னைப்பத்தி எனக்கே புரியாத விசயம் உனக்கு தெரியும்னா என்னை கொன்னுடு. இப்படி நினைச்சிட்டு உன்னை நீயே வருத்திக்காதடா” என்றாள் வேதனையோடு.