“நானும் உன்னோட இருக்கேன்டா” என சத்யன் சொல்ல, “ட்ராவல் டையர்ட்ல இருப்ப. நீ போ சத்யா, நான் பார்த்துக்கிறேன்” என்று அனைவரையும் அனுப்பி வைத்து, கறி வெட்டுபவர்களை அழைத்து அனைத்து வேலைகளையும் முடித்து தந்தையோடு கிளம்பினான் அன்பரசு.
இவர்கள் வர ஒரு மணிநேரம் ஆகியிருக்க, அதற்குள் சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர் பெண்கள் கூட்டம். தக்காளி நறுக்கிக்கொண்டிருந்த முல்லை, பெரிய பாத்திரங்களில் கணவன் கொண்டுவந்த கறியைப் பார்த்ததும் உள்ளே சென்றுவிட்டாள்.
“அன்பு முல்லைக்கு என்ன வேணும்னு கேளு, தனியா செய்துடறேன்” என்று சுகந்தி சொல்ல, “அவளுக்கு மாமா எடுத்துட்டு வரேனு சொன்னார் அண்ணிம்மா” என்றான்.
“அவருக்கு எதுக்கு சிரமம்? கறி வாசம் அவருக்கும் ஒத்து வராதுதானே? போன் செய்து வேணாம்னு சொல்லிடு, நான் இங்கயே செய்துடறேன்” என்க, சாப்பாடோடு ரங்கசாமி வந்தார்.
“வாங்க மாமா” என சத்யனும் அன்பரசும் வரவேற்க, “நீங்க எப்போ தம்பி வந்திங்க?” என ரங்கசாமியும் நலம் விசாரித்தார்.
“காலைல மாமா, இனி இங்கதான்” என்றவன் தனது கம்பெனி விசயத்தை சொன்னான்.
முல்லைக்குத்தான் பழக கொஞ்ச நாள் ஆகும்” என்று மகளுக்கான மதிய உணவை கொடுத்து சற்று நேரம் பேசியிருந்து, “நாளைக்கு மறுவீட்டு அழைப்புக்கு வரட்டுங்களா?” என்றார் மாதவனிடம்.
மாதவன் சம்மதம் தெரிவிக்க, “நீயும் மகள் மாதிரிதான்ம்மா, இரண்டு பேரும் வரனும்” என்று சத்யன் சுகந்திக்கும் அழைப்பு விடுத்து கிளம்பினார் ரங்கசாமி.
இப்படி தருணத்தில் சரவணன் இல்லாதது பெரும் குறையாக இருக்க, “இனி சரவணனுக்கு பார்க்கனும் அன்பு. அவன்கிட்ட சொல்லி வை. காலாகாலத்துல கல்யாணம் செய்தாதான் பழசை மறக்க முயற்சிப்பான்” என்றார் மாதவன்.
“இன்னும் ஒரு வருசம்தான் உனக்கு டைம்னு போன வாரமே சொல்லிட்டேன்ப்பா. அக்ரிமண்ட் முடிய இன்னும் இரண்டு வருசம் இருக்காம். அதுக்கப்புறம் கண்டிப்பா கல்யாணம் செய்துக்கிறேனு சொன்னான், அக்ரிமண்ட்டுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மதம் இருக்கு? கல்யாணம் அடுத்த வருசம் செய்தாகனும்னு சொல்லியிருக்கேன்ப்பா” என்றான் அன்பரசு.
தான் யோசிப்பதற்கு முன்பாகவே அன்பரசு சொல்லியிருக்கிறான். ஒரு வருடம் கழித்து சரவணன் சம்மதிக்கவில்லை என்றாலும் அன்பரசு பேசி ஒப்புகொள்ள வைப்பான் என்ற நம்பிக்கையோடு “சரிப்பா” என்றார் மாதவன்.
“சமையல் முடிச்சிட்டு எழுப்புங்க” என்று சத்யன் உறங்க சென்றான். டிபன் சாப்பிடு அது இதுனு என்னை படுத்தக்கூடாது. எனக்கு தூக்கம்தான் முக்கியம் என்று கோவிலில் இருந்து வரும்போதே சொல்லியிருந்தான் சத்யன்.
எனவே சமையலை விரைந்து முடிக்க ஆயத்தமானாள் சுகந்தி. சுகந்திக்கு உதவியாக அனுவும் கல்பனாவும் சேர்ந்துகொள்ள, குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அன்பரசு ஏற்றிருந்தான்.
இரண்டு மணிநேரத்தில் சமையல் முடிந்திட, மனைவியை காண அறைக்குச் சென்றான் அன்பரசு. “நான் இங்கையே சாப்பிட்டுக்கவா?” என தந்தை கெண்டு வந்த உணவை காண்பித்து கேட்க, “ம் சாப்பிடு, நானும் சாப்பிடப்போறேன்” என்று வெளியேறினான்.
அனைவரும் உண்டு முடித்த பின்னே சற்று நேரம் பேசியிருந்து, நாளை முல்லை வீட்டில் விருந்து முடித்து நாளை மறுநாள் தன் வீட்டிற்கு வரும்படி முல்லை அன்பரசுக்கு அழைப்பு விடுத்து, “கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தது. நம்ம வீட்டுக்கு வந்து மூனு மாசம் பக்கம் ஆகிடுச்சு” என சுகந்தியை முறைத்தான் பொய்யாக.
“இங்க பாப்பாவை பார்த்துக்கவே சரியா இருக்கு சேகர்” என சுகந்தி பாவமாய் பார்க்க, “இரண்டு பேரும் நாளை மறுநாள் சாக்கு போக்கு சொல்லாம விருந்துக்கு வந்து சேருங்க” என்று சத்யனிடம் கட்டளையாய் சொல்லி கிளம்பினான்.
முல்லை தனதறை விட்டு வெளிவரவே இல்லை. காலையிலிருந்து வேலை என்பதால் சுகந்தியும் ஓய்விற்காக அறைக்கு சென்றிருந்தாள்.
சுகந்தி அருகில் இல்லாததால் “ம்… அண்ணிம்மா பார்த்து பார்த்து பரிமாறுது” என அன்பரசு சத்யனிடம் கிசுகிசுக்க, “அப்படியா பண்ணினா? எனக்கென்னவோ எப்போவும் போலத்தான் பரிமாறுன மாதிரி இருந்தது” என்று அறியாதவன்போல் சிரித்தான் சத்யன்.
சுகந்திக்கும் சத்யனுக்கும் ஒத்துப்போனதில் மனம் நிறைந்த அன்பரசு முகம் மகிழ்வில் ஜொலித்தது. “இந்த எரும என்னை இப்படி ஆட்டி வைப்பானு நினைக்கவேயில்ல அன்பு, எனக்கு ஆறுதல் கொடுத்த குவைத்தையே மொத்தமா தலைமுழுகிட்டேன்னா பாரேன்” என பெருமையோடு கிசுகிசுத்தான் சத்யன்.
“எட்டு வருசமாகியும் பழைய வேதனையான வாழ்க்கையை மறக்க முடியாம தவிச்சிட்டிருந்த என் அத்தை பொண்ணை என் அண்ணனை தவிர வேற யாரால வாழ வைக்க முடியும்?” என்றான் பெருமையோடு.
“ஹம்… நீ என்னவோ இப்படி சொல்ற. ஆனா சுகந்தியை தவிர வேற யாரையாவது சொல்லியிருந்தா கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதென்ன? கண்டிப்பா யோசிச்சிருக்க கூட மாட்டேன். சின்ன வயசுலயிருந்தே சுகந்தியை ரொம்ப பிடிக்கும். ஆனா கல்யாணம் செய்யலாம் யோசிச்சது இல்ல.
நீ சொல்லித்தான் கல்யாணம் செய்ய நினைச்சேன்னாலும், தாலி கட்டும்போது பிடிச்சுதான் கட்டினேன். ஆனா அவளை பிரிஞ்சு இருக்க முடியாதளவுக்கு பிடிக்கும்னு எனக்கே இப்போதான் தெரியுது. சுகந்தியாலதான் எனக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்கு” என்றான் மனைவி மீதான காதலோடு.
“கல்யாணம் செய்துக்கோடானு சொன்னதுக்கு இந்த சரவணன் என்ன சொன்னான் தெரியுமா?” என அன்பரசு சிரிப்போடு கேட்க, “சொன்னாத்தானடா தெரியும்?” என்றான் சத்யன்.
“சத்யன் கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேனு எப்படி சபதம் செய்தனோ… அதேமாதிரி இரண்டு அண்ணிம்மாவும் அம்மாவாகாம அவன் கல்யாணம் செய்துக்கமாட்டேனு சபதம் எடுத்திருக்கிறானாம்” என்றான் சிரிப்போடு.
“அப்படியா சொன்னான்?” என பலமாய் சிரித்தான் சத்யன். வெகு நாள்களுக்கு பிறகு அண்ணனும் தம்பியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் இதமான மனநிலையோடு.
*** *** *** *** *** *** ***
சென்ற முறை வந்தபோது இரண்டு வாரம் இருந்தவன் சுகந்தியை அணைத்துப் படுத்து பழக்கியிருக்க, கடந்த பத்து நாள்களாய் சத்யன் அணைப்பிற்காக ஏங்கியது உண்மைதான்.
ஆனாலும் இன்று அறைக்குள் செல்ல அத்தனை தயக்கமாக இருக்க, கிச்சனை சுத்தம் செய்துகொண்டிருந்தாள் பொறுமையாக. ஜனனிக்கு பால் எடுக்க வந்த கல்பனா, “மதியம் ரொம்ப சாப்பிட்டுட்டேனு சத்யன் வெறும் ரசம்தான் சாப்பிட்டான். சத்யனுக்கு பால் எடுத்துட்டு போ சுகந்தி” என்றார்.
“வேணாம்மா” என்றாள் அவசரமாக.
“உனக்கு சொல்லல, சத்யனுக்கு சொன்னேன்” என கல்பனாவே பாலை டம்ளரில் ஊற்றி, “இன்னைக்கு இருந்த வேலைக்கு எதுக்கு எல்லாத்தையும் துடைச்சிட்டிருக்க? நாளைக்கு பார்த்தா ஆகாதா?” என கடிந்து “சத்யன் தூங்கிடப்போறான், போய் கொடு” என்று மகளின் கையில் திணித்தார் கல்பனா.
சத்யனும் கொஞ்சம்தான் உண்டான் ஆகையால் பாலோடு உள்ளே வந்தாள் சுகந்தி. கட்டிலில் அமர்ந்திருந்தவன் ஒருபக்கமாக தலைசாய்த்து சிரித்தபடி வரவேற்றான் மனைவியை.
“ம்… குடிச்சா நல்லாயிருக்கும்னுதான் தோணுது” என வாங்கியவன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அருந்த, இவளுக்கு படுப்பதா? நிற்பதா எனப்புரியவில்லை. ச்சு… நீ என்ன சின்ன பிள்ளையா? இப்படி தயங்கிட்டிருக்க? என தன்னைத்தானே கடிந்து, வழக்கம்போல் புடவை களைந்து சுடிதார் மாற்ற கபோர்டை திறந்தாள்.
எழுந்து வந்து அணைத்து, “இன்னைக்கு சுடிதார் மாத்த வேணாம்” என கிசுகிசுத்து அள்ளிக்கொண்டவன் கட்டிலில் விட்டு விளக்கணைத்து நெருங்கிப்படுத்து புடவைக்குள் கைவிட்டு வெற்றிடை பிடித்து தன்புறம் திருப்பினான் மனைவியை.
சுகந்தியின் பார்வை தாழ்ந்திருக்க, “இனி நான் இங்கையே இருக்கப்போறேனு தெரிஞ்சிடுச்சுல்ல? சாமிகிட்ட நான் சொன்னதை வேண்டுனியா?” என்றான் மைய்யலாக.
சத்யனின் இப்படி பேச்சுகள் சுகந்திக்கு இன்ப அவஸ்த்தையாகிட, இன்னும் முகம் தாழ்த்தினாள். “பார்த்து பெட்ல புதைஞ்சிடாத” என சிரிப்போடு தாடை தொட்டு நிமிர்த்தி, “எத்தனை முறை கெஞ்சறேன், சின்ன முத்தம் கொடுக்க மனசு வருதாடீ உனக்கு” என கடிந்தபடி முத்தமிட, உடலெல்லாம் சிலிர்த்து சிவந்தது சுகந்திக்கு.
முதல் கணவன் தொடும்போதெல்லாம் வலியையும், அருவருப்பையும் உணர்ந்தாளே அன்றி, இப்படி உணர்வை அனுபவித்ததேயில்லை.
முத்தமிட்டபடி சேலையை அகற்றிய சத்யன் அடுத்தகட்டத்திற்கு முன்னேற, உடல் விறைப்பான போதும் மனம் சத்யனுக்கு ஒத்துழை என்று கட்டளையிட, மனம் சொன்ன பாதையில் செல்ல முயற்சித்தாள் சுகந்தி.
விலகாமல் தன்னோடு ஒன்றியதில் மகிழ்ந்தவன், சுகந்தியை மகிழ்விக்கும் பணியில் இறங்கினான். சேலை அகற்றிய சுகந்தியின் மேனியை ஆதிக்கம் செய்திருந்த ஆடை மீதுதான் முத்தமிட்டான். ஆனால் முத்தமிட்ட இடம் சுகந்தியை சொக்க வைத்தது.
முற்றிலும் ஆடை துறக்காத கூடல். இத்தனை வருடம் சுகந்தி அருவருப்பாய் நினைத்திருந்த நிகழ்வனைத்தையும் மாற்றி, தாம்பத்யம் அற்புதமான நிகழ்வென்பதை உணர வைத்திருந்தான் ஒற்றை கூடலில்.