அவனுக்கும் அதுவே சரியாகப் பட்டது அப்பொழுதே தன்னுடைய முதல் மனைவி ஸ்வேதாவிற்கு அழைத்தான்.
நாளைத் திருமணம் இப்பொழுது “அண்ணா…” என்று வந்து நின்ற கீர்த்தியை பார்த்தவன் “என்ன கல்யாணப்பொண்ணு மண்டபத்துக்குக் கிளம்ப வேண்டாமா” என்று அவள் அருகில் வர அண்ணனை அப்படியே அணைத்துக்கொண்டாள்.
“என்னடா…” என்று அவள் தலை கோதியவன் “இங்கேயிருந்து போறத நினச்சு கவலைப்படுறியா கீர்த்தி” என்க அவளிடம் பதிலில்லை அழுதுகொண்டிருந்தாள், அனைத்து பெண்பிள்ளைகளும் இப்படியொரு நாளைக் கடந்து தானே போக வேண்டும்.
“இங்க பாரு உனக்குன்னு ஒரு குடும்பம் அப்புறம் கொஞ்சநாள்ல கொழந்தை அப்படினு எல்லாமே மாறிடும் அப்புறம் கேட்டா, அவர்க்கு லீவு இல்லண்ணா பிள்ளைக்கு ஸ்கூல் போகணும்னா அப்படினு கதை சொல்லுவ” என்றவனை முறைத்து பார்த்தாள்.
“எனக்குக் குடும்பம் வந்துடும் உங்களுக்கு?…” என்றவளை பார்த்தவன் “எனக்கு என்ன அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே” என்றான்.
“ஏண்ணா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்ரீங்க” என்றவளை சில நொடிகள் பார்த்துநின்றவன் “நேரமாச்சு கீர்த்தி வாப்போலாம்” என்று அழைத்துச் சென்றுவிட்டான்.
வரவேற்பு நடந்துகொண்டிருக்க அவன் விழிகள் நொடிக்கொருமுறை வாயிலைத் தொட்டு மீண்டது, அவளைக் காணவில்லை கீர்த்தனாவின் தோழிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தனர்.
“திலோத்தமா இன்னும் வரலையே ஏன்”.
“அவ அங்கேயே அப்படி தான் பெருசா யாரோடவும் ஓட்டமாட்டா இப்போ எங்க இருக்கானே தெரியல” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
சேனாவைப்போலவே அவன் குடும்பத்தார் திலோவை எதிர்பார்த்து காத்திருந்தனர், கீர்த்திக்கு மட்டுமே இந்த விவரங்கள் சொல்லப்படவில்லை, காலை முகுர்த்த நேரம் நெருங்கியும் அவளைக் காணவில்லை மிகவும் இறுகிப்போனான் சேனா, வெளியில் எதையும் காண்பித்துக்கொல்லாமல் முழுமூச்சாகத் தங்கையின் கல்யாணத்தை நடத்திக்கொண்டிருந்தான்.
அவர்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்குத் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க பட்டிருந்தது, பூபதி பாண்டியன் செல்வாக்கான மனிதர் ஆயிற்றே, மகன் அதிலிருந்து எல்லாம் ஒதுங்கி மருத்துவம் பார்க்கச் சென்றுவிட்டார் பேரன் தாத்தாவின் வழியைப் பின்பற்றுபவன் எம்.எல்.எ வை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர்.
அவரின் கைத்தடிகள் ஒரு பத்து பதினைந்தது பேர் உள்ளே நுழைந்ததில் அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஒருவளாக உள்ளே நுழைந்த திலோத்தமாவை அவன் கவனிக்கவில்லை, பின்னில் காலியாகக் கிடந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
கூட்டம் அலைமோதியது இவர்களின் சொந்தமே மண்டபம் நிறைந்து இருந்தது அதோடு கட்சியின் ஆட்கள் நண்பர்கள் என்று திருவிழா கூட்டம் இருந்தது மண்டபம், முக்கிய பிரமுகர் வந்தவுடனே தாலிகட்டியாயிற்று கெட்டிமேள சத்தம் மட்டும் கேட்க இங்கிருந்து ஒன்றும் தெரியவில்லை.
அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடையில் நின்றிருந்தவர்கள் கொஞ்சமே தெரிந்தனர், அவன் மட்டுமே நன்றாகத் தெரிந்தான் எப்பொழுதும் பேண்ட் ஷர்ட் அணிந்தே பார்த்திருக்கிறாள் இன்று வெட்டிச் சட்டை ஒலிவ் கிரீன் புல் ஹேண்ட் ஷர்டை முழங்கை வரை மடித்துவிட்டு தாத்தாவிடம் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
தன் உடையைக் குனிந்து பார்த்துக்கொண்டாள் ஒரு மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள், அவன் கொடுத்த புடவையைக் கட்டவில்லை இருவருக்கும் ஒரே போல இருக்க வேண்டும் என்று எடுத்திருக்கிறான் என்று புரிந்தது அதை உடுத்திவராத தன் மடத்தனத்தை நொந்துகொண்டாள்.
அவன் விழிகள் மீண்டும் மண்டபத்தின் வாயிலைத் தொட்டு மீண்டது, சிலநொடிகளில் மண்டபத்தை முழுதாகப் பார்வையால் அலசினான் அவனுக்கு வேலைகள் இருந்துகொண்டே இருக்க அதிகம் கவனம் வைக்க முடியவில்லை மீண்டும் பூபதி பாண்டியனிடம் கவனம் சென்றது.
‘வந்ததது சரியா தவறா’ என்ற கேள்வி அவள் மனதை குடடைந்துகொண்டே இருந்ததது போக வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள் ஆனால் ஏனோ முடியவில்லை வராமலே போய்விட்டாள் அவனுடனான இந்தத் தாமரை இலை நீர் பந்தம் கூட இல்லாமலே போய்டுவிடுமோ என்று அஞ்சியது மனது.
அப்படியென்றால் அவனுடன் வாழ முடிவு செய்துவிட்டாளா என்றால் தெரியவில்லை தனக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியாத நிலை.
வரும்வரை இருந்த தயக்கமும் பதட்டமும் இப்பொழுது இல்லை, விழிகள் அவனை விட்டு நீங்க மறுத்து நின்றுவிட அவளும் அதற்க்கு முயலவில்லை.
எம். எல்.எ வை வழியனுப்பி வைத்தவன் அலைபேசியில் பேசிக்கொண்டே வலப்பக்கம் இருந்த வாயில் வழி உள்நுழைந்தான், அவள் கவனம் இப்பொழுது கீர்த்தனாவின் மீது இருந்ததது, உள்ளே நுழைந்தவன் விழிகள் மீண்டும் ஒருமுறை மண்டபத்தைச் சுற்றிவர பார்த்துவிட்டான்.
அப்பா… ஒருநொடி சகலமும் மறந்துவிட்டது இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து உடலில் புது ரத்தம் பாய்ந்ததைப் போல அதற்குமேல் பேசமுடியவில்லை பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தவன் “உப்ப்…” என்று காற்றை வேகமாக ஊதி தன்னை நிலைப்படுத்தி அப்படியே திரும்பி நின்றுவிட்டான்.
‘வந்துவிட்டாள் கோபமோ வெறுப்போ இந்த நொடி இங்கு நிற்கிறாள் இது தனக்காக மட்டுமே அதுபோதும்’ இதுவரை இருந்த சோர்வெல்லாம் பறந்துவிட்டது வந்தவழியே வெளியேறியவன் அங்கிருந்தே கதிரை அழைத்தான்.
“என்னண்ணா” என்று வந்தவனிடம் அவளைக் கண்காணிப்பித்து “இலக்கியாகிட்ட பாத்துக்க சொல்லு” என்றுவிட்டு மேடைக்குச் செல்ல, கதிர் தன் மனைவி இலக்கியாவை கையேடு அழைத்துக்கொண்டு திலோவின் முன் வந்து நின்றான்.
அவனைக் கண்டவள் சங்கடமாக எழுந்து நின்றாள் என்ன பேச என்று தெரியாமல்.
“வாம்மா எப்படி இருக்க” என்றவனிடம் “ஹ்ம்ம் நல்லா இருக்கேண்ணா” என்றாள் மெல்ல.
“இலக்கியா இதுதான் திலோத்தமா, இது என் மனைவி இலக்கியா” என்று அறிமுகம் செய்துவைக்க அவன் மனைவி புரிந்துகொண்டாள் கணவன்மூலம் எத்தனை முறை இந்தப் பேரைக் கேட்டிருக்கிறாள்.
“ஹாய் ஏன் இங்க தனியா இருக்கீங்க வாங்க நம்ம சொந்தமெல்லாம் அங்க இருக்கு” என்று திலோவை கையேடு இழுத்துச்சென்றாள்.
“ஏதே!… நம்ம சொந்தமா” என்றிவள் திருதிரு என்று விழித்துக்கொண்டு அவளுடன் நடந்தாள்.
கதிரின் மூலம் வெண்மதிக்கும் அவர்மூலம் மற்றவருக்கும் திலோவின் வரவு சரியாகச் சென்று சேர்ந்தது.
“ஏண்டி யாரு இது?” என்று உறவில் ஒருவர் கேட்க “என் வீட்டுக்காருக்கு தங்கச்சி” என்றாள் இலக்கியா.
“அதுயாருடி எனக்குத் தெரியாம”.
“இவங்க வெளியூர்ல இருக்காங்க சித்தி, உங்களுக்குத் தெரியாது நம்ம கீர்த்திகூட ஒண்ணா படிச்சுச்சு அப்போதான் கண்டுபிடிச்சோம்” என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள் திலோ ‘கண்டுக்காத’ என்று அவளிடம் கண் காண்பித்த இலக்கியா சில நொடிகளில் திலோவின் மனநிலையை மாற்றிவிட்டாள்.
ஏதோ ஒரு குறுகுறுப்பில் மெல்ல விழிகள் உயர்த்தி மேலே பார்த்தவள் அப்பொழுதுதான் அவனைக் கண்டாள் கதிருடன் நின்றிருந்தவன் விழிகள் அவளில் மட்டுமே.
கீர்த்தியின் நண்பிகள் அனைவரும் மேடையேறிப் புகைப்படம் எடுத்துக்கொண்டு பரிசும் கொடுத்துமுடிக்க அவர்களை உடனே சாப்பாட்டிற்கு அனுப்பி விட்டான் கதிர், வெண்மதி திலோவை எப்பொழுது மேடைக்கு அழைக்க என்று நொடிக்கொருமுறை கதிரைப் பார்த்தார் கொஞ்சம் ஆட்கள் குறைந்ததும் கதிர் மனைவிக்குக் கண் காண்பிக்க “வாங்க திலோ போட்டோ எடுத்துக்கலாம்” என்று அவளின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள் இலக்கியா.
“ஐயோ மேலேயா!” என்று பதறியவள் “இல்ல கீர்த்தியை தனியா பார்த்து நான் குடுத்துடுறேன் போட்டோலாம் வேண்டாம்” என்க வெண்மதி வந்துவிட்டார்.
“திலோ என்னம்மா இப்போதான் வந்தியா உன் பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிட போய்ட்டாங்க வா வா” என்று விடாமல் அவளை அழைத்துசென்றுவிட்டார்.
அவளைப் பார்த்த கீர்த்தி ஆச்சர்யமாக விழிவிரித்தாள் “திலோ எங்கேயிருந்த நீ, எப்படி வந்த யார் சொன்னா?” என்று கேள்விகளால் அவளைத் துளைக்க இடையில் புகுந்த கதிர் “கீர்த்திமா நான் தான் சொன்னேன், அதான் வந்துருச்சுல்ல கேள்வியெல்லாம் அப்புறம் கேக்கலாம் எல்லாரும் வெய்ட் பன்றாங்க போட்டோ எடு சாப்பிட போலாம்” என்க அவளும் கணவனுக்கு அவளை ஆறுமுகம் படுத்திவிட்டு போட்டோவுக்கு நின்றாள்.
அந்தப்பக்கம் வெண்மதியும் முத்துப்பாண்டியும் நிற்க இந்தப்பக்கம் திலோ நின்றாள் எதேச்சையாக வருவதைப் போல அவளின் அருகில் நின்றுகொண்டான் சேனாபதி, அழகான குடும்ப புகைப்படமாக அமைந்துவிட்டது அது.
“ஒகே” என்ற புகைப்படக்காரரின் சம்மதத்தில் வேகமாக நகரத்தொடங்கியவளை மீண்டும் பிடித்துக்கொண்டாள் இலக்கியா “பந்தி ஒரே கூட்டமா இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட வருவாங்க அப்போ நாமளும் போலாம்” என்க.
“ஐயோ! இல்ல எனக்கு வீட்டுக்குப் போகணும் நான் கிளம்புறேன்” என்றவளை தள்ளிக்கொண்டே அறைக்கு வந்த இலக்கியா அங்கு அவளின் குழந்தையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தாயை சாப்பிட செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டு “வாங்க உக்காருங்க என் புள்ளத்தான் இவ்ளோநேரம் ஆட்டம் கொஞ்சமா சாப்பிட்டு தூங்கிட்டான்” என்று கீழே அமர்ந்துகொண்டாள்.
“சாப்பிடலனா பரவாயில்ல நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்றாள் திலோ மீண்டும்.
“சரி வாங்க உங்க பிரெண்ட்ஸ் கூடச் சாப்பிடுங்க” என்றவளை பரிதாபமாகப் பார்த்தவள் “இல்ல மெதுவாவே சாப்பிடுறேன்” என்று அவளுடன் அமர்ந்துகொண்டாள்.
ஒருமணிநேரம் கழிந்து வந்த இலக்கியாவின் தாய் “மாப்ள கூப்பிடுறார் பொண்ணு மாப்ள சாப்பிட போயாச்சு நீங்களும் போங்க நான் இருக்கேன்” என்று குழந்தையின் அருகில் படுத்துக்கொண்டார், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து எப்படி சாப்பிட என்ற தடுமாற்றத்தோடு வந்தாள் திலோ.
அவனை எப்படி எதிர்கொள்ள என்று ஒருவிதமான பதற்றத்துடனே சென்றாள், அவள் வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட அவளுடன் பேசவும் இல்லை பேசமுயலவும் இல்லை அவன், இவள் சென்றபோது தங்கைக்கும் அவள் கணவனுக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருந்தான் சேனாபதி.
“சும்மா கேட்டேன் வா வா ரொம்ப பசிக்குது” என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று அமர்ந்தான், அவர்களைக் கவனித்தாலும் அந்தப் பக்கமே போகாமல் தங்கையுடன் அமர்ந்துகொண்டான் சேனா.
அவனுடன் அமர்ந்துகொள்ள வேண்டும் அந்தக் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏங்கியது மனது, உணவே இறங்கவில்லை திலோவிற்கு அழுகையாக வந்தது.
ஒன்றும் தெரிந்துகொள்ளவும் வேண்டாம் சண்டையிடவும் வேண்டாம் அவன் மட்டும் போதும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் இந்த ஒரு வாரத்தில், கோபத்தில் தனியாகச் சென்று தங்கிவிட்டு தினம் தினம் அவனை நினைத்து அழுது கரைந்தாளே.
“ஏன் என்கிட்டே பேசமாட்டற” என்று அவன் சட்டையைப் பிடிக்கத் தோன்றியது, உன்னைப் பிடிக்கவில்லை நீ தொடுவது பிடிக்கவில்லை என்று அவள் கூறிய எதுவுமே அவளுக்கு நினைவில்லை அந்த நேர கோபத்தில் இயலாமையில் ஏதேதோ பேசிவிட்டாள் இப்பொழுது அவனின் பாராமுகம் வலித்தது.
கீர்த்தியின் புகுந்த வீடு அதாவது அவளின் அத்தை சென்னையில் வசிக்கிறார், இன்று உடனே அங்குச் சென்று விளக்கேற்றுவது முடியாது அதோடு இவர்களின் குடும்ப வீடு நத்தம் பக்கத்தில் ஒருமணி தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ளது.
அங்கே இப்பொழுதும் இவர்களுக்குக் குடும்ப வீடும் கொஞ்சம் இடமும் உண்டு ஆகையால் அங்கேயே சென்று விளக்கேற்றிச் சாந்தி முகுர்த்தமும் அங்கேயே என்று முடிவு செய்திருந்தனர், வெண்மதி திருமணம் முடிந்து அந்த வீட்டில்தான் வாழ்க்கையை தொடங்கினார்.
பெண்ணை அழைத்துக்கொண்டு அனைவரும் அங்கே சென்றுவிட கீர்த்தியின் வீட்டினர் மாலை செல்வதாக முடிவு செய்திருந்தனர், சீர் பொருட்கள் எல்லாம் அங்கே சென்னையில் முன்பே கீர்த்தியின் விருப்பத்திற்கு ஏற்ப முன்பதிவு செய்து பணம் கட்டிவிட்டனர் அப்படியே அவளின் வீட்டிற்கு சென்றுவிடும்.
இங்கே சடங்குக்காகக் கொஞ்சம் வெள்ளிப்பொருட்கள் மட்டும் வெண்மதி வைத்திருந்தார் அதை மாலை சென்று கொடுத்துவிட்டு மகளுடன் இருந்துவிட்டு வருவது என்று முடிவு, அதோடு அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே.
தாத்தா அப்பாவுடன் அம்மாவையும் வீட்டிற்கு அனுப்பியவன் மண்டபத்தில் நின்றுகொண்டான் வேலை இருக்கிறதே, கதிர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச்சென்றான் வெண்மதியும் இலக்கியாவும் திலோவை விடாமல் பிடித்துக்கொண்டனர் “வீட்ல கொண்டுபோய் விடுறோம் இப்போவே போய் என்ன செய்யப் போற வா” என்று கையேடு அழைத்துசென்றுவிட்டார்.
ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டே இருந்தார் வெண்மதி, பொருட்களை எடுத்துவைத்தார் அவளையும் தன்னுடன் வேளையில் இணைத்துக்கொண்டார் நேரம் கடந்துகொண்டிருக்க சேனாபதி இன்னும் வீடு வந்து சேரவில்லை.
“திலோ போய் முகம் கழுகிட்டுவா” என்று அவளை அனுப்பிவைத்தார் வெண்மதி, கீழே இருந்தா அறையில் ரெப்பிரேஷ் செய்துகொண்டவள் அறையிலிருந்து வெளியில் வரத் தாயிடம் ஏதோ பேசிக்கொண்டே கிச்சனிலிருந்து வெளியில் வந்தான் சேனா.
“சரிய்யா நீ போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நாங்க இப்போ கெளம்பிடுவோம் ராத்திரி சாப்பாட்டுக்கு நீயும் கதிரும் வந்துடுங்க” என்றவர் “வாடா” என்று திலோத்தமாவை அழைத்துக்கொண்டு தோட்டத்துப்பக்கம் செல்ல, முன்னில் நடந்தவள் பார்வை அவனைத் தழுகியது ஒரு நொடி நின்று பார்த்தவன் வேகமாகப் படிகள் ஏறி மேலே சென்றான்.
பின்னலிட்டு பூச்சூடி அழகு பார்த்தார் வெண்மதி இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை சரியாகிவிட வேண்டும் என்று மனதில் வேண்டுதல் வைத்துக்கொண்டார்.
“திலோ கிளம்பலாமா” என்று வந்தான் கதிர்.
“ஹ்ம்ம்” என்றவள் விழிகள் மீண்டும் உயர்ந்து படியைப் பார்த்தது, இல்லை அவன் வரவில்லை நிறையும் விழிகளை அவர்களுக்குக் காட்டாமல் தலையைக் குனிந்துகொண்டாள் என்றாலும் வெண்மதிக்கும் காத்திருக்கும் புரிந்தது.
வாசல்வரை வந்து அவளை வழியனுப்பிய வெண்மதி “பத்திரமா போயிட்டு சீக்கிரமா இந்த வீட்டுக்குத் திரும்பி வந்துடுடா” என்றார், அவள் இருந்த மனநிலையில் அவரின் பேச்சைச் சரியாகக் கவணிக்கவில்லை கதிருடன் அவள் பயணம் மீண்டும் தொடங்கியது.
மிக மிக மெதுவாக வண்டியை உருட்டிக்கொண்டிருந்தான் கதிர், வெளியே பார்வை பதித்து அமர்ந்திருந்தவள் சிந்தனைகள் இங்கே இல்லை, அவன் யாரையோ எதிர்ப்பார்த்துச் செல்வதை போல மிக நிதானமாகச் சென்றான், ஒருகட்டத்தில் அவன் எதிர்பார்த்த நபரின் புல்லட்டை கண்டதும் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
ஜீப்பை வழிமறித்து பாய்ந்து வந்து முன்னில் நின்றது சேனாவின் புல்லெட் ‘வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்ட கதிர் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு “என்னண்ணா இப்படி அவசரமா வரீங்க போன் போட்டிருக்கலாம்ல” என்றான்.
அவனை முறைத்துப்பார்த்தவன் “நடிக்காதடா” என்றான், திலோவிற்குத்தான் அதிர்ச்சியில் விழிகள் விரிந்துகொண்டது காண்பது கனவா என்று இமைகளைச் சிமிட்டி மீண்டும் பார்த்தாள் இல்லை அவனேதான்.
கதிரின் கையில் சாவியை கொடுத்தவன் “நீ” என்க.
“நான் யார் கண்ணுலயும் படக் கூடாது, நீங்க எங்கன்னு கேட்டா ஏதோ அவசர வேலையா ஆந்திரா வரைக்கும் போயிருக்கீங்கன்னு சொல்லணும் சரியா” என்றதும் சேனாவிற்கு சிரிப்புவந்தது.
“கிளம்புடா” என்றவன் ஜீப்பில் ஏறி அமர்ந்தான், அவள் விழிகள் அவனை விட்டு எங்கும் நீங்கவில்லை விழிநீரும் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது, அவளை திரும்பியும் பார்க்கவில்லை சிலநொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவன் வண்டியை எடுத்தான்.
அவனிடம் பேசிவிட விம்மியது நெஞ்சம் ஒருவார்த்தை கூட வெளிவரவில்லை அழுகையை அடக்க முயன்று முடியாமல் தேம்பிக்கொண்டே இருந்தாள் திலோத்தமா ஒருகட்டத்தில் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டான்.
“என்னடி பண்ணனும் நான்…” என்றவனின் இடதுகை மெல்ல உயர்ந்தது அவள் கன்னத்தை வருட, அந்த நொடி மீண்டும் அவள் வார்த்தைகள் செவிகளில் முழங்க அப்படியே கையை கீழிறக்கினான்.
அந்த கரத்தை சட்டென்று பிடித்துக்கொண்டவள் அதை தன் கன்னத்தில் வைத்து அழுத்தினாள் “எனக்கு நீங்க வேணும்” என்றவளை அப்படியே இழுத்து அனைத்தவன் அவள் உச்சசியில் இதழ் பதித்தான்.