கடம்பன் குன்று
பகுதி – 5
ஆக்ரோஷமாக தன் முன் நின்ற புலியாரிடம் பேசிப் புரியவைக்க இயலாது என்பது விகர்ணனுக்குப் புரிந்தது. இத்தனை வருட பழக்கத்தின் காரணமாக, இருவருக்கும் இடையில் உண்டாகியிருந்த புரிதல் வற்றிப் போய்விட்டதாகவே உணர்ந்தான் விகர்ணன்.
புலியார் நின்றிருந்த தோரணையில் சிறிதும் மாற்றம் இருக்கவில்லை. பலம் வாய்ந்த முன்னங்கால்களிலோ, ஒரு குதறரில் குரல்வளையில் இருந்து உயிரை உரிஞ்சிவிடும் தன்மை வாய்ந்த கோரைப் பற்களிலோ சிக்கிக் கொண்டால் உயிர் மிஞ்சாது என்பதும் விகர்ணனுக்குப் புரிந்திருந்தது.
“என் மனம் என்ன நினைக்கிறது என்று நன்றாக உணர்ந்திருக்கும் நீங்களே என்னுடன் சண்டையிடுகிறீர்களே? இது நியாயமா?” என கடைசி கடைசியாக ஒரு முறை மன்றாடியும் பார்த்தாகிவிட்டது.
“சிலையினை பத்திரமாக காக்கும் படிக்கு எனக்கு என் எஜமானர் புலிப்பாணியாரால் கட்டளை இடப்பட்டிருக்கிறது. சிலையை கீழே வைத்து விட்டு சென்று விடு. உன் உயிரைக் குடிக்காமல் விட்டுவிடுகிறேன் விகர்ணா! இது என் கடைசி எச்சரிக்கை” என்று சீரிய புலியாரிடம் என்ன வாதம் புரிந்தாலும் வெற்றி கிடைக்காது என்று புரிந்த விகர்ணன்,
மெல்ல அரை வட்டமாக நகர்ந்தான். அவன் முகத்தை விட்டுத் தன் கண்களை இம்மி அசைக்காத புலியார், விகர்ணன் கால் அசைவுக்கு ஏற்ப அதே அரை வட்டமடித்து எதிரில் நின்றது
புலியாரின் திறம் பற்றி நன்கு அறிந்திருந்த விகர்ணன்,அடுத்து என்ன செய்வது என்று நொடிப் பொழுதில் கணக்கிட்டான். அவன் மனம் முழுக்கவே, அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றி மட்டுமே சிந்தனை செய்தது. தப்பி ஓட ஏதேணும் வழிவகை சென்படுகிறதா என யோசித்தவண்ணம், மெல்ல வட்டமாக சுற்றி வந்தான்.
“இங்கிருந்து தென்மேற்கில் இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சியினை நோக்கி நகரலாம். செங்குத்தான வழுக்கும் பாறைகள் நிரம்பிய பகுதி அது என்பதால், புலியார் என்னைப் பின் தொடர்வது சுலபமாக இருக்காது. அங்கிருந்து அருவி வழியாகச் செல்லும் ஒற்றைப் பாதையின் வழியாக மேலேறி, மலைமுகட்டில் இருந்து மறுபக்கம் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பிவிட ஒரு வாய்ப்பு இருக்கிறது.” என்று கணக்கிட்ட விகர்ணன், ஒரு நொடிப் பாய்ச்சலில், பின் வாங்கி, புலியாரிடமிருந்து தப்பித்து ஓடே எத்தனித்தான்.
அவன் மனதில் ஓடிய எண்ணங்களை உணர்ந்தது போல், புலியாரும் இருளில் கண்மண் தெரியாமல் ஓட்டமெடுக்கும் விகர்ணனைத் தொடர்ந்து காட்டினுள் ஓடியது.
சில நொடிகள் கண்களுக்குத் தென்பட்ட விகர்ணன், பள்ளம் மேடு என சடுதியில் கடந்து ஓடினான்.
காலடியில் சருகுகள் மிதிபடும் ஓசை மட்டுமே எழுந்தது. அவ்வப்போது சப்தமிடும் ஆந்தை, கோட்டான் போன்ற இரவு பட்சிகளின் கூக்குரல் கூட எழவில்லை. புலியார் பின் தொடர்கிறாரா என்று திரும்பிப் பார்க்கும் அளவு நேர அவகாசத்தை விகர்ணன் எடுத்துக் கொள்ளவில்லை.
இத்துனை வருடங்களாக காடுமேடுகளில் சுற்றித் திரிந்ததன் காரணமாக, கால்கள் தாமாகவே பாறைகள் மீது தாவவும், ஒடிந்து கிடக்கும் மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு குதிக்கவும் கற்றிருந்தன.
அடர்ந்த மரக்கிளைகள் நிரம்பியிருந்த பகுதிகளில் அங்கங்கே விழும் சந்திர ஒளியின் துணையுடன் வெள்ளி நீர் விழ்ச்சியிருக்கும் திசையினை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் அவ்வப்போது சலசலத்துச் சென்ற நதியின் ஓசை மட்டுமே அந்த நிசப்தத்தில் அவனுக்குத் துணை நின்றது.
அந்தகாரம் சூழ்ந்திருந்த காட்டில், திசையை மட்டுமே கருத்தில் கொண்டு, உயிரைப் பணையம் வைத்து ஓட்டமெடுத்திருந்தான்.
எத்தனை தூரம் ஓடியிருப்பான் என்று விகர்ணனுக்கு நினைவில்லை. புலியார் எட்ட முடியாது தூரம் சென்று விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருக்க, பின்னால் காலடிகள் கேட்கின்றனவா என்று காதுகளைக் கூர்மையாக தீட்டியபடிக்கே ஓடினான்.
மழை லேசாக தூரலிட ஆரம்பித்திருக்க, காட்டினுள் இன்னமும் மழை வலுபெற்றிருக்குமோ என்ற அச்சம் மேலோங்கியது அவனுக்கு. அதே நேரம், மழையில் நனைந்த பாறையில் நிற்பதே சிரமாக இருக்கும் போது, எங்கணம் ஓட என்று ஐயம் ஏற்பட, விகர்ணன் சற்றே நிதானித்தான்.
“பின்னால் நிசப்தமாக இருக்கிறதே! புலியார் துரத்துவதை கைவிட்டு விட்டாரோ?” என்ற ஐயம் பெரிதும் ஏற்பட, விகர்ணன் தன் ஓட்டத்தை சற்றே நிறுத்தி பின்னால் ஏற்படும் அரவங்களை கவனிக்கலானான். தென்பட்ட வளைவு நெழிவெல்லாம் சுற்றி ஓடியிருந்த காரணத்தினால், புலியாரை தொலைத்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கை எழுந்த பின்பே தன் ஓட்டத்தைக் கைவிட்டு மெல்ல நடக்கலானான்.
அவனுக்கு இருபதடி தூரத்தில் வெள்ளி நீர்வீழ்ச்சி துவங்கும் ஓசை கேட்டதும் சற்றே அவன் மனம் பரவசமடைந்தது.
“ஆஹா, தப்புவிட்டோம் போலிருக்கிறதே! செங்குத்தான பாறைகளின் மீது ஏறுவது புலியாருக்குச் சிரமமாக இருந்திருக்கக் கூடும். அதிலும் மழை பொழியும் இச்சமயத்தில் வழுக்கும் பாறைகளில் நடப்பதே மிகவும் கஷ்டமான காரியம் அல்லவா?” என்று நினைத்த விகர்ணன், காலடியில் சுளியுடன் ஓடிய ஆற்று நீரில் இறங்கி, ஓடி வந்த களைப்பு தீர தண்ணீர் குடித்தான்.
சில்லென்ற ஆற்று நீர் நாவில் பட்டதும் அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது. அதிலும், முதுகில் அதுகாறும் சுமந்து வந்திருந்த ஸ்ரீசண்முகர் சிலையிலிருந்து வெளிபட்ட வெப்பம், அவன் முதுகில் லேசான சிவப்பை தோற்றுவித்திருந்தன.
“சிலை முழுவதுமாக குளிர்ந்து போக இன்னமும் இரு தினங்கள் மண்ணில் இருக்க வேண்டுமென்று சித்தர்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தனரே. முழுவதுமாக வெப்பம் தணியாததால் சிலை மேலும் மேலும் சூடாகின்றதோ” என்று ஐயம் கொண்ட விகர்ணன், சிலை மூட்டையினைக் கழற்றி அருகே தென்பட்ட பாறையின் மீது வைத்தான்.
குனிந்து நீரில் முகம் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவனின் கண்கள் தன்னிட்சையாக சிலையின் மீது விழுந்தது.
ஆற்று நீரில் பட்டு, ஸ்ரீசண்முகரின் சரீரத்தில் துல்லியமாக பரவிய வெள்ளி நிலவொளியில், ஸ்ரீசண்முகரின் முகம் ஜொலிஜொலித்தது. மெல்லிய நீல நிற ஒளியில், சந்திர கடாக்ஷம் பெற்று மிளிர்ந்த சிலையைக் கண்டதும் விகர்ணனின் மனதில் பேரன்பு சொரிந்தது.
சில நொடிகள் கணிமைக்காமல் சிலையை முழவதுமாக தன் மனதில் நிரப்பிக் கொண்ட விகர்ணன், கைகளை தலை மீது கூப்பி மனமாற வணங்கினான். என்ன வேண்டுவது என்று கூட அவன் மனதில் உதிக்கவில்லை.
“சண்முகா! ஐயனே! எத்தனை அழகாக உள்ளீர்கள். என்றுமே இந்த அழகுத் திருமேனியைக் காணக்கிடைக்கும் படிக்கான பாக்கியத்தை எனக்கு அருளவேண்டும் முருகா! முருகா சரணம்” என்று விகர்ணனின் வாய் முணுமுணுக்க, கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்தது.
சில நிமிடங்கள் கண்மூடி நின்றவன், அருவி துவங்கும் இடத்தில் வளர்ந்திருந்த அடர்த்தியான மரங்களில் இருந்து தண்ணீரில் விழுந்திருந்த கடம்ப மலர்களைக் கண்டான். ஆற்றில் மிதந்து வந்த மலர்களைக் கையில் அள்ளி சிலையின் மீது வைத்தான்.
பூக்களை வைக்கும் தருணம், சிலையில் இருந்து வெளிபட்டசூடு விகர்ணனின் உள்ளங்கையைத் தாக்கியது. “தண்ணீர் படாமல் இருக்க இருக்க, சிலையின் சூடு அதிகரிக்கிறதே!” என்று கவலை கொண்ட விகர்ணன், சிலையின் சூட்டைத் தணிக்கும் பொருட்டு, காலடியில் ஓடிக் கொண்டிருந்த நதியில் தன் மேலங்கியை நனைத்து, ஈரமாக்கி, சிலையின் மீது பிளிந்து அபிஷேகம் செய்தான்.
பின்பு என்னவோ நினைவு வந்தவன் போல, சிலையினை இருகைகளிலும் குழந்தை போல் ஏந்தி, ஓடிக் கொண்டிருந்த நதிநீரில் முழுவதுமாக மூழ்கடித்து, சில நொடி காத்திருந்து பின் சிலையினை வெளியே எடுத்தான்.
குளிர் நீரின் உபயத்தால் சிலையின் சூடுமுற்றிலுமாக வற்றிவிட்டிருந்தது. “அப்பாடா, சிலையின் சூடு பெருமளவு குறைந்து விட்டது.” என்று எண்ணிய விகர்ணன், சிலையினைத் திரும்ப தன் துணியில் சுருட்டி தன் முதுகில் இறுக்கக் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், அவன் கழுத்தில் பதிந்தன அந்த வலிமை வாய்ந்த கால்கள்.
‘ஆ…” என கத்திய விகர்ணன் சற்றே சுதாரிக்கும் முன்னர், அவன் மறுகன்னத்தில் கீரல் விழுந்திருந்தது.
முன்னங்கால்களை அவன் தோளின் மீது கிடத்தி, பலம் கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்து,விகர்ணனை அவ்விடம் விட்டு இம்மி அசைக்க இயலாமல் நிறுத்தியிருந்தது புலியாரின் கால்கள். ஆக்ரோஷமாக அவன் முகத்தினைப் பார்த்த வண்ணம் சீரிய கோரைப் பற்களைக் கண்டு விகர்ணன் நடுநடுங்கிப் போனான்.
சமதளமான பகுதியாக இருந்திருந்தால்,இதுகாறும், புலியாரின் ஒற்றை அடியில் விகர்ணன் சுருண்டு விட்டிருப்பான். வழுக்கும் பாறை என்பதால் சற்றே சமாளித்த விகர்ணன்,புலியாரின் பற்களிடமிருந்து தன் கழுத்தைக் காத்துக் கொள்ள பெரும்பாடு பட்டான்.
அவனைக் கொன்றாவது சிலையினை எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் புலியாரிடம் ஏற்பட்டுப் போயிருந்தது.
பாறையின் வழுக்குத் தன்மை விகர்ணனுக்குத் துணை புரிய, சற்றே புலியாரின் பிடியில் இருந்து விடுபட்டான். நதி நீரில்,இடுப்பளவு தண்ணீரில் நின்றிருந்தவனுக்குப் பின்னால்,இருபது அடியில் வெள்ளி நீர்வீழ்ச்சி கொட்டிக் கொண்டிருந்தது. அருவி துவங்கும் இடத்திற்குச் சமீபத்தில் நின்றிருந்த படியால், ஆற்று நீரின் வேகமும் அதிகரித்திருந்தது.
“அருவியில் இருந்து குதித்துத் தப்பிக்கும் எண்ணம் கொண்டிருந்தால் அதை கைவிட்டுவிடு விகர்ணா! அது தற்கொலைக்குச் சமானம். கீழே சிதறிக் கிடக்கும் கற்பாறைகளில் மோதி உன் மண்டை உடைவது நிச்சயம். அத்தோடு பாறையில் சிலை மோதினால், சிலை சுக்கு நூறாக உடைந்து போவதும் நிச்சயம். நான் சொல்வதைக் கேள். சிலையினை ஒப்படைத்து விடு” என்று இவன் அருகே இருந்த கற்பாறையின் மீது கால்களை கவனமாக ஊன்றியபடிக்கே மொழிந்தது புலியார்.
80 அடிகள் உயரமேணும் இருக்கும் அருவியில் இருந்து குதிப்பது என்பதோ, குதித்த பின்னர் கீழே சிதறிக் கிடக்கும் பல நூறு பாறைகளில் தலை மோதாமல் உயிர் பிழைப்பது என்பதோ நடவாத காரியம் என்று விகர்ணனுக்குப் புரிந்திருந்தது.
கரை மார்க்கமாக தப்பிப்பது என்பது நடவாது என்னும் போது, இருக்கும் ஒரே வழியையும் கைவிட விகர்ணன் விரும்பவில்லை.
“தலை சிதறிச் சாவதே என் விதியென்றால் அதை மாற்ற முடியாதல்லவா? இத்தனை தூரம் என்னைக் காப்பாற்றிய என்னப்பன் முருகன் மனமிருந்தால் இம்முறையும் என்னைக் காப்பாற்றுவான்.” என்று மனதில் உறுதி பூண்ட விகர்ணன், மெல்ல நதி தீரத்தில் பின் நோக்கி நடக்கலானான்.
அவன் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும், நதி நீரின் ஆழமும், வேகமும் கூடுவது உணர்ந்தான். அதே போன்று, அவனது அசைவிற்கு ஏற்ற எதிர்வினையாக, அவனை நோக்கி தன் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு முன்னேறியது புலியார்.
அருவியின் பேரிரைச்சல் அவனது பயத்தை பெருமளவு போக்கியிருந்தது. அருவி தொடங்க சில அடிகளே இருக்கும் வேளை, விகர்ணன் சற்றும் எதிர்பாராதது போது, புலியார் அதிவேகமான பாய்ச்சலும், அவன் கழுத்தைக் குறிவைத்து பாய்ந்திருந்தது.
அருவியில் குதிக்கும் சமயம், புலியாரின் கூரிய நகங்கள் அவன் உடலைக் கிழித்தெடுக்க, அவனது இடது பக்க தோள்பட்டை கிழிந்து, செந்நிறக் குருதி அருவி நீரில் கலந்து, நொடியில் கரைந்தும் போயிருந்தது.
ஒரு பாறையின் மீதிருந்து மறு பாறைக்குத் தாவியிருந்த புலியாரின் கூரிய நகங்கள் மறுமுறை அவன் மீது படிவதற்குள் அருவியின் மேலிருந்து குதித்துவிட முடிவெடுத்தான்.
இடது பக்கம் முழுவதுமே பிய்ந்து விட்டதைப் போன்ற வலி உடலெங்கும் பரவியது. வேகமாக துடித்த இதயத்தை சீராக்க, இரு பெரு மூச்சுகளை எடுத்துக் கொண்ட விகர்ணன், ரத்தம் சொட்டுவதைப் பொருட்படுத்தாது, தோளின் துணிமுடிச்சை இறுக்கமாக்கின்.
“முருகா சரணம்!” என்று அருவியின் பேரிரைச்சலுக்குச் சவால்விடும் வண்ணம், தன் முழு பலத்தையும் பிரயோகித்து மொழிந்தவன், கைகளை தலை மேல் கொண்டு சென்று வணங்கிய படிக்கே, அருவி தீரத்தில் குதித்திருந்தான் விகர்ணன்.
அருவியில் குதிக்க மாட்டான் என்று பெருமளவு நம்பிக்கை கொண்டிருந்த புலியாரே அதிர்ந்து போகும் படிக்கு அச்செயலைச் செய்திருந்தான். “விகர்ணா!” என்ற புலியாரின் அதிர்ச்சிக் கூவலையும் அருவியின் இரைச்சல் விழுங்கியிருந்தது.
*****
மன்னன் பெருமாள் ஆவியின் வெளி காவல் கோட்டையின் குதிரைகள் கொத்தளம் நதி தீரத்தின் ஓரத்தில் அமைந்திருந்தது. அரபு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் தருவித்திருந்த புரவிகள் அந்த பின் ஜாமப் பொழுதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.
நின்று கொண்டே உறங்கும் குதிரைகளைக் காவல் காத்துக் கொண்டு அமர்ந்திருந்த கர்ணனுக்கு, சலசலத்த நதி நீரின் ஓட்டம் சீராக இல்லாது போலத் தோன்றியது.
“நதியில் ஏதேணும் மரம் விழுந்து விட்டிருக்குமோ. சலக் புலக் என்று விசித்திரமாக சப்தம் கேட்கிறதே” என்றெண்ணிய கர்ணன், கொட்டகையில் தொங்கிய தீபந்தத்தை சற்றே அதிகமாகத் தூண்டிவிட்டு, பத்தடி தூரத்திலிருந்த நதிக்கரை நோக்கி நடந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவன் நெஞ்சத்தை ஒரு கணம் நிறுத்தியிருந்தது. நதியின் சற்றே தாழ்வான இடத்தில் மூட்டை போன்று எதுவோ தென்பட, அருகே மெல்ல முன்னேறினான் கொட்டகைக் காவலன் கர்ணன்.
“ஐயோ! இதென்ன, துணிமூட்டை என்று நினைத்தேனே! இது ஏதோ மனிதன் போல் உள்ளதே. நதியின் சுழலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்” என்று வேகமாக அருகே ஓடிச் சென்ற கர்ணனின் மூச்சு நின்றே சில நொடிகள் போனது.
“ஐயோ! விகர்ணா! தம்பி விகர்ணா? நீயா? என்னவாயிற்று உனக்கு? காட்டில் மகிழ்ச்சியாகத் திரிகிறாய் என்று நானும் அன்னையும் எண்ணினோமே?” என்று புலம்பியபடிக்கே விகர்ணனை நதிக் கரையோரம் மேலே தூக்கி வைத்தான்.
அப்போது தான் கர்ணன் தன் தம்பியை முழுவதுமாகக் கவனித்தான். விகர்ணின் இடது பக்க தோள்பட்டை கிழிந்து போயிருக்க, தோளின் கீழ், கைகள் நைந்து போயிருந்தன. கூர்மையான பொருளொன்றில் சிக்கி சின்னாபின்னமாயிருந்த கைகளைக் கண்டதும் கர்ணன் வெகுவாகப் பதறினான். விகர்ணனின் வலது கை, ஒரு சிறு துணி மூட்டையை ஆதுரமாகப் பற்றியிருந்தது.
“குருபரா, முனியப்பா, இங்கே வாருங்களேன். சீக்கிரம் வந்து என் தம்பியைத் தூக்குங்கள். உடனே வைத்தியர் இல்லத்திற்குச் செல்ல வேண்டும்” என்று தன் உடன் காவல்புரியும் மற்ற வீரர்களை துரிதமாக அழைத்தான்.
இதற்குள் அரவம் கேட்டு, மற்ற காவலர்கள் வந்துவிட்டிருக்க, மூவருமாகச் சேர்ந்து விகர்ணனை அங்கிருந்த திண்டு ஒன்றில் படுக்க வைத்தனர். காவலன் ஒருவன் வேகமாக புரவியோன்றை எடுத்துக் கொண்டு வைத்தியரை அழைத்து வர விரைந்தான்.
“ம்ம்ம், ஆ” என விகர்ணனிடமிருந்து மெல்லிய முணங்கல் ஒலி எழ, அவன் அண்ணன் கர்ணன், குனிந்து விகர்ணனின் கன்னங்களைத் தட்டி சுய நினைவு கொணரச் செய்தான்.
சற்றே கண் விழித்த விகர்ணன், தன் சுற்றத்தை மெல்ல உள்வாங்கிக் கொண்டு, கண் அசைவால் தன் தமையனான கர்ணனை அருகே அழைத்தான்.
“மன்னரை வரச் சொல்” என்று இதழ் பிரிக்காமல் முணுமுணுத்தான் விகர்ணன். கர்ணனுக்கு அவன் தம்பி சொல்லியது புரிபடவேயில்லை.
“அன்னையையா? அன்னையை இப்போது அழைத்து வரச் சொல்கிறாயா?” என புரியாமல் வினவினான்.
தலையை மெல்ல”இல்லை” எனும்படிக்கு ஆட்டிய விகர்ணம், அரும்பாடுபட்டு, “மன்னர், பெருமாள் ஆவியை பார்க்க வேண்டும்” என்று சற்றே உறக்கமாக மொழிந்தான்.
கர்ணனுக்கு விதிர்விதிர்த்துப் போயிற்று. “மன்னரை நான் சென்று அழைத்து வருவதா? என்ன சொல்கிறான் இவன்? அருவியின் கீழிருக்கும் பாறையில் மோதி இவனுக்கு மண்டையில் பலமாக அடிபட்டிருக்க வேண்டும். அன்னைக்குப் பதில் மன்னன் என்கிறானே” என்று பரபரத்தான் கர்ணன்.
தன் தமையன், அங்கிருந்து நகராதது கண்ட விகர்ணன், இன்னமும் வேகவேகமாக பெருமூச்சுகளை எடுத்துக் கொண்டான். மிகவும் சிரமப்பட்டு, “நான் இன்னும் சில மணித்துளிகளில் மாண்டு போவேன். அதற்குள், மன்னரைப் பார்க்க வேண்டும். ஒரு முக்கியச் செய்தி சொல்ல வேண்டும். என் கடைசி ஆசையை நிறைவேற்று அண்ணா, மன்னரை வர சொல்லு. நேரம் கடத்தாதே” என்று கட்டளை போன்றே மொழிய, விகர்ணனுக்கு வேறு வழி தெரியவில்லை.
“நான் வெறும் குதிரைக் கொட்டகையின் காவலன். நான் சென்று அழைத்தால் மன்னர் வருவாரா? என்ன உளறுகிறான் இவன். வைத்தியர் வேறு இன்னமும் காணவில்லையே” என கவலை கொண்டான் கர்ணன்.
“நான் சொல்வது போல மன்னரிடம் சொல். உன்னுடன் நிச்சயம் வருவார்” என்ற விகர்ணன், மன்னரை அழைத்து வர தன் அண்ணன் கர்ணனை பணித்தான்.
தன் தம்பியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வண்ணம், மன்னர் பெருமாள் ஆவியின் அரண்மனை நோக்கி விரைந்தான்.