“இங்கப் பாரு சந்தியா, இந்தக் காலிப்பசங்க யாரு? என்னன்னே தெரியலை. எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு. தனியா எங்கயும் போகாத. வெளியப் போனாலும் கவனமா இரு…” என்று கதிர் சொல்ல, சந்தியா அவன் சொன்னதைக் கவனிக்காமல் அலட்சியமாக அமர்ந்திருந்தாள்.
“சந்தியா நான் சொல்றது உன் காதுல விழுதா இல்லையா…..” கதிர் கோபமாகக் கேட்க,
“நீங்க ஒன்னும் என் மேல அக்கறைப்பட வேண்டாம். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்…” என்று சந்தியாவும் பதிலுக்கு எரிந்து விழ,
“இப்ப என்னை என்னடி பண்ண சொல்ற? உனக்கு என்ன வேண்ணும் சொல்லித்தொலை…” என்றான் கதிர் எரிச்சலுடன்.
“நான் சொன்னதுக்கு ஒகேவா…. இல்லையா…”
“நீ உதை வாங்கப் போற சந்தியா….” என்றவன் தொடர்ந்து “நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருக்காங்க. உனக்குத் தெரியாதா…” என்று கேட்க,
“அது அவங்க நினைக்கிறது. நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்னைப் பிடிக்குமா…” என்று சந்தியா அதே பிடியில் நிற்க,
அவளது உறுதியை பார்த்தவனின் முகத்தில் புன்னகை அரும்ப. “உன்னைப் பிடிக்காமத் தான், ஊருக்கு வரும் போது எல்லாம் உன்னைப் பார்க்க இங்க வரேன்னா….” கதிர் சொன்னதும், சந்தியாவின் முகமும் மலர்ந்தது.
“ஹப்பா! இதை வாயில இருந்து வரவைக்கிறதுக்குள்ள என்ன பாடு…” என்றவள், அவள் அருகில் இருந்த தலையணையை எடுத்து, அவன் மேல் தூக்கிப் போட, பதிலுக்கு அவனும் அவள் மேல் எறிந்தான்.
இருவரும் சந்தோஷமாகச் சிரித்தபடி ஒருவர் மேல் ஒருவர் தலையணையைத் தூக்கி போட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குக் காலம் வைத்திருக்கும் சோதனையை அறியாமல்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சந்தியா அவர்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகியிருந்தாள். பள்ளியில் இரண்டாம் இடத்தை நந்தினி பிடித்திருந்தாள். சித்ராவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். எப்போதும் பள்ளியில் நடக்கும் தேர்வில் நந்தினி தான் முதலில் வருவாள். ஆனால் பொதுத் தேர்வில் சந்தியா முதலிடத்தைப் பிடித்தது, அதுவும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது நந்தினிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவளுக்குத் தான் சந்தியாவிடம் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டது போல் தோன்றியது. அதனால் அவள் சந்தியாவிடமிருந்து விலக ஆரம்பத்தாள்.
தோழிகள் மூவரும் பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். ஆனால் நந்தினி அறிவியலும், கணிதமும் இருக்கும் பிரிவுக்குச் சென்றுவிட்டாள். சந்தியாவும், சித்ராவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை.
பள்ளி திறந்த சில நாட்களில் நந்தினி ஸ்கூட்டியில் வர ஆரம்பித்தாள். மூவரும் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்தாலும், காலையில் ஒரே இடத்தில் சந்தித்து அங்கிருந்து மூவரும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு வருவர். ஒரே வகுப்பு இல்லை என்றாலும் சேர்ந்து பள்ளிக்கு வருவதும், செல்வதுமாக இருந்த தொடர்பும் இப்போது நந்தினி ஸ்கூட்டியில் வருவதால் தடைபட, சந்தியா மிகவும் வருந்தினாள்.
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை மூவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததே இல்லை. எப்பொழுதும் ஒன்றாகவே தரிசனம் தருவதால், பள்ளியிலேயே அவர்களை முப்பெரும் தேவிகள் என்று தான் அழைப்பார்கள். அப்படி இருந்த மூவரும் இப்போது பிரிந்திருப்பது சந்தியாவிற்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
அவள் வருந்துவதைப் பார்த்து சித்ரா “நீயும் வேணா அவளைப்போல வண்டி வாங்கிக்கோ புள்ள. என்னை நினைச்சு யோசிக்காத. நாம தான் ஒரே க்ளாஸ்ல இருக்கோம்ல.” என்று சொன்ன போது, சந்தியாவிற்கும் ஆசையாகத் தான் இருந்தது.
ஆனால் அவளுக்குச் சித்ராவை விட்டு செல்லவும் மனம் இல்லை. அவள் மட்டும் தனியே சைக்கிளில் வர வேண்டும். அவள் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டியில் அழைத்துச் செல்ல எல்லாம் சந்தியா வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள்.
சிறிது நாட்களில் நந்தினி மதிய உணவு வேளையிலும் இவர்களைத் தவிர்க்க, சந்தியா தான் காரணம் தெரியாமல் தவித்துவிட்டாள்.
“நீ முத மார்க் வாங்கிட்டேன்னு காண்டுல இருக்கா. விடு புள்ள…” என்று சித்ரா சொன்னபோதும் சந்தியாவின் மனது நந்தினியின் தோழமைக்காக ஏங்கியது.
நாட்கள் வேகமாகச் சென்றது. கதிர் முன்பாவது அடிக்கடி ஊருக்கு வருவான். அப்படி வரும் போது சிறிது நேரம் சந்தியாவின் வீட்டிற்கும் வருவான். ஆனால் எப்போது சந்தியாவிடம் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னானோ அன்றிலிருந்து வீட்டு பக்கமே வருவதில்லை. அவன் எப்போது ஊருக்கு வருகிறான், போகிறான் என்பதே சந்தியாவிற்க்கு தெரியாது.
காவேரியும் இப்போது கல்லூரியில் படிப்பதால் சந்தியாவால் இப்போது அவளோடும் சரியாகப் பேச முடியவில்லை. காவேரி விருதுநகரில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்ததால், தினமும் காலையிலேயே கிளம்பி பஸ்சில் போய்விட்டு, மாலை இருட்டும் நேரம் தான் வீட்டுக்கு வருவாள்.
பண்டிகை தினங்களில் தான் சந்தியாவால் கதிரை பார்க்க முடிந்தது. அதுவும் சந்தியா பலகாரம் கொடுக்க அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது தான் பார்ப்பாள். கதிரின் குடும்பம் பெரியது. அவன் சித்தப்பாவின் குடும்பமும் அதே வீட்டில் இருக்கிறார்கள். அவனது சித்தப்பாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் வெங்கடேஷ் சந்தியாவின் வயது, அடுத்தவன் விக்னேஷ் எட்டாம் வகுப்புப் படிக்கிறான்.
அவர்களோடு கதிரின் அப்பத்தாவும், அய்யாவும் இருக்கிறார்கள். இருந்தாலும் சந்தியாவால் அங்கே கதிருடன் தனியே பேசவெல்லாம் முடியாது. அதனால் வெறும் பார்ப்பது மட்டும் தான்.
ஒரு முறை கதிர் ஊருக்கு வந்திருந்த போது, வண்டியில் தன் நண்பனை பார்க்க பக்கத்து ஊருக்குச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் நந்தினி அவள் ஸ்கூட்டியை தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதைப் பார்த்து, தன் வண்டியை அவள் அருகில் சென்று நிறுத்தியவன் “என்னங்க வண்டியை தள்ளிட்டு போறீங்க எதாவது பிரச்சனையா…” என்றான்.
கதிரை அந்த நேரத்தில் திடீரென்று அங்கே பார்த்ததும் நந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் பதில் சொல்லாமல் முழித்தாள்.
கதிர் அவளிடமிருந்து வண்டியை வாங்கி அதை உதைத்து பார்க்க, வண்டி அப்போதும் எடுக்கவில்லை. கதிர் வண்டியை நிறுத்தி பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்தான். அவன் கண்ணுக்கு ஒன்றும் தட்டுப்படவில்லை. ஒரு குச்சியை எடுத்து வந்து உள்ளே விட்டு பார்க்க, பெட்ரோல் இல்லை என்று புரிந்தது.
“ஏங்க இது என்ன சிட்டியா வழியெல்லாம் பெட்ரோல் பங்க் இருக்க? வண்டியில எப்பவும் பெட்ரோல் வச்சுக்க வேண்டாமா….” என்ற கதிர் அங்கே கிடந்த சிரட்டையில் தன் வண்டியிலிருந்து பெட்ரோல் பிடித்து வந்து நந்தினியின் வண்டியில் ஊற்றினான்.
அவன் செய்வதையெல்லாம் பார்த்த நந்தினிக்குச் சந்தோஷமாக இருந்தது. அவனுக்குத் தன் மேல் அக்கறை இருக்கிறது என்று நினைத்தாள்.
நந்தினி புன்னகையுடன் “ரொம்பத் தேங்க்ஸ், உங்களுக்குத் தான் சிரமம் ஆகிடுச்சு.” என்றாள்.
“நீங்கன்னு இல்லை, யாருன்னாலும் நான் இதைச் செஞ்சிருப்பேன். அதுவும் நீங்க சந்தியாவோட சினேகிதி உங்களுக்குச் செய்யலைன்னு அவளுக்குத் தெரிஞ்சதுன்னு வைங்க, என்னை திட்டியே கொன்னுடுவா…” என்றவன் புன்னகையுடன் அவன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.
இவன் தன்னைச் சந்தியாவின் தோழி என்ற எண்ணத்தில் மட்டும் தான் பார்க்கிறான் என்று நினைத்த நந்தினிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இனி கதிரை நினைத்தும் பார்க்க கூடாது என்று முடிவெடுத்தாள்.
ஒரு நாள் காவேரிக்கு விடுமுறை தானே என்று சந்தியா அவள் வீட்டுக்கு சென்றாள். கதிர் விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் மாடியில் தான் எப்போதும் இருப்பான். அவனுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்க மிகவும் பிடிக்கும். அதனால் அவன் வீட்டில் இருந்தால் மாடியில் எப்போதும் பாட்டு ஓடிக்கொண்டிருக்கும். அதோடு மாடியில் அவன் ஒரு சிறு பூந்தோட்டமும் வைத்திருக்கிறான்.
ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் தினமும் உடற்பயிற்சி செய்து பழக்கப்பட்டவன், அதனால் உடற்பயிற்சி செய்வது, குளிப்பது தூங்குவது எல்லாம் மாடியில் தான். சாப்பிட மட்டும் தான் கீழே வருவான்.
சந்தியா வந்த போது காவேரி மட்டும் தான் ஹாலில் இருந்தாள். சந்தியா அவளருகில் சென்று அமர, காவேரி சந்தியாவைக் கண்டுகொள்ளாமல் யாருடனே செல்லில் பேசியபடி இருந்தாள். சந்தியாவும் அப்படி யாரோடு தான் இவள் பேசுகிறாள் என்று கவனிக்க, காவேரி வாயசைப்பதும் தெரியவில்லை, பேசும் சத்தமும் கேட்கவில்லை. ஆனால் அவள் யாருடனே பேசியபடி தான் இருந்தாள்.
சந்தியா எப்படி இப்படிப் பேச முடியுது என்று ஆச்சர்யபட்டவள், சரி நாம டீவி பார்ப்போம் என்று டீவி பார்த்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றும் காவேரி பேசி முடிக்கும் வழியைக் காணோம் என்றதும் “யாரு கூடப் பேசுற…” என்று சந்தியா கேட்டுகொண்டிருக்கும் போதே, கதிர் மாடியில் இருந்து மதிய உணவிற்காக இறங்கி வந்தான்.
அவனைப் பார்த்ததும் சந்தியா முகம் மலர, கதிரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். கதிர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் காவேரி போன் பேசிக்கொண்டிருக்க, கதிர் உள்ளே சென்று தன் அம்மாவிடம் ‘சாப்பாடு எடுத்து வைங்க…’ என்றதும் அவரும் உணவு பரிமாற வந்தவர், சந்தியாவையும் சாப்பிட அழைத்தார்.
“இல்லத்தை நான் வீட்ல சாப்பிட்டிட்டு தான் வந்தேன், நீங்க மாமாவுக்கு வைங்க.” என்றவள் காவேரியை பார்த்து “நீ சாப்பிட்டியா….” என்று கேட்டதும், கதிரின் பார்வை தன் தங்கையிடம் திரும்பியது, அப்போது தான் காவேரியும் கதிரை கவனித்தாள். அவனைப் பார்த்ததும் போன்னை வைத்தவள், ஒன்றும் தெரியாதது போல் சென்று சாப்பிட அமர்ந்தாள்.
கதிர் அவளிடம் செல்லை கொடு என்று கையை நீட்ட, காவேரி “எதுக்கு என்னோடத கேட்கிற? அதுதான் உனக்கு ஒன்னு இருக்கு இல்ல…” என்று முதல் முறையாகக் கதிரை எதிர்த்து பேசினாள்.
“சும்மா பார்த்துட்டு தரேன் குடு…” என்று கதிர் செல்லை கேட்க, காவேரியும் வேறு வழியில்லாமல் கொடுத்தாள். செல் வெந்நீர் பானைப் போல் கொதிப்பதை பார்த்த கதிர் பேசிய அழைப்புகளை பார்க்க, சுபா என்று பதிவாகிருந்த எண்ணிற்கு நாற்பது நிமிடம் பேசியிருந்தாள்.
“இவ்வளவு நேரம் அப்படி என்னதான்டி பேசுவ? இன்னொரு தடவை உன் கையில செல்லை பார்த்தேன், தூக்கி போட்டு உடைச்சிடுவேன்.” கதிர் கோபப்பட,
“நான் என் ஃபரண்ட்டோட பேசுறேன். உனக்கு என்ன வந்தது? நீ உன் வேலைய பாரு….” காவேரி எடுத்தெறிந்து பேச,
சந்தியா இருவரையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தங்கையைப் பார்த்து முறைத்த கதிர், தன் தாயிடம் திரும்பி “அம்மா நாற்பது நிமிஷம் பேசியிருக்கா. அப்படி என்ன பேசுவா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா….” என்றான்.
காவேரியும் அதோடு உஷாராகிவிட்டாள். கதிரின் முன்பு செல்லை தொடுவது இல்லை. கதிரும் அதைப் பற்றிப் பிறகு மறந்துவிட்டான். அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் அவர்கள் குடும்பத்தைச் சிக்க வைக்கப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.
காவேரி பேசியது சுபா என்கிற பெண்ணிடம் இல்லை சுபாஷ் என்கிற ஆணிடம்.