கடம்பன் குன்று – 6
அந்த பின் இரவு நேரத்தில் அரண்மனையைச் சூழ்ந்திருந்த வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன. இன்னமும் சூரியன் உதமாக இரண்டு நாழிகைகள் மீதமிருக்க, ஆயர் மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
அந்த இருளை ஒரு பொருட்டாக மதிக்காத மன்னர், பெருமாள் ஆவியின் அரண்மனையில் மட்டும், இரவு ஏற்றப்பட்ட எண்ணெய் தீபங்கள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.
அதிலும், மன்னர் உறங்கும் உப்பரிக்கையில் நிறைய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அந்த அகால பொழுதிலும் வெளிச்சம் பரவியிருந்தது.
தேக பராக்கிரமம் பொருந்திய ஆவினன் குடிகளின் தலைவனான சிறு நில மன்னர் பெருமாள் ஆவி, அந்த பின் ஜாம பொழுதில் உறக்கம் வராமல் தன் சயனமஞ்சத்தில் ஒருக்களித்து சாய்ந்திருந்தார்.
அவர் அருகில் கைகளைப் பிசைந்த வண்ணம், அரண்மனை வைத்தியர் முத்துலிங்கமும், மன்னரின் முக்கிய மந்திரி திரிகூடநாதரும் நின்றிருந்தனர்.
“ என்னப்பன் முருகன், என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறான் என்று தெரியவில்லை அமைச்சரே. உலக மக்களை எல்லாம் ரக்ஷிக்கும் என்னப்பன், என்னை மட்டும் இப்படி வலியால் துடிக்கச் செய்வது ஏனோ? எவ்வளவு வேதனை..” என படுக்கையின் மீது ஒருகளித்தவாறு படுத்திருந்த மன்னன் பெருமாள் ஆவி கைகளை மெல்ல தன் வயிற்றின் மீது நீவிக் கொண்டே மொழிந்தார். வலி மிகுதியால் அவர் முகம் சுருங்கிப் போய்விட, மெல்லிய குரலில் தன் முக்கிய மந்திரி திரிகூடநாதரை ஏக்கப்பார்வை பார்த்தவண்ணம் இருந்தார்.
மாடு, பசு, கன்று, ஆடுகள் என்ற பலவிதமான ஆவினங்கள் கொண்டிருந்த ஆவினன் பழங்குடிகளின் மன்னனான பெருமாள் ஆவிக்கு நெடுநாட்களாவே இன்னதென்று சொல்லவொன்னா வயிற்று வலி. நாட்கணக்காய், வாரக்கணக்காய், எவ்வளவோ வைத்தியங்கள் செய்த பின்பும் வயிற்று வலியினைப் போக்க ஒரு மார்க்கமும் அகப்படவில்லை.
மன்னனின் வேதனைக்கு என்ன பதில் சொல்வது என குழம்பிய மந்திரியார், யோசனையுடனேயே நின்றிந்திருந்தார்.
“வைத்தியரும் பலவிதமான ஒளஷதங்களை கொடுத்துப் பார்க்கிறார் தான். ஆனால் என் வயிற்று வலிக்கு உண்டான தீர்வு தான் கிடைக்கவில்லை.” என வலியின் மிகுதியால் புலம்பிய அரசனைக் காண மந்திரி திரிகூடநாதனுக்கும் கவலையாக இருந்தது.
“எப்படி கம்பீரமாக நடமாடும் மன்னர், இப்படித் துவண்டு கிடக்கிறாரே” என எண்ணும் போதே மனது பிசைந்தது. இதை விடவும், கவலையான விஷயம் முதல் மந்திரியை வாட்டியது.
“மன்னருக்கு ஏதேணும் நேர்ந்து விட்டால் அவருக்குப் பிறகு நாடாளும் பொறுப்பு யாரிடம் சென்று சேருமோ” என்ற அச்சம் வேறு பலமாக பிடித்துக் கொண்டது.
“மன்னரின் பட்டமகிஷி சிவகாமி நாட்சியாருக்கோ புத்திர பாக்கியம் இல்லை. இளைய ராணி இந்திரைக்கும் அதே நிலைமை. சிவகாமி தேவியின் தமையன் மன்னருக்கு அடுத்தபடியாக தனக்கு மகுடம் சூட்டப்பட வேண்டும் என கொக்கரிக்கிரான்.”
“மன்னரின் சிற்றன்னை மகனோ, எப்போதடா அண்ணன் தொலைவான், நமக்கு நாடு கிட்டும் எனக் காத்துக் கிடக்கிறான். இதில் மன்னர் நலமாக நடமாடிக் கொண்டிருந்த போதே மன்னருக்குத் தெரியாமல், மணிமுடியைக் கைப்பற்ற இன்னல் செய்தவர்கள், இப்போது மன்னருக்கு உடம் சுகமில்லை என்றறிந்தால் சும்மா இருப்பார்களா என்ன?”
“இவர்களிடம் இருந்து எம்மன்னரையும், மக்களையும் காக்க வரமாட்டாயா முருகா?” என மனதார குமரனிடம் வேண்டினார் திரிகூடநாதர்.
மன்னர் பெருமாள் ஆவிக்கு அதற்கு மேல் தன் முக்கிய மந்திரியிடம் பேச உடலில் தெம்பு இருக்கவில்லை. வலியின் மிகுதியால் லேசாக கண் அயர, மந்திரி சப்தமேதும் செய்யாமல், மன்னரின் அறையினை விட்டு வெளிப்பட்டார்.
அந்த நேரம் மந்திரியாரின் மீது மோதும் படிக்கு ஓடி வந்து மூச்சிரைக்க நின்றான், மன்னரைத் தேடி ஓடி வந்திருந்த கர்ணன். அவன் பின்னால் அவனைப் பிடிக்கவென வந்த இரு காவலர்களும் தங்கள் ஈட்டியுடன் தயாராக நின்றிருந்தனர்.
காவலர்களைக் கண்ட மந்திரி திரிகூடநாதர், “அரண்மனையின் வாயிலைக் காவல் காக்காமல் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். “என்று கோபமாக வினவினார்.
“மன்னிக்க வேண்டும் மந்திரியாரே! இவன் நமது குதிரை கொட்டகையைக் காவல் காக்கும் பொறுப்பில் இருப்பவன், பெயர் கர்ணன். இந்த நேரத்தில் மன்னர் குதிரை கொட்டகைக்கு வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறான். இந்த நேரத்தில் அரண்மனையின் உள்ளே நுழைய இவனுக்கு அனுமதியில்லை என்று நாங்கள் தடுக்க, எங்கள் காவலை மீறி உள்ளே ஓடி வந்துவிட்டான். அவனைப் பிடிக்கவென நாங்களும் ஓடி வந்தோம்” என்று தலையைக் குனிந்த படிக்கு கையில் ஈட்டி பிடித்திருந்த காவலர்கள், மொழிய, மந்திரி இன்னமும் கோபம் கொண்டார்.
“கொட்டகைக் காவலில் இருப்பனுக்கு மன்னரிடம் என்ன பேச்சு? அதுவும் இந்த நேரத்தில்? ஏதேணும் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் சொல். என்ன விஷயம்” என்று மூச்சிரைக்க நின்றிருந்த கர்ணனின் நேராக வினவினான் மந்திரி திரிகூடநாதர்.
“இல்லை மந்திரியாரே! எனக்கு மன்னரை உடனடியாகப் பார்க்க வேண்டும். அவரிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும்” என்று தலையைக் கவிந்த படிக்கே மொழிந்தான் கர்ணன். இன்னமும் ஓடி வந்ததன் காரணமாக மூச்சிரைத்தது அவனுக்கு.
“என்ன விஷயமானாலும் அதைக் கூற நேரம் காலமென்று ஒன்று இருக்கிறதல்லவா? இந்த நேரத்திலா சொல்ல வேண்டும். விடிந்த பின்னர்,மன்னர் அர்த்த மண்டபத்தில் இருக்கும் பொழுது சொல்லலாம். இப்போது இங்கிருந்து செல்” என்று கட்டளையிட்டார் மந்திரி.
“மன்னரின் வயிற்று வலிக்கு அருமருந்து கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி சொல்ல வேண்டும்” என்று கர்ணன் பிடிவாதமாக மொழிய, மந்திரியின் முகம் சற்றே மாற்ற மடைந்தது.
“மன்னரின் வலி குணமாகும் மார்க்கமா? உண்மையாகவா சொல்கிறாய்?”
“சத்தியமாகச் சொல்கிறேன். மன்னர் என்னுடன் கொட்டகைக்கு வரவேண்டியது அவசியம். இந்த ஒரு முறை என்னை நம்புங்கள் மந்திரியாரே.” என்று கர்ணன் திடமாக உரைத்தான்.
“மன்னரின் வயிற்று வலிக்கு சகல விதமான தீர்வுகளும் செய்யப்பட்டு விட்டனவே கர்ணா” என்று பதிலளித்த மந்திரியாரின் குரலில் ஏகத்துக்கும் கோபம் வடிந்து சற்றே நிதானம் எட்டிப் பார்த்திருந்தது.
“தெரியும் மந்திரியாரே! அரசரின் வலியைப் போக்கச் செய்யும் மாமருந்து கிட்டியுள்ளது. அதைப் பற்றி அரசரிடம் உரைக்க வேண்டும். தங்களின் நேரத்தை வீணாக்கும் எண்ணம் எனக்கில்லை மந்திரியாரே. அதே போன்று மன்னரை அலைகழைக்கும் யுக்தியும் இதுவல்ல.” என்று கர்ணன் மந்திரியிடம் மொழிய, அவன் முகத்திலேயே கண்களைப் பதித்து சில நொடிகள் யோசனை செய்த மந்திரி, ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
“சரி. இங்கேயே இரு. நான் சென்று மன்னரை எழுப்பி, அழைத்து வருகிறேன்” என்று மொழிந்தவர், “இதில் எதேணும் தவறு நடப்பின் உன் தலை தப்பாது என்று நினைவில் வைத்துக் கொள்” என்ற எச்சரிக்கையுடன், திரிகூடநாதர் திரும்ப மன்னர் சயனத்திருந்த அறையினுள் விரைந்தார்.
மந்திரி திரிகூடநாதர் என்ன சொல்லி மன்னரை சம்மதிக்க வைத்தார் என்று கர்ணனுக்குத் தெரியவில்லை. அவர் உள்ளே சென்ற பத்து நிமிடத்திலேயே அரண்மனை வாயில் சற்றே பரபரப்பானது. வெளியே ஒரு சிறு படை தயாராகியிருந்தது. தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு சில காவலர்கள் தென்பட்டனர். இரு குதிரைகள் பூட்டிய மன்னரின் உலா ரதமும் வாயிலில் வந்து நின்றது குதிரையின் கணைப்பொலிகள் மூலம் தெரிந்தது.
மன்னரை அழைத்துச் செல்ல ரதமும், அத்துடன் சில காவலர்களும் தயாராக அரண்மனை வாயிலில் நின்றனர். சில நிமிடத்தில் வெற்று உடலின் மீது பட்டாடை ஒன்றை போர்த்தியபடிக்கு மன்னர் தன் அறையிலிருந்து வெளிப்பட்டார்.
மன்னர், மந்திரியார் வைத்தியர் என்ற சிறு படை சூழ, கர்ணன், திரும்ப குதிரைக் கொட்டகைக்குத் திரும்பினான். அங்கே திண்டின் மீது இழுத்துப் பிடித்து வைத்திருந்த உயிருடன் படுத்திருந்தான் விகர்ணன்.
மன்னர் வந்ததைக் கண்டதும் விகர்ணன் எழுந்து அமர முயன்றான் ஆனால் முடியவில்லை. கைகளைக் கூப்பி வணங்கிய விகர்ணனை ஆச்சர்யமாகவே பார்வையிட்டார் மன்னர்.
“வைத்தியரே இந்த மனிதனைக் காப்பாற்றும் மார்க்கம் ஏதேணும் இருந்தால் அதைச் செய்யுங்கள்” என கட்டளையிட்ட மன்னர், அவருக்காகத் தருவித்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
விகர்ணனைப் பரிசோதிக்கவென வைத்தியர் அருகே வர, அவரைத் தடுத்துவிட்டான் விகர்ணன். “என்னைக் காப்பாற்ற தங்களால் இப்போது இயலாது.” எனத் திக்கித் திணறி பேசிய விகர்ணன், எழுந்து அமர மிகவும் பிரயத்தனம் செய்வது கண்டு, மந்திரியார் அவன் பால் கண்களைக் காட்டினார்.
மந்திரியாரின் கண் அசைவைக் கவனித்த காவலர்கள் இருவர், ஓடிச் சென்று விகர்ணனை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். வீரர்களின் உதவியால் வெகு பிரயத்தனப்பட்டு சாய்ந்த வாக்கில் அமர்ந்தான்.
வீரர்களின் உதவியுடன் சாய்வாக எழுந்து அமர்ந்த விகர்ணன் சுற்றிலும் கண்களை படரவிட்டு இறுதியாக மன்னர் பெருமாள் ஆவி நின்றிருந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தனது தம்பியின் செய்கையை கண்ட கர்ணனுக்கு ஏதாகிலும் செய்து அவனை காப்பாற்றி விட மாட்டார்களா என்ற படபடப்பு மனம் முழுக்க பரவி இருந்தது. மன்னரை பார்த்து விகர்ணன் ஏதோ முணுமுணுப்பதும் மிகவும் கஷ்டப்பட்டு பேச நினைப்பதுமாக இருக்க,
மன்னர் பெருமாள் ஆவி விகர்ணனின் எதிரில் தனது இருக்கையை போடும் பணிக்கு தனது வீரர்களை பணித்தார். மன்னர் அவனுக்கு சரிசமமாக அமர்ந்ததும், விகர்ணன் தனது தமையன் கர்ணனை கண்களாலேயே அருகே அழைத்தான்.
“ விகர்ணா, நீ மன்னரிடம் என்ன சொல்ல வேண்டுமென்று விளைந்தாயோ அதைக் கூறும் தரும் வந்துவிட்டது. நீ அழைத்து வர கூறிய காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு மன்னரை இங்கே தருவித்துள்ளேன். மன்னரின் பெரிய மனது காரணமாக அவரும் உன்னை காண இந்த அகால வேளையிலும் என்னுடன் வர சம்மதித்திருக்கிறார்.” என்று மொழிந்தான் கர்ணன்.
விகர்ணனின் விழிகள் சற்றே சொருகிப் போய்விட்டிருக்க, “துணி மூட்டை. துணி மூட்டை” என்று தன் முன் குனிந்த வாக்கில் நின்றிருந்த தன் தமையன் கர்ணனிடம் தெளிவாக முணுமுணுத்தான் விகர்ணன்.
கர்ணன் கூறுவது கர்ணனுக்கு முதலில் புரிபடவில்லை. விகர்ணனின் விழிகள் கொட்டகையின் மூலையை வட்டமிடுவதைப் புரிந்து கொண்ட கர்ணன், கொட்டகையின் ஒரு ஓரத்தில் கண்களைப் பதித்து நோட்டமிட்டான்.
நதி நீரில் நனைந்து போயிருந்து துணி மூட்டை சாய்ந்த வாக்கில் கிடத்தப்பட்டிருந்தது. விகர்ணனின் பார்வை அம்மூட்டையை விட்டு அகலாதைக் கவனித்து, ஓடிச்ச்சென்று துணி மூட்டையை எடுத்துக்கொண்டு கர்ணனின் கையில் கொடுக்க முற்பட்டான் கர்ணன்.
அச்சிலையின் பாரம் காரணமாக சிலையினைப் பிடிக்க இயலாது போன விகர்ணன், தோள்கள் குலுங்க தவித்துப் போனான். இதைக் கண்டு அதுவரையிலும் இருக்கையில் அமர்ந்திருந்த மன்னர் பெருமாள் ஆவி சட்டென எழுந்து, “தன் இரு கைகளாலும் சிலையினை ஏந்தி பிடித்தார்”.
துணி சுருள் விலகியிருந்த இடத்தில் சிலையை பிடித்த மன்னரின் கைகளில் ஒரு சிலிர்ப்பு பரவியது. முதுகுத் தண்டு சில்லிட்டு விட, ஒரு கணம் ஸ்தம்பித்துப் போன மன்னர், விகர்ணனை ஒரு புது வித மரியாதையுடன் ஏறிட்டார்.
மன்னரின் முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட விகர்ணனின் முகத்தில் ஒரு சிறு நிம்மதி பரவியது. அவன் கண்களாலேயே மன்னருக்கு நன்றி கூறுவது மன்னருக்கும் புரிந்து தலையை மெல்ல அசைத்து அவனது நன்றியை தான் ஏற்றுக் கொண்டு விட்டதை அவனுக்குத் தெரிவித்தார்.
அத்தோடு இருகைகளாலும் சிலையினை பிடித்த படிக்கே விகர்ணனுக்கு பதில் வணக்கம் வைக்கவும் செய்தார் மன்னர்.
சில நொடிகள் அங்கிருந்தால் எவருமே எதையும் பேசாமல் அடுத்து நடக்கப்போவதை எதிர்பார்த்த வண்ணம் நின்றிருந்தனர். வீரர்களின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த விகர்ணன் தன் சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டி பேசத் துவங்கினான்.
“இச்சிலை சாமானியமானது அன்று. சித்த புருஷர்களால் கடுந்தவம் மேற்கொண்டு, பல ஆண்டுகளின் முயற்சியால் மிக நுண்ணிய முறையில் தயாரிக்கப்பட்ட நவபாசன சிலையாகும். இச்சிலையை நான் இங்கே கொணர்ந்த விதம் தவறாக இருக்கலாம். ஆனால் என் உள்மனதில் இச்சிலையை நான் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து வவிட்டதாகவே எண்ணுகிறேன்.”
“இதன்மீது காலையும் மாலையும் பால், இளநீர், நெய் போன்ற புனித பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அந்த அபிஷேக பொருட்களை தவறாது தாங்கள் உண்டு வாருங்கள். இச்சிலை மீது உபயோகிக்கப்படும் அனைத்து பொருட்களுமே அமிர்தமாக மாறக்கூடியவை. தீர்க்க இயலாத பல நோய்களுக்குத் தீர்வாக இச்சிலையின் அபிஷேக பொருட்கள் அமையும்” என்று ஒரு மந்திர கட்டு கட்டுபட்டவன் போல பேசினான் விகர்ணன்.
அவன் பேசியதை அங்கிருந்தோர் பயபக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக மன்னர் சிலையினை பிடித்திருந்த காரணத்தினால், சிலையினுள் இருந்து வெளிபட்ட சூடு மெல்லமாக மன்னரைத் தாக்கியது. இதனால் சற்றே, நிலைதடுமாறிய மன்னர் சிலையை அங்கிருந்த சிறிய மேடை ஒன்றின் மீது வைத்து மூட்டையை முழுவதுமாக அவிழ்த்தார்.
அவர் சிலையை வைத்த சிலநொடிகளிலேயே கீழ்வானம் மெல்ல சிவக்கத் துவங்கிவிட்டிருந்தது. சூரியன் மெல்ல உதயமாகத் துவங்க, தென்னை ஓலைகள் கொண்டு இருந்த வேயப்பட்டிருந்த அந்த கொட்டகையின் சிறுசிறு ஓட்டைகள் மூலமாக சூரிய கதிர்கள், கொட்டகையின் உள்ளே பிரவேசிக்க துவங்கியிருந்தது.
அதிலும் சிலையின் நேர்பின்னால் ஏற்பட்டிருந்த சற்றே பெரிய துளையின் வாயிலாக பெரிய ஒளிக்கற்றை ஸ்ரீ சண்முகர் சிலையின் பின்னால் பட்டு தெறிக்க சிலையை முன்னின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மனதில் பரவசம் பொங்கியது. சூரிய செங்கதிரில் நெருப்பு ஜீவாலையாய் பளபளத்த சண்முகரைக் காண அங்கிருந்தவர்களுக்கு இரு கண்களும் போதவில்லை.
சூரிய கதிர்கள் பட்டவுடன் சற்றே மாறிப் போயிருந்த ஸ்ரீ சண்முகர் சிலையை காணவும் மன்னர் பெருமாள் ஆவியின் கைகள் மெல்லமாக நடுங்க துவங்கின. அவரையும் மீறி அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்தது. வடியும் கண்ணீரை துடைக்கவும் மறந்து போன மன்னர், ஒரு வித பரவச நிலையில் லயித்திருந்தார்.
“என் அப்பனே முருகா!” என்ற பெரிய கூவலுடன், கொஞ்சமும் தாமதிக்காது, ஸ்ரீ சண்முகர் முன்னால் நெடுஞ்சானாக விழுந்து வணங்கினார் மன்னர். அங்கிருந்த அனைவருமே மன்னரைப் பின்பற்றி ஸ்ரீசண்முகரின் முன்னால் நமஸ்கரித்தனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே முகத்தில் சிறு புன்னகையை தவழ விட்ட விகர்ணன், மெல்ல கணைத்து எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான். அவன் பேசுவதை அங்கிருந்த அனைவருமே மிக அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்டுக்கொண்டே நின்றது அவனுக்கே ஆச்சர்யம் கொடுத்தது.
எப்போதும் இவனது பேச்சிற்கு செவிமடுக்காத அவனது தனயன் கர்ணன் கூட எதுவும் பேசாமல் விகர்ணன் கூறிய செய்திகளை மனதில் அசை போட்டபடி நின்றிருந்தது கர்ணனுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. இவையெல்லாம் தன் ஸ்ரீ சண்முகரின் அருள் என்றே பாவித்தான் விகர்ணன்.
விகர்ணனின் கணைப்பொலி கேட்டு அனைவரும் அவன் பக்கம் கவனத்தைக் குவித்தனர். விகர்ணன் திரும்பவும் பேசத் துவங்கினான்.
“இச்சிலை குறித்த செய்திகள் எல்லாம் எனக்கு பல வருடங்களாக தெரிந்திருந்த பொழுதும் இதுநாள் வரையிலும் இதை எவருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதில்லை.” என்றவன்,
“நான் கூறுவதை சற்று கவனமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப் போவது மிகவும் முக்கியமான விஷயம்.” என்று கூறிய விகர்ணன், மன்னரைத் தவிர்த்து இம்முறை மந்திரி திரிகூடநாதரைப் பார்த்தபடியே பேசலானான்.
அவனது பார்வை தன் முகத்தில் லயிப்பதைக் கண்ட மந்திரியார் சற்று அவனருகில் நகர்ந்து நின்று கொண்டார். “இச்சிலையை நான் உரியவரிடம் இருந்து அவர் அனுமதியில்லாமல் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அப்படி நான் செய்திருக்கவில்லையென்றால் இச்சிலை நம் நாட்டை விட்டு சீன தேசம் பயணப்பட்டிருக்கும். இன்னமும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், நான் சிலையைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறியவன், மந்திரியாரவன் பேச்சில் கவனம் கொள்கிறாரா என்று அறிய வேண்டி தன் பேச்சை நிறுத்தினான்.
மந்திரி திருகூடநாதர், விகர்ணனின் பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். அவரது கண்கள், விகர்ணனிங் காயங்களின் மீது படிந்து மீண்டது. இதைப் பார்த்த பின், விகர்ணன்,
“ஆம், சிலையை நான் எடுத்துக் கொண்டு தப்பிக்கும் பொழுது, சிலையின் காவலர்களால் தாக்கப்பட்டேன். அதனால் ஏற்பட்ட காயங்கள் தான் இவை” என்று தன் உடலில் காயங்களை பார்த்துக்கொண்டே கூறினான் மந்திரியார் அவனது பேச்சை கவனிப்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்து அவனை மேலே பேசும்படி பணித்தார்.
“அதனால், சிலைக்கு சொந்தமானவர்கள் எந்த நேரத்திலும் இச்சிலையை எடுத்துச் செல்ல இங்கே வரக்கூடும். பிரமிக்க வைக்கும் சக்திகள் வாய்ந்த சிலை, நம் மண்ணில், நம் மக்களுக்குப் பயன் பெற வேண்டும் என்பது என் அவா. அதனால், எந்த சூழலிலும் சிலையை பாதுகாக்க தக்க ஆவணங்கள் செய்யவேண்டியது முக்கியமானது” என்று விகர்ணன் கூற மந்திரி திரிகூடநாதர் தனக்கு விஷயம் புரிந்து போனது என்பதை காட்டும் விதமாக தலையை மட்டும் அசைத்து தனது சம்மதத்தை விகர்ணனுக்கு தெரிவித்தார்.
மந்திரியின் தலையசைப்பு விகர்ணனுக்குத் திருப்தி கொடுக்கவில்லை. “உறுதியளிப்பீர்களா?” என தடுமாற்றத்துடன் விகர்ணன் வினவ, மந்திரி நீட்டியிருந்த விகர்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
அதன் பின்னரே விகர்ணனுக்குத் திருப்தி உண்டாயிற்று. அது அவன் முகத்தில் பிரதிபலிக்கவும் செய்தது. விகர்ணன் திரும்ப மன்னர் பெருமாள் ஆவியின் முகத்தில் தன் கண்களை பதித்தான். “இச்சிலையின் அபிஷேக நீரை பருகிய சிலநாட்களிலேயே உமது தீராத வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விடும். இது சித்தர் வாக்கு. இதைவிட ஒரு முக்கிய விஷயம் தங்களிடம் சொல்ல வேண்டும்” என்று விகர்ணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு லேசாக மூச்சு இறைக்க துவங்கியிருந்தது.
அவன் மனமோ மிகுந்த படபடப்புடன் வேகமாக துடிக்க துவங்கியிருக்க, தனது அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை அவனது மனம் உணர்ந்து கொண்டது. தான் சொல்ல வந்த செய்தியினை முழுவதுமாக மன்னரிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற ஆவலில் விகர்ணன் சற்றே வேகமாக மன்னரிடம் பேசத் துவங்கினான்.
“நீண்ட நேரம் சிலையினை வெளியே வைக்கலாகாது. சிலையில் இருந்து சூடு வெளிபடும். நேரம் செல்லச் செல்ல, சிலையின் சூடு அதிகரிக்கவும் செய்யும். அது நமக்கும், ஏன் என் ஸ்ரீ சண்முகருக்குமே ஆபத்தை விளைவிக்க வல்லது. அதனால் சிலையை எப்பொழுதும் தண்ணீரில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அபிஷேகம் செய்யும் சமயம் மட்டும் வெளியே எடுக்கும்படிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். அத்தண்ணீரையும், அபிஷேகப் பொருட்களையும் தாங்கள் மருத்துவத்திற்கும் முக்கியமான உணவு பதார்த்தங்கள் செய்வதற்கும் உபயோகித்து கொள்ளலாம்.” என்று விகர்ணன் மூச்சுவிடக்கூட மறந்தவனாக மன்னர் பெருமாள் ஆவியின் முகத்திலேயே கண்களை பதித்த வண்ணம் மொழிந்தான்.
விகர்ணனின் ஒரு கைகை மந்திரியார் பிடித்திருக்க, மறு கைகைப் பிடித்த மன்னர், “ என் வயிற்று வலிக்கு மாமருந்தாக திகழப் போகும் இச்சிலையை என் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வருவேன். கவலை கொள்ளாதே விகர்ணா” என்று மன்னரின் வாய்மொழியைக் கேட்ட பின்னரே விகர்ணனின் முகம் முழுக்க தெளிவடைந்தது.
தன்னை பிடித்திருந்த இரு வீரர்களையும் பார்த்தவன், “என் ஸ்ரீ சண்முகரை சேவிக்க விரும்புகிறேன். என்னைக் கீழே கிடத்துங்கள்” என்று மொழிந்தான்.
“தம்பி விகர்ணா! வேண்டாம். இந்த நிலையில் நீ எழுந்து கொள்வது உசிதம் அல்ல” என்று சற்றே பதட்டத்துடன் அவன் அருகே வந்த அண்ணன், கர்ணனை கண்களாலேயே தடுத்த விகர்ணன், “அன்னையை நன்றாக பார்த்துக்கொள் அண்ணா. அன்னையிடம் எனது வணக்கத்தை தெரிவித்து விடு” என்று கூறினான்.
இதைக்கேட்ட கர்ணனின் கண்களிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. “என்னைக் கீழே கிடத்துங்கள்” என்று திரும்ப வீரர்களிடம் மொழிய, அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, விகர்ணனை அவனுக்குப் பிரியமான ஸ்ரீ சண்முகரின் எதிரில் நெடுஞ்சாணாக படுக்க வைத்து கைகளை தலைக்கு மேல் கூப்பி வணங்க உதவி செய்தனர்.
படுத்த வாக்கிலேயே தலையை மட்டும் லேசாக தூக்கி தன் கண்ணெதிரே சூரிய ஒளியில் மிளிர்ந்த ராஜ அலங்கார ஸ்ரீ சண்முகரை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டான் விகர்ணன். அவன் கண்கள் சிலையின் முகத்திலேயே லயித்திருக்க, “முருகா சரணம்!” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.
செங்கதிர் பட்டு ஜொலித்த சிலையின் அழகில் தன்னைத் தொலைத்த விகர்ணன், தன் பிரியமான ஸ்ரீ சண்முகரைப் பார்த்த வண்ணம் உயிர் நீத்தான். அவன் கண்களிலிருந்து புரப்பட்ட உயிரானது, ஸ்ரீசண்முகரின் பாதங்களைச் சென்று சேர்ந்திருந்தது.
******