சந்தியா மனதில் நிறைய வேதனை இருந்தது. அவர்கள் மதியம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு சென்ற போது. அங்கிருந்த பச்சிளங் குழந்தைகளின் வேதனையைப் பார்த்ததும் அவளுடைய வேதனை பின்னுக்கு சென்றுவிட்டது.
ஒரு குழந்தைக்கு மண்டை பெரிதாக வீங்கி இருந்தது என்றால். இன்னொரு குழந்தைக்கு பிறப்பு உறுப்பில் காயம் பட்டிருந்தது.மற்றொரு குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அது போல் எண்ணற்ற குழந்தைகள். அதைத் தவிர மற்ற நோய்களினால் வந்திருந்த குழந்தைகள் ஏறாலாம். அவர்களுக்கு என்ன செய்கிறது என்று சொல்ல கூடத் தெரியாத வயது.
அந்தப் பிள்ளைகளை விட அவர்களின் தாய்மார்களைப் பார்க்கும் போது தான் சந்தியாவுக்கு இன்னும் வேதனையாக இருந்தது. தங்கள் குழந்தைக்கு எப்படியாவது சரி ஆகிவிட வேண்டும் என்று உட்கார கூட இடம் இல்லாத இடத்தில், குழந்தையை வைத்துகொண்டு மருத்துவர்களுக்காக காத்திருந்தனர்.மருத்துவர்களை பார்த்ததும், எதோ கடவுளையே நேரில் பார்த்தது போல, அத்தனை பய பக்தியுடன் அவர்கள் எழுந்து நிற்பதை பார்த்து, தன் படிப்பின் முக்கியத்துவத்தை முழுவதுமாக சந்தியா உணர்ந்தாள்.
எப்போதும் அவள் நன்றாகவே படிப்பாள் தான். இத்தனை நாள் மருத்துவத்தையும் ஒரு படிப்பு என்ற அளவில் மட்டும் எண்ணி இருந்தவள், தன் படிப்பு தன்னை உயர்த்துவதற்கு மட்டும் அல்ல, மற்றவர்களின்நலன் காக்கவும் பயன்பட போகிறது என்பதை முழுமையாக உணர்ந்தாள். அதனால் கதிரை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதில் கவனம் செலுத்தினாள்.
இப்படியே ஒரு மாதம் சென்ற நிலையில், சித்தார்த்க்கு அவளைப் பார்த்து நிம்மதியாக இருந்தாலும். அவள் மொத்தமாக கதிரை ஒதுக்கி வைத்துவிட்டு இருப்பதில் விருப்பம் இல்லை.
கதிர் அன்று நடந்து கொண்டதற்கு எதாவது காரணம் இருக்கும் என்றே அவன் நம்பினான். இப்படியே விலகியே இருந்தால் இருவரின் பிரிவும் நிரந்தரம் ஆகிவிடுமோ என்று அஞ்சியவன் சந்தியாவை தேடிச் சென்றான்.
“சந்து உங்க மாமாவை பார்க்க போகலை…” என்று தூண்டில் போட, சந்தியா அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஹே! என்ன எதுக்கு முறைக்கிற? நான் கேட்டது உன்னோட தாய் மாமாவை….” என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“நான் எதுக்குப் போய் பார்க்கணும்?” என்று சந்தியா அலட்சியமாகக் கேட்க,
“உனக்கும் கதிருக்கும் தான் பிரச்சனை. உங்க மாமா என்ன செஞ்சார்? நீ இவ்வளவு சுயநலவாதியா சந்தியா? உன்னோட மாமா படுக்கையில இருக்கார். நீ போய் அவரைப் பார்க்காம இருக்கிறது நல்லாவா இருக்கும். உன் மாமா உன்னை வெறுக்கல இல்ல. நீ அவர் பொண்ணு ஓடிப்போக ஹெல்ப் செஞ்சும், அவர் உன் கிட்ட நல்லா தானே பேசுறார்….”என்றதும்,
“சும்மா நீயும் மத்தவங்களை மாதிரி நான் ஓடிப்போக உதவி செஞ்சேன்னு சொல்லாத சித்து. அவங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கப் போனதே எனக்குத் தெரியாது போதுமா…” என்று சந்தியா உணர்ச்சி வசப்பட்டுக் கத்த, அவள் சொன்னதைக் கேட்டு சித்தார்த் திகைத்து நின்றான்.
சுபாஷ்கு விஜயவாடாவில் உள்ள பெரிய மருந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை கிடைக்க, அதை அவன் காவேரியிடம் சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டான். காவேரி அவன் விஜயவாடா செல்வதை எண்ணி கவலைப்பட்டாள்.
“கவலைப்படாதே காவேரி, நீ இந்த வருஷம் படிப்பை முடிச்சதும், நாம கல்யாணம் செஞ்சிப்போம்…” என்று சுபாஷ் அவளை சமாதனம் செய்ய,
காவேரி கடைசி வருடத்தில் இருப்பதால். அவளுக்கு சீக்கிரமே மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று வீட்டில் பேசிக்கொள்வதாகச் சொன்னாள்.
“இப்பத்தான் எனக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சே. நான் வந்து உங்க வீட்ல பேசுறேன்…” என்றதும் காவேரி ரொம்ப பயந்தாள்.
“எங்க வீட்ல லவ் பண்றது தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாங்க….” என்றாள்.
அதைக் கேட்டு சுபாஷ்கு கோபம் வந்தது “அப்ப என்ன எதுக்கு லவ் பண்ண?” என்றான் வெடுக்கென்று.
காவேரிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது “தப்பு தான். என்னை மாதிரி கோழைங்க எல்லாம் லவ் பண்ணவே கூடாது. ஆனா நான் என்ன பண்றது? எனக்கு உங்களைப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுசே…” என்றாள் தவிப்பாக.
இப்போது சுபாஷ்கு யோசனையாக இருந்தது. ‘மண் குதிரைய நம்பி ஆத்துல இறங்கிற கதை தானோ நம்ம கதை. இவ இவங்க வீட்ல வேண்டான்னு சொல்லிட்டா. நம்மை விட்டுடுவாளோ, வேற ஜாதிங்கிறதுனால இவங்க வீட்ல ஒத்துக்கலைன்னா என்ன பண்றது? என்று குழம்ப ஆரம்பித்தான்.
காவேரி அவன் தீவிரமாக எதையோ யோசிப்பதை பார்த்து. என்ன யோசிக்கறீங்க? என்று கேட்க.
அவளையே பார்த்த சுபாஷ் “எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு. உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகலன்னா, நீ என்னோட வருவியா மாட்டியா…” என்று கேட்க, காவேரி தயங்கினாள்.
காவேரியின் வீட்டில் சென்று பெண் கேட்டு, அவர்கள் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால் காவேரி அவனுக்குக் கிடைப்பது கஷ்டமே.
அதோடு அவர்கள் வீட்டில் காதல் விஷயம் தெரிந்துவிட்டால், அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் மாட்டார்கள். அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன்.
“நீ நினைக்கிற மாதிரி இல்லை. நாம கல்யாணம் செஞ்சு அதைப் பதிவும் பண்ணிடலாம். நீ உங்க வீட்டுக்கு போய்டு. நான் விஜயவாடா போய்டுறேன். உன் படிப்பு முடிஞ்சதும், நான் உங்க வீட்ல வந்து பெண் கேட்கிறேன்…” என்றதும், இப்போது காவேரியின் முகம் கொஞ்சம் தெளிவானது. அதைப் பார்த்த சுபாஷ் தொடர்ந்து,
“அவங்க சரின்னு சொல்லிட்டா. நாம முன்னாடி கல்யாணம் செஞ்சிக்கிட்டத சொல்ல வேண்டாம். அப்படி ஒத்துக்கலைன்னா, நம்ம பதிவு திருமணத்தைக் காட்டி, நான் உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன்…” என்று சுபாஷ் சொன்னது, காவேரிக்கு ஒத்துக்கொள்ளும்படி இருந்தது.
வீட்டில் மெதுவாக தனக்குத் திருமணம் ஆன விஷயத்தைச் சொல்லிவிடுவோம் என்று நினைத்தாள். காதலிப்பதை சொல்லவே தைரியம் இல்லாதவள், இவள் திருமணம் செய்து கொண்டதை சொல்வாளா?
மதுரையில் ஒரு கோவிலில் வைத்துத் திருமணமும், பிறகு அங்கேயே பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துவிட்டு, மாலை வீடு வந்துவிடுவது என்று முடிவு செய்தனர்.
காவேரிக்கு மதுரை செல்ல காரணம் வேண்டும். அதற்கு அவளுக்குச் சந்தியாவின் தயவு தேவைப்பட்டது. அவள் சந்தியாவிடம் சென்று மதுரையில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியின் பெயரை சொல்லி “அங்க அப்பிலிகேஷன் வாங்கிட்டியா சந்தியா. நான் வேணா உனக்குத் துணைக்கு வரேன். நீ எங்க வீட்ல வந்து என்னைத் துணைக்குக் கூட்டிட்டு போறேன்னு கேளு.” என்று மெதுவாக தூண்டில் போட,
சந்தியா முதலில் “எதுக்கு மதுரை வரை போகணும், நான் இங்கயே பக்கத்தில இருக்கிற காலேஜ்ல படிக்கிறேனே….” என்றவளை “ஸ்டேட் ரேங்க் வாங்கிட்டு இங்க இருக்கிற காலேஜ்ல படிக்கிறேன்னு சொல்றியே. பெரிய காலேஜ்ல படிச்சா தான் மதிப்பு இருக்கும்…” என்ற காவேரியின் பேச்சு மாற்றியது. காவேரியின் சூது தெரியாமல் அதில் மாட்டினாள் சந்தியா.
வெள்ளிக்கிழமை அன்று காலை சந்தியாவும், காவேரியும் மதுரையை நோக்கி சென்றனர். காவேரி சற்றுப் பதட்டமாக இருப்பது போல் சந்தியாவுக்குத் தோன்றியது. ஆனால் அவள் காவேரியை எதுவும் கேட்கவில்லை.
மதுரையில் இருந்த கல்லூரியின் வாசலில் சுபாஷ் அவர்களுக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்ததும் காவேரி முகம் மலர, சந்தியா இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்? என்பது போல் பார்த்தாள்.
சுபாஷ் சந்தியாவிடம் நலம் விசாரிக்க, சந்தியா கருத்தே இல்லாமல் பதில் சொன்னாள். சுபாஷ் அவளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்தவள் அது அந்தக் கல்லூரியின் விண்ணப்பம் என்றதும் முகம் மலர்ந்து சுபாஷுக்கு நன்றி சொன்னவள்,
“காவேரி மதினி…. நாம வந்த வேலை முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்….” என்றதும் காவேரியின் முகம் மாறியது.
“அதுக்குள்ளயா, இரு சந்தியா பொறுமையா போவோம். மதுரைய ஒரு ரவுண்டு அடிச்சிட்டு கிளம்புவோம்…” என்று சுபாஷ் சாதாரணமாகச் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் வீட்ல தெரிஞ்சா கொன்னுடுவாங்க. நாங்க போறோம்.” என்று சந்தியா கிளம்புவதிலேயே குறியாக இருக்க, சுபாஷும், காவேரியும் அவளுக்குத் தெரியாமல் கண்களால் பேசிக்கொண்டனர்.
“இரு சந்தியா நாம வர லேட் ஆகும்னு சொல்லிட்டு தான வந்தோம். வந்ததுக்குக் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்….” என்று காவேரி சொல்ல,
“நீங்க வேணா இருந்துட்டு வாங்க, நான் போறேன்.” என்று சந்தியா பிடிவாதம் பிடித்தாள்.
“சுபாஷ் வெளியூருக்கு வேலைக்குப் போகப் போறாங்க சந்தியா… இன்னைக்கு விட்டா, நாங்க இனி பார்க்க முடியாது. புரிஞ்சிக்கோ ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள்…” என்று காவேரி கெஞ்ச, சந்தியா வேண்டா வெறுப்பாகச் சரி என்று தலை அசைத்தாள்.
மூவரும் ஒரு ஆட்டோவில் சென்று ஏற, சுபாஷ் ஒரு கோவிலின் பெயரை சொன்னதும், சந்தியா கோவிலுக்குத் தானே என்று நிம்மதி அடைந்தாள். கோவிலுக்கு அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று அவளுக்கு இன்னும் தெரியவில்லை.