அத்தியாயம் 14(2)
அதன்பின் அங்கே சில நிமிடங்கள் அமைதி நிலவியது. திடீரென்று யோசனை வந்தவனாக மிருதுளாவிடம் தேஜாவின் பொருட்கள், மருந்துகள் எல்லாம் எங்கிருக்கிறது என்று காண்பித்த கெளதம், கிட்சனுக்கும் அவளை அழைத்துச் சென்று என்னென்ன பொருட்கள் எங்கிருக்கிறது என்று அவளுக்குச் சொன்னவன் வீட்டை சுற்றி காண்பித்தான். அதற்குள் அவர்களின் மகள் தேஜா தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள, மிருதுளா அவளைச் சுத்தம் செய்துமுடிக்க, அவளைத் தூக்கிக்கொண்டு கெளதம் பால்கனிக்குச் சென்றான். அதற்குள் ஈரமாகி இருந்த படுக்கையைச் சுத்தம் செய்துவிட்டு, படுக்கை விரிப்பையும் மாற்றிவிட்டாள் மிருதுளா. தேஜாவிற்குச் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டிய கெளதம் அவளுக்குத் தூக்கம் வருவது போல் இருக்க, மீண்டும் வந்து மிருதுளாவிடம் அவளைக் கொடுத்தவன், “நீ தூங்கு மிருதுளா. நான் கொஞ்ச நேரம் பால்கனில இருந்துட்டு வரேன்.” என்றவன் அங்கிருந்த சாரில் சென்று அமர்ந்துகொண்டான்.
அவனின் நினைவு யாழினியை நோக்கி சென்றது. இதோ இந்த அறையில் அவளுடன் கழித்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வர, அவளை முதன் முதலில் சந்தித்தது முதல் அவள் இறந்தது வரை எல்லா நிகழ்வுகளும் இப்பொழுது தான் நடந்தது போல இருக்க, யாழினி இப்போது உயிரோடு இல்லை என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. யாழினியின் குரல் இப்பொழுதும் அவன் செவிகளில் கேட்பது போல இருக்க, அதன் தாக்கத்தில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கும் எண்ணமில்லாமல், தூரத்து இருட்டை வெரித்துக் கொண்டிருந்தான் கெளதம்.
கெளதம் தனியாகச் சென்று அமரும்பொழுதே, அவன் பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள் மிருதுளா. அவனின் நிலையை நினைக்கும்பொழுது, யாழினியை நினைத்து இவளுக்கும் கஷ்டமாக இருந்தது, இந்தச் சின்ன வயதில் அவள் இறந்து விட்டாளே என்று. மனதில் பாரத்துடன் தேஜாவை கட்டிலில் படுக்க வைத்தவள், தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டாள். மிருதுளாவின் கைகள் தேஜாவின் நெஞ்சை தட்டி கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவளின் கண்கள் கௌதமை தான் பார்த்துக் கொண்டிருந்தது. நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவளையும் அறியாமல், முன்னால் கணவன் சந்துருவின் நியாபகம் வர, அவனின் செயல்களும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. ‘எப்படி அவனால என்னைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது?!’ என்று நினைக்கையிலேயே, ‘பரம அய்யோகியனா இருக்கிறவங்க தான், யோக்கியன் வேஷம் போடுவாங்களாம்.’ என்று ஆரா அடிக்கடி சொல்வது நியாபகம் வர, அவளின் உதட்டில் வெறுமையான சிரிப்பொன்று உதிர்த்தது. ஏனோ கௌதமை நினைக்கையில் இப்படியும் நல்லவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றியது.
எண்ணங்களின் சுழற்சியில் தன்னையும் அறியாமல் மிருதுளா உறங்கிவிட, சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்த கெளதம், உறங்கும் தன் மனைவியின் முகத்தைத் தான் பார்த்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை நம்பி வந்திருக்கும் அவளை நினைக்கையில், “இவள் தான் எவ்வளவு நல்லவள்.” என்றே எண்ண தோன்றியது. தேஜாவிற்கு மறுபக்கம் படுத்துக்கொண்டவன், மன சோர்வில் சீக்கிரமே உறங்கி போனான்.
இருவரின் மனமும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் மற்றவரின் அருகாமையில் இயல்பாக இருக்க முடிந்தது. இப்படியாகவே அவர்களுக்கு நாட்கள் நகர்ந்தது. காலை எழுந்ததும் அனைவருக்கும் காபீ போட்டு கொடுக்கும் மிருதுளா, அடுத்து தேஜாவிற்கு வேண்டியதை செய்துவிட்டு வர, அதற்குள் காலை உணவிற்கு நேரம் ஆகிவிடும். அதன்பின் சகோதரர்கள் இருவரும் அலுவகலம் கிளம்ப ஆரம்பிக்க, சமையலை செய்துகொண்டே தேஜாவிற்கு உணவை ஊட்ட என்று அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பாள் மிருதுளா. ஒருவழியாக இரண்டையும் முடிக்க, கெளதம், ஜெய் இருவரும் உணவருந்திவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றபின்பு, எதிர் வீட்டில் இருக்கும் அன்னையுடன் காலை உணவை உண்டு முடிக்க அடுத்து தேஜாவுடன் நேரம் கழியும். மிருதுளாவின் தந்தை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வீட்டையும் வாடகைக்கு விட்டுவிட, பெற்றோர் இருவரும் ஆராவுடனேயே வந்து நிரந்தரமாகத் தங்கிக் கொண்டனர்.
இப்படியாக நாட்கள் செல்ல, ஒருநாள் ஜெய், தன் அண்ணனிடம், “நீ என்கிட்டே என்ன ண்ணா சொன்ன?” என்று கேட்க, அவனோ, என்னவென்பது போல முழிக்க, “அண்ணி எப்பவும் uncomfortable ah ஃபீல் பண்ணகூடாது. அது மாதிரி நடந்துக்கன்னு என்கிட்டே சொன்னல…” என்ற ஜெய் சொன்னதும் தான், ‘ஆமாம்’ என்பது போலத் தலை ஆட்டியவன், இப்பொழுது இதை எதற்குச் சொல்கிறாய் என்பது போலப் பார்க்க, அவனோ. என்னைச் சொல்லிட்டு நீ என்ன பண்ற?! ஏதோ பார்மலா கூப்பிடுற மாதிரி அண்ணியோட முழுப்பேரை சொல்லி கூப்பிடுற. நீ யாருன்னா அவங்களுக்கு, ஹஸ்பன்ட் தான. அதுக்கு ஏத்த மாதிரி கூப்பிடு.” என்று கூறிவிட்டு செல்ல, ‘ஓஹ்! இப்படி ஒரு விஷயம் இருக்கோ!’ என்று அப்பொழுதுதான் யோசிக்க ஆரம்பித்தான். அந்த எண்ணத்தில் உதித்தது தான் ‘ரிது’ என்ற அழைப்பு. ஆனால் அது ஆசையால் உதிக்கவில்லை மாறாக ஜெய் கூறியது போல ஏனோ அவனுக்குமே மிருதுளாவை முழுப் பெயரை சொல்லி கூப்பிடுவது அவளின் மனதுக்குள் ஒரு அந்நியத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற எண்ணத்தில் தான். கூடிய விரைவில் அது அன்பின் அழைப்பாக மாறகூடும்.
மிருதுளாவின் ஆலோசனையின் பெயரில், கடந்த ஒரு மாதமாக மாலை சீக்கிரம் வரும் கெளதம், மிருதுளா, தேஜா இருவரையும் அழைத்துக்கொண்டு பார்க்குக்குப் போய் வர ஆரம்பித்திருந்தான். அங்குச் சென்று சில மணிநேரம் இருப்பவர்கள், இரவு உணவிற்கு வீட்டிற்குத் திரும்புவார்கள். பார்க்கில் இருக்கும் நேரம் இருவரும் தங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று ஒருவரை ஒருவர் பற்றிப் பேசி தெரிந்துகொண்டனர். அப்படிதான் ஒரு நாள் கெளதம் மிருதுளாவிடம், “உனக்கு Ph.d பண்ணும்ன்னு ரொம்ப ஆசை. ஆனா அதுக்குள்ள உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆரா என்கிட்டே ஒரு முறை சொல்லி இருக்கிறா ரிது. இப்போ வேணா படிக்கிறியா?” என்று கேட்க, அவனின் இந்த அக்கறை மிருதுளாவிற்கு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நிச்சயம் அது அவளுடைய கனவு. ஆனால் படிக்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது தேஜாவை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால், “இப்போ வேண்டாங்க. பாப்பா கொஞ்சம் வளரட்டும். அதுக்கு அப்புறம் படிக்கிறேன்.” என்றுவிட்டாள்.
கெளதம் – மிருதுளா வாழ்க்கை தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருக்க, ஜெய்க்கு தான், அவன் நினைத்தது தலை கீழாக மாறிவிட்டது. ஜெய்யை பார்க்கும் நேரம் எல்லாம் ஒரு நாணம் கலந்த புன்னகை ஆராவின் முகத்தில் வந்துபோகும். வேலை விஷயமாகப் பேசும் போதும், அலுவகத்தில் நேருக்குநேர் பார்க்கும்போதும் சின்னப் புன்னகை ஒன்றை வீசிவிட்டு செல்வாள். ஆனால் இப்பொழுதெல்லாம் அந்தச் சின்னப் புன்னகைகூட, அவளின் முகத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை ஜெய்க்கு. வேலை விஷயமாக அழைத்தாலும் அலுவக வேலையாக மட்டும் பதில் சொல்பவள், அத்தோடு பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போலச் சென்றுவிடுவாள்.
எப்பொழுதில் இருந்து இப்படி, என்று இவன் யோசிக்கையில் சமீபமாகத் தான், அதுவும் கெளதம் மிருதுளா திருமணத்திற்குப் பிறகில் இருந்து தான் இப்படி இருக்கிறாள் என்று தோன்றியது. “என்ன ஆச்சு?! ஏன் இவ இப்படிப் பிகேவ் பண்றா?!” என்று குழப்பம் தான் மிஞ்சியது.
அப்படிதான் ஒரு நாள், அலுவலகத்தில் வைத்து, அலுவக வேலை போல அழைத்த ஜெய், “ஏன் ஆரா, இப்போலாம் வித்தாயசமா பிகேவ் பண்ற?!” என்று அவளிடம் நேரடியாகக் கேட்க, அவளோ, “என்ன வித்தியாசம் இருக்கு. எப்போவும் போலத் தான் இருக்கேன்.” என்று முகத்தில் அடித்தார் போலப் பதில் சொல்ல, “இல்லை ஆரா. நீ முன்னமாதிரி இல்ல. ஆபீஸ்ஸுக்கு வர, உன்னோட வேலையைப் பார்க்கிற. போற. ஒரு ஸ்மைல் இல்ல. ஒரு ஹாய் கூட இல்லை. நேர்ல பார்த்து சிரிச்சாகூடக் கண்டுக்காம போற. அதான் என்ன ஆச்சுனு கேட்கிறேன்?!” என்றவனின் குரலில் இப்பொழுது ஒரு கடினத்தன்மை வந்திருந்தது.
ஆனால் ஆராவோ அதைக் கண்டுகொள்ளாமல், “இங்க பாருங்க ஜெய். நான் எப்பவும் போலத் தான் இருக்கேன். மத்தவங்க கூட எப்படிப் பழகுறேனோ, அதே மாதிரி தான் உங்க கிட்டையும் பழகுறேன். நீங்களா ஏதேதோ கற்பனை செஞ்சுகிட்டா, அதுக்கு நான் பொறுப்பில்லை.” என்று கூறிவிட்டு நகரப் போனவளை கை பிடித்து நிறுத்தியவன், “மத்தவங்களும் நானும் உனக்கும் ஒன்னா?” என்று கண்களில் கோபத்துடன் கேட்க, அவனின் இறுக்கமான பிடியினால் ஏற்பட்ட வலியில் முகத்தைச் சுளித்தவள், “கையை விடுங்க ஜெய்.” என்று கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட, பக்கத்தில் இருந்த அனைவரும் இவர்களைத் தான் பார்த்தனர். ஜெய்யின் நண்பன் கூட, “டேய் ஜெய்! எல்லாரும் பார்க்கிறாங்க டா. சிஸ்டர் கையை விடு மொதல்ல.” என்று சத்தமில்லாமல் அவன் காதில் சொல்ல, அப்பொழுதுதான் சுற்றுபுறத்தை உணர்ந்தவன், அதே கோபத்துடன் ஆராவின் கையை உதற, அவளோ கன்றி சிவந்து இருந்த இடத்தைத் தடவி கொடுத்தவள், இவனை முறைத்துவிட்டு சென்றாள்.
ஆராவின் பேச்சு, இவனின் கோபத்தை மேலும் அதிகரித்துவிட, கோபத்துடன் சேரை எட்டி உதைத்தவன், யாரின் முகத்தையும் பார்க்க விரும்பாமல், கேபிடேரியாவுக்குச் சென்று விட்டான். சற்று முன்பு ஆரா நடந்துகொண்ட விதம் அவனுக்கே சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ‘ஒரு வேளை நாம தான், அவ நம்மளை லவ் பண்றான்னு தப்பா நினைச்சுட்டு இருக்கோமோ?!’ என்று கூட ஒரு நொடி தோன்றியது. ஆனால் அடுத்த நொடி ‘இல்லையே, அவ வந்ததில இருந்து பார்க்கிறேனே. ஆரம்பத்தில பேசாம அமைதியா இருந்தவ, போகப் போக நல்லா தான பேசுனா. அன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணப்ப கூட, அவ முகத்தில ஒரு வெட்கம் தெரிஞ்சுதே. அதுக்கு அப்புறம் தான, என்னைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சா. அந்தச் சிரிப்புல கூட ஒரு லவ் தெரியுமே. அவ சொல்ற மாதிரி மத்தவங்களும் நானும் அவளுக்கு ஒண்ணுன்னா, என் பிரிண்ட்சை பார்க்கும்போதும் இதே மாதிரியா சிரிக்கிறா? இல்லையே. அவ பார்வையிலேயே ஒரு ஒதுக்கமும், மரியாதையும் தெரியுதே. ஏன் அவங்களை ஆபிஸ் வெளிய பார்க்கும்போது கூட ‘ப்ரோ‘ ன்னு தான கூப்பிடுறா. ஆனா என்னை இதுவரைக்கும் அப்படிக் கூப்பிட்டது இல்லையே. ராஜேஷ் கூட அவகிட்ட ஒரு தடவை, எங்களை எல்லாம் அண்ணன்னு கூப்பிடுறீங்க, ஜெய்யை அப்படிக் கூப்பிட மாட்டேங்குறீங்க என்று கேட்டதற்குக் கூட, ஒன்றும் சொல்லாமல் சிரித்துவிட்டு தானே சென்றாள். இதையெல்லாம் விட, அண்ணன் கல்யாணத்தில கூட எப்போவும் அவ கண்ணு என்னைத் தான பார்த்துட்டு இருந்துச்சு. அந்தப் பார்வையில கூட ஒரு எதிர்பார்ப்பு இருந்துதே. லவ்வுக்கும், க்ரஸ்ஷுக்கும் கூட வித்யாசம் தெரியாத டீனேஜ் பையன் இல்லையே நான். பின்ன இப்போ ஏன் இப்படி நடந்துக்கிறா?!! கல்யாணத்தன்னைக்கு என்னமோ நடந்து இருக்கு. அன்னைக்கு ஈவ்னிங்ல இருந்து தான் இந்த மாதிரி நடந்துகிறா. என்னனு சொல்ல மாட்றா. வீட்டுப் பக்கம் மாட்டாமலையா போகப் போறா. இருடி அப்போ வச்சுகிறேன் உன்னை. என்கிட்டையே நடிக்கிறியா!!’ என்று மனதுக்குள் நினைத்தவன் ஒரு முடிவுடன் எழுந்து சென்றான்.