அத்தியாயம் 14(1)
கெளதம் – மிருதுளா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று, காலை நேர பரபரப்பில் தேஜா தன் சின்னஞ்சிறு கால்களால் தத்தி தத்தி நடந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, கையில் உணவு கிண்ணத்துடன் அவளைத் துரத்திக் கொண்டிருந்தாள் மிருதுளா. “அம்முகுட்டி ஒரு வாய் வாங்கிகோடா! அம்மா பாவம் டா. காலையில இருந்து உன் பின்னாடி தான் ஓடிட்டு இருக்கேன். ப்ளீஸ் டா குட்டிமா. ஆ….ஆ…ஒரு வாய்.” என்று நூறாவது தடவையாகப் புலம்பியபடி அவளைப் பின்தொடர, அவள் மகளோ இவளுடன் ஹைட் அண்ட் சீக் விளையாடி கொண்டிருந்தாள். இது தினமும் காலையில் நடக்கும் கூத்து. காட்சிகள், டயலாக் மாறாமல் இன்றும் அங்கே அரங்கேரி கொண்டிருக்கிறது. நடக்கக் கற்றுக் கொண்டதில், இருந்து தேஜாவிற்கு எப்பொழுதும் நடராஜா செர்வீஸ் தான். தூக்கி வைத்தால் கூடத் திமிறி கீழே இறங்கிவிடுவாள்.
இங்கே மிருதுளா தேஜா பின்னால் ஓடிக் கொண்டிருக்க, கெளதமோ அலுவகத்திற்குக் கிளம்பி கொண்டிருந்தான். அன்றைய தினம் அலுவகலம் எடுத்து செல்ல வேண்டிய பைலை தேடியவன் அது கிடைக்காமல் போகவே, “ரிது!” என்று மிருதுளாவை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வர, அதே நேரம் தேஜாவை துரத்திக்கொண்டு பின்னோடு மிருதுளாவும் அறைக்குள் நுழைய, இருவரும் நேருக்குநேர் மோதி கொண்டனர். தேஜாவிற்கு ஊட்டவென இருந்த சாதம், கௌதமின் சட்டைக்கு ஊட்டப்பட்டது. அந்தச் சுட்டியோ கௌதமின் கால்களின் இடைவெளியில் அறைக்குள் நுழைந்து கட்டிலின் அந்தப் பக்கம் போய் நின்றுகொண்டு தன் தாய்க்குப் பழுப்புக் காட்டியது.
கௌதமின் சட்டையில் சாதம் கொட்டியதில் பதறிய மிருதுளா, “ஐயோ! சாரிங்க. தெரியாம பட்டுடுச்சு. பாப்பா பின்னாடியே வந்ததில, நீங்க வர்றதை கவனிக்கல. சாரிங்க…ப்ளீஸ்…” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க, “ரிது. ரிலாக்ஸ். இட்ஸ் ஓகே.” என்று கெளதம் அவளைச் சமாதனம் செய்ய, அப்படியும் அவள் தர்மசங்கடாமாக நிற்பதை பார்த்து, “இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ரிது. பாப்பா இருந்தா இப்படிதான் இருக்கும். இதுக்கு முன்னாடி நானும் ஜெய்யும் எவ்வளவு வாங்கி இருக்கோம்.” என்று சிரித்துக்கொண்டு சொன்னவன், டிஸ்சுயு பேப்பரை எடுத்துச் சட்டையில் இருந்த சாதத்தைத் துடைத்து டஸ்ட்பின்னில் போட்டுவிட்டு, மெதுவாக நடந்து சென்று தேஜா எதிர்பார்க்காத நேரம் அவளைத் தூக்கிக்கொண்டு மிருதுளாவிடம் வந்தவன், “பட்டுகுட்டி, இதென்ன அட்டகாசம்? அம்மாவை கஷ்டபடுத்திட்டு இருக்கீங்க. ஒழுங்கா சமத்தா சாப்பிடனும். நல்லா சாப்பிட்டாதான பெரிய பொண்ணா வளர முடியும்.” என்று குழந்தையிடம் கூறியவன், மிருதுளாவிடம் திரும்பி, “போய்ச் சாதம் எடுத்துட்டு வா ரிது. இந்தப் பீ.டீ உஷா எங்கையும் ஓடாம நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு இவ ஒழுங்கா சாப்பிடல அவளுக்கு ஈவ்னிங் பார்க் விசிட் கட்.” என்று கூறியவன், கண்ணால் சைகை செய்ய, மிருதுளாவோ இதுதான் சந்தர்பம் என்று வேகவேகமாகச் சென்று சாதத்துடன் திரும்பி வர, ஒவ்வொரு வாய்க்கு அடம் பிடித்தவளை எப்படியோ போராடி சாப்பிட வைத்தனர் கௌதமும், மிருதுளாவும்.
அப்பொழுது அங்கே வந்த ஜெய், “அண்ணி!” என்று அழைக்க எதேர்ச்சையாக மூவரும் திரும்பி பார்க்க, தனது மொபைலில் அழகாக அந்தக் கட்சியைப் படம் பிடித்துக்கொண்டான். “ஜெய்!! ஏண்டா?!!” என்று கெளதம் அலுத்துக்கொள்ள, “ப்ரீசியஸ் மொமென்ட்ஸ் ண்ணா இதெல்லாம். எத்தனை வயசானாலும் பார்த்து சந்தோஷ படபோற சீன்ஸ். மிஸ் பண்ணவே கூடாது.” என்றவன், தான் எடுத்த போட்டோவை அவர்களிடம் காண்பிக்கச் சிரிப்பு தான் வந்தது அவர்களுக்கு.
ஏனெனில் மிருதுளா ஸ்பூனை தேஜா வாயில் திணித்திருக்க, வாயை திறக்க வேண்டிய அவளோ திறக்காமல் ஸ்பூனை பற்களால் கடித்துக்கொண்டு உதடுகளை இருக மூடி இருக்க, மாறாகக் கெளதம் மிருதுளா இருவரும் ‘ஆ’ என்று வாயை திறந்த மாதிரி ஜெய் பக்கம் திரும்பி இருக்க, அந்தக் காட்சி பார்க்க சிரிப்பாக இருந்தது.
ஜெய்யோ “என்னண்ணா சிரிக்குறீங்க!! எவ்வளவு கியுட்டா இருக்கு.” என்று கூறியவன் தேஜாவை சப்போர்ட்டுக்கு அழைக்க அந்தச் சுட்டியோ என்னவென்றே தெரியாமல் தலையை மேலும் கீழும் ஆட்ட, “ஹை-பை குடுடா குட்டிமா!” என்று அவள் முன் ஜெய் கையை நீட்ட அவன் கைகளில் தன் பிஞ்சு கைகளை வைத்து ஹை-பை கொடுத்து, வழக்கம் போல, தான் சித்தப்பன் கட்சி என்று நிருபித்தாள் அந்த வீட்டின் குட்டி ராணி. அதைப் பார்த்த கெளதம், மிருதுளா இருவருக்கும் பொறாமை. அப்பொழுது கடிகார முள் ஓசை எழுப்பி நேரம் ஆவதை உணர்த்த, தேஜாவை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு உடை மாற்ற சென்றான் கெளதம்.
அதன் பின், ஜெய் உணவருந்த டைனிங் டேபிளிலில் அமர்ந்தவன், தேஜாவை வாங்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டான். அடுத்தச் சில நிமிடங்களில் கிட்சனில் இருந்து உணவை கொண்டு வந்து டேபிளில் வைத்த மிருதுளா, “ஜெய் உங்களுக்கு ப்ரைட்ரைஸ் இதுல வச்சுருக்கேன். தொட்டுக்கச் சிப்ஸ் இதுல இருக்கு. மறக்காம சாப்பிடுங்க. நேத்து வேலைன்னு சாப்பிடவே இல்லை. எவ்வளவு வொர்க்னாலும் ஒரு பைவ் மினிட்ஸ்சாவது டைம் ஒதுக்கி சாப்பிட்டிடுங்க. வொர்க் பண்ண எனெர்ஜி வேண்டாமா!” என்று சொல்ல,
ஜெய்யோ, “அண்ணி எத்தனை தடவை சொல்றது உங்ககிட்ட, வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க. பேர் மட்டும் சொல்லுங்கன்னு.” என்று போலி கோபம் காட்ட, “அது எப்படி ஜெய். நீங்க என்னை விட மூத்தவங்க இல்லையா!” என்று அவளும் தயங்க, “ஒரு வருஷம் மூத்தவன். அதுக்குன்னு என்னைக் கிழவன் ரேஞ்சுக்குச் சொல்றது ரொம்ப ஓவர் அண்ணி. நான் என்ன அந்த வடிவேலுவா, உங்களை விட ஒரு வருஷம் முன்னாடி உலகத்தைப் பார்த்தவன்னு சொல்லிகிட்டா அலையுறேன்.” என்று அவன் பதில் சொல்ல, பக்கென்று சிரித்துவிட்டாள் மிருதுளா. “தப்பா எடுத்துக்காதீங்க ஜெய். சின்னவங்களே ஆனாலும் சட்டுன்னு பேர் சொல்லி கூப்பிட வரல. ப்ளீஸ். போகப் போக என்னைத் திருத்திக்கிறேன்.” என்று பதில் சொல்ல, அவனும் சரி என்பது போலப் புன்னகையுடன் தலை அசைத்தான்.
அதற்குள் கெளதம் டைனிங் டேபிள் வர, தேஜாவை தூக்கி டேபிள் மீது உட்கார வைத்துவிட்டு இருவரும் சாப்பிட்டு முடிக்க, வழக்கம் போலக் கௌதமிற்கு முன்பே ஜெய் கிளம்பி அலுவகலம் சென்றுவிட்டான். கெளதம் சாப்பிட்டு முடித்து லஞ்ச பாக்ஸை எடுத்துக்கொண்டவன் மிருதுளாவின் கையில் இருந்த தேஜாவின் கன்னத்தில் இதழ் பதித்தவன், “டாட்டா குட்டிமா. வரேன் ரிது.” என்று புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றான். கெளதம் புறப்பட்டதும், பால்கனிக்கு வந்தவள், அவன் செல்வதையே மேலே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவோ திருமண நாள் அன்று இரவுக்குச் சென்றது.
மணமக்களுக்குத் தனிமை கொடுக்கவென்று அனைவரும் மொட்டை மாடியில் படுத்துக்கொள்ள, பெண்கள் அனைவரும் ஆராவின் வீட்டில் படுத்துக்கொண்டனர். தேஜாவை மிருதுளாவின் தாய், அவருடன் அழைத்துச் செல்ல நினைக்க, வேண்டாம் என்று மறுத்துவிட்ட மிருதுளா, கெளதம் இருவரும், அவளைத் தங்களுடன் தூக்கிச்சென்றனர்.
அறைக்குள் வராமல் ஹாலிலேயே தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த மிருதுளா, “உள்ள வா மிருதுளா. எதுக்கு அங்கேயே நின்னுட்டு இருக்க?!” என்று கெளதம் அழைத்த பின்பே உள்ளே சென்றாள். அவளைக் கட்டிலில் உட்கார சொன்னவன், “எப்பவும் நீ uncomfortable ah ஃபீல் பண்ணகூடாது மிருதுளா. இது உன்னோட வீடு. தேஜாவுக்காகத் தான், நம்ம கல்யாணம் நடந்ததுன்னாலும், நம்ம பொண்ணோட அம்மாவா மட்டும் உன்னை நான் கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வரல. இந்த வீட்டுக்கு மருமகளா, அப்பாக்கு பொண்ணா, ஜெய்க்கு அண்ணியா, அப்புறம் எனக்கு மனைவியா இப்படி எல்லா உறவாவும் தான் உன்னைக் கடவுள் சாட்சியா கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்துருக்கேன். இந்த வீட்டுக்கு எல்லாமுமா நீ தான் இருக்கணும். இருக்கப் போற. யாழினிக்கு இந்த வீட்டில என்ன உரிமை, உறவு இருந்ததோ அது இப்போ உன்னோடது. இதுல எந்த மாற்றமும் இல்லை.”
“எல்லாருக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் மிருதுளா. தேஜா குட்டிக்கு, அப்பாக்கு, ஜெய்க்கு. எனக்கும் உன்னைப் பிடிக்கும். நான் பார்த்தவரைக்கும் உன்னோட இந்த அமைதி, பெரியவங்ககிட்ட காட்டுற மரியாதை எல்லாம் எனக்குப் பிடிச்ச விஷயம் மிருதுளா. யாழினியும் நீயும் எல்லா விஷயத்திலையும் ஒரே மாதிரி. ஆனா அவ ரொம்பச் சுட்டி தனம் பண்ணுவா. நீ ரொம்பச் சைலன்ட்.” என்று சொல்லிவிட்டு லேசாகப் புன்னகைத்தவன், “என்…எனக்குக் கொஞ்சம் டைம் கொடு மிருதுளா. என்னால யாழினியை…” என்று சொல்லும்போதே மனைவியின் நினைவில் அவன் குரல் உடைய, கண்கள் கலங்கிவிட்டது. அடுத்த வார்த்தை வரவில்லை. ஏதோ ஒன்று தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது போல இருந்தது.
சில நொடிகள் கண்களை இறுக மூடி தன்னைச் சமன் செய்து கொண்டவன் பின்பு குரலை செருமிக்கொண்டு, “யாழினியை மறக்கிறது ரொம்பக் கஷ்டம் தான் மிருதுளா. அவ இல்லாம நான் இல்லை. அவ எனக்கு வைப்ன்னு சொல்றதை விட, அவ தான் என்னோட லைப். அம்மா இல்லாத எனக்கும் ஜெய்க்கும் அவ தான் அம்மாவா இருந்தா. அதே நேரம் எங்களோட குழந்தையாவும் இருந்தா. அவ்வளவு சேட்டை பண்ணுவா.” என்றவன், மிருதுளாவின் முகத்தைப் பார்த்து, “இந்த நேரத்தில இப்படி எல்லாம் பேசுறேன்னு தப்பா நினைக்காத மிருதுளா. எல்லா மனுஷங்களும் ஒரு நாள் மாறுவாங்க. அது மாதிரி ஒரு நாள் நானும் மனசு மாறி உனக்கு நல்ல ஹஸ்பன்டா இருப்பேன்னு நம்புறேன். அதுவரைக்கும்…” என்று மேற்கொண்டு பேச போனவனை இடைமறித்த மிருதுளா, “எனக்கு இந்த அளவுக்கு உரிமை கொடுத்ததுக்கே நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். தேஜா என் வாழ்கையில வராம இருந்திருந்தா, நான் என்னவாகி இருப்பேன்னு எனக்கே தெரியாது. நான் பெத்த குழந்தையோட குரலை கூட நான் கேக்கல. அவ முகத்தைக் கூடப் பாக்க, எனக்குக் கொடுத்து வைக்கல. அதுக்குள்ள இறந்து போய்ட்டா.” என்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் தேங்க, அதையெல்லாம் கருத்தில் கொள்ளலாமல் தன் பேச்சை தொடர்ந்தாள். “தேஜா என் வாழ்க்கைக்குக் கிடைச்ச பொக்கிஷம். அவளுக்கு அம்மாவா இருக்கிறதுக்கு நான் ரொம்பக் குடுத்து வச்சுருக்கனும். தேஜாவோட ‘அம்மா’ன்ற உரிமை ஒன்னை தான் உங்ககிட்ட நான் எதிர்பார்த்தேன். வேற எதையும் எதிர்பார்த்து நான் உங்களைக் கல்யணம் செஞ்சுக்கல. நீங்க என்னை நினைச்சு உங்களைக் கஷ்டபடுத்திக்க வேண்டாங்க ப்ளீஸ். எனக்குத் தேஜாவும், நம்ம குடும்பமும் போதும். இதுவே மனசு நிறைஞ்சு இருக்கு. இதுக்கு மேல எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க அதைத் தன் கைகளால் துடைத்துவிட்டான் அவளின் கணவன் (நண்பன்) கெளதம்.