அத்தியாயம் 17
கெளதம் போனில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன், “யாரு ண்ணா?” என்று கேட்க, அவனோ, “என்னோட காலேஜ் ஃபிரன்ட் சொல்லி இருக்கேனே டா, சுந்தர்ன்னு. அவன் தான், என்னோட கல்யாணத்துல ஆராவை பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். அப்பவே பொண்ணு கேட்டு வந்திருப்பான். ஆனா அதுக்குள்ள ஆன்சைட் போக வேண்டியதா போச்சு போல. இப்போதான் ஒன் வீக் முன்னாடி வந்தான். அதான் வீட்டில பெரியவங்ககிட்ட சொல்லி உடனே பொண்ணு கேட்டு வந்துட்டான். ஆரா உன்னோட டீம் தான, ரெண்டு பெரும் ஆபீஸ்ல சொல்லிட்டு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வா ஜெய். இங்க எல்லாரும் வெயிட்டிங்.” என்று சொன்னவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், அடக்கிக் கொண்டு சீரியஸாகச் சொல்வது போல் சொல்லிவிட்டு வைத்தான்.
சரி என்று போனை வைத்த ஜெய், “டேய், எனக்குன்னு எங்க இருந்துடா வரீங்க. இவளே இப்போதான் கொஞ்சமாவது லவ்வை ஃபீல் பண்ண ஆரம்பிச்சு இருக்கா. அதுக்குள்ள…டேய்.” என்று மனதுக்குள் நொந்து கொண்டவன், ஆராவை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
இவர்களுக்காக வராண்டாவிலேயே காத்திருந்த மிருதுளா, அவர்கள் வந்ததும், “ஜெய் மாப்பிளை வீட்டுகாரங்க மாமா வீட்டில இருக்காங்க. நீங்க போங்க. ஆரா ரெப்ரெஷ் செஞ்சுட்டு ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவா.” என்றவள், ஆரா பக்கம் திரும்பி, “நீ வா ட்ரெஸ் சேஞ் பண்ண.” என்றவள் ஜெய்யை அவர்கள் வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு ஆராவை உடை மாற்ற அழைத்துச் சென்றாள்.
ஜெய் தன் வீட்டிற்குள் நுழைய, ஹாலில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர். மரியாதைக்காகச் சுந்தரின் பெற்றோரை வரவேற்றவன், சுந்தரிடம், சின்ன நல விசாரிப்புக்கு பிறகு, ரெப்ரெஷ் செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான். பத்து நிமிடத்தில் ஜெய் வெளியே வர, அதே நேரம், மிருதுளாவும் ஆராவை அலங்கரித்து அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். ஜெய்க்கு பிடித்த ராமர்நீள சிம்பிள் பட்டுபுடவையை அவள் உடுத்தி இருக்க, தலை பின்னப்பட்டுத் தழையைத் தழையை மல்லிகை பூ அவளின் ஜடையில் சூடப்பட்டுத் தோள் வழியே தவழ்ந்தது. ஆனால் அவள் கண்கள் கலங்கி இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. இல்லை கவனிக்காதது போல இருந்தனரா தெரியவில்லை?!
ஆராவை பார்க்க பார்க்க, ஜெய்க்குக் கோபம் அதிகரித்துக்கொண்டே போனது. தன் கண்முன்னே, இன்னொருவன் முன், தான் காதலிக்கும் பெண், அலங்கரிக்கபட்டு நிற்க வைக்கப்படுவது எந்தக் காதலனுக்குத் தான் பிடிக்கும். ஜெய்யுடைய கோபத்தின் அளவை போல, அவனின் கை முஷ்டி இறுகி போயிருந்தது.
ஆனால் இங்கே மாப்பிளையாக அமர்ந்திருக்கும் சுந்தரோ, கண்காளாலே கௌதமிடம் கெஞ்சி கொண்டிருந்தான். “டேய் பாவம் டா சிஸ்டர். கண்ணு கலங்கி இருக்கு டா. அழறாங்க போல.” என்று சொல்ல, கெளதமோ, “ச்சு, அமைதியா இருடா. கெடுத்துடாத.” என்று பார்வையால் பதில் சொல்ல, அவனை முறைத்த சுந்தர், “ஏன் டா சொல்ல மாட்ட. கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தவனை, கோழி அமுக்குற மாதிரி அமுக்கி மாப்பிள்ளையா நடிக்க விட்டுடீங்களே டா!! மொத்த குடும்பமும் நம்பியார் குடும்பம்ன்னு தெரியாம, பத்திரிக்கை கொடுக்க வந்து மாட்டிகிட்டேனே!! இங்க இப்படி ஒரு வில்லங்கம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, இந்தப் பக்கமே தலை வச்சுப் படுத்திருக்க மாட்டேனே!! எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் டா. என் வருங்காலப் பொண்டாட்டி பார்த்தா, என்னைத் தோலை உருச்சி உப்புகண்டம் போட்டுடுவா டா. முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் கல்யாணம் முடிவாகி இருக்கு. அதைக் கெடுத்துடாதீங்க டா. போதும் டா. ஆட்டையைக் கலைங்க டா.” என்று கிட்டத்தட்ட அழுது விடுபவன் போல முகத்தை வைக்க, இங்கே கெளதமோ தன் நண்பனை பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தான். பதிலுக்குச் சுந்தரோ, “டேய்! டேய்! இங்க பாருடா! அடேய்! கிராதகா! அடபடுபாவி! சாச்சுபுட்டியே மாச்சான். சாச்சுபுட்டியே!” என்று முகத்தைத் தொங்க போட்டவன் அடுத்த நொடி முகத்தை நிமிர்த்திக்கொண்டான். இல்லையேல் தனுஷ் படத்தில் வருவதுபோல, யாரேனும், “மாப்பிளைக்கு வெக்கத்தைப் பாரு!” என்று சொல்லிவிடக் கூடாதே.
இங்கே இவன் இப்படிப் புலம்பிகொண்டிருக்க, அவனின் தாயோ, “பொண்ணு மகாலட்சுமி மாதிரி அழகா இருக்கா. தம்பி கொடுத்துவச்சவன்” என்று மறைமுகமாக ஜெய்யை குறித்து சொல்ல, சுந்தரோ, படார் என்று திரும்பி தன் தாயை பார்த்தவன், ‘குடுத்த காசுக்கு மேல கூவுறியே ம்மா!’ என்று மனதுக்குள் நினைக்க, அவரோ, “என்னடா?!” என்று அவனை முறைக்க, ‘ஈஈஈ!!!’ என்று பல்லைகாட்டி, “ஒன்னுமில்லையே! ஒன்ன்ன்ன்னுமில்லை.” என்று இழுத்து சொல்ல அவரோ, “போடா!!” என்று மேவாயை தோளில் இடித்துகொண்டார். ‘நடிகை ஆகணும்ன்ற இவங்ககளோட சின்ன வயசு ஆசையை என்னை வச்சு செஞ்சுடுவாங்க போலவே. கீது மா, நம்மளை பிரிக்க, இங்க ஒரு கூட்டமே சதி செஞ்சுட்டு இருக்கு. சீக்கிரம் ஏதாவது பண்ணு.’ என்று நினைத்தவனுக்கு, அவனின் மொபைல் போன் நியாபகம் வர, ‘வேலையா இருக்கும்போதுலாம் சும்மா சும்மா ஃபோனை போட்டு, அத்தான் பொத்தான்னு தொல்லை பண்ணுவியே. இப்போ பண்ண மாட்றியே டி.’ என்று நொந்தவன், நிமிர்ந்து பார்க்க, கெளதம் இவனைப் பார்ப்பதை பார்த்தவன், ‘ஆஹா! இவன் வேற குருகுன்னு பார்குறானே. ஃபோனை தூக்கிட்டு ஓடிடுவானோ? எதுக்கும் ஃபோனை பத்திரமா வச்சுக்கணும்.’ என்றவனின் கைகள் சட்டை பாக்கெட்டை இறுக பற்றிக்கொண்டது.
இங்கே சுந்தர் உள்ளுக்குள் நொந்து கொண்டிருப்பது தெரியாமல், அவனை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் ஜெய். ‘இப்படி என் ஆளை பொண்ணு கேட்டு வருவன்னு தெரிஞ்சிருந்தா, அண்ணன் கல்யாணத்துக்கு உன்னை மண்டபத்துகுள்ளயே நுழைய விட்டுருக்க மாட்டேனே!! பாக்குறதை பாரு, முழுங்கிடற மாதிரி. வெளிய தனியா மாட்டுவல, நல்லா ஊமைகுத்தா குத்துறேன். அந்த அடில, நீயே ஆராவை வேண்டாம்னு சொல்லிட்டு ஓடிருவ.’
அதற்குள் பெரியவர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க, “பொண்ணுக்கு சம்மதம்ன்னா இப்போவே தட்டை மாத்திக்கலாமே!!” என்று கௌதமின் தந்தை சொல்ல, கெளதம், ஆராவிடம் திரும்பி, “உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா ஆரா?” என்று கேட்க, அவளோ தலையைக் குனிந்து கொண்டாள். “அப்புறம் என்ன, அதான் பொண்ணே தனக்குச் சம்மதம்ன்னு சொல்லிடுச்சே. தட்டை மாத்தி உறுதி படுத்திக்க வேண்டியதுதான.” என்று பெரியவர்கள் சொல்ல, மிருதுளா சென்று தட்டில் பூ, பழம், பாக்கு வெத்தலை போன்ற பொருட்களை எல்லாம் வைத்து, எடுத்து வந்து கௌதமிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி ஆராவின் பெற்றோரிடம் கொடுக்கச் சென்றான்.
‘டேய் விட்டா, உண்மையா கல்யாணமே செஞ்சு வச்சுடுவ போலையே?!’ என்றபடி நடக்கும் காட்சிகளைச் கலவரத்துடன் சுந்தர் பார்த்துக்கொண்டிருக்க, ஜெய்யோ பற்களைக் கடித்துக்கொண்டு, ஆராவை கோபமாகத் திரும்பி பார்க்க, அவளோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. “இஷ்டம் இல்லைன்னு வாயை திறந்து சொல்றாளான்னு பாரு.” என்று கை முஷ்டியை இறுக்கியவனுக்கு, தொண்டைகுழி வரை வார்த்தைகள் வந்திருந்தது. ஆரா வாயை திறப்பாளா என்று ஒவ்வொரு நொடியும் அவன் எதிர்பார்க்க, அவளோ வாயை பசைப் போட்டு ஒட்டிகொண்டது போல நின்று கொண்டிருந்தாள்.
இங்கே கெளதம், தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு ஸ்லொ மோஷனில் மெதுவாக, ஆராவின் பெற்றோரை நோக்கி செல்ல, அவன் மனமோ, ‘ரெண்டு பேர்ல யாராவது வாயை துறங்கடா.’ என்று சொல்லி கொண்டிருந்தது. எவ்வளவு தான் மெதுவாக நடந்தாலும், வீட்டிற்குள் என்ன கிலோமீட்டர் அளவிலா தூரம் இருக்கப் போகிறது, மிஞ்சிமிஞ்சி போனால் சில பல அடிகள். இதோ மோகன் எழுந்து தட்டை வாங்கியவர், கௌதமின் முகத்தைப் பார்க்க, அவனோ, “கொடுங்க மாமா. அதுல ஒன்னும் இல்லை” என்று மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல, சரி என்று வாங்கிகொண்டார். சுந்தரோ, இல்லாத நகத்தை விடுத்து, சதையைக் கடித்துக்கொண்டு திகிலுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிட்டதட்ட சுந்தரின் பெற்றோர் எழுத்து கைகளை நீட்டும் வரை பொறுத்து பொறுத்து பார்த்த ஜெய், ஆரா வாயை திறக்க மாட்டாள் என்பதைப் புரிந்துகொண்டு, அடுத்த வினாடி, “என்னை மன்னிச்சிடுங்க. நானும் ஆராவும் லவ் பண்றோம்.” என்று பட்டென்று எல்லோர் முகம் பார்த்து சொல்லிவிட, கிட்டதட்ட மனதளவில் மயக்க நிலைக்குச் சென்றிருந்தான் அந்தப் புது மாப்பிள்ளை.
ஏதோ தெரியாத விஷயத்தைக் கேட்பது போல அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கெளதமோ, “என்னடா சொல்ற?!” என்று போலியான அதிர்ச்சியை வெளிபடுத்த, “ஆமாம் ண்ணா. நானும் அவளும் லவ் பண்றோம்.” என்று சொல்லிவிட்டு ஜெய் தலை குனிய, ஆரா பக்கம் திரும்பிய கெளதம், “ஜெய் சொல்றது உண்மையா ஆரா?!” என்று கேட்க, அப்பொழுதும் அவள் உதடுகள் அமைதி காத்தது. அவளின் மவுனத்தைப் பார்த்து கொலைவெறியான ஜெய், வேகமாக அவள் அருகில் வந்து, “இப்பவாச்சும் வாயை திறந்து சொல்லு ஆரா. நீ என்னை லவ் பண்றியா இல்லையா?!” என்று குரலை உயர்த்த, அந்தச் சத்தத்தில், ஆராவிற்கு உடல் தூக்கிவாரி போட்டது. கூடவே மடை திறந்த அணையெனக் கண்ணீர் வழிந்தது. “இப்படி அழுதழுது அமைதியா இருக்காத டி. வாயை திறந்து சொல்லு. என்னை லவ் பண்றியா இல்லையா?!” என்று அவன் கர்ஜிக்க, அதற்கும் பதில் இல்லது போக, சட்டென்று அவளின் கையைப் பிடித்துத் தன் தலையில் வைத்துக்கொண்டவன், “என் மேல சத்தியமா சொல்லுடி. என்னை நீ லவ் பண்றியா இல்லையா??” என்று சொன்னவனின் கண்கள் அனலை கக்கியது.
ஜெய்யின் இந்தத் திடீர் செயலில், அதிர்ந்தவள், கையை உருவிகொள்ள முயற்சிக்க, அவனின் இரும்புபிடியோ, விட்டால் இப்பொழுதே தூக்கிச்சென்று தாலியை கட்டிவிடுபவன் போன்ற உறுதியை காட்டியது. மிருதுளா ஆராவை நோக்கி அடியெடுத்து வைக்க, அவளைத் தடுத்த கெளதம், ‘அவர்களே பேசிக் கொள்ளட்டும்.’ என்று பார்வையால் சொன்னான். பெரியவர்களும் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். சுந்தரோ, ‘அவகிட்டயே இந்தக் கத்து கத்துறானே. அந்தப் பொண்ணு மட்டும் சரி சொல்லி இருந்தா, என்னை மர்டரே செஞ்சுருப்பான் போலையே!’ என்று வாயை பிளந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சொல்லு ஆரா. வாயை திறந்து பதில் சொல்லு. நான் நல்லா இருக்கணும்னு அமைதியா இருக்காத டி. நீ இல்லாம நான் நல்லா இருக்க மாட்டேன். நிச்சயமா சொல்றேன். நீ இல்லாத வாழ்கை எனக்கு வேண்டாம். வாழ்க்கை புள்ளா இப்படியே இருந்துடுவேன். முடியலனா செத்து போயடுவேன்.” என்று ஆக்ரோஷமாகச் சொல்லவும், அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுபடுத்திகொள்ள முடியாத ஆரா, “ஆமா. நான் உங்களை லவ் பண்றேன். உயிருக்கு உயிரா லவ் பண்றேன். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு கதறி அழ, அதன் பிறகு தான் ஜெய்யின் பிடி தளர்ந்தது. அதற்குள் மிருதுளா ஆரா அருகில் நெருங்கி இருக்க, அழுகையுடன் தன் அக்காவை அணைத்து கொண்டவள், “என்னை மன்னிச்சிடு க்கா. அவரை நான் மனசார விரும்புறேன். ஆனா இதை உங்க யார்கிட்டயும் சொல்லல. என்னை மனிச்சிடு க்கா ப்ளீஸ்.” என்று சொல்லி கதற, தங்கையின் முதுகை தடவி சமாதானம் செய்தாள் மிருதுளா.
கெளதமோ, ஜெய்யின் தோளில் கைவைக்க, கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்த ஜெய், “சாரி ண்ணா. என்…என்னால அவளை யாருக்கும் விட்டுகொடுக்க முடியாது. ஆராகிட்ட பேசிட்டுக் கூடிய சீக்கிரம் உங்ககிட்ட சொல்லாம்ன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள….சாரி ண்ணா உங்களுக்குக் கஷ்டம் கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ண்ணா.” என்று கண்கலங்க, ஆறுதலாக அவனை அணைத்துக்கொண்டவன், “எங்களுக்கு எல்லாம் தெரியும் ஜெய். உங்க வாயில இருந்து வரவைக்கதான் இந்தப் பொண்ணு பார்க்கிற நாடகமே.” என்று எல்லாவற்றையும் சொல்ல, ஆரா, ஜெய் இருவரும் சந்தோஷத்துடன் நிமிர்ந்து பார்த்தனர். அதன்பிறகு அங்கே சந்தோஷ சிரிப்பலை தான்.
சுந்தரோ, “கடைசில என் தலையை உருட்டிடான் டா. உன் ஆண்ணன்.” என்று சொல்லி சிரிக்க, அவனைப் பார்த்துச் சங்கடமாகச் சிரித்த ஜெய், “சாரி சுந்தர் ண்ணா. இது நடிப்புன்னு தெரியாம…” என்றவனைத் தடுத்தவன், “தெரியும் தம்பி. என்ன செஞ்சு இருப்பன்னு. மனசுக்குள்ள என்னை நல்லா வச்சு செஞ்சுருப்ப. அதான் உன் கண்ணுலையே அவ்வளவு கோபம் தெரியுதே. என்னை உயிரோட விட்டதே பெரிய விஷயம்.“ என்று சொல்லிவிட்டு சிரிக்க, ஜெய்க்கு தான் சங்கடமாகப் போயிற்று.
அடுத்துப் பெரியவர்கள் எல்லாம் பேசி, அடுத்த முஹூர்த்ததில் அரா- ஜெய் திருமணத்தை முடிவு செய்தனர். அதற்கு முந்தைய நாள் நிச்சயமும், அடுத்த நாள் காலை திருமணமும் வைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. திருமணம் முடிவானதும், சந்தோஷத்துடன் ஜெய்யை ஆரா பார்க்க, அவனோ இவளை ஒரு தடவை கூடத் திரும்பி பார்க்கவில்லை.
அதற்கடுத்து வந்த நாட்களில் திருமண வேலைகள் வேகமாக நடந்தது. அனைவருக்கும் ஆடைகள் வாங்குவது, ஆராவிற்கு நகைகள் வாங்க, இன்னபிற வேலைகள் என்று நாட்கள் சென்று கொண்டிருக்க, அன்றைய தினம், ஆண்கள் மூவரும் திருமண வேலையாக வெளியே சென்றிருந்தனர். தேஜாவை ஆராவிடம் விளையாட விட்டுவிட்டு தன் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தாள் மிருதுளா.
ஒவ்வொரு அறையாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள், இறுதியாகக் கெளதம் அறையைச் செய்து கொண்டிருக்க, பரண் மேல் இருந்த பொருட்களை எல்லாம் கீழே இறக்கி வைப்பதற்காக இரண்டு பக்க படிகள் கொண்ட ஏணியை எடுத்துபோட்டு அதில் ஏறி எல்லாவற்றையும் கீழே இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கிருந்த பொருட்களுக்கு நடுவில் ஒரு லெதர் ஃபைல் ஒன்று இருக்க, அதை எடுத்து பார்த்தாள். அதில் முகப்புப் பகுதியில் ‘தேஜா’ என்று பெயர் எழுதப்பட்டிருக்க, அதைப் பார்த்தவள், ‘ஒரு வேளை தேஜாவின் மருத்துவ விவரங்கள் எதுவும் இருக்குமோ?!’ என்று நினைத்து அந்த ஃபைலை திறக்க சென்ற நேரம், வெளியே செண்டிருந்த கௌதம் வீட்டிற்கு வந்தவன், மிருதுளாவை தேடி அறைக்கு வர, அவன் கண்களில் தேஜா அந்தப் பைலை திறக்கபோகும் காட்சி பட்டது.
அவள் கையில் அந்தப் பைல் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தவன், என்ன செய்வது என்று தெரியாமல், “மிருதுளா!!” என்று சத்தமாக அழைத்துவிட, ஆர்வத்தோடு ஃபைலை திறக்க போனவளுக்கு, திடீர் என்று பின்னால் கேட்ட கௌதமின் குரல் திடிக்கிட செய்ய, சட்டென்று திரும்பியவளுக்கு, கால், ஏணியின் நுனியில் வழுக்கிவிட, அப்படியே அவள் தரையில் விழப்போக, வாசலின் அருகிலேயே கெளதம் நின்று கொண்டிருந்ததால், உடனே சுதாரித்தவன் ஓடிச்சென்று அவளைத் தாங்கி பிடிக்க, ஆனால் அவளின் எடை இவனையும் சேர்த்திழுக்க, அவளோடு சேர்ந்து தரையில் விழுந்தான். ஏணியோ மிருதுளாவின் கால்கள் உந்தி தள்ளியதில், பின்னோக்கி நகர்ந்து பீரோவில் மோதி சாய்ந்து நின்றது.
மிருதுளாவின் மேலேயே கௌதமும் விழ, இருவரின் நெற்றியும் நேருக்குநேர் மோதிக்கொள்ள, “ஸ்ஸ்…ஆஅ!!” என்று வலியில் லேசாக முகத்தை சுருக்கியவள், கௌதமிற்கும் அடிபட்டிருக்குமோ என்று நினைத்து அவன் முகம் பார்க்க, அவனோ இவளை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன பார்க்கிறான்?’ என்று புரியாமல் பார்த்தவளுக்கு அவனின் பார்வையின் அர்த்தம் புரிய, முகம் சிவக்க, வெட்கம் எட்டிப்பார்த்தது.
வெள்ளிக்கிழமை என்பதால், அவள் தலைக்குக் குளித்திருந்தாள். வகுட்டில் கும்குமம் இருக்க, அதற்குக் கீழே, இரு புருவங்களுக்கும் நடுவில் கருப்பு பொட்டும், அதற்கு மேலே கீழே அரணாக, திருநீறும் குங்குமமும், இடபட்டிருந்தது. காலையில் இருந்து வேலை செய்ததில், முகம் முழுவதும் வேர்வை துளிகள் முத்துமுத்தாக பூத்திருக்க, முடிகற்றைகள் ஈரத்தில் ஒட்டியிருக்க, பார்ப்பதற்கே அழகோவியமாக இருந்தாள் கௌதமின் மனையாள். இது எல்லாவற்றுக்கும் திருஷ்டி பொட்டாக, அவளின் புருவம், இமை முடி, மூக்கின் நுனி, தலை என்று முகம் முழுவதும் ஒட்டடை ஒட்டியிருந்தது.
அவள் முகத்தையே அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தவன், “ரிது!” என்று ரகசிய குரலில் அழைக்க, அவளோ, “ஹம்!” என்று உள்ளே போன குரலில் பதில் சொல்ல, “கண்ணுல தூசி இருக்கு.” என்றான் இவன். ஐயையோ! எங்கங்க?!” என்று மிருதுளா அவனின் முகத்தை ஆராய, “என் முகத்தில இல்ல. உன்னோட முகத்தில.” என்றான். “ஓஹ!” என்றவள் தன் முகத்தைத் துடைக்க முயற்சிக்க, அவளது கைகளை எடுத்துவிட்டவன், “தெரியாம தொடச்சு, கண்ணுக்குள்ள தூசிய தள்ளிடாத ரிது. கண்ணை மூடு.” என்று சொல்ல, அவளோ அவன் பேச்சை நம்பி கண்களை மூடினாள்.
தலையில் இருந்தவற்றை எடுத்துவிட்டவன், அவளின் நெற்றியில் வியர்வையில் ஒட்டி இருந்த முடிகற்றையை ஒற்றை விரலால் மெதுவாக ஒதுக்கிவிட, அவளோ கூச்சத்தில் நெளிந்தாள். ஒவ்வொரு தூசியாக எடுத்துக்கொண்டு வந்தவன், அவள் இமையில் இருந்தவற்றை எடுக்கப் போக, அடர்த்தியான வில்வடிவ புருவத்தின் கீழ் இருந்த அந்த மீன் வடிவ கண்கள் அவனை ஈர்க்க, ஒரு நொடி தயங்கியவன், பின் மெதுவாகக் குனிந்து அவள் கண்களில் மிருதுவாகத் தன் இதழ்களைப் பதித்தான்.
அந்த ஈரஸ்பரிசத்தை உணர்ந்தவள், சட்டென்று கண்களைத் திறந்து பார்க்க, அவனின் பார்வையோ அவளின் இதழ்களில் நிலைத்திருந்தது. ஏனோ இந்த அடுத்தடுத்த செயல்கள் அவளுக்கு அதிகமாகத் தெரிய, “பாப்பா வந்துடுவா.” என்று மெதுவாக சொல்ல, அந்த வார்த்தையில், கனவில் இருந்து மீண்டவன், “சாரி ரிது.” என்றுவிட்டு அவள் மேல் இருந்து வேகமாக எழபோக, ஏதோ பிடித்து இழுத்ததில், மீண்டும் அவள்மேல் விழப்போனவன், சுதாரித்து பின், வலியில் கழுத்தை தேய்த்துகொண்டே என்னவென்று பார்க்க, இவன் செயினும் அவள் மாங்கல்யமும் ஒன்றோடு ஒன்று முறுக்கி இருந்தது.
“இரு ரிது. நான் எடுத்துவிடுறேன்.” என்றவன், எவ்வளவோ முயன்றும் செயினைப் பிரிக்க முடியாமல் போக, அவளோடு அப்படியே எழுந்து கட்டிலில் அமர்ந்தவன் மீண்டும் முயற்சி செய்து பார்க்க, இப்பொழுதும் பிரிக்க முடியவில்லை. “நாம ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோமோ இல்லையோ, இது ரெண்டும் இப்படிக் கட்டிபுடிச்சிகிட்டு வரவேமாட்டேங்குது.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, அவளோ, வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள்.
வேறு வழியில்லாமல் கெளதம் தன் கழுத்தில் இருந்து செயினைக் கழற்றிய பிறகே, அவர்களால் இரண்டையும் பிரிக்க முடிந்தது. அதன்பிறகு தான், மிருதுளாவின் கையில் சில இடங்களில் சிராய்ப்புகள் இருந்ததைப் பார்த்தவன், அவளைக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, ஆயின்மென்ட்டை எடுத்து வந்து, கீறி இருந்த இடங்களில் எல்லாம் மருந்து போட்டுவிட்டான். அதில் மீண்டும் அவர்களுக்குள் காதல் பார்வைகள் பகிறப்பட, அதற்குள் ஆரா வரும் சத்தம் கேட்கவும், அவனிடம் இருந்து, விலகி ஹாலிற்கு மிருதுளா செல்ல, காதலுடனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கெளதம்.
இப்படியே நாட்கள் வேகமாகச் சென்று, ஜெய், ஆரா நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது.